சுந்தரராமசாமி

நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கியிருந்தேன்.

எனது குடும்ப உறுப்பினர்களில் மகள் சினேக லதாவுக்கு மட்டும் அவரது இலக்கிய ஆளுமையின் சில அடுக்குகள் தெரியும்.மற்றவர்களுக்கு அந்தப் பகுதிகள் தெரியாது. என்றாலும் அவரது வீட்டிற்கு ஒரு முறை போயிருக்கிறோம். அனைவருக்கும் அந்த வீடு அறிமுகம். அந்த வீட்டைப் பற்றிய நினைவுகளும் உண்டு. அத்துடன் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் ஒன்றாக இருப்பது நினைவில் நிற்கக் கூடுதல் காரணம். அந்தத் தகவல் வந்த அன்று எங்கள் வீட்டு காலைச் சாப்பாட்டு நேரத்தில் நிலவிய சோகத்திற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.ஆனால் ஒரு வாரத்திற்குப் பின் உயிர்மையின் இணைய முகவரியில் எனது கட்டுரையை இணைத்துக் கொண்டிருந்த அதிகாலை நேரம் கவிஞர் மனுஷ்ய புத்திரனிடமிருந்து அந்தத் தகவல், குறுஞ்செய்திக் குறிப்பாக  வந்தது. அதைப் படித்த போது வருத்தம் அதிகமாகவில்லை. உடனே போக வேண்டும் என்ற பரபரப்பும் ஏற்படவில்லை. அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. நண்பர்கள் சிலருக்கு அந்தக் குறுந்தகவலை அப்படியே திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன். சு.ராவின் புதல்வர் கண்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.
சுந்தரராமசாமியைக் கடைசியாகப் பார்த்தது ஒன்பது மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் முற்பகலில் (ஜனவரி 2005). ஆழிப்பேரலைக்கு முதல் நாள் (2004 டிசம்பர் 25) அவருடைய வீட்டில் நடந்த ஐம்பதாவது திருமண நாளன்று புதுச்சேரியிலிருந்து நண்பர் ரவிக்குமார் வரவில்லை. அதனால் அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகளின் சிந்தனையாளர்கள் அரங்கில் கலந்துகொள்ள வந்த போது சு.ரா.வைப் பார்க்கப்போகலாம் என்று சொன்னார். போனோம். எங்களுடன் தலித் இதழின் ஆசிரியர் குழுவில் உள்ள நண்பர் ஜவஹரும் வந்தார். போகும் போதே அந்த மாதம் காலச்சுவடில் வந்திருந்த பிள்ளை கெடுத்தாள் விளை எழுதப் பட்டிருந்த முறையைப் பற்றிப் பேசிக் கொண்டே போனோம். அந்தப் பேச்சை முதலில் ஆரம்பித்தவர் ஜவஹர். எழுதியெழுதிப் பழகிய கைக்குத்தான் இத்தகைய லாவகம் வரும் போலும் என்று அவர் சொல்ல, நாங்கள் மேலும் சிலாகித்துக் கொண்டே போனோம். சுந்தரராமசாமியைச் சந்தித்து உரையாடிய போதும் பேருந்தில் பேசியவற்றை திரும்பவும் சொன்னோம். சமீபத்தில் வாசித்த நல்ல கதைகளில் ஒன்று எனச் சொன்னபோது அவர் வழக்கம் போலச் சந்தோசப் படவில்லை.

இந்தக் கதையையும் எதிர்நிலையாக வாசிக்கப்படக் கூடும் எனச் சொன்னார். அவர் சொன்னபடி நடந்தது. தலித் முரசு இதழ் முன்னின்று அந்தக் கதைக்கு எதிராகக் கிளப்பிய அமளியும் எதிர்வினைகளும் தமிழ் இலக்கியச் சூழலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட அரசியலின் வெளிப்பாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பத்தைந்து ஆண்டுக்கால இலக்கிய வாழ்வில் இத்தகைய எதிர்ப்பையும் பாராட்டையும் வேறு எந்தக் கதைக்காகவும் பெற்றிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
*****
1980-
களின் முன்பாதியில் மதுரைக்குப் பல எழுத்தாளர்களை அழைத்துக் கொண்டு வந்த இலக்கிய அமைப்பு சந்திப்பு. சுரேஷ் குமார் இந்திரஜித் பொறுப்பில் நடந்த அவ்வமைப்பின் ஒரு கூட்டத்தில் தான் சுந்தரராமசாமியை நேரில் பார்த்தேன். அவரைப் பார்ப்பதற்கு முன்பே கதைகளில் பெரும்பாலானவற்றை வாசித்திருந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்த்துறையில் பட்டப்படிப்பு படித்ததால் இந்த வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. தமிழ் இலக்கியம் படிக்கிற மாணவன் ஒருவன் பட்டப்படிப்பை முடிக்கும்போது படித்து முடிக்க வேண்டிய நூல்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும் ஒரு பட்டியலைச் சொல்வார் பேரா.சாமுவேல் சுதானந்தா. சிறுகதையில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி என்று ஆரம்பித்து நீளும் அந்த வரிசை.அப்போதைய பாடத்திட்டத்திற்கு அப்பால் உள்ள பலரின் அறிமுகத்தைச் செய்வதுதான் அவரது வேலை.நான் புதுமுக வகுப்பு படிக்க க்கல்லூரியில் சேர்ந்தபோது அவர் இளம் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவரது படிப்புக்காக அமெரிக்கா போனபோது அவரது இட த்தில் தான் தற்காலிக ஆசிரியராகப் பணியில் இருந்தேன்.  கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர்.
அந்தக் கல்லூரி ஆச்சரியம் ஊட்டும் ஒரு கல்லூரி.இன்று திரைப்படத் துறையிலும் நாடகத்திலும் இலக்கியத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் பலரை உருவாக்கிய கல்லூரி. ஒருவாரம் முழுக்க ஜெயகாந்தனுக்கு ஒதுக்கி அவரது கதைகள், நாவல்கள், கட்டுரைகள், பிறவகை எழுத்துக்கள் என்று பேசியதோடு ஒவ்வொரு நாள் மாலையிலும் அவரது சினிமாக்களையும் திரையிட்டு விவாதித்தது. இது நடந்தது இருபது வருடங்களுக்கு முன்னாலேயே. பத்தாண்டுகளுக்கு முன்னாள் சுந்தரராமசாமியின் படைப்புகளையும் அப்படிக் கொண்டாடியது. சாமுவேல் சுதானந்தா ஊட்டிவிட்ட பழக்கத்தால் சில பேருடைய எழுத்துகளை அச்சில் பார்த்த உடனேயே படித்து விடும் நோய் தொற்றியிருந்தது. கடைசிவரை விடாமல் தொடரும் நோயாக இருந்தவர் சு.ரா. அவரது பல கதைகளைத் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். நாவல்களையும் தான். திரும்ப வாசித்ததற்குப் பல காரணங்கள் இருந்ததுண்டு.
*****
அவரது கதைகளுள் பல்லக்குத்தூக்கிகள் சுதேசிகள் நாடகக்குழுவிற்காக நாடகமாக ஆக்கப்பட்டது என்றாலும் அதற்கு முன்பு அவரது பல கதைகள் வாசிக்கப்பட்டன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் என்னுடைய பெயரை இலக்கியப் பத்திரிகைகளும் அதில் உழலும் இலக்கியவாதிகளும் நினைவில் வைத்துக் கொண்டது கூட அவரது பல்லக்குத் தூக்கிகள் கதையை நாடகமாக ஆக்கி மேடையேற்றிய பின்புதான். நீளமானதும் பலதள ஆளுமைகள் கொண்டதுமான அவரது பெயர் தந்த நிழல் எனக்கும் அடையாளம் தந்தது. புதிதாகத் தொடங்கப்பட்ட சுதேசிகள் குழுவைப் பலரும் நினைவில் வைத்துக்கொள்ளவும் அந்தச் சிறுகதையும் அதன் ஆசிரியரான சு.ரா.வும் தான் காரணம்.  கதையை நாடகமாக ஆக்கி ஒத்திகைகள் நடத்திக் கொண்டிருந்த சுதேசிகள் குழு நாடகத்தைப் பார்க்க அவரை அழைக்கலாம் என்று முடிவு செய்தது. சும்மா நாடகம் பார்க்க வாருங்கள் என்றால் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. நாடகம் சரியாகப் பிரதியாக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்தால் ஒருவேளை வரக்கூடும் என்று கருதி ஒத்திகைப் பிரதியைத் திரும்பவும் சரி செய்து டைப் அடித்து அழைப்புக் கடிதத்துடன் அனுப்பி வைத்தோம். அவர் வரவில்லை. ஆனால் கடிதம் மட்டும் வந்தது. பல்வலி காரணமாக வர இயலவில்லை. பிரதியாக்கியதற்கும் மேடையேற்றத்திற்கும் பாராட்டுக்கள் என்று எழுதியிருந்தார்.

31-12-1988 இல் முதல் மேடையேற்றம் பெற்ற அந்த நாடகம் கடைசியாக சென்னையில் அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்த புதுவை இளவேனிலின் புகைப்படக் கண்காட்சியின் நிறைவு நாளில் (ஜுன், 2004) மேடையேற்றம் கண்டது.நானே அந்த நாடகத்தை நான்கைந்து குழுக்களை வைத்து இருபது தடவைக்கு மேல் மேடையேற்றி விட்டேன். அவற்றில் ஒன்றைக் கூட அவர் நேரில் பார்க்க வில்லை என்பது வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் அவரது நண்பர்கள் பலர் பார்த்துச் சொன்னதிலிருந்து திருப்தியுடன் இருந்தார் என்பது தெரியும்.

*********

மதுரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் ஒருங்கிணைத்த மதுரை சந்திப்பு நிகழ்வுகளில் சுந்தரராமசாமியைப் பார்த்ததுண்டு. தனியாக அவரோடு பேசியதில்லை. பல்லக்குத்தூக்கிகளை நாடகமாக்கியதால் நெருக்கம் கூடியிருந்தது. கடிதங்கள் மூலம் பேசிக் கொண்டோம். அதன் பிறகு அவரை நேரடியாகச் சந்தித்தது பாண்டிச்சேரியில் தான். விசாலம் – ராஜு இல்லத் திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பாண்டிச்சேரி வந்திருந்தார். என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் அனுப்பியிருந்தார். கி.ரா.வுக்கும் அப்படியொரு தகவல் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

புதுவையில் அப்பொழுது இரட்டைத் திரை அரங்காக இருந்த ஆனந்தா-பால ஆனந்தா திரையரங்கத்திற்குப் பக்கத்தில் இருந்த ஆனந்த திருமண மஹாலில் திருமணம். அங்கேயே தங்கும் அறைகளும் உண்டு.  அதன் உரிமையாளர் கோவிந்தசாமி முதலியார் கலை, இலக்கியப் புரவலரும்கூட. எப்போதும் மஞ்சள்வண்ணப் பட்டுவேட்டியோடு பட்டுத்துண்டும் அவரது அடையாளங்கள். ஒருவிதக் கதர்பட்டு ஆடைகள். நான் மண்டபத்திற்குள் நுழையும்போது அவர் அங்கிருந்தார். கம்பன் விழாவில் பிரபஞ்சனின் அகல்யா நாடகம் மேடையேற்றம் மூலம் மரபைப் பேணும் முதியவர்கள் பலருக்கும் நான் எதிர்மறையாக அறிமுகமாகியிருந்தேன். ஆனாலும் அதற்காக எதிரியாகப் பார்க்காத மனம் அவர்களிடம் உண்டு. என்னைப் பார்த்தவுடன் கி.ரா. இப்போதுதான் போறார். நீங்களும் பின்னாலேயே வறீங்க என்று சிரித்தபடியே சொல்லி அனுப்பி வைத்தார்.   நாங்கள் மாலையில் போனோம். அநேகமாக அது திருமணத்திற்கு முந்திய வரவேற்பு நிகழ்வு என்று நினைக்கிறேன். மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் சு.ரா., ராஜு, கி.ரா. ஆகியோர் இருந்தனர். இன்னும் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை எனக்குத் தெரியாது. கி.ரா.வும் சு.ரா.வும் கொஞ்ச நேரம் பழைய நினைவுகளைப் பேசினார்கள். சுந்தர ராமசாமிக்குக் கி.ரா., பாண்டிச்சேரிவாசியாகவே மாறிவிட்டது ஆச்சரியமாக இருந்தது. ஒரு கரிசல் காட்டு விவசாயியால் புதுச்சேரி போன்ற நகரத்தில் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்ளமுடியும் என்பதை நம்பமுடியாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்.  ‘அதென்ன பெரிய காரியம்; இடைசெவல்லெ என்னைப் பார்க்க வர்றவங்கள விட அதிகமான இலக்கியவாதிகள் இங்கெ என்னைப் பார்க்க வர்றாங்க. நல்ல காத்து கெடைக்குது; நல்ல தண்ணி; நல்லா மீன். அரிசியெக் குறைச்சுட்டு மீனெ அதிகமாச் சாப்பிடுறேன். சர்க்கரை வியாதிக்கு இது நல்ல உணவுன்னு சொல்றாங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பஞ்சாங்கம் வந்தார். கி.ரா., அவர் பக்கம் திரும்பியதும், சுந்தர ராமசாமி என் பக்கம் திரும்பினார்.   “குடுங்கோ என்று நான் கையில் வைத்திருந்த நூலை வாங்கிப் பார்த்தார். அவருக்குத் தருவதற்காக எனது “ நாடகங்கள் விவாதங்கள்” என்ற முதல் நூலைக் கொண்டுபோயிருந்தேன். அதில் முதல் நாடகமாக சு.ரா.வின் பல்லக்குத்தூக்கிகள் இருந்தது. வாங்கிப் பார்த்துவிட்டு மதுரை நண்பர்கள் நாடகநிகழ்வைப் பாராட்டிச் சொன்னதை நினைவுபடுத்திப் பேசினார். அத்தோடு இந்தப் புத்தகத்தின் இரண்டு பிரதிகளை எனக்கு நாகர்கோவிலுக்கு அனுப்பித் தரணும். அப்புறம் பத்துப் புத்தகங்களை சிங்கப்பூருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும் என்றார்.   எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை

ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சிங்கப்பூர் அரசாங்கம் சிறுகதைப் போட்டி நடத்தியிருக்கிறது. அதில் நல்ல சிறுகதையைத் தெரிவுசெய்யும் வேலைக்காக என்னை எழைத்திருக்கிறது. நான் போகிறேன். நீங்கள் அந்தத் தேதிக்கு முன்னால் க்ரியா முகவரியில் இதன் பத்துப் பிரதிகளைக்   சேர்த்துவிடுங்கள் என்று சொல்லி அதன் முகவரியைக் கொடுத்தார். கொடுத்துவிட்டுச் சிங்கப்பூரில் இளங்கோவன் என்றொரு நாடகக்காரர் இருக்கிறார். அவர் இந்தப் பிரதியை மேடையேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை மேடையேற்றும்போது உங்களையும் அழைக்கப்போவதாகச் சொன்னார் என்றார்.

தபாலில் அனுப்பாமல் எனது நூலின் 25 பிரதிகளை எடுத்துக்கொண்டு க்ரியாவிற்கு நேரில் சென்று தனியாகப் பத்து நூல்களை ஒரு கட்டாகவும் 15 பிரதிகளைக் க்ரியாவில் விற்பதற்காகவும் தந்துவிட்டு வந்தேன்.

 அப்பொழுது அவர் சிங்கப்பூருக்குப் போக இருந்தார். பத்து பிரதிகளை வாங்கிக் கொண்டு போய் அங்கு நண்பர்களுக்குக் கொடுத்து விட்டு வந்து, ‘ நீங்கள் ஒருவேளை சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள நடிகர்களைக் கொண்டு அந்த நாடகத்தைத் தயாரிக்க வேண்டியிருக்கும்’ என்று தொலைபேசியில் சொன்னார். இது நடந்தது 1993 - இல். நாடகத்திற்குப் புறம்பான சில காரணங்களால் அது நடக்க வில்லை.

**************
பல்லக்குத் தூக்கிகள் நாடகம் தான் தமிழ்நாட்டில் பல்வேறு நாடகக் குழுக்கள் மேடையேற்றிப் பார்த்த நாடகம் என்று நினைக்கிறேன். இடதுசாரிகளின் புரட்சிகர அரங்கு, தன்னார்வக் குழுக்களின் வீதி நாடகம், மனநோயாளிகளுக்கான அரங்கு, உளவியல் நோய் நீக்கப் பயிற்சி அரங்கு எனப் பலவிதமான அரங்கியல் செயல்பாடுகளுக்கான பிரதியாக அந்தப் பல்லக்குத் தூக்கிகள் இருந்தது என்பது உண்மை. நண்பர் ஞாநி மேடையேற்றியதுடன் அல்லாமல் தான் இயக்கிய தொடரின் உச்சகட்ட நிகழ்வாக அந்த நாடகத்தைத் தான் வைத்தார். இத்தகைய கவனிப்பையும் ஏற்பையும் அந்தப் பிரதி பெற்றதற்கு என்னுடைய பிரதியாக்கத்தோடு அவரது பெயரும் கதையின் கட்டுமானமும் கூடக் காரணம் தான்.
******************

புதுச்சேரியிலிருந்து நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குப் போனபின்பு சில தடவை சந்தித்திருக்கிறேன். அப்பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட   ஒருங்கிணைப்பாளர் பணிப்பொறுப்பும் கூடுதல் பொறுப்பாக ஓராண்டுக்காலம் (1999 டிசம்பர் முதல் 2000 ஜனவரி) என்னிடம் தரப்பட்டிருந்த து. அதனால் கல்லூரிகள் நட த்தும் 10 நாள் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்களைப் பார்க்க நேரடியாகப் போவதுண்டு. கன்னியாகுமரி மாவட்டக் கல்லூரிகளின் முகாம்களுக்குப் போகும்போது ஓரெட்டு அவர் இருந்தால் பார்க்கலாம் என நினைப்பதுண்டு. அப்படிச் சில தடவை வீட்டிலும் ஒரு தடவை சுதர்சன் ஜவுளிக்கடையிலும் பார்த்திருக்கிறேன். இன்னொரு முறை சுங்கான் கடை மலையில் நட த்திய இலக்கியமுகாம் ஒன்றில் அரைநாள் இருந்துவிட்டு வந்திருக்கிறேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவர் பொறுப்பில் பேரா.தொ.பரமசிவன் வந்தபின்பு ‘தமிழின் அண்மைக்காலத் திறனாய்வுப்போக்குகள்’ என்றொரு மூன்றுநாள் கருத்தரங்கொன்றைத் திட்டமிட்டார். அதன் தொடக்கவிழாவில் சிறப்புரை ஆற்றச் சுந்தர ராமசாமியை அழைப்பது என்று முடிவு செய்து அழைத்தார். அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் பேருந்திலோ, ரயிலிலோ வந்தால் அவர்களை நெல்லையின் விடுதியில் தங்கவைத்துப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு காரில் அழைத்துவரும் பொறுப்பைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளும். அதற்கு உதவியாகத் துறையின் ஆய்வாளர் அல்லது ஆசிரியர் ஒருவர் இருப்பார். அப்படித்தான் எனக்கு அந்தப் பொறுப்பு வந்தது. ஆனால் எனக்குப் பெரிதாக எந்த வேலையும் தரவில்லை சு.ரா. அவரது காரிலேயே நாகர்கோவிலிலிருந்து வந்துசெல்வது என முடிவு செய்திருந்தார். அப்படித்தான் வந்துபோனார். என்றாலும் பல்கலைக்கழக வளாகத்தில் அவர் இருந்தபோது அந்தப் பெருங்கட்ட டத்தைச் சுற்றிப்பார்த்தார். செங்கல் மீது பூச்சு எதுவும் இல்லாத கேரளபாணிக் கட்டடம் அவருக்குப் பிடித்திருந்தது. முதல் துணைவேந்தர் முனைவர் வசந்திதேவியின் விருப்பங்களில் ஒன்றான அந்தக் கட்டடப் பாணியைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறார். என்னிடம் அதுகுறித்துக் கேட்டார். அழகியல் ரீதியாக நல்ல கட்ட டம். ஆனால் பயன்பாட்டு ரீதியாகப் பல குறைபாடுகள் உண்டு. மழை பெய்தால் வராந்தாக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து நிற்கும். பெருஞ்சாளரங்கள் வழியே அலுவலகத்திற்குள் ஈரமான சாரல் விசிறியடிக்கும்; நான் அனுபவித்துள்ளோம் என்றேன். அதனை அவர் ரசிக்கவில்லை.

சமீபத்தில், சுந்தரராமசாமி அமெரிக்கா போனபிறகு ஒருநாள் கண்ணன் தொலைபேசியில் கூப்பிட்டு அப்பாவோட ஜெ.ஜெ.சில குறிப்புகள் நாவலை நாடகமாக ஆக்க முடியுமா..? மேடையேற்ற முடியுமா..? என்று கேட்டார். உடனடியாகச் செய்துவிடலாம் என்று சொல்லவில்லை. யோசித்துப் பார்க்கலாம் என்று மட்டும் சொன்னேன். சு.ரா. இவ்வளவு சீக்கிரம் மரணத்தைச் சந்திப்பார் என்று தெரிந்திருந்தால் அதை நாடகமாக ஆக்கி அவரிடம் காட்டியிருக்கலாம். அவரது சிறுகதைகளில் பத்துக் கதைகளையாவது நாடகம் ஆக்க முடியும். முயற்சி செய்தால் இருபது கதைகளைக் குறும்படங்களாக ஆக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. தேர்ந்த நடிகரகளுக்கு முதலில் கதைகளை வாசிக்கக் கொடுத்துவிட்டு அவர் உருவாக்க நினைத்த வெளிப்பாட்டு நிலைகளையும் உணர்வுகளையும் அதிலிருந்தே உள்வாங்கச் செய்ய வேண்டும். அவர்களோடு அந்தக் கதைகளைக் குறித்து கதைகளாகவே விவாதிக்க வேண்டும். பிறகு நாடகப பிரதிக்குள் அல்லது திரைப்படப் பிரதிக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். இத்தகைய படைப்பாக்க முறையைத்தான் பல்லக்குத் தூக்கிகள் கதையில் செய்தோம். உடனடிப் புகழ், வங்கிக் கணக்கில் மாதத்திற்குச் சிலபல லட்சங்களைச் சேர்ப்பது, தனியார் தொழில் நிறுவனங்கள் தரும் விருதுகளைப் பெறுவது, அதன் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது என நகரும் நமது சூழலில் இத்தகைய படைப்பாக்க முறைகள் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

சுந்தரராமசாமியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்து கொண்ட கூட்டம் எனக்குத் தமிழகத்தை உலுக்கிய சில இறுதிச் சடங்குகளை நினைவூட்டியது. தமிழ் நாட்டின் பெருந்தலைவர்களான அண்ணாதுரையும் எம்.ஜி.ராமச்சந்திரனும் தான் அவர்கள். மரணத்திற்குப் பிந்திய அவர்களின் உடல்கள் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கின என்பதற்காக நான் நினைவுக்கு கொண்டு வரவில்லை. அப்படி வரும் வரை உண்டாக்கப் படும் மனநிலைக்காகத் தான் நினைத்துக் கொண்டேன். நிகழ்ந்த விட்ட மரணத்தின் உடனடிப் பதற்றத்தொடு அந்த உடலை அடக்கம் செய்வது என்பதாக இல்லாமல், நினைத்துக் கொள்ளவும் அந்த மரணத்தைக் கொண்டாடவும் கால இடைவெளிகளைத் தந்த இறுதிச் சடங்குகள் இவை. சனிக்கிழமை அறிவிக்கப் பட்ட சு.ரா.வின் மரணம் அடுத்த வௌ¢ளிக்கிழமை வரை அவரை அறிந்தவர்களுக்குத் துக்கதினங்களாக ஆகியிருந்தன. ஒருவார கால நினைவுகளில் அவரது உடல் பறந்து வந்து கொண்டிருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணாதுரையின் மரணம் பற்றி அதிகம் நினைவில் இல்லை என்றாலும் பலரும் பேசக் கேட்டிருக்கிறேன். எங்கள் கிராமத்திலிருந்து சென்னை செல்ல விரும்பி, மதுரை வரை வந்து மொட்டை போட்டுக் கொண்டு திரும்பியவர்கள் சிலருண்டு. முதல்வராகி ஓராண்டிற்குள் நிகழ்ந்த அண்ணாவின் மரணம் உண்டாக்கியது பெரும் பதற்றம் என்றுதான் பலரும் சொல்கின்றார்கள். அந்த பதற்றம் தான் ரயிலின் கூரையேறித் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால் எம்ஜிஆரின் மரணமோ கொண்டாட்டங்கள் தான். கிராமங்கள் தோறும் அவரது படங்களை வைத்து ஒலிபெருக்கிகள் கட்டி, தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டாடினார்கள். அவற்றைப் பார்ப்பதற்காக மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சைக்கிளில் சென்றுவந்த நினைவுகள் ஆழமானவை.
*****
திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் ஒன்றரை மணிநேரப் பயணம். அதனால் வெள்ளிக்கிழமை காலையில் கிளம்பிக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் சிலர் புதன்கிழமையே வந்து விட்டனராம். பலர் வியாழக்கிழமை வந்திருக் கிறார்கள். நாகர்கோவிலின் தங்கும் விடுதிகளில் வாடகைக்கு அறைகள் எடுத்துக் கொண்டு அவரைப் பற்றிய பேச்சுக்களும் கொண்டாட்டங்களுமாக கழிந்திருக்கின்றன. 669, கே.பி. ரோட்டில் உள்ள சு.ரா.வின் வீட்டின் முன்னால் சென்ற வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த கவிஞனும் எழுத்தாளனும் தமிழ் நாட்டின் உணர்ச்சி பூர்வமான மனிதர்களின் பிரதிநிதிகள் தான். அவரது எழுத்துக்களை வாசித்துவிட்டு அவரைப் போலவே எழுதிப் பழகிய படைப்பாளிகள் தேம்பித் தேம்பி அழுதார்கள். அவர்களின் அழுகையின் வெளிப்பாடு சொன்னது தனது தந்தையை இழந்து விட்ட கண்ணனின் சோகத்தை ஒத்ததுதான்.
தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் படைப்பாளிகள் கிளம்பி வந்திருந்தார்கள். அவரால் அங்கீகரிக்கப் பட்டவர்கள் என்பதாக மட்டும் அல்லாமல் அவரால் வாசிக்கப்படாத எழுத்தை எழுதியவர்கள் கூட வந்திருந்தார்கள். அவரது படைப்புகளைப் பொருட்படுத்திப் பேசியவர்களும் நிராகரித்துப் பேசியவர்களும் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரது சமகால எழுத்தாளர்கள், அதற்கடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் என்பதாக இல்லாமல் இப்பொழுது தான் இரண்டு கதை அல்லது கவிதை எழுதி அச்சில் பார்த்த படைப்பாளியும் வந்திருந்தது தான் சு.ரா.வின் ஆளுமை. இவர்கள் அனைவருமே சு.ரா.வோடு நேர்ச் சந்திப்பில் பேசியிருப்பார்கள் என்று கூடச் சொல்ல முடியாது. ஆனால் அவரது படைப்புகளோடு உரையாடி இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. தமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனுக்கு அவனது இறுதி ஊர்வலத்தில் இவ்வளவு எழுத்தாளர்கள் கலந்து கொள்வது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இன்று (22-10-05) மதியம் ஊர் திரும்பும் வழியில் கவிஞர் அப்பாஸும், திறனாய்வாளர் முருகேச பாண்டியனும் வீட்டிற்கு வந்தார்கள். நேற்று நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் பலரும் சு.ரா.வின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பேசியதாகச் சொன்னார்கள். வழக்கமாக இந்த மாதிரிக் கூட்டங்களில் விரும்பிப் பேசும் முருகேச பாண்டியன் நேற்றுப் பேசவில்லை என்றார். பேசியிருந்தால், சுந்தரராமசாமியின் இடம் இன்னொருவரால் ஈடு செய்ய முடியாத இடம் என்றாலும் ஈடுசெய்யப்பட வேண்டிய இடம் என்று சொல்லியிருப்பேன் என்றார். அந்த இடத்தை யார் இட்டு நிரப்புவார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனக்கும் அந்தக் கருத்து உண்டு. பின்னர் தமிழில் ஞானபீட விருது யாருக்குத் தரலாம் என்ற வினாவை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியதுபோது இதைக் குறிப்பிட்டுள்ளேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்