நாயக்கர் காலம் .இயல். 7 மகளிர் நிலை -சமூக மதிப்புகள்- பண்பாட்டுக்கூறுகள்
நாயக்கர் கால இலக்கியங்களில் மகளிர் பற்றிய குறிப்புக்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. குறிப்பாக அரசியல் போன்ற அமைப்புக்களில் ஆடவர் சார்ந்த கூற்றுக்களே அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கான கடமைகள், கட்டுப்பாடுகள், பெண்கள் பற்றிய மதிப்புக்கள் முதலியவைகளே பெரிதும் கிடைக்கின்றன. பெண்கள் பற்றிக் கிடைக்கும் குறிப்புக்களும் பெண்களுக்குச் சமுதாயத்திலுள்ள பங்குகள் பற்றியோ, குடும்ப அமைப்பில் பெண்களுக்கு உரிய இடம் பற்றியோ அதிகம் பேசவில்லை. மாறாகப் பரத்தையர் பற்றி அதிகம் பேசுகின்றன. அடுத்து வயலில் உழைக்கும் பள்ளர் குலத்தைப் பெண்கள் பற்றிய - உழைப்புத் தொடர்பான - செய்திகளைத் தருகின்றன. செல்வக்குடிப் பெண்களைப் பற்றியோ, நடுத்தர நிலை யிலிருந்த குடும்பங்களின் பெண்களைப் பற்றியோ மிக குறைவாகவே பேசுகின்றன. அக்காலத்தில் இலக்கியங்களை முதன்மையாகவும், பிற சான்றுகளை அவற்றிற்குத் துணைமையாகவும் கொண்டு, அக்காலத்திய மகளிர் நிலை பற்றி இங்குக் காணலாம்.