சரவணன் சந்திரனின் புனைவுகள் -சில குறிப்புகள்

நவீனத்துவத்தைக் கடக்கும் எழுத்துமுறை மனிதர்களை எழுதுவதை மட்டுமே தனது தீவிரமான வேலை என நினைக்கும் சரவணன் சந்திரனின் கதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களில் பெரும்பாலோர் நிகழ்காலத்துப் பாத்திரங்கள்தான். அவர்களின் செயல்பாடுகளையும் நகர்வுகளையும் தீர்மானிப்பதில் கடந்த காலத்திற்கும் பெரிய அளவில் பங்கிருப்பதாக அவர் எழுதுவதில்லை. அதன் வழியாக உருவான மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்போ அல்லது அதையே சரியென ஏற்றுக்கொண்ட மனநிலையோ வெளிப்படவில்லை. நீண்ட காலமாக இருக்கும் அமைப்புகளின் சிற்றலகுகளையும் பேரலகுகளையும் குறித்த விவாதங்களும் இல்லை. அவை தரும் நெருக்கடிகள் குறித்துக்கூடப் பெரிய அக்கறைகள் இல்லை. மனிதர்களின்/ பாத்திரங்களின் நெளிவுசுழிவுகளையே கதைக்கான விவாத மையமாக்கிக் கதைகள் செய்பவராகச் சரவணன் சந்திரன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். உருவாகிவரும் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப முடிவுகளை எடுத்து நகரும் மனிதர்களின் சாயலில் தனது கதாமாந்தர்களை உருவாக்குவதின் மூலம் அவரது கதைகள் நவீனத்துவத்தைக் கடந்த எழுத்தாக உருவாகி வருவதை வாசிக்க முடிகிறது. எல்லாவற்றையும் தற்காலிக ஏற்பாடுகளாகப் புர