பெண் எழுத்து - பெருவெளி
புதியமாதவி , மும்பை . பெண்களுக்கு எழுதுவதற்கு என்ன இருக்கிறது ? கைப்பிடித்த கணவனின் பிரதாபங்களை எழுதுவதைத் தவிர . காலை முதல் இரவு வரை அவள் வாழும் சமையலறையின் சமையல் குறிப்புகளை பெண்கள் எழுதலாம் . குழந்தை வளர்ப்பு எழுதுவது தாய்மையின் வரப்பிரசாதம் . நவீன நாகரீகப் பெண்மணியா .., அப்படியானால் , அவள் அழகுக்குறிப்புகளை எழுதலாம் . ஓய்வான நேரம் வாய்த்தால் உங்கள் பூ பின்னல் கலைகளைப் பதிவிடலாம் . உங்கள் கலை உள்ளத்தை வெளிப்படுத்த கோலம் வரையலாம் . இப்படியாக பெண்கள் எழுதலாம் . இப்படியாகத்தான் பெண்கள் எழுத வேண்டும் என்பதே இன்றும் கூட “ பெண்கள் சிறப்பிதழ்கள் ” மற்றும் ‘ மங்கையர் மாத இதழ்கள் ’ களின் அடிப்படை அம்சங்கள் . இதைத்தாண்டி ஆண்டுக்கு ஒருமுறை வந்துப்போகும் மகளிர் தினத்தில் ( மார்ச் 08) பெண்களின் உரிமைகள் என்று முழங்கி தொண்டை வறண்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் பத்திரமாக ஒதுங்கிவிடும் பெண்ணுலகம் .