இலக்கிய ஆய்வுகளும் சமுதாய அறிவியலும்

இன்று தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங் களுக்குள் மாறிவிட்டன.புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. பல்கலைக் கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.
 கல்வித்துறை சாராத விமரிசனங்களும் ‘ரசனை அனுபவத்திலிருந்து ‘நுகர்வு திணிப்பு’ பற்றிப் பேசுவனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கல்வியியல் ஆய்வுகளும், கல்வியியல் சாராத ஆய்வுகளும் ஏற்படுத்திக் கொண்டுள்ள மாற்றங்கள் வெறும் எண்ணளவு மாற்றங்கள் (Quantitative changes) மட்டும் அல்ல; அவை பண்பு மாற்றங்களும் (Qualitative changes) கூட.தமிழில் நடந்துள்ள இந்த மாற்றம் இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் பொருந்தக் கூடியது தான்.

தமிழாய்வை தமிழியல் ஆய்வாக விரித்துக் கொண்ட இலக்கிய ஆய்வுகள் புதிய அணுகுமுறைகளையும் புதிய ஆய்வு நோக்கங்களையும் தன்னளவில் புரிந்து கொண்டு, உள்வாங்கிக்கொண்டன. உள்ளிருந்து கிளர்ந்தனவாகவோ, வெளியிலிருந்து வந்தனவாகவோ புதிய நோக்கங் களும், புதிய அணுகுமுறைகளும் அவ்வப்போது வந்து கொண்டேயிருக் கின்றன. வந்தபோதிலும் அவையெல்லாம் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளுக்குள்ளேயே திரும்பத்திரும்பச் செயல்பட்டே வந்துள்ளன. அதிலும் செவ்வியல் இலக்கியமரபு அல்லது நிறுவனங்கள் சார்ந்த இலக்கிய மரபு ஒன்று தெரிவு செய்து தந்த தரமான இலக்கியப் பிரதிகளையே ஆய்வுத் தரவுகளாகப் பயன்படுத்திக் கொண்டு புதிய முடிவுகளை முன்வைக்க முயல்கின்றன.

இவ்விடத்தில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய மரபையும் நிறுவனங்கள் சார்ந்த இலக்கிய மரபு என்று குறிப்பிடுவதாகத் தான் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழின் அங்கீகரிக்கப்பட்ட சிறுபத்திரிகை மரபு என்பது தரமானதைத் தெரிவு செய்யும் பணியைத் தலையானதாகக் கொண்டது . ஒரு சிறுபத்திரிகை தனக்கென வரித்துக் கொண்ட இலக்கியக் கோட்பாட்டை மட்டுமே சிறந்தது எனக் கருதுகிறது. அந்த அடிப்படை யிலான பிரதிகள் மட்டுமே சிறந்த பிரதிகள் அந்தப்பத்திரிகைக்கு. அப்பிரதிகள் வேறு வகையான பிரதிகளை நாசியைத் துளைக்கும் தூசிகளாகக் கூட கருதுவதில்லை

ஒரு படைப்பாளியின் இலக்கியப்படைப்புகள் என்பன அவை எழுதப்பட்ட காலகட்டத்தின்’சமூக வெளிப்பாடு’ -‘மனச்சாட்சி’- சமூக உண்மைகள்; உண்மைகளைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று ஏற்றுக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள் தமிழில் பல உண்டு. ஆய்வேடுகளாகவும் நூல்களாகவும் வந்துள்ள அவை யானையின் உறுப்பொன்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ஒட்டு மொத்த யானையைப் பற்றி விவரிக்கும் குருட்டுத் தனத்தின் பல அம்சங்களைக் கொண்டவை எனலாம். ஏனெனில் ஒரு படைப்பின் நோக்கம் அதில் இடம்பெற்றுள்ள வார்த்தை சார்ந்த தகவல்களில் மட்டுமே வெளிப்படுவதில்லை. வெளிப்படும் நோக்கம் ஒற்றைப் பரிமாணமாக மட்டும் இருந்து விடுவதும் இல்லை.படைப்பை நோக்கம் என்ற கோணத்தில் யோசித்துப் பார்த்தால், ‘ஒரு படைப்பு அதன் காலத்தை அப்படியே பிரதிபலிக்கிறது’ என்று சொல்வதின் போதாமை புலப்படக்கூடும். ஒரு படைப்பாளி தனது படைப்பினுள் உருவாக்கும் சமூகம் என்பது வெளியில் இயங்கும் சமூகத்தின் ஒர் இணைச் சமூகம் ( Parallel society) அல்லது மாதிரி சமூகம் ( Model society) என்று சொல்ல முடியுமே தவிர, அதுதான் அக்காலகட்டத்து நிகழ்வுச் சமூகம் என்று சொல்ல முடியாது.

பொதுவாக இலக்கியப்படைப்புகளில் அதன் படைப்பாளி தன்காலத்துக்கு முந்திய நிகழ்வுகளை அசைபோடுபவனவாகவும், அதனைத் தன் போக்கில் புரிந்து கொள்ள முயல்பவனவாகவும், அதிலிருந்து தன் காலத்திற்கான கருத்தினை உருவாக்கித் தந்திட முயல்பவனாகவும் வெளிப்படுகிறான். சில வேளைகளில் கடந்த காலத்தின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் விமரிசனங்களை வைப்பதுண்டு. கருத்துருவாக்கம் என்பது எல்லாவகைப் பிரதிகளுக்கும் பொதுவான அம்சம்.தரமான இலக்கியப்பிரதி எனத் தெரிவு செய்யப்படும் ஒரு படைப்பும் வெகுமக்கள் ரசனைக்கான ஒரு பிரதியெனத் தள்ளப்படும் ஒரு படைப்பும் அடிப்படையில் கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஒரு படைப்பின் மூலம் எழுத்தாளன் நேரடியாகக் கருத்துக்களைப் பேசுவதோடு ஒட்டுமொத்தப் படைப்பின் அமைப்பின் ஊடாகவும் வாசக மனத்தைக் கட்டமைக்க முயல்கிறான் என்பதை நவீனத்திறனாய்வு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே போல் ஒரே மாதிரியான தொடர்கதையை எழுதும் எழுத்தாளனும், மாத நாவல் வெளியீட்டாளனும் ,துணுக்கு எழுத்தாளனும், சுவரொட்டிகளை உருவாக்கி அச்சிடுபவனும் வாசக மனத்தை -வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடத்தான் செய்கின்றனர். இவர்களின் வினையாற்றும் திறன், தரமான இலக்கியப் படைப்பெனக் கருதும் பிரதியைத் தரும் எழுத்தாளனின் வினையைவிடக் கூடுதலானது; காத்திரமானது என்று கூடச் சொல்லலாம். அந்தத் திறன் படைப்பின் அமைப்பு மற்றும் மொழிப்பயன்பாடு சார்ந்த திறன் அல்ல; தொடர்ந்து மேலும்மேலும் ஒரே புள்ளியில் தாக்கும் திறன் சார்ந்தது.

இலக்கியப்படைப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள நம்காலத்துக்கு முந்திய இலக்கியங்கள் உதவுவதைவிட நம்காலத்து எழுத்துகள் அதிகம் உதவக்கூடும். நம்காலத்து இலக்கிய வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல்,நாடகம் போன்றனவற்றில் அளவில் சிறியவைகளான சிறுகதையும் கவிதையும் சமகாலத்தன்மைகள் அதிகம் கொண்டவை. இங்கு அதிகம் என்பது நாவலும் நாடகமும் என்ற வடிவங்களோடு ஒப்பீட்டு அளவில் தான். நடப்பு வாழ்க்கையின் விவரணையோடு ஒருவித விமரிசனத் தொனியைத் தனது வடிவத்தின் கட்டமைப்பிற்குள் அவை கொண்டிருக் கின்றன.வெளிப்படும் விமரிசனத்தொனி நடப்பு வாழ்வின் மீதான அதிருப்தி யாகவோ எதிர்காலத்தின் மீதான நம்பிக்¢கையாகவோ அமைகின்றன. அந்த நம்பிக்கை முன்னர் சொன்ன இணைச் சமூக அமைப்பு பற்றியதாக மாறிவிடுகிறது.ஆனால் நாவல் என்பது அளவு காரணமாக,அதன் முந்திய காலத்திற்குள் நுழைந்து கொண்டு வரலாற்றைப் பேசுவனவாக மாறிக் கொள்கிறது. நாவல்கள் பேசும் வரலாறுகள் பலநேரங்களில் தனிமனித வரலாறுகளாகவும், சில நேரங்களில் ஊரின் வரலாறாகவும், சாதிகளின் வரலாறாகவும் இயக்கங்களின் வரலாறாகவும், பிரதேசங்களின் வரலாறாகவும் இருக்கின்றன. இந்த வரலாறுகள் அப்படியே பதிவு செய்யப்படுவதில்லை. நாவலாசிரியனின் கோணத்திலிருந்து தான் பதிவு செய்யப்படுகின்றன. அவனது கோணம் உருவாக்கும் நாவலின் கட்டமைப்பு, சொல்லப்பட்ட வரலாறு பற்றிய கருத்து நிலையை உருவாக்குகிறது எனக் கூறலாமேயொழிய, அதன் காலத்தைப் பதிவு செய்துள்ளது என்று சொல்ல முடியாது.தமிழ் நாவல்களிலிருந்து மேலே சொன்ன வரலாறுகளுக்கு இங்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.

இன்னொரு வடிவமான நாடகமோ அளவில் பெரியது என்றாலும் நாவலிலிருந்து விலகி நிற்பது. அது கடந்த காலத்தைத் திரும்ப எழுதித் தருகிறது என்பதாக இல்லை.வரலாற்றை விவாதத்திற்குள்ளாக்குகிற தன்மையுடையதாக இருக்கிறது. ஏனெனில் அதன் கட்டமைப்பும் வெளிப் பாட்டு முறையும் அப்படி. மேலே சொன்ன கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்ற வடிவத்தில் ஏதாவது ஒன்று இக்காலகட்டத்தைச் சரியாகப் பிரதிபலிக்கும் வடிவம் எனவும், அதில் இந்த எழுத்தாளரின் இந்தப் பிரதி நமது காலச் சமூகவாழ்வின் சரியான பிரதிபலிப்பு என்று நம்மால் சொல்ல முடியாது.சொல்ல முயன்றால் ஒவ்வொருவரிடமிருந்தும் வேறுவேறு பெயர்கள் வரக்கூடும்.

புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் தொடங்கி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி வழியாக.. ஜெயமோகன் , இமையம் என அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் பிரதிகளை மட்டுமே ஆய்வுத் தரவுகளாகக் கொண்டு தமிழ் வாழ்வின் சகல பரிமாணங்களையும் அறிந்து விட முடியுமா..? பெரும்பான்மைத் தமிழர்களின் நினைவுகளில் நுழையாத இந்தப் பெயர்களும் அவர்களின் பிரதிகளும் அதில் வெளிப்படும் தரவுகளும் தமிழ் சமூகத்தின் வெளிப்பாடு எனச் சொல்வது எந்தவிதத்தில் சரியாக இருக்க முடியும்..? இப்படியான கேள்விகளை எழுப்பிக் கொண்டே போய்த் தமிழ்ச்சமூகம் பற்றிய ஆய்வுகளுக்கு, தமிழ் இலக்கியங்கள் தரவுகள் ஆகாது என்று சொல்லிவிடுவது எனது நோக்கம் அல்ல. அப்படிச் சொல்வதும் ,’ இலக்கியங்களே முழுமையான சான்றுகள்’ என்று சொல்வதும் ஒன்றுதான்.

காத்திரமான சிந்தனைகள் கொண்ட ஒரு படைப்பாளியின் படைப்புகள், சமூகத்திற்கான கருத்துக்களை உருவாக்கித் தருகின்றன என்ற அளவில் அவை அதன் காலத்துச் சமூகக் கட்டமைப்பில் வினையாற்று கின்றன. அந்த வினையின் காரணமாக அவை தரவுகளாக நிற்கின்றன. அவை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்து வகையான பிரதிகளும் இதே காரணத்திற்காகத் தரவுகளாக ஆகமுடியும். அந்த நிலையில் அந்தப் பிரதிகளில் தரமான பிரதி அல்லது தரமற்ற பிரதியென எதுவும் இருக்க முடியாது. சமூக அறிவியல் ஆய்வுக்குத் தரவுகளாக அமையும் நிலையில்- அவை எழுதப் பட்ட காலத்தில் கருத்துக்களை உருவாக்கி வெகுமக்¢களைக் கட்டமைக்கின்றன என்ற அளவில்- புதுமைப்பித்தனின் பிரதிகளும் கல்கியின் பிரதிகளூம் கூட ஒன்றுதான்; சுந்தரராமசாமியின் எழுத்துக்களும் பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்துக்களும் கூடச் சமமானவைகளே.

இன்றைய அரசியல் நிகழ்வுகளை விளங்கிக் கொள்ள முயலும் ஒரு சமுதாய அரசியல்துறை மாணவனுக்கு, ‘ இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான அம்சம் தேர்தல்’ என்பது புரியவேண்டும். தேர்தலில் கூட்டணி அமைக்க ஆள்பலம் காட்டப்பட வேண்டும்.ஆள்பலம் காட்டுவதற்கான ஒரு வடிவம் பேரணி மற்றும் மாநாடுகள் என்பது அவனுக்குத் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட ஆய்வாளன் மாநாட்டை யும் பேரணியையும் நேரில் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு, இயற்றப் படும் தீர்மானங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வந்து தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினால், அக்கட்டுரை அவனது நோக்கத்தை முழுவதும் நிறைவேற்றாது. அதற்கு மாறாக , அழைக்கும் அரசியலின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, அழைக்கப்படும் விதம், எழுதப்படும் சுவரெழுத்து வாசகங்கள், எழுத்துக்களின் உயரம், கட்-அவுட்டுகளின் அளவு மற்றும் எண்ணிக்கை, ஊர்வலத்தின் நேரம் மற்றும் நகர்வுமுறைகள் என மாநாட்டுக் கெனத் தேதி குறித்த நாள் முதலே, அந்த அரசியல் கட்சியின் செயல்பாடுகள் அத்தனையும் அவசியம். இவையெல்லாம் சேர்ந்து தான் அந்தக் கட்சியைப் பற்றியும், அக்கட்சியின் தலைவரைப் பற்றியும், வெகு மக்களிடையேயும், வெகுமக்களின் ஊடகங்களிடையேயும், கருத்தினை- பிம்பத்தினை உருவாக்குகிறது.

எழுத்துப் பிரதிகளைவிடவும், கூடுதல் வலுமிக்க கோஷங்களும், பேச்சுக் களும், அவை நிகழும் இடங்களும், நிகழ்த்தும் முறைகளும் சரியாகக் கவனித்துத் தரவுகளாகப் பயன்படுத்தப் பட வேண்டியவைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஓர் இலக்கியப்பிரதி உருவாக்கும் கருத்து- பிம்பம்- என்பன அந்த அளவு வலிமையுடையன அல்ல என்றாலும், கருத்துரு வாக்கம்தான் ஒரு பிரதியின் அடிப்படையான நோக்கம் என்பதில் ஐயமில்லை. அந்த அடிப்படையின் பேரில் தான் இலக்கியப்பிரதிகள் சமூக அறிவியலின் ஆய்வுத்தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன; கொள்ளப்பட வேண்டும். அப்படிக் கொள்ளப் படும் நிலையில் தான் ஒரு இலக்கிய ஆய்வு சமூக அறிவியலின் ஒரு பிரிவாக மாறும். அல்லாத நிலையில் அவை வெறும் இலக்கிய ஆய்வாக மட்டுமே நின்று விடும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்