பேச்சுமரபும் எழுத்துமரபும்
பேச்சும் எழுத்தும் உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு. இருபெரும் உரையாளர்கள். கோவை புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு நாட்கள் (2022,ஜூலை, 23,25) போயிருந்தேன். இரண்டு நாட்களும் இருபெரும் உரைகள். எழுதிக்குவிப்பதில் சலிப்பில்லாத இரு எழுத்தாளர்களும் -ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதிலும் சலிப்பில்லாமல் இருக்கிறார்கள். தமிழ்ப்பேராசிரியராக இருந்தபோதிலும் இப்படியெல்லாம் ஓர் உரையை நடத்திக்காட்ட எப்போதும் முயன்றதில்லை. உரையாடல் வடிவமே எனது வெளிப்பாட்டு வடிவம். எல்லாத் தொடர்பாடல்களும் வெளிப்பாடுகளும் மொழியின் வழியாகவே நடக்கின்றன என்ற போதிலும் உரைத்தலை மட்டுமே கொண்ட மொழிதல் எளிய கருவியாகக் கருதப்படுகின்றது. உரைப்பவரிடம் இருப்பவை சொற்களும் சொற்களால் ஆன தொடர்களும் மட்டுமே. அசைவற்ற உடலோடு குரல் உருவாக்கத்தின் வழியாக நடக...