தமிழ்ச் செவ்வியல் கவிதைக்குள் இடம்பெறும் உரிப்பொருட்கள் புணர்ச்சி, பிரிவு,இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய அன்புசார்ந்த அகநிலையோடு, ஒருபால் விருப்பமும், பொருந்தாக் காமமும் என்னும் அன்புசாரா அகநிலையாகவும் இருக்கின்றன. இவ்வுரிப்பொருட்கள் அகப்பாடல்களில் திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. அதனால் கூறியது கூறல் என்னும் நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றிற்குள் இடம்பெறும் கருப்பொருட்களும் முதல்பொருளும் உருவாக்கும் உருவகம், உவமை, இறைச்சி, உள்ளுறை போன்றன கவிதையியல் நுட்பங்களாக மாறி விடுவதைக் காணமுடிகிறது. ஒரு குறுந்தொகையில் நிலாவும், கலித்தொகைப்பாடலில் சொம்பும், அகநானூற்றில் வீடுறைச் சேவலும் பேடும் உருவாக்கும் அர்த்தத்தளங்கள் ரசிக்கத்தக்கனவாக மாறவிடுகின்றன.