பெருந்தடங்கள் பதித்த கலைஞர் பேரா. கே. ஏ. குணசேகரனை எனது நீண்ட நாள் நண்பர் என்று சொல்வதைவிட இருவரும் ஒருசாலை மாணாக்கர்கள் எனவும் ஒரே கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். 15 ஆண்டுக்காலம் மாணவர்களாகவும் ஆசிரியப்பணியிலும் ஒன்றாகப் பயணித்தவர்கள் நாங்கள் நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கித் தயக்கத்துடன் பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு.இப்படியே போனால் சொதப்பிவிடுவோமே என்று மனம் சொல்லும்போதே முன்வைக்கக் கால்கள் தயங்கிவிடும். ஓரடி முன்னால் போய்விட்டுப் பின்னால் ஈரடி வைப்பதே வாடிக்கையாகிவிடும். என்னுடைய இயல்பு இது என்றால், இதற்கு நேரெதிரானவர் நண்பர் கே.ஏ.ஜி. இந்தமாதிரியான கெட்ட பழக்கங்களெல்லாம் அவரிடம் எட்டிப் பார்த்ததே இல்லை. இதை நான் அவரருகில் இருந்து பதினைந்து ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்த காலத்தில் மட்டுமல்லாமல், தூரமாகப் போன பின்பும் அதனைப் பார்த்து ரச...