கலாப்ரியா : கவியாகவும் படைப்பாக்க ஆசிரியராகவும்...

கலாப்ரியா என்ற பெயரை நான் நினைத்துக்கொள்ளும்போது என்னை அறியாமலேயே எனது கடந்த காலத்திற்குள் பயணிக்கின்றவனாக மாறிப்போகின்றேன். அந்தப் பெயர் எனக்கு அறிமுகமானது எப்படி என்பது தொடங்கி ஒவ்வொன்றாய் நினைத்துக் கொள்கின்றேன். பின்னர் அந்தப் பெயர் தமிழ் இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஆளுமையின் பெயராக நிலைபெற்ற காலகட்டத்துச் செயல்பாடுகளில் நான் இருந்தேனா? எனக் கேட்டுக்கொள்பவனாக மாறுகின்றேன். பின்னர் அவரும் நானும் சேர்ந்து இயங்கிய சூழலுக்குள் நகர்ந்து இப்போது இந்த மேடையில் – கலாப்ரியா-75 என்ற பெருநிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். எனது நகர்வின் வழியே கலாப்ரியா என்று அறியப்பட்ட சோமசுந்தரத்தின் நகர்வைக் கவனித்துச் சில குறிப்புகளைச் சொல்லிப்பார்க்கின்றேன். இப்படித்தான் நுழைந்தார் கலாப்ரியா.. கல்லூரிப் படிப்புக்குள் நுழைந்தபோது அறிவியல் படிக்கும் விருப்பத்தோடு நுழைந்து பின்னர் தடம் மாறி, இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்தவர்களுள் ஒருவன் நான். அப்படித் திசைமாறிய நண்பர்கள் பலரையும் எனக்குத் தெரியும். அந்தத் திசைமாற்றம் காரணமாக மரபான தமிழ் இலக்கியப் படிப்பை மேற்...