இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள்

படம்
  உலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம் பற்றிய தேடலோடு மொழியின் தோற்றம் பற்றிய தேடலும் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரப்பதிவுகள். உலகப்பரப்பில் மனிதர்களின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததோ அங்குதான் மொழியின் தோற்றமும் நிகழ்ந்திருக்கும் என்பது மொழியியலாளரின் கருத்து. 

கடந்த காலத்தின் பெண்கள்:எம்.ஏ.சுசிலாவின் ஊர்மிளை

படம்
மனித வாழ்க்கை என்பது ஒற்றை நிலை கொண்டதல்ல. அதற்குள் முதன்மையாக இரட்டைநிலை உருவாக்கப்படுகிறது. இரட்டைநிலை உருவாக்கம் என்பது மனித உயிரியின் பெருக்கமும் விரிவாக்கமும் மட்டுமல்ல. அனைத்துவகை உயிரினங்களும் பெண் -ஆண் என்னும் பாலியல் இரட்டை வழியாகவே நிகழ்கின்றன. உயிரியல் அறிவாக நாம் விளங்கியிருக்கும் இவ்விரட்டையின் ஒவ்வொரு பக்கமும் இன்னும் இன்னுமாய் இரட்டைகளை உருவாக்கிப் பலநிலைகளை உருவாக்குவதன் மூலம் எண்ணிக்கையில் விரிகிறது.  

தொடர்ச்சியான பேச்சுகள்....

காலம் இதழின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்யவேண்டியதில்லை இருந்தபோதிலும் காலம் படிக்கப்படும் -விவாதிக்கப்படும் தமிழ்ச்சிந்தனை வெளிக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். முன்பெல்லாம் என்னையொரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வத்தோடு இருந்தேன். அதற்காக வாதாடியிருக்கிறேன். இப்போது அப்படி நினைக்கவில்லை. என்னையொரு கல்வியாளனாக - பொறுப்பான பேராசிரியராக முன்னிறுத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறேன். பொறுப்புள்ள பேராசிரியராக இருப்பதில் எழுத்தாளராக இருப்பதும் அடங்கும் என்றும் நம்புகிறேன். இருந்தபோதிலும் கலை இலக்கியவெளிக்குள் எனது நகர்வுகளைக் குறித்துச் சொல்வது தற்புகழ்ச்சியாகாது என்பதால் இதைச் சொல்லவிரும்புகிறேன்.எப்போதும் நான் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்பவனாக இருந்து வந்துள்ளேன். ஒரு தன்னிலையை அல்லது அடையாளத்தை உருவாக்கியபின் அதை நானே அழித்தும் இருக்கிறேன். தன்னுணர்வோடு விலகுவதாகக் கருதித் திரும்பவும் அதற்குள் பயணித்திருக்கிறேன். எப்போதும் உள்ளேயும் வெளியேயுமான பயணங்கள் சாத்தியமாகிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து ஏனிப்படி நடக்கிறது என்றுகூடப்பல நேரங்களில் நினைத்துக் க

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

சரவணன் சந்திரன் நாவலொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது தொடர்பாகப் போகன் சங்கர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். ஹரன் பிரசன்னாவும் கலந்துகொண்டு விவாதம் செய்கிறார்கள். அதில் எதிர்வினை செய்யாமல் இங்கே தனிப்பதிவாகப் போடுகிறேன்.

தி.சு.நடராசன் என்னும் எங்கள் ஆசிரியர்

படம்
நான் அவரது மாணவன். தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் மார்க்சியத் திறனாய்வுப் பள்ளியாக அறியப்பட்ட நா.வா.வின் ஆராய்ச்சி ஆய்வுப் பள்ளியின் முதன்மை அணியிலிருந்த தி.சு.நடராசனின் மாணவன் நான். அவர் கற்றுத்தந்த மார்க்சிய முறையியலைக் கைக்கொண்டு தமிழகத்தின் பின்னிடைக்காலமான நாயக்கர்காலத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவன் நான். அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு தமிழ்ச் சிறுபத்திரிகைப்பரப்பில் தொடர்ந்து பண்பாட்டுப் போக்குகள், அதனைத் தீர்மானிக்கும் சினிமா, தொலைக்காட்சி வெகுமக்கள் ஊடகங்கள், அரங்கவியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளனாக அறியப்படுபவன். அவரைப் போலவே இக்காலத் தமிழ் இலக்கியப் பரப்பான புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலான பிரதிகளின் உள்கட்டமைப்பையும் எழுதப்படும் சூழல்களையும் பேசும் விமரிசனச் சொல்லாடல்களை உருவாக்குபவன். 

இடம்பெயர்த்து அழைத்துச் செல்லும் கவிதைச் சொற்கள்

தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும்போது வாசிக்கவே முடியாமல் போய்விடும். கடந்த 10 நாட்களாகத் தினசரித்தாள்களைக் கூடப் புரட்டிவிட்டு வைத்துவிடும் அளவுக்குப் பல்கலைக்கழக வேலைகள்.தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து முடிக்கும்போது ஏற்படும் அலுப்பு தீரவேண்டுமென்றால் நான் காணாமல் போகவேண்டும். இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதிவிடுவதில்லை.  குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளையும் அழுத்தப்படும் நிலைகளையும் சொல்லும் கவிதைகள் வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்துவிடும்.அதற்கு மாறான கவிதைகளும் அவற்றை எழுதும் கவிகளும் தமிழில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக எனது வாசிப்பிலிருக்கும் அனார் அப்படியொரு கவி. 

மட்டுப்படுத்தப்படும் மென்னுணர்வுகள்: தமிழ்நதியின் நித்திலாவின் புத்தகங்கள்

படம்
நாடகக் கலையைக் கற்பிக்கும் நாடகப்பள்ளிகள் இப்போதெல்லாம் நடிகர்களின் பேச்சுமொழியையும் மனதின் நினைப்பையும் இயைந்து போகும் விதமாக உடல்மொழியை வயப்படுத்துவதற்கு வட்டாரக் கலைகளையும், நாட்டார் ஆட்டங்களையும் கூத்துகளையும் கற்றுத்தரும் பயிற்சிகளை அளிக்கின்றன. நான் பணியாற்றிய புதுவை நாடகப் பள்ளியில் முதன்முதலாகத் தெருக்கூத்துப் பயிற்சியொன்றை வழங்கும் நோக்கத்தோடு பயிற்சிமுகாம் ஒன்றை நடத்தினோம். முகாமின் வெளிப்பாட்டை மேடையேற்றிப் பார்க்கவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், திரௌபதி வஸ்திராபஹரணம் என்னும் கூத்தை நிகழ்த்தப் பயிற்சிகளை வழங்கினார்கள் புரிசை கண்ணப்பத் தம்பிரானும் அவரது மகன் சம்பந்தனும் . அந்தப் பயிற்சி முகாமில் நாடகப்பள்ளியின் மாணவிகளும் பங்கேற்றார்கள். அவர்களுக்கு ஆட்டப்பயிற்சியையோ நிகழ்த்துதல் பயிற்சியையோ வழங்காமல் குரல்பயிற்சியாக – பின்பாட்டுப் பயிற்சியில் மட்டும் சேர்த்துக்கொண்டார்கள் கூத்துக்கலைஞர்கள். ஆனால் மாணவிகளில் ஒருத்தி தானும் கதாபாத்திரமேற்று தெருக்கூத்து ஆடவேண்டும் என்று விரும்பினார்.

வேற்றுமைகள் -வேறுபாடுகள்: உணர்தலும் அறிதலும்

படம்
இலக்கியம் என்றால் இலக்கியம் தான். அதில் ஆண் இலக்கியம்; பெண் இலக்கியம் என்று வகைப்பாடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லும் பெண்களின் குரல்களைக் கேட்டிருக்கக் கூடும். இப்படிப் பேசும் ஆண்களையும் பார்த்திருக்கக் கூடும். விருதுபெற்ற இந்தக் கதைகள் போன்ற கதைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆண்கள் எழுதிவிட்டார்கள். அவர் பெண் என்பதால் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். பொதுவாகவே பெண்கள் தாங்கள் எழுதும் எழுத்துக்களால் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையல்ல. பெண்கள் என்பதால் தான் வாய்ப்புகளை அடைகிறார்கள். விருதுகளைப் பெறுகிறார்கள். வெளிநாடுகளுக்குப் போய் வருகிறார்கள் என்பன போன்ற குரல்களைக் குற்றச்சாட்டுகளாகவே ஆண்களில் சிலர் முன்வைக்கிறார்கள்.

கறுப்பி சுமதியின் முகில்கள் பேசட்டும்: உடலின் வேட்கை

படம்
“வாழ்வில் இனிமேல் ஒருபோதும் கிடைக்காத சந்தர்ப்பம் என்று எதுவோ இயக்கிக் கொண்டிருந்தது. ஆடி அடங்கி நித்திரையில் மூழ்கி நான் கண் விழித்துக் கொண்டபோது அதிகாலையாகியிருந்தது. பக்கத்தில் சயன் சீரான மூச்சோடு நித்திரையாயிருந்தான். நிர்வாணமாய் இரு உடல்கள். நான் எழுந்து உடுப்பை போட்டுக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எனது அறையை நோக்கி ஓடிப் போனேன். நண்பிகள் விழித்துக் கொள்ளு முன்னர் போய்விட வேண்டும் அவர்களுக்கு இரவு நான் எங்கு தங்கினேன் என்று சொல்லப் போகிறேன் ? தெரியவில்லை. ஆனால் உண்மை சொல்லப் போவதில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”

பேய்கள் பிசாசுகள் பெண்கள்: லறீனாவின் புளியமரத்துப் பேய்கள்

படம்
  ‘உள்ளூர்க்காரங்களுக்குப் பேய நெனச்சு பயம்; வெளியூர்க்காரங்களுக்கு தண்ணியப் பாத்தா பயம்’ என்றொரு சொலவடையை நான் கேட்டிருக்கிறேன்; நீங்களும் கேட்டிருக்கக்கூடும்.  மழை பெய்து பாதைகளில் ஆங்காங்கே நீர்க்குட்டைகளாகத் தேங்கியிருந்தால், வெளியூரிலிருந்து வருபவர்கள் எவ்வளவு ஆழம் இருக்குமோ என்ற அச்சத்தில் நீருக்குள் இறங்குவதற்குப் பகல் நேரத்திலேயே பயப்படுவார்கள். ஆனால் எந்த இருட்டிலும் அச்சமில்லாமல் நடந்து போவார்கள். ஆனால் உள்ளூர்க்காரர்களுக்கு நீரின் தேக்கமும் ஆழமும் தெரியுமென்பதால் பயப்பட மாட்டார்கள்.

சிநேகா- லட்சியவாதத்தின் குறியீடு

சிநேகாவின் பெயருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு ஒரு காலகட்டத்து லட்சியவாத அடையாளத்தின் வரலாறு. அடக்குமுறையை எதிர்த்த ஒரு பெண்ணின் வரலாறு. அவசர நிலையை இந்திராகாந்தி அறிமுகம் செய்தபோது பதின்ம வயதுகளைக் கடந்து இருபதுகளில் நுழையக் காத்திருந்தவர்களின் லட்சியக் கனவின் ஒரு தெறிப்பு அந்தப் பெயர்.எனது 17 வயதில் அந்தப் பெயர் எனக்கு அறிமுகம். இந்திராவின் அவசரநிலைக் கால அறிவிப்புக் (1975, ஜூன் 25 -1977மார்ச்,21) கெதிராகக் கவிதையெழுதி வாசிக்கத் திட்டமிட்டவர்கள் என்னைப் போன்ற பதின்ம வயதுக்காரர்கள். அதே நேரம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டவர்களில் ஒருத்தி எனக் கைதாகிச் சிறைக்குப் போன பெண்ணின் பெயராக சிநேகலதா ரெட்டி என்ற பெயர் அறிமுகமானது. 

காண்டாமிருகமாக்கப்படும் யானை

ஊடகங்கள் - எல்லாவகை ஊடகங்களும் அந்த யானையின் உருவத்தைக் காட்டிவிட்டன. தன்னை அறிந்துகொள்ளாத வெகுளித்தனத்தின் பெயராக முன்வைக்கப்பட்ட ஒரு சினிமாவின் பெயரை - சின்னத்தம்பி - யார்? ஏன் சூட்டினார்கள் என்ற வினாக்களுக்கு யாரும் விடை சொல்லப் போவதில்லை. நிரந்தரமான வாழிடத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தூரப்படுத்தப்பட்டதை ஏற்க மறுத்துத் திரும்பிவிடும் தவிப்பில் நடந்துநடந்து கடந்த தூரத்தைக் கணக்கிடுகிறோம்.

சென்னைப் புத்தகக் காட்சி -2019: சில குறிப்புகள்

படம்
எப்போதும்போல இந்த ஆண்டும் சென்னைப் புத்தக காட்சியில் சில நாட்களைச் செலவழிக்க முடிந்தது. வாங்குபவர்களின் வருகை, விற்பனையின் போக்கு, புதிய நூல்களின் வருகையும் எதிர்கொள்ளப்படும் போக்கும் போன்றனவற்றை மனதில் இருத்திகொண்டு புத்தகக் காட்சியைச் சுற்றிவருபவன் நான். அப்படிச் சுற்றுவதன் பின்னணியில் நான் பணியாற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் புத்தகங்களைப் பரிந்துரைசெய்யும் வேலை எப்போதும் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த வேலை இல்லை. அடுத்த ஆண்டுமுதல் இருக்கப்போவதில்லை.

கணவன் – நட்பு – துணை ஹேமாவின் இரண்டாமவன் எழுப்பும் விவாதங்கள்

படம்
வளர்ச்சி – பங்களிப்பு- உரிமை – கடமை போன்ற சொற்களும் சொல்லாடல்களும் நமது காலத்தில் திரும்பத்திரும்பக் காதில் விழும் சொற்களாக இருக்கின்றன. நிலத்தை மையமாகக் கொண்ட நிலவுடைமை சமூகத்து வாழ்க்கையிலும் பேச்சு மொழியிலும் இலக்கியப் பனுவல்களிலும் இச்சொற்களுக்கிணையான சொற்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் முதலாளிய சமூகத்தில் புதிய பொருண்மைகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளன. காரணம் எல்லாவிதமான வளர்ச்சியிலும் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும்; அதற்கான உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை உணர்ந்து கடமையாற்றி உரிமைகளைப் பெற்றுக் வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தின் விளைவுகளே இந்தச் சொற்கள் நம் காலத்தில் திரும்பத் திரும்ப ஒலிக்கக் காரணங்களாகும்.