முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன்
அந்தக் கிராமங்களோடான நெருக்கமான உறவுகள் முறிந்து விட்டன என்றாலும் ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். சொந்த ஊரில் எனக்கென மிச்சமிருப்பது பத்துக்குப் பத்து அளவு நிலம். அதுதான் ஒரு காலத்தில் எங்கள் வீடாக இருந்தது. அதை மட்டும் விற்றுவிடாமல் இருக்கட்டும் என விட்டு வைத்திருக்கிறேன். மனைவிக்கு அவரது ஊரில் அதுவும் இல்லை. நிலங்கள், நகைகள், சொத்துபத்துகள் என வசதியான குடும்பம் என்றாலும் பெண்ணுக்குச் சொத்தில் பங்கு தரவிரும்பாத குடும்பம். அவரது பெற்றோர் இருக்கும்போதே சொத்துக்களைப் பிரித்துக்கொண்டார்கள். அப்போதே உரிமையைக் கோரி வழக்காடி ஐந்தில் ஒரு பங்கை வாங்கியிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் அந்த ஊர்களுக்குப் போய்வருவதை நிறுத்தவில்லை. அங்கு போவதற்குத் திருமங்கலம் ஒரு வழி. மதுரையிலிருந்து நேரடியாகப் போவதென்றால் உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யலாம். அந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்த அனுபவம் கார்ப்பயணம் ஒன்றில் கிடைத்த அனுபவம்.