திருமங்கலம் தொகுதி வாக்களிப்பும் சேடபட்டி இரா.முத்தையாவும்.


திருமங்கலம் தொகுதி : வாக்களிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் இல்லை. அதனால் எனது தொகுதியான திருமங்கலத்தில் வாக்களிக்கவில்லை. இருந்திருந்தால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள மு.மணிமாறனுக்கே வாக்களித்திருப்பேன். இதை தேர்தல் நாளன்றே பதிவாக எழுதியிருந்தேன்.
அதற்குக் காரணம் தி.மு.க.வை ஆதரிப்பவன் என்பதைத் தாண்டி மு.மணிமாறனை ஆதரிக்கக் கூடுதல் காரணம் உண்டு. மு.மணிமாறனின் தந்தை சேடபட்டி முத்தையாவோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. (அவர் மரணத்தின் போது எழுதிய நினைவுக்குறிப்பு பின்னூட்டத்தில் உள்ளது) அவரோடு விரிவான அரசியல் உரையாடல்கள் செய்துள்ளேன். மாணவப்பருவத்திலிருந்து அரசியல் கற்றுத் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளோடு நம்பிக்கை கொண்டிருந்தவர். எனது கிராமம் இருந்த சேடபட்டித் தொகுதியின் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். எனது வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியவர் அவர். அவருக்காக இரட்டை இலையில் மூன்று தடவை வாக்களித்துள்ளேன். அவரது மகன் என்பதைத் தாண்டி தி.மு.க.வின் வேட்பாளர் என்பதால் அவருக்கே வாக்களித்திருப்பேன். மு.மணிமாறன் 2021 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது தனது தந்தை இரா முத்தையாவின் அரசியல் அனுபவமும் வெற்றிகளும் மக்களோடு இருந்த தொடர்பும் ( Legacy  )அவருக்கு உதவும் என்று நம்பினார். அதனாலேயே இரா.முத்தையா தனது பெயரோடு சேர்த்துக் கொண்ட 'சேடபட்டி' என்ற தொகுதியின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்.  அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் அந்த முன்னொட்டைக் கைவிட்டு விடுவார் என்றே நினைத்தேன். ஆனால் இந்தத் தேர்தலிலும் சேடபட்டி மு.மணிமாறனாகவே களம் கண்டு வென்றிருக்கின்றார்.    

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக கூட்டணி இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒன்று  திருமங்கலம்.  வென்றவர் மு.மணிமாறன்; இன்னொன்று மேலூர் தொகுதி. அதில் வெற்றி பெற்றதால்  உயர்கல்வித்துறை அமைச்சராகியுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் விசுவநாதன். அறிவுஜீவியும் ஊழல் செய்யாதவரும் வாக்காளர்களுக்குப் பணம் தரமாட்டேன் என அறிவித்துக்கொண்டவருமான   முனைவர் பழனிவேல் தியாகராஜனும், தனது துறை வழியாக ஏராளமான பணம் சம்பாதித்தவர் எனப் பேசிக்கொள்ளப்பட்ட வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியும் தோற்றுப் போனது எதிர்பாராத அதிர்ச்சியானது.

*****
அமெரிக்காவிலிருந்து வந்த நாள் தொடங்கிச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டவர்களிடம், "யாருக்கு ஓட்டுப்போட்டீங்க? ஏன் போட்டீங்க? " - கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்த  நான்கு நாட்ளில்  20 பேரிடம் கேட்டேன். நான்குபேர் பதில் சொல்லவில்லை. 16 பேர் பதில் சொன்னார்கள். அதில் 8 பேர் மு.மாறனுக்கே வாக்களித்ததாகச் சொன்னார்கள். மீதமுள்ள 8 பேரில் ஐந்துபேர் விசிலுக்குப் போட்டேன் என்றார்கள். அவர்களுக்கு வேட்பாளர் பெயர் தெரியவில்லை. மூன்று பேர் ஆர்.பி. உதயகுமாருக்கு இரட்டை இலையில் போட்டதாகச் சொன்னார்கள். பதில் சொல்லாதவர்களும் தவெக.வுக்கும் இரட்டை இலைக்கும் போட்டிருக்கலாம். தோற்ற கட்சிக்குப் போட்டதாகச் சொல்லிக்கொள்ள யாரும் முன்வருவதில்லை.

வெற்றி பெற்ற மு.மணிமாறனுக்கு ஓட்டுப்போட்டவர்கள் சொன்ன காரணங்கள்: 'கடந்த தேர்தலில் தோற்று விட்டார்; அதனால் இந்தத்தடவை அவருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று ஐந்து பேர் சொன்னார்கள். அவர்களில் இரண்டு பேர் கிராமப்புறத்தில் வசிப்பவர்கள். மூன்று பேர் எம் எல் ஏ வாக இல்லாமலேயே நல்ல சாலைகளும் பாலங்களும் போடச் செய்துள்ளார். ரயில்வே ஸ்டேசன் மேம்பாலம், பேருந்து நிலையம் மறுசீரமைப்பு, குடிதண்ணீர் வசதிகள் செய்துள்ளார்' என்று சொல்லிவிட்டு அதற்காக ஓட்டுப் போட்டதாகச் சொன்னார்கள். இப்படிச் சொன்னவர்கள் திருமங்கலம் நகரில் இருப்பவர்கள். அவர்களும் போன தடவை தோற்றவர் என்பதையும் சொன்னார்கள்.

நடைப் பயிற்சியின்போதும் மிதிவண்டி ஓட்டும்போதும் நான் சந்தித்துக் கேட்டவர்கள் திருமங்கலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் கிராமப்புறவாசிகள். மற்றவர்கள் மீன்கடையில் நிற்கும்போதும், காய்கறி விற்க வந்தவரும், ஜெராக்ஸ் கடையில் நின்றபோது பேசியவர்கள், பெட்டிக்கடைக்காரரும் அவரது நண்பர்களும் என இருப்பவர்கள். எனது பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் இதில் அடக்கம்.
கடைசியாகக் கேட்டவர் நான் பயணம் செய்த ஆட்டோக்காரர். அவர் விசிலுக்கே போட்டிருக்கிறார். ஆனால் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டுவிட்டது என வருத்தத்தோடு சொன்னார். திருச்சியில் அதன் தலைவர் விஜய் பேசிய பேச்சு அவருக்கு ஏற்புடையதாக இல்லை என்றார். "முதல் மந்திரிபோல பேசணும்ல்ல சார்" என்று சொன்னது ஆதங்கமாக வெளிப்பட்டது.

******************

சேடபட்டி முத்தையா: ஒரு நினைவு அலை

இப்போது சேடபட்டி என்றொரு தொகுதி இல்லை. 2008 இல் உருவாக்கப்பட்ட தொகுதி மறுவரையில் அதன் ஒரு பகுதி திருமங்கலம் தொகுதிக்குள்ளும் இன்னொரு பகுதி உசிலம்பட்டித் தொகுதிக்குள்ளும் கரைந்து போய்விட்டது. என்றாலும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் இருந்தது. இப்போது அதுவும் தேனி நாடாளுமன்றத் தொகுதியாக மாறி விட்டது. அதன் பிறகும் அந்தப் பெயர் அவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாகவே இருந்தது. இந்த மாற்றங்களுக்கு முன்பே எனது வாக்குரிமையை அத்தொகுதியிலிருந்து மாற்றிக் கொண்டேன்.

1989 இல் புதுச்சேரிக்குப் போன பின்பு சேடபட்டித் தொகுதிக்கும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கும் வாக்களிக்கப் போனதில்லை. இன்று தனது 77 வயதில் இறப்பைச் சந்தித்துள்ள இரா.முத்தையா சேடபட்டித் தொகுதியின் அடையாளமாக இருந்தவர். பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மத்திய இணையமைச்சராகவும் ஆனவர். இப்போது யோசித்துப் பார்த்தால் அதிகம் தடவை வாக்களித்த தனியொரு அரசியல்வாதி சேடபட்டி முத்தையா என்பது நினைவுக்கு வருகிறது.

1977 சட்டமன்றத்தேர்தலில் அவருக்கு முதல் தடவை வாக்களித்தபோது எனக்கு வயது 18. ஆனால் அப்போது வாக்களிக்கும் வயது 21. என்றாலும் வாக்குச்சீட்டில் ஊரில் அழைக்கும் இன்னொரு பெயரில் வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெயரிலே வாக்களித்தேன். அதற்குப் பிறகு 1980 இலும் 84 இலும் அவருக்கே வாக்களித்தேன். அப்படி வாக்களித்ததிற்குக் கட்சியைத் தாண்டி ஒரு காரணம் இருந்தது. என்னுடைய அண்ணன் அவரது உதவியாளராக இருந்தார். அதனாலேயே மிகச்சிறிய எண்ணிக்கை கொண்ட -70 வீடுகளே உள்ள எங்கள் கிராமத்திற்கு முத்தையா அடிக்கடி வருவார். அதன் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம், ஆரம்பப்பள்ளி, கூட்டுறவுப்பால் பண்ணை என ஒவ்வொன்றையும் செய்து கொடுத்தார்.
எனது படிப்பின் திசைவழியிலும் அவருக்கொரு பங்குண்டு. 

நான் முதுகலை முடித்துவிட்டு எம்பில் படிக்க விண்ணப்பித்தபோது எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல்கலைக்கழக அளவில் 10 இடங்களுக்குள் இருந்த எனக்கு இடம் மறுக்கப்பட்டதில் அப்போதைய துறைத்தலைவரோடு எனக்கு உண்டான கருத்து வேறுபாடு ஒரு காரணம். எனக்கு மட்டுமல்ல எனது வகுப்பில் இருந்த நண்பர்களுக்கும் அந்தக் கருத்து வேறுபாடு இருந்தது. கருத்து வேறுபாடு மற்றும் அரசியல் சார்பு காரணமாக மாணவர்கள் ஒருவருக்கும் பல்கலைக்கழகத்துறையில் படிப்பைத் தொடரும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எங்கள் வகுப்பிலிருந்த அனைத்து மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்களைத் தொலைதூரத்தில் இருந்த கல்லூரி ஒன்றுக்கு அனுப்பிவிடப் பரிந்துரைத்தார் துறைத்தலைவர். நான் அங்கு போகவில்லை. எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்த இரா.முத்தையா அவர்களிடம் போனேன். எல்லாவற்றையும் சொன்னேன். எனது புகாரைக் கடிதமாக எழுதி வாங்கித் துணைவேந்தரிடம் கொடுத்து நேரடியாக ஆய்வு மாணவராகச் சேர்த்துவிட்டார். அதனால் எனக்கு நேர்மறை அனுபவங்களும் எதிர்மறை விளைவுகளும் ஏற்பட்டன என்பது தனிக்கதை.


******
திரு இரா. முத்தையா என்பது அவர் பெயர். அவரின் தகப்பனார் பெயர் இராமசாமி என்பதால் என்னைப் பெயர் சொல்லி அழைக்கமாட்டார். ‘வாங்க’ என்று மரியாதையோடு அழைப்பார். பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதால் மதுரைப்பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் அடிக்கடி தங்குவார். அப்படித் தங்கியிருக்கும்போது அவரது அறைக்குச் சென்று பலவற்றையும் பேசிக்கொண்டிருப்பேன். எனக்குத் தெரிந்த அரசியலை அறிந்துகொள்வதில் அவருக்கு எப்போதும் ஆர்வமுண்டு. அப்படியான உரையாடல் ஒன்றைப் பல மணி நேரங்கள் நீட்டிக்க வேண்டியதாகி விட்டது. திருமதி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவரால் எங்கும் போகமுடியவில்லை. காரை எடுத்துக்கொண்டு போக முடியாது என்ற நிலையில் நானும் அவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பேசியபடியே நடந்துகொண்டிருந்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது அவரது மாணவப்பருவ அரசியலைச் சொன்னார். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களால் வழிநடத்தப்பட்டதையும் விளக்கினார். நான் எனது கல்லூரி மாணவப் பருவத்தின் தொடக்கத்தில் இந்திராவின் அவசர நிலையை எதிர்த்த பின்னணிகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு எனக்கும் அவருக்குமான நெருக்கம் கூடியது.
 
முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கான போட்டித் தேர்வொன்றை -தமிழ்நாடு தேர்வாணையம் / இரண்டாவது நிலை (TNPSC Group II )- எழுதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். அப்போது அந்தப் பதவியைப் பிடிக்கமுடியாமல் போனது. அவர் சொன்னபடி செய்திருந்தால் அதைப் பிடித்திருக்கலாம். ஆம். பிடித்திருக்கலாம். ஆனால் செய்யும் ஆர்வமும் விருப்பமும் இருக்கவில்லை. அதனால் தொடர்ந்து ஆய்வுப்படிப்பைத் தேர்வுசெய்யும் வாய்ப்பை உருவாக்கித்தந்தார்.

***************
எம் ஜி ஆர் தொடங்கிய அ திமுகவில் அவருக்கு நம்பிக்கையான இளம் தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவரது அரசியலில் வழிகாட்டியாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தோடு சேர்ந்து தனிக்கட்சிக்குப் போகாமல் அஇ அதிமுகவிலேயே தங்கியதே அவர் மீது எம்.ஜி. ஆருக்கு நம்பிக்கை உண்டாகப் பெரும் காரணம். அந்த நம்பிக்கையில் தான் கொள்கைபரப்புச் செயலாளராகச் செல்வி ஜெயலலிதாவை நியமித்த எம் ஜி ஆர், அவரை மக்களுக்கு அறிமுகம் செய்து தலைவராக்கும் பொறுப்பைச் சேடபட்டி முத்தையாவுக்கே வழங்கினார். பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தின் செயலாளராக இருந்த முத்தையா தான் செல்வி ஜெயலலிதாவை எல்லா நகரங்களுக்கும் அழைத்துச் சென்று பேச வைத்தார். மதுரையில் நீண்ட செங்கோல் ஒன்றை வழங்கும் ஏற்பாட்டைச் செய்தார். அதே போல் ஜெ அணி, ஜா.அணி எனப் பிரிந்தபோது முதலில் தயங்கினாலும் பின்னர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் தான் சட்டப்பேரவையின் தலைவர் ஆக்கப்பட்டார். அந்தப் பிரிவின் போது அவருக்கு நெருக்கமாக இருந்த எனது அண்ணன் ஜானகி அணியில் சேர்ந்ததால் அவரோடு இருந்த உறவு எங்கள் ஊருக்கு இல்லாமல் போய்விட்டது. அப்போது நான் புதுவையில் இருந்ததால் எனக்கும் தொடர்புகள் விட்டுப் போனது.

வாஜ்பாயி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தபோது கட்சித் தலைமையின் ஆணையை ஏற்காமல் வாக்களிப்பில் குளறுபடி செய்துவிட்டார் என்று கூறிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சில காலம் கட்சியிலிருந்து ஒதுங்கிய முத்தையா பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டாமல் தனது மகனை அதில் இறக்கி விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் - 10 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தெரிந்த ஒருவரின் மகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு வாய்ப்புக்காக என்னிடம் கேட்டார். மறுக்காமல் செய்து கொடுத்தேன். திரும்பவும் ஒரு முறை தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டேன். நான் திருமங்கலத்திற்கு குடிவந்த பின் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால் அவர் நிலக்கோட்டைக்கருகில் இருந்த விவசாய வீட்டில் இருந்தார். அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போய்விட்டது. ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து இந்திய அரசியலில் ஒன்றிய அமைச்சர், பேரவைத்தலைவர் எனப் பெரிய பதவிகளை எட்டிப்பிடித்த அரசியல்வாதிகளில் அவர் முக்கியமானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நவீனத்துவமும் பாரதியும்