ஈரோடு தமிழன்பனை நினைத்துக் கொள்கிறேன்
இலக்கிய மாணவனாகக் கல்வித்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் கற்கவேண்டிய கவிதைப்போக்குகள், அவற்றில் முதன்மையான கவி ஆளுமைகள், அவர்களின் கருத்துலகம், அதனை வெளிப்படுத்தும் வெளிப்பாட்டு முறை சார்ந்த வடிவங்கள், சொல்முறைமைகள், இலக்கிய வரலாற்றிலும் வாசிப்புத்தளத்திலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் எனச் சில அடிப்படைகள் உண்டு. இலக்கியக்கல்வியைத் தேர்வு செய்த நான் , மாணவப்பருவத்திலேயே இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்டவனாக இருந்தேன். அதன் தொடர்ச்சியில் இலக்கியங்களைக் குறிப்பாகச் சமகால இலக்கியங்களைக் கற்பிப்பவனாக இருந்தவன் என்பதால் கூடுதலாக மதிப்பீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன்.