மனு : சில சொல்லாடல்கள்

வாய்மொழிப்பனுவல்
உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் இருப்பதில் மாற்றம் தேவையில்லை என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.
சுரண்டல், அடிமைத்தனம், உரிமை கோரல் போன்ற சொற்களுக்கு முகஞ்சுளிக்கும் வலதுசாரித்தனத்தில் உள்ள நெகிழ்ச்சியின் அடிப்படையில் கடும்போக்கு வலதுசாரித்தனத்தையும் தாராளவாத வலதுசாரித்தனத்தையும் பிரித்துக் காட்ட முடியும். தாராளவாத வலதுசாரித்தனம் வாழ்தலுக்கான அடிப்படைப் பொருளியல் நிலையையும் அதன் வழியாகக் கிடைக்கும் தனிநபர் சுதந்திரத்தையும் கொண்டாட்டங்களையும் மதிக்கக் கூடியது. ஒரு தனிநபர் தனது கடும் உழைப்பாலும் முயற்சியாலும் முதலாளியாக மாறுவதை வலதுசாரித்தனம் மறுப்பதில்லை. பல நேரங்களில் ஊக்குவிக்கவும் செய்கிறது. அப்படி முதலாளியாக மாறியவர்களை உழைப்பால் உயர்ந்தவர் என்று சொல்வதோடு, கடவுளின் பார்வையால் இது நடந்தது என விளக்கங்களையும் சொல்வதுண்டு.

பன்னாட்டு மூலதனத்திரட்சிக்குப் பின்னால், உலகம் முழுவதும் தாராளவாத வலதுசாரித்தனம் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அரசதிகாரம் இறுக்கமான கடும்போக்காளர்களின் கைக்கு மாறுக்கொண்டிருக்கிறது என்பது வேடிக்கையான நகைமுரண். கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் ஒருவர் தன்னை வலதுசாரி என்று சொல்லிக்கொள்ளவே கூச்சப்படுவார். இப்போது அந்தக் கூச்சமெல்லாம் தொலைந்துவிட்டது. அப்படித் தொலைத்துவிட்டவர்கள் தங்களைத் தாராளவாத வலதுசாரியாக மாற்றிக்கொண்டால் பெரிய சிக்கல் எழப்போவதில்லை. அதற்கு மாறாக இந்திய வலதுசாரிகள் கடும்போக்காளர்களாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்குக் காரணமாக இருப்பது இந்திய சாதியப் படிநிலைகளை இயல்பானதாகக் கருதுவதுதான். சாதி அமைப்பும் வலது சாரித்தனத்தின் கருத்து என நினைக்கிறார்கள். அதனால் அதனை மாற்றும் பேச்சுகளைக் கண்டு முகஞ்சுழிக்கிறார்கள். அப்படிப் பேசுபவர்களை அடக்கி ஒடுக்கிவிட வேண்டுமெனவும் நினைக்கிறார்கள். அடக்கி ஒடுக்கவே அரசு அதிகாரம் இருப்பதாக நம்பிச் செயல்படுகிறார்கள். அந்த நம்பிக்கையை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் இப்போதுள்ள மத்திய அரசின் இயக்கத்தைப் பின்னின்று இயக்கும் கருத்தியல் அதுதான்.


பா.ஜ.க.வின் கருத்தியலைப் பேசும் பலரது எழுத்துகளில் ”சாதி வேறுபாடுகளும் அதன் அடிப்படையிலான வேலைப்பிரிவினைகளும் தீமையானதல்ல; ஒரு தேசத்தின் கட்டுப்பாட்டுக்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் தேவையானவை” என்று விவாதிப்பதைப் பலரும் வாசித்திருக்கக்கூடும். நான் வாசித்திருக்கிறேன். இந்த அரசு, கடும்போக்கு வலதுசாரி அரசு என்று தெரிந்துதான் சாதிய/ பெண்ணடிமைத்தனக் கருத்தியலை உருவாக்கித் தந்த "மனுஸ்மிருதியைத் தடைசெய்" என்று கோரிக்கை வைக்கிறார் முனைவர் தொல். திருமாவளவன். அவர் கோரிக்கை வைத்துப் போராட்டம் செய்தவுடன் தடைசெய்துவிடும் ” என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கப்போவதில்லை. அவரைப் பின்பற்றிப் போராடும் தொண்டர்களுக்கும் இருக்க வாய்ப்பில்லை. அவரது அறிவிப்பை ஏற்று ஆதரவு தெரிவிக்கும் சக்திகளுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கப்போவதில்லை. இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் அந்த மனுஸ்மிருதியின் மீது கவனத்தைக் குவித்து விசாரணைக்குட்படுத்த வேண்டும்; விவாதப்படுத்த வேண்டும்; அதனைப் பொருத்தமற்ற பனுவல் என்று ஒதுக்கிவைத்துவிட்டு, அந்த இடத்தில் அரசியல் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான். இதனைச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தாலும் புரியாததுபோல நடித்து மாற்று விவாதங்களைக் கட்டமைக்கிறார்கள் வலதுசாரிகள்.

பேசப்படும் சூழல் காரணமாக மனுவின் அத்தனைக் கெடுமதிக்கும் பிற்போக்குத் தனத்திற்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது எப்படி புரியாமல் போகிறது? மனுவின் கருத்தியல் அடிப்படையில் கிடைக்கும் திமிரோடு நாம் பேசுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் போவதெப்படி? இவர்களில் சிலர் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டவர்களாகவும் தாராளவாதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் சொல்லிக் கொண்டே மனுஸ்மிருதியை விவாதிக்கக் கூடாது என்று எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். மனுஸ்மிருதி தரும் உச்சநிலையில் நின்றுகொண்டு பேசும் அவர்களால் அதுதரும் திமிர்த்தனத்தைக் கைவிடமுடியவில்லை என்பதை இந்தியத் துயரம் என்பதா? இந்துத்துவத் துயரம் என்பதா? இத்தகைய வாதங்களின் வழியாகத் தங்களின் அறிவுத் திறத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டு தங்களையே அம்பலப்படுத்திக்கொள்கின்ற இவர்கள் தான் நவீனத்தமிழ் இலக்கியத்தின் முகங்களை அடையாளப்படுத்தினார்கள் என்பது எவ்வளவு துயரமான நினைவுகள்.


********
மாற்று விவாதம் என்ற பெயரில், மனுஸ்மிருதி காலாவதியான ஒரு பனுவல் என்று சொல்கிறார்கள். தவறான மொழிபெயர்ப்புதான் இப்போது கிடைக்கிறது என்கிறார்கள். வைதீக இந்துமதம் புறச்சமயங்களென வரையறுத்துச் சொல்லும் பௌத்தம், சமணப் பனுவல்களின் போதனைகளையும் புறபுறச் சமயப்பனுவல்களான பைபிளையும் குர்ரானையும், அறக்கருத்துகளை முன்வைக்கும் திருக்குறளையும் இணையாக வைத்து அவையும் பெண்களுக்கெதிரான கருத்துகளைத் தானே எழுதிவைத்துள்ளன. அவற்றையெல்லாம் விசாரணைக்குட்படுத்தாமல் மனுஸ்மிருதியை மட்டும் பேசுவது உள்நோக்கம் கொண்டது என வாதிடுகின்றனர்.

முதன்மையான காரணம் மனுஸ்மிருதி எப்போதும்போல இப்போதும் அதிகாரத்திலிருப்பவர்களுக்குப் பழைமையின் பேரால் காலாவதியான நம்பிக்கைகளையும் சடங்குகளையும் அடிமைத்தனத்தையும் திரும்பக் கொண்டுவர உதவுகிறது என்பதுதான். அத்தோடு மனுஸ்மிருதி காலாவதியான பனுவல் என்பது முழுமையான பொய். அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவில் உருமாறிக்கொண்டே இருந்த பனுவல். அதன் மூலமொழியான சம்ஸ்க்ருதத்தில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்ததன் வழியாகவே சாதியப்படிநிலைகளை ஏற்றுக்கொண்ட ’இந்தியத்தனத்தை(Indianness)’ உருவாக்கியது என்பதுதான் அதன் வரலாறு. மற்ற மொழிகளில் சான்றுகளைத் தரமுடியாது என்றாலும் தமிழில் அதன் உருமாற்றத்தையும் செல்வாக்கையும் அடுக்கிச் சொல்ல முடியும். தமிழக வரலாற்றின் முன்னிடைக்காலம் தொடங்கி மனு என்ற பெயரும், மனுஸ்மிருதி என்ற சொல்லாட்சியும் செல்வாக்கோடு இருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பல்லவர்கள் காலம் தொடங்கி நாயக்கர்கள் காலம் வரையில் எழுதப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள்,மெய்க்கீர்த்திகள் ஒவ்வொன்றிலும் மனுதர்மத்தைக் காக்கும் கடமையை அரசர்களுக்கு உரியதாகவே எழுதப்பெற்றுள்ளன. அதனைக் காக்கும் நோக்கத்தோடுதான் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்தது எனச் சொல்லிக்கொள்வதில் பேரரசர்களும் மண்டலாதிபதிகளும் தண்டல் நாயகர்களும் பாளையக்காரர்களும் ஜமீந்தார்களும் பெருமை அடைந்துள்ளனர். இலக்கியங்களிலும் இத்தகைய பெருமித உணர்வு வெளிப்படவே செய்துள்ளது. தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவற்றில் தூக்கலாக இல்லை என்றாலும் பின்னிடைக்காலத்தில் எழுதப்பெற்ற சிற்றிலக்கியங்களில் மனுவின் செல்வாக்கு அதிகமாகவே உள்ளன. அக்காலத்தில் எழுதப்ப்பெற்ற இலக்கண நூல்கள் எழுத்துகளை வகைப்படுத்தும்போது நால்வருணப் பாகுபாட்டை அடியொற்றி வகைப்படுத்தியதைக் காண்கிறோம். குறிப்பாகத் தலபுராணங்கள், சதகங்கள் போன்றன மனுஸ்மிருதியின் மொழிபெயர்ப்புகளைப் போலப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. பெரும்போக்காக இருக்கும் மனுஸ்மிருதி ஆதரவுப் போக்கிற்கு எதிரான தனிப்பாடல்களும் தமிழில் இருந்துள்ளன என்பதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அதேபோல் சித்தர் பாடல் மரபில் காமம், காதல் போன்றவற்றை மறுக்கும் விதமாகப் பெண்களின் நிலையை மறுக்கும் போக்கோடு சாதி அமைப்பை மறுக்கும் போக்கும் உள்ளது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

******

நேரடியாக வாசிக்கப்படாத நிலையிலும் அரசதிகாரத்தின் ஆதரவு பெற்ற கருத்தியலை நிலை நிறுத்த உதவிய ஒரு பனுவல் வாய்மொழிப் பரவல் வழியாகவே சமூகப்பரவலை அடைந்ததற்கு உலக மொழிகள் பலவற்றிலும் எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மகாபாரதமும் ராமாயணமும் எழுதப்படவில்லை என்ற போதிலும் இந்தியர்களில் பெரும்பாலோருக்கு அதன் கதைப்போக்கும் அவற்றின் கிளைக்கதைகளும் அதன் வழியாக நிலைநிறுத்தப்படும் கருத்தும் தெரியும். திருக்குறள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம் போன்ற நீதி நூல்களுக்கும் வாய்மொழித்தன்மையும் , அதன் காரணமாகா அறம் பேசும் தொடர்ச்சிகளும் இருந்திருக்கின்றன.இளங்கோவின் சிலப்பதிகாரம் என்பதாக இல்லாமல் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் கண்ணகியின் கதை வாய்மொழிப்பரவலாகவே பரவியிருக்கிறது. கதாகாலட்சேபம், உடுக்கடிப் பாடல்கள், வில்லுப்பாட்டு, கூத்துப்பாடல்கள் என ஒவ்வொன்றிலும் புராண, இதிகாச, காப்பிய, ஸ்மிருதிகளின் கருத்துகளும் கதைகளும் மறு உருவாக்கம் பெற்றுள்ளன.அண்மைக்காலத் தகவல் தொடர்புப்பெருக்கத்திற்குப் பின் தினசரிச் செய்திகளைவிடவும் கூடுதலாகச் சமயக் கதைகளும் நன்னெறிக்கதைகளும் திருக்குறள் உரைகளும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொலைக் காட்சிகளிலும் பண்பலை ஒலிபரப்புகளிலும் காலை நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்படும் பக்திப் பேச்சுகளில் நீட்டிக்கப்படுவதின் சாரம் மனுஸ்மிருதியின் சாரம் அல்லாமல் வேறில்லை .

மநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு

மநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிகழ்கால நேரடி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெருந்தல - பிக்பாஸ் -நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி. மாலை 6.30 முதல் 10.30 வரை நான்கு மணி நேரமும் விஜய் தசமியை நிகழ்த்திக் காட்டினார்கள்.

சர்க்கரைப் பொங்கல் வைத்தல், சுண்டல் அவித்தல் , பூஜை செய்தல் என்பதில் தொடங்கி , முப்பெருந்தேவியர் கதை என நகர்ந்தது நிகழ்ச்சி. பின்னர் கிராமம் x நகரம் எனப் பிரித்துப் பேச்சுப் போட்டிகள், விளையாட்டுகள், பாட்டு, ஆட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள். இரு அணியாகப் பிரிந்தது போக அனிதாவை நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஆக்கியிருந்தார்கள்.
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராக- வெளியில் அவர் செய்யும் தொலைக்காட்சிப் பணியை- அனிதா சம்பத் உள்ளேயும் செய்தார். கிராமம் x நகரம் என்ற வேறுபாடுகளையும் நம்பிக்கைகளையும் மனிதர்களின் இயல்புகளையும் பேசி முடித்தபின்பு, இதன் மீது தனக்கும் சில கருத்துகள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, கிராமத்தில் இன்னும் சாதியும் பெண்களின்மீதான பழைய கருத்துகளும் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன என்பதைத் தனது அனுபவமாகச் சொன்னார். கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு வேலைக்கு வருபவர்கள் சில மாதங்களுக்குத் தனியாகவும் மற்றவர்களோடு பேசாமல் அமைதியாகவும் இருப்பார்கள்; மெதுவாகத்தான் அடுத்தவர்களோடு இணைந்து வேலைசெய்யத் தொடங்குவார்கள் என்று சொல்லிவிட்டு, ‘ கிராமப்பகுதிகளில் வேலை பார்க்கும்போது, “ நீங்க என்ன ஆளுங்க” என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள்; ஆனால் நகரத்தில் அப்படி யாரும் கேட்பதில்லை என்று ஒரு அனுபவத்தைச் சொன்னார். அந்த அனுபவம் ‘இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க’ என்பவர்களுக்கான பதிலாக இருந்தது. அந்தப் பேச்சுக்குப் பெரிய எதிர்வினையோ, முகச்சுளிப்போ மற்றவர்களிடம் இல்லை. ஆனால் அடுத்தவொரு அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கிருக்கும் நபர்களில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் முகமும் உடலும் அடைந்த மாற்றங்களை அண்மைக்காட்சியாகக் காட்டியது காமிரா. தலையில் பெரிய இடியே விழுந்ததுபோல எண்வகை மெய்ப்பாடுகளையும் காட்டினார் அந்தப் பெரியவர்.

இப்போதும் விதவைப் பெண்களுக்கு மங்கல நிகழ்வுகளில் இடமில்லை; அவரது மகன், மகள் போன்ற ரத்த உறவு தொடர்பான திருமண நிகழ்வாகவே இருந்தாலும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் தான் முன்வந்து அப்படியெல்லாம் ஒதுங்கி இருக்கக் கூடாது என்று சொல்லிப் பங்கேற்க வைத்தேன் என்று விவரித்தார். விவரிக்கும்போது இறப்பு தொடர்பான சொற்களைச் சொல்லிவிட்டார் என்பது சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்டது. விஜயதசமி போன்ற ஒரு மங்கல நிகழ்ச்சியில் மரணம், சாவு, இறப்பு போன்ற சொற்களைச் சொல்லலாமா? என்பதுதான் அவரது பெருங்கவலையாகிவிட்டது. நேரடியாக முகஞ்சுளித்த அந்தப் பெரியவர் அங்கிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் - இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் என அவர் நினைத்த ஒவ்வொருவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரது பட்டியலில் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ரியோ போன்றோர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக அனிதாவிடம் பேசி அவரை மன்னிப்புக் கேட்க வைக்கும் சூழலை உருவாக்கினர். அவரும் மன்னிப்புக்கேட்கவே செய்தார். என்றாலும் அந்தப் பெரியவர் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிடிவாதம் பிக்பாஸ் நிகழ்வின் போட்டிப் பொருள் - கண்டெண்ட் - என்று கூட நினைத்திருக்கலாம். அவரது கவலையின் பின்னணியில் அந்த நம்பிக்கையில் - மங்கல நிகழ்ச்சிகளில் விதவைகளை ஒதுக்கிவைப்பதில் என்ன தவறு? என்ற கேள்வி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அந்த நம்பிக்கையை ஆழமாக வலியுறுத்திய அவருக்குத் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் அதிக வாக்குகள் அளித்து காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் கூட இருக்கலாம். உள்ளே இருப்பவர்களைப் போலத்தானே வெளியில் இருக்கும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.

செய்தி வாசிப்பாளராக இருந்து பெருந்தலயில் பங்கேற்கும் அனிதா சம்பத், ஊடகத்தில் இருந்ததால் தனக்குப் பலவற்றையும் குறித்துக் கருத்து இருக்கிறது; அதைப் பேசவந்தால் தடுத்துவிடுகிறார்கள் என நினைக்கிறார். தான்அதிகம் பேசுபவள் என உள்ளே இருப்பவர்கள் நினைக்கிறார்கள் என்பது அவரது வருத்தம்.
வெளியே அந்த நிகழ்ச்சியைக் குறித்து எழுதுபவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோன்ற பழமொழிகளை அவரோடு பொருத்தி விமரிசனம் எழுதுபவர்களின் எண்ணம் பெண்கள் அதிகம் பேசக்கூடாது என்பதைத் தாண்டி வேறென்னவாக இருக்கும்?.


மனு கருத்தியலாக இருக்கிறார்

மனு என்றொரு ஆள் இருந்ததில்லை; அவர் எழுதியதாகச் சொல்லும் ஸ்மிருதி ஒருவரால் எழுதப்பெற்றதில்லை எனப் பிராமணீயத்தையும், பிராமணர்களின் மேன்மையையும் அவர்களின் திறனையும் தகுதியையும் மெச்சிக்கொள்ளும் ஆட்கள் இப்போதும் வாதிடுவார்கள். ஆனால் மனு என்ற சொல்லும் அச்சொல்லால் உருவகப்படுத்தப்படும் கருத்தியலும் அதன் செல்வாக்கும் நீண்ட நெடுங்காலமாக இந்தியப் பரப்பில் இருந்துகொண்டே இருக்கிறது. சம்ஸ்க்ருத மரபுக்கு எதிராக முன்வைக்கப்படும் தமிழ் அடையாள அரசர்கள் காலத்திலும் அச்சொல்லும் அதன் செல்வாக்கும் அதிகமானதேதவிரக் குறைந்ததில்லை


மனு என்ற சொல்லும் அதன் வழியான கருத்தியலும்தான் பிராமணர்களுக்கு உடல் உழைப்பை உடமையாக்காமல், மூளையை மட்டும் பயன்படுத்துபவர்கள் என்ற தகுதியைத் தந்தது. அச்சொல்தான் மனிதர்களிடையே பிறப்பு அடிப்படையில் உயர்வு - தாழ்வைக் கற்பித்தது. இந்திய மனிதக்கூட்டத்தைப் படிநிலை அடுக்காக்கி உச்ச இடத்தை உறுதி செய்து தொடர்ச்செய்தது. அச்சொல்லின் வழியாகவே உடல் உழைப்பில் ஈடுபடும் பெரும்பான்மை மக்களைத் தீட்டானவர்கள் - அழுக்கானவர்கள் - தொடக்கூடாதவர்கள் என ஒதுக்கிவைக்கும் வன்முறையைத் தூண்டியது. மனிதர்க் கூட்டத்தில் பாதியாக உள்ள பெண்களைப் பண்டமாக - பொருளாக- சேவகிகளாகச் சித்திரித்து அடக்கிவைக்கத் தூண்டியது. ஒரு சொல் -வினையாக - செயலாக இருக்கும்போது உண்டாக்கும் விளைவைவிடப் பெயர்ச்சொல்லாக -கருத்தாகத் தொடரும்போது உண்டாக்கும் விளைவுகள் பெரிதினும் பெரிது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சொல் அது.


இந்திய வாழ்க்கையில் துடைத்து எறியப்பட வேண்டிய ஒருசொல் எதுவெனக் கேட்டால் மனு என்று தயங்காமல் சொல்லலாம். அச்சொல்லும் அதன் கருத்தும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் இல்லாமல் ஆக்கப்படவேண்டும் என ஒருத்தர் குரல் எழுப்பினால், அவர்தான் இந்திய ஆளுமை; இந்தியாவிற்கு வழிகாட்டி. அதைத் தொடங்கியிருக்கும் திரு தொல்.திருமாவின் குரல் ஆதரிக்கப்படவேண்டியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்