வருத்தங்களற்ற பெண் தன்னிலைகள்
.jpg)
அண்மைக்காலத்தில் அதிகமும் எழுத வந்துள்ள பெண்களின் பனுவல்களை மதிப்பீடு செய்பவர்கள் தொடர்ந்து இந்தப் பிழையைச் செய்கிறார்கள். ஆனால், திறனாய்வுப் பார்வை கொண்ட வாசிப்பு அந்தப் பிழைகளைச் செய்வதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கவிதை அல்லது சிறுகதைத் தொகுப்பையோ, நாடகம் அல்லது நாவலையோ எழுதியவரின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இது பெண் எழுத்து என்று வகைபிரித்துப் பேசத்தொடங்குகிறார்கள். இதே நிலைதான் தலித்தெழுத்து, வர்க்கச் சார்புடைய அரசியல் எழுத்து, இனவரைவியல் அடையாளங்களைப் பேசும் எழுத்து என்று வகைபிரித்துச் சொல்வதிலும் இருக்கின்றது. வாசிக்கக் கிடைத்த இலக்கியப்பனுவலின் முன்னுரையும், பின்னட்டைக் குறிப்பும் தரும் தகவல்களையும் ஏற்றுக்கொண்டு அப்படியே பேசுவதைத் தவிர்க்க நினைப்பதே தீவிர வாசிப்பின் அடையாளம்; திறனாய்வை நோக்கிச் செல்லும் வாசிப்பின் பாதை.