இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்


தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். புதிய ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வுக்கோட்பாடுகள் எப்போதும் அரிஸ்டாட்டிலை மறந்துவிட்டுச் சொல்லாடல்களைத் தொடங்குவதில்லை. அவர் முன்வைத்த இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கியவர்களாகவும் அதிலிருந்து கிளர்ந்தெழுந்த கருத்தியல்களை முன்வைப்பவர்களாகவுமே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அரிஸ்டாடிலின் தொடர்ச்சி நான் அல்லது நானொரு புதிய அரிஸ்டாடிலியவாதி (New Aristotelian) என்று சொல்வதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது; மகிழ்ச்சி இருக்கிறது.

புதிய அரிஸ்டாடிலியவாதிகளைப்போலத் தமிழிலும் புதிய தொல்காப்பியவாதிகள் உருவாகியிருக்கமுடியும். தொல்காப்பியம் முன்வைத்துள்ள இலக்கிய அடிப்படைகளை, உரைமரபுகளை, பனுவல் உருவாக்கச் சிந்தனைகளைச் சரியாகக் கல்விப்புலம் கற்றுத் தந்திருந்தால், அப்படியொரு விருப்பத்தோடு, மகிழ்ச்சியோடு புதிய தொல்காப்பியவாதிகள் உருவாகியிருப்பார்கள். தீராநதியில் தமிழவன் எழுதிய தொடர்கட்டுரைகளில் இந்த நோக்கமே இருந்தது.அவரோடு உடன்பட்டு ஜமாலன் எழுதுகிறார். ப்ரேமின் அண்மைய வாசிப்புகளும் எழுத்துகளும் இந்தப் பார்வையைக் கொண்டிருக்கின்றன.


நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் செயல்படும் டி. தர்மராஜுக்கும் இந்தப்பார்வை உடன்பாடேன்றே அவரது கட்டுரைகள் சில காட்டுகின்றன. மொழியியலை ஆய்வுக்கருவியாகப் பயன்படுத்திய இரா.ஜெயராமன் இதில் கவனம் செலுத்துவதுண்டு. அழகரசன் போன்ற ஒன்றிரண்டு ஆங்கிலத்துறைப் பேராசிரியர்களும் தொல்காப்பியத்தை வாசித்துப் பயன்படுத்தவேண்டுமென நினைப்பவர்கள். இதனைப் புரியவைத்துத் தமிழ்க் கல்வியுலகத்தைத் திசைமாற்றம் செய்வது பெருமலையைத் தாண்டும் எத்தணிப்புடையது.


புதிய தொல்காப்பியவாதிகளை உருவாக்காமல் தவறவிட்டதில் தமிழ்க்கல்விப்புலத்திற்கு முக்கியப் பங்கிருக்கிறது.தொல்காப்பியத்திலிருந்து ஒரு திறனாய்வுப் பார்வையை உருவாக்காமல், அப்போதைய ஆங்கிலக் கல்வியில் பாடமாக இருந்த திறனாய்வு நூல்களை ( ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், வில்பர் ஸ்காட் ) முதன்மை ஆதாரமாகக் கருதிச் சுருக்க மொழிபெயர்ப்புகளைச் செய்து கொண்டனர் முன்னோடித் தமிழ்ப் பேராசிரியர்கள்( அ.சா.ஞா,. மு.வ. தா.ஏ. ஞானமூர்த்தி ). க.நா.சு. , சி.சு.செல்லப்பா, வெ.சாமிநாதன் போன்றவர்களுக்கு ஆசிரியனின் தனித்துவத்தை முதன்மையாகக் கருதும் டி.எஸ். எலியட்டை முன்வைத்து உருவான விமரிசனப்பார்வையில் முதன்மையான ஈடுபாடு உண்டு. அந்தப் பார்வை ஒருவிதத்தில் அத்வைதப் பார்வையின் நீட்சியும்கூட. சிறுபத்திரிகை மரபின் விமரிசனப் பங்களிப்பு முக்கியமானது எனப் பேசுபவர்களிடம் செயல்படுவது ஆசிரிய மையவாதம் மட்டுமே. அரசியல் தளத்தில் திராவிட இயக்க ஆதரவாளர்களாகவும் இடதுசாரிப்பார்வை கொண்டவர்களாகவும் வெளிப்படும் பலரும்கூடச் சிற்றிதழ்ப் பரப்பில் - கலை இலக்கியப்பார்வையில் அத்வைதப்பார்வை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.


அவர்களுக்குத் தொல்காப்பியச் செய்யுளியல் முன்வைக்கும் பனுவலுருவாக்கம், அதன் கட்டமைப்பு, அதற்குள் ஊடும்பாவுமாக அலையும் இலக்கிய/ கவிதை நுட்பங்களான, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, அடிக்கருத்து, தொன்மை, தோல் போன்றவையெல்லாம் அறிமுகமாகமலேயே போய்விட்டது. அறிந்தவர்கள் எதனையும் உருவாக்கவில்லை; அறியாதவர்கள் விலகி வேறொன்றை முன்வைத்துவிட்டார்கள். கடைசியில், வெறும் இலக்கணக்குறிப்புகளைக் கண்டறிய உதவும் சூத்திரங்களைக் கொண்ட நூலாகச் சுருங்கிப்போனது தொல்காப்பியம்.


தொல்காப்பியத்தை மீட்டெடுக்கவேண்டும்; அதன்வழியான வாசிப்பு முறையை - திறனாய்வுப்பார்வையை உருவாக்கவேண்டும். இந்தியக் கலைப்பார்வையின் மைய நீரோட்டம் முன்வைக்கும் பார்வையிலிருந்து விலகிய பார்வை அது என்பதை உறுதிசெய்யவேண்டும். அது தமிழின் அறிவுத்தோற்றவியலாக - சிந்திக்கும் முறையைக் கண்டறிவதாக - அமையவும் கூடும். மொழியை நுட்பமாகப் பயன்படுத்துவது; அதன் வழியாக இலக்கியத்தை உருவாக்குவது என்பது பற்றிச் சிந்தித்த உலகின் மூத்த சிந்தனையாளர்களில் தொல்காப்பியரும் ஒருவர். அவரையொத்த சிந்தனையாளராக விளங்கும் கிரேக்கத்தின் அரிஸ்டாடில், உலக இலக்கியத்தின் முன்னோடிக் கோட்பாட்டாளராகக் கருதப்படுகிறார். ஆனால் தொல்காப்பியரின் இடம் அவ்வாறு உறுதி செய்யப் படவில்லை. தமிழர்களின் எல்லைக் குறுக்கச் சிந்தனைகளும், அறிவு மறுத்த உணர்வுநிலைப் பார்வைகளுமே இதன் பின்னணிக் காரணங்கள் எனத் தோன்றுகிறது. அதனை உணர்ந்த நிலையிலே சில முன்வைப்புகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.


மொழிதல் என்னும் படைப்புக் கருவி.
வெளிப்படல் அல்லது வெளிப்படுத்துதல் என்பதன் மூலமாக உலகில் உள்ள பொருட்கள் - தனது இருப்பை உணர்த்துகின்றன. இதில் உயிருள்ளவை – உயிரற்றவை என்ற இரண்டுக்கும் வேறுபாடுகள் இல்லை. அதே நேரத்தில் பொருட்களின் பரிமாணங்களுக்கேற்பவே இருப்பு உணர்த்தப்படுகின்றது. தன்னிடம்- தனது புலன்களிடம்- வந்து சேரும் பொருட்களின் -பரிமாணங்களை ஏற்று வினையாற்றும் புலன்களைக் கொண்டன உயிருள்ளன. உணர்த்தப்படும் பரிமாணங்களைத் தன்னிடம் உள்ள புலன்களின் வழியாக உணர்தல் என்னும் வினையை ஆற்றுகின்றன உயிரிகள். புலன்கள் வழியாக எதிர்வினையாற்றும் இயல்பில்லாதன உயிரற்றன .

உலகிலுள்ள பொருட்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துப் பேசும் தொல்காப்பியம் உயர்திணைக்குள் மக்கள் கூட்டத்தை வைத்துப் பேசும் பின்னணியில் அவர்களே மொழியைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் என்ற புரிதல் இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தனது செய்தியை அல்லது தகவலைத் தனது கூட்டத்தின் இன்னொரு உறுப்பினருக்குத் தெரிவிக்க மொழியைப் பயன்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்துவது மனிதக் கூட்டம் மட்டுமே என்பதை நவீன அறிவியலும் மொழியியலும் ஒத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு உயிரினமும் தங்கள் கூட்டத்திற்குச் சொல்ல ஒலி மற்றும் அசைவு என்னும் குறிப்பான்கள் வழியாகக் குறியீடுகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மனித உயிரிகள், மற்ற உயிரினங்களிலிருந்து சில பல வேறுபாடுகளைக் கொண்டனவாக இருக்கின்றன. ‘மனித குல வளர்ச்சி’ அல்லது ‘வளர்ச்சி அடைந்த மனிதக்கூட்டம்’ என்பதன் அர்த்தமே மொழியைக் கண்டு பிடித்ததையும் அதனை நுட்பமாகப் பயன்படுத்துவதிலுமே இருக்கிறது. சைகை மொழி அல்லது உடல்மொழியாகப் பயன்படுத்துவது தொடங்கிப் பின்னர் பேசுவதற்கான கருவியாக மொழியைப் பயன்படுத்துதல் என்பதற்குள் ஒவ்வொரு சமூகக் கூட்டமும் நகர்ந்துள்ளன.

அந்நகர்வுக்குப் பின்னர் தொடர்ந்து எழுத்து மொழிக்குள் ஒரு கூட்டம் நுழைகிற போது அக்கூட்டம் வளர்ச்சியடைந்த கூட்டமாக மாறுகிறது. இன்றளவும் தங்களுக்கான எழுத்து மொழியை உருவாக்கிக் கொள்ளாத கூட்டங்கள்- வளர்ச்சியடையாத கூட்டங்கள்- உலகில் இருக்கவே செய்கின்றன என்பதை மானுடவியலும் மொழியியலும் ஆய்வு செய்து காட்டியுள்ளன. தமிழ் மொழியைத் தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்ட கூட்டம் எழுத்து மொழியை நுட்பமாகப் பயன்படுத்தத் தொடங்கிய காலகட்டம் இதுதான் என அறுதியிட்டுச் சொல்லக்கூடிய ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. இன்று கிடைப்பனவற்றுள் ஆதித் தரவுகள் அகக் கவிதைகளும் புறக் கவிதைகளுமாகப் பிரிக்கப்பட்டு, ‘சங்க இலக்கியங்கள்’ எனப் பெயரிடப்பெற்றுள்ளன. கற்பிதமான புனைவுகளின் அடிப்படையில் பெயரிடப்பட்ட இந்தச் சுட்டு எவ்வளவு சரியானது என்பது தனியான ஆய்வுக்குரியது. மாற்றுப் பெயராகச் செவ்வியக் கவிதைகள் எனச் சுட்டுகிறது இக்கட்டுரை.

‘மொழியே எல்லாம்; மொழியே அனைத்தையும் உருவாக்குகிறது’ என்று உறுதி செய்து விட்ட பின்-அமைப்பியல், மொழியின் நுட்பங்களையும் அவற்றின் சாத்தியங்களையும் விரிவாகவே விளக்கியுள்ளது. மொழியின் அடிப்படை அலகான சொல்லிற்கு எப்போதும் ஒற்றை அர்த்தம் மட்டுமே இல்லை. அகராதி அர்த்தத்தைத் தாண்டி, பயன்பாட்டு அர்த்தமே அதன் மேன்மை. ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு அர்த்தங்களில் சொல்லையும், சொற்கள் இடம் பெறும் தொடர்களையும் உருவாக்க முடிகிற மனிதனே படைப்பாளியாகக் கருதப்படுகின்றான். அதற்கான வாய்ப்பை வழங்கும் மொழியே இலக்கிய வளம் நிரம்பிய மொழி எனக் கருதப்படுகிறது. தமிழ் அத்தகைய வளத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே- இன்று வளர்ச்சியடைந்த மொழிகள் எனக் கருதப்படும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பே - பெற்றிருந்தது என்பதனால் தான் செம்மொழி எனக் கருதப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் இடையே நடக்கும் பேச்சின் வழியே உருவாகும் முரண்பாட்டின் மூலம் பாத்திர வார்ப்பை உருவாக்கி, அவற்றின் வழியே மனிதர்களின் இருப்பு நிலையைப் பேச வாய்ப்பளிக்கும் இலக்கிய வடிவம் நாடகம். அதன் ஆதாரமான வெளிப்பாட்டு வடிவம் உரையாடல். தனது முன்னோடியான சாக்ரடீஸ் போன்றவர்களின் முச்சந்தி விவாதங்களைக் கவனித்திருந்த அரிஸ்டாடில் உரையாடலை முக்கியமான வெளிப்பாட்டு வடிவமாகக் கருதியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அந்த அனுபவங்கள் சார்ந்தே உரையாடல் வடிவத்தின் நுட்பங்களைப் பற்றி அதிகம் விளக்கியுள்ளார். ஆனால் தொல்காப்பியர் தனிமனித உணர்வுகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்த அதிக வாய்ப்பான கவிதை வடிவத்தின் நுட்பங்களை விரிவாகப் பேச நினைத்துள்ளார். அதற்காகக் கூற்று (Narrative) என்னும் வெளிப்பாட்டு வடிவத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். கவிதைக்குள்ளும் ஓர் உரையாடல் கூறு இருக்கிறது என்றாலும் பருண்மையான வெளிப்பாடு அதில் கிடையாது.


கூற்று என்னும் கலைச்சொல் மொழியின் அடிப்படைக் கூறு. மொழிதல் என்னும் மனிதனின் அடிப்படையான தொழிலைச் சுட்டும் சொல். அந்த வகையில் அக்கலைச்சொல் மொழியியலின் பாற்பட்டது. உரையாடலுக்கும் முந்திய வடிவமும்கூட. அதனைக் கவிதைக்கான கலைச்சொல்லாகத் தனது பனுவலில் மாற்றிக் கட்டமைத்திருக்கிறார் தொல்காப்பியர். மொழியின் இயல்புகளைப் பேசும் இலக்கணமாக மட்டும் தொல்காப்பியத்தை எழுத நினைத்திருந்தால். அவர் எழுத்ததிகாரத்தையும் சொல்லதிகாரத்தையும் மட்டுமே எழுதியிருப்பார். அதற்கும் மேலாக, மொழியை நுட்பமாகப் பயன்படுத்துவது எப்படி? அதன் உச்ச கட்டப் பயன்பாடாக இலக்கியம் செய்வது- செய்யுள் செய்வது எப்படி? என்பதை விளக்க விரும்பிய காரணத்தால் தான் அவ்விரு அதிகாரங்களைத் தொடர்ந்து மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தை எழுதினார் தொல்காப்பியம்.

தொல்காப்பியத்தில் கூற்று


மொழிசார்ந்த தொடர்பியல் கட்டமைப்பில் சொல்பவர் என்ற கூறும், கேட்பவர் என்ற கூறும் பிரிக்க முடியாதவை. இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பது சொல்லப்படுவது என்ற கூறு. இதனை உள்ளடக்கி நிற்கும் போது தான் தொடர்பியல் வினை முழுமை அடைகிறது. எழுத்துமொழி சார்ந்த வரிவடிவத் தொடர்பியலானாலும்சரி, ஒலிவடிவத் தொடர்பியலானாலும்சரி இந்த மூன்று கூறுகளும் அவசியம். எழுத்து மொழி சாராது குறியீடுகளின் வழி செயல்படும் தொடர்பியலிலும் இந்த மூன்று கூறுகளும் இருக்கின்றன.

தமிழ் இலக்கணங்கள் கற்று, அதன் வழியாகக் கூற்று பற்றிச் சிந்திக்கும் போது தொடர்பியல் கட்டமைப்பின் நிலையைக் கூற்றுநிலை என்ற சொல்லால் குறிப்பிடத் தோன்றுகிறது. கூற்றுநிலை என்பதை தொல்காப்பியம் இரண்டு இடங்களில் விளக்கியுள்ளது. சொல்லதிகாரப் பெயரியலில் வரும் ‘இடம்’ என்ற கலைச்சொல் பற்றியது. இரண்டாவது பொருளதிகாரப் பாவியலின் ஒரு கூறான கூற்று என்பதன் விரிவாக அமைவது. பெயரியலில் திணை, பால், பற்றிப் பேசும் தொல்காப்பியர் அடுத்து இடம் என்பதைக் குறிப்பிடுகின்றார். பெயர்களின் அடையாளமாக இரண்டு திணைகள், ஐந்து பால்கள் பற்றிக் கூறிவிட்டு இடத்தைக் குறிப்பிடும் போது தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்றையும் கூறுகின்றார். இரண்டாவதாக, கூற்று பற்றிய விரிவான பகுதிகள் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூற்றைக் குறிப்பிடுவதோடு, அகத்திணையியலிலும், களவியலிலும், கற்பியலிலும் கூற்று நிகழிடங்களையும் நிகழ்முறைகளையும் விரிவாகப் பேசுகின்றார். புறத்திணையியல் கூற்று என்பதை நேரடியாகப் பேசவில்லை என்றாலும் அவையும் கவிதையின் கூற்று பற்றியே பேசுகிறது என்பதை உணர முடியும்.

செவ்வியக் கவிதைகளைத் தொகுத்தவர்களும் கூற்று என்பதை ஓர் உறுப்பு என்ற அளவில் கருதவில்லை. அவருக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகளைப் பொருள் அடிப்படையில் அகக்கவிதைகளாகவும் புறக்கவிதைகளாகவும் பிரித்துக் காட்டும் தொல்காப்பியர், கவிதையில் எவற்றையெல்லாம் பேசலாம் என விளக்க முயலும் போதே கூற்று பற்றிச் சிந்திக்கிறார். அகக்கவிதையிலும் புறக்கவிதையிலும் பேசப்பட வேண்டிய பொருண்மைகள் எவை எனக் கூறவந்தவர் அதனை முதலில் விளக்காமல், ஒவ்வொரு நிலையிலும் ஏழு பொருண்மைகளைப் பேசுகிறார். அத்தோடு அவற்றைப் பேச வேண்டியவர்கள் யார்? யார்? என்பதையும் விரிவாகச் சொல்ல முயன்றுள்ளார். அகப்பொருள், புறப்பொருள் எனப் பிரித்துக் காட்டப்படும் இவ்விரு பொருண்மைகளுள் செயல்பட வேண்டிய- மொழிய வேண்டிய- உட்கிடைப் பொருண்மைகளே ஏழும் ஏழுமான பதினான்கு திணைகள்.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப் பெயர்களாக அறியப்படும் அன்பின் ஐந்திணைகளோடு, கைக்கிளையும் பெருந்திணையும் அகக்கவிதையின் பொருண்மைகள். அதே போல் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை,காஞ்சி, பாடாண் என இவற்றின் புறனாகச் சொல்லப்படும் ஏழும் புறக்கவிதையின் பொருண்மைகள். இந்த ஏழுக்கும் கூட வெளி சார்ந்த அடையாளங்களைத் தொல்காப்பியர் தந்துள்ளார்.


திணைநிலை

அகத்திணைகள் ஏழு எனத் தொல்காப்பியர் அகத்திணையியலில் சொல்லவில்லை. ஆனால் புறத்திணையியலில் அகத்திணை ஏழு, புறத்திணை ஏழு என்பதைச் சுட்டிக் காட்டவே செய்துள்ளார். ‘அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்’ ஒவ்வொரு அகத்திணைக்கும் புறனாக ஒரு புறத்திணை சொல்லப்படுகிறது. இவ்வாறு புறன் அதாவது மாற்றுக் கூறுவதிலிருந்து அகத்திணை ஏழு, புறத்திணை ஏழு எனத் தொல்காப்பியர் கருதினார் என உணர முடியும்.

திணை என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே பல விதமான பயன்பாட்டு அர்த்தங்கள் இருக்கின்றன; நிலம், பொருள், வகைப்பாடு போன்றன சில. ஆனால் நமது பொதுநிலைப் பட்ட பார்வைகளும் புரிதல்களும் திணைகளை, கருப்பொருளோடு அதிலும் குறிப்பாக நிலத்தோடு சேர்த்தே புரிந்து கொண்டுள்ளன. தொல்காப்பியர் அவ்வாறு கருதவில்லை என்றே தோன்றுகிறது. அவ்வாறு கருதியிருந்தால்- நிலமே திணையின் அடையாளம் என்று அவர் நினைத்திருந்தால் -

மாயோன் மேய காடு உறை உலகமும் /சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும் /வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் /சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
(அகத்.5) என முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு திணைகளுக்கும் நிலம் எது எனக் கூறியவர் பாலை, கைக்கிளை, பெருந்திணை என்ற மூன்று திணைகளுக்கும் நிலம் பற்றிக் கூறாமல் விட்டிருக்கமாட்டார். அவரைப் பொருத்தவரையில் திணைநிலை அல்லது திணைப்பொருள் என்பதில் தெளிவான கொள்கையைக் கொண்டிருந்தார் என்பதை விளக்கும் விதமாக ஒரு நூற்பாவையும் தந்துள்ளார்.

ஒரு திணையின் அடையாளம் என்பது திணையின் உரிப்பொருள் தான் என்பதைச் சொல்லும் அந்த நூற்பாவைத் தொல்காப்பியத்தின் முக்கியமான நூற்பா எனப் பேராசிரியர்கள் வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல், சு.அகத்தியலிங்கம் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். மேற்கத்தியத்திறனாய்வு படைப்பின் பலவற்றைப் பேசிவிட்டு, ஆசிரியன் உணர்த்த விரும்பிய- சொல்ல விரும்பிய பொருண்மை அல்லது கருத்தே முக்கியம் எனப் பேசுவது போல அமைந்துள்ளது அந்த நூற்பா.

‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே /நுவலும் காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை’
என்ற அந்த நூற்பா அகத்திணையியலில்(3) தொடக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.. இதன் வழி ஒரு கவிதையை அடையாளப் படுத்த முதன்மையான தேவை அதில் வெளிப்படும் உரிப்பொருள் தானேயொழிய, கவிதையின் பின்னணியைத் தரும் கருப்பொருள் குறிப்புகளோ, வெளியையும் காலத்தையும் தரும் முதல் பொருளோ அல்ல என உரைக்கிறார். உரிப்பொருளே சிறந்தது எனச் சொன்ன தொல்காப்பியர், அன்பின் ஐந்திணைகளின் உரிப்பொருள்கள் எவையெனச் சொல்லும் நூற்பாவை
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் /ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. (அகத். 16) எனத் தொடக்கத்தில் எழுதியதோடு, அன்பின் காரணமாகத் தோன்றாத பெருந்திணைக்கும், கைக்கிளைக்கும் உரிய உரிப் பொருள்களைச் சுட்டிக்காட்டும் நூற்பாக்களை அவ்வியலின் இறுதியில் அடுத்தடுத்துத் தருகிறார்.

காமம்சாலா இளமையோள்வயின் / ஏமம்சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்/தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் /புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (53)
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் /தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ /செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. ( 54)
இவ்வாறு வரிசைப்படுத்தித் தருவது தொல்காப்பியர் செய்ததா? பின்னர் தொகுத்தவர்கள் செய்ததா? என்ற கேள்விக்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அகத்திணைகளை உரிப்பொருள் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லும் தொல்காப்பியர் புறத்திணைகளின் உரிப்பொருள், கருப்பொருள், முதல் பொருள் இவை எனச் சுட்டவில்லை. என்றாலும் ஏழு புறத்திணைகளின் உரிப்பொருள் எவையெனக் கூறும் நோக்கம் அவருக்கு இருந்துள்ளது என்பதை பின்வரும் வரிகள் காட்டுகின்றன.
வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும். (புறத்.2)
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே. (புறத். 6)
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும் அனை நெறி மரபிற்று ஆகும் என்ப. (புறத். 8)
மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. (புறத். 12)
தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. (புறத்.15.)
பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (புறத்.18)
இவ்வரிகள் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் முதலான ஆறு புறத்திணைகள் இவை என விளக்கும் வரிகள். இவற்றைத் திணை பற்றிய விளக்கம் எனக் கொள்வதை விட அத்திணைகளின் நிலை- உரிப்பொருள் எனக் கொள்வதே பொருத்தமானது.

ஆ (கால்நடைகள்) காரணமாக நடக்கும் போரின் நிலைகளை வெட்சித் திணைக்கும், நிலம் காரணமாக நடக்கும் போரின் நிலைகளை வஞ்சித் திணைக்கும், மதிலால் சூழப் பட்ட கோட்டை காரணமாக நடக்கும் போரின் நிலைகளை உழிஞைத் திணைக்கும், தன்னிடம் உள்ள செல்வம் போதாது என்ற பேராசையால் மேலும் பொருளையும் நாடுகளையும் கைப்பற்ற நினைத்து நடக்கும் போரின் நிலைகளை தும்பைத் திணைக்கும் , வெற்றிகளைப் பலபடக் கொண்டாடும் நிலைகளை வாகைத் திணைக்கும், போருக்குப் பிந்திய வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சோர்வு மற்றும் விரக்தி நிலையை- நிலையாமையைக் காஞ்சித் திணைக்குமான உரிப்பொருளாகக் கூறுகிறார் தொல்காப்பியர். இவ்வுரிப் பொருட்கள் நிகழும் சூழல்களே- முதல் மற்றும் கருப்பொருள்களே துறைகளாகத் தொல்காப்பியரால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


புறத்திணை ஏழில் முதல் ஆறு திணைகளுக்கும் விளக்கம் அல்லது உரிப்பொருள் இது எனச் சொல்லித் துறைகளின் பட்டியலைச் சொன்ன தொல்காப்பியம் பாடாண் திணைக்குரிய விளக்கத்தை அதாவது உரிப்பொருளைக் கூறவில்லை. துறைகளையும் பட்டியலிடவில்லை. அதற்குமாறாகக் கைக்கிளையின் புறன் பாடாண் எனவும் அது எட்டு வகையானது எனக் கூறிப் பின்வரும் நூற்பாவை அமைக்கிறார்.
அமரர்கண் முடியும் அறு வகையானும் /புரை தீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. (புறத். 21)

இந்நூற்பாவின் வழியாக -பாடாண் திணையின் மூலம் - அகத்தையும் புறத்தையும் இணைக்கும் தன்மையைத் தொல்காப்பியர் பேசுகிறார் எனக் கூறலாம். பாடாண் திணையில் பாராட்டப்படுபவன் போரில் வெற்றி பெற்ற ஆண் மகன் மட்டுமல்ல. சிறப்பாகக் குடும்பம் நடத்தும் நிலையும், கொடையில் சிறந்து விளங்கும் தன்மையும் கூடப் பாடப்படுவதற்குரிய உரிப் பொருளே என்பதைப் பாடாண் திணையின் பாற்படும் எனக் கூறும் கூற்றுகளிலிருந்து அறிய முடிகிறது. காதல் மற்றும் காமம் சார்ந்து உருவாகி வளர்ந்து குடும்ப அமைப்பாக மாறும் நிலையை அகத்தில் பேசும் தொல்காப்பியர் அரசுருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த போரின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களை உரிப்பொருளாகப் புறத்திணையில் சுட்டியுள்ளார் எனக் கருத இடமுண்டு.


அகத்திணையியலிலும் புறத்திணையியலிலும் கூறப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் திணைநிலை என்பதனைத் தொல்காப்பியர் உரிப்பொருள் என்றே கொண்டார் என உறுதியாகக் கூற முடிகிறது. தொடர்ந்து வரும் களவியல், கற்பியல், பொருளியல் முதலான இயல்களில் உரிப்பொருள் என்னும் திணைநிலையை எவ்வாறெல்லாம் மொழியலாம் எனக் கூற முயன்றுள்ளார். மொழியும் போது இருக்கும் தடைகள் எவை? இந்தத் தடைகளிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு உண்டு; யாருக்கெல்லாம் விலக்கில்லை என விரிவாகச் சொல்லும் அந்த இயல்களில் சில இடங்களில் முறையான வரிசைகள் உள்ளன. பல இடங்களில் துண்டு துண்டாகப் பேசியுள்ளார் என்பதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றே.

தொல்காப்பியம் தனது பொருளதிகாரத்தில் பல விதங்களில் விளக்கும் அகப்பாடல் விதிகளும், புறப்பாடல் விதிகளும் சாரமாக மூன்று பொருள்களை முக்கியப்படுத்துவதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம்.
1. பாடலுக்குள் இடம்பெறு உணர்வு நிலை,
2. பாடலுக்கான நிலவியல் அடையாளங்களைத் தரும் முதல் மற்றும் கருப்பொருள்
3. இவ்விரண்டையும் ஏற்று வினையாற்றும் மாந்தர்கள்

இவற்றையே நிகழ்காலத்திறனாய்வு இலக்கியஉணர்வு, காலமும்வெளியும், இலக்கியப் பாத்திரங்கள் எனப் பேசுகின்றன.இந்தப் புரிதலோடு- உரிப்பொருளே திணைநிலை என்ற புரிதலோடு- சங்க இலக்கியங்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள அகக் கவிதைகளுக்கும், புறக்கவிதைகளுக்குமான உரிப்பொருள்களைப் பட்டியல் இட்டிக் காட்டினால் இந்த முடிவு மேலும் உறுதியாகக் கூடும். அப்படியான பட்டியலில் குறிஞ்சிக் கவிதைகள், முல்லைக் கவிதைகள், மருதக் கவிதைகள், நெய்தல் கவிதைகள், பாலைக் கவிதைகள் என்ற வகைப்பாடு தவிர்க்கப்பட்டு, புணர்ச்சிக் கவிதைகள், பிரிவுக் கவிதைகள், இருத்தல் கவிதைகள் , ஊடல் கவிதைகள், இரங்கல் கவிதைகள்,தனிமொழிக் (சொல்எதிர் பெறாஅன் சொல்லிய) கவிதைகள், மிக்க காமநிலைக் கவிதைகள் என்ற வகைப்பாடு முதன்மை பெறும். அந்த முயற்சி செய்யப்பட வேண்டும். அவ்வாறு பெயரிட்ட தொகுதி உலக இலக்கியப்பரப்பிற்குள் புதிய நிலைகளைத் தமிழ்க்கவிதைகளுக்குப் பெற்றுத்தரக்கூடும்.

இன்று வளர்ச்சி அடைந்த நிலையில் கோட்பாளர்கள், தங்கள் கோட்பாடுகளை விளக்கும் பொருட்டுப் பின்வரும் முறையியலைப் பின்பற்றுகின்றனர். கலைச்சொல், அதனை வரையறை யாக்குதல், பின்னர் விளக்கம், தொடர்ந்து வகைகள் அல்லது உட்பிரிவுகள், கடைசியில் புறனடை என அமைத்து ஒவ்வொன்றிற்கான எடுத்துக் காட்டுகளையும் தந்து கோட்பாடுகளை விளக்குகின்றனர். தொல்காப்பியத்தை ஒரு கோட்பாட்டு நூலாக முன் நிறுத்தும் போது அத்தகைய முறையியலும் இருக்கிறது என நாம் கூற இயலாது. இத்தகைய வளர்ச்சி அடைந்த முறையியலை அதில் தேடுவது அதிக பட்ச எதிர்பார்ப்பு என்பதை ஒத்துக் கொள்வதில் தயக்கம் தேவை இல்லை. ஆனால் இத்தகைய முறையியல் தொல்காப்பியருக்கு முழுதும் தெரியாத ஒன்று என்றும் கூறிவிட முடியவில்லை. அகத்திணையியல், களவியல்,கற்பியல், பொருளியல், உவமயியல், மரபியல், போன்றனவற்றில் முறையியலற்ற தன்மைகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளும் நிலையில் - புறத் திணையியல், செய்யுளியல், மெய்ப்பாட்டியல் போன்றனவற்றில் தெளிவான முறையியலைப் பின்பற்றியுள்ளார் என்பதை வாதிடவும் முடியும். பல இயல்களில் வெளிப்படும் தொடர்ச்சியின்மையையும் அவற்றில் வெளிப்படும் மொழிப் பயன்பாடு போன்றனவற்றைக் கருத்தில் கொண்டே அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றவர்கள் கிடைக்கின்ற தொல்காப்பியம் ஒருவரால் எழுதப் பட்டதல்ல என்று கூற முயன்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
==============================================================

உலகத்தமிழ்ச்சங்கம் மதுரையில் 19-02-2020- நடந்த சங்க இலக்கியத்தில் திணைக்கோட்பாடுகள் என்னும் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை






















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்