நீதிமன்றமும் சட்டமன்றமும் - இரண்டு குறிப்புகள்
இரண்டு நாட்களாக முகநூலில் வலம் வரும் இவ்விரண்டின் மீது எனது கருத்தை எழுத நினைத்தேன். ஆனால் ஏனோ எழுதியெழுதி அழித்துவிட்டேன். இப்போது சொல்லாமல் விட்டால் தூக்கம் வராது என்பதுபோலத் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கின்றன. இரண்டில் ஒன்று பேரறிவாளன் தொடர்பானது; இன்னொன்று கருத்துக்கணிப்புகளை முன்வைத்தல் தொடர்பானது. இவ்விரண்டின் தொடர்பில் நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பணிக்காலம் சில புரிதல்களைத் தந்துள்ளது. அந்த் அடிப்படையிலேயே இதனைச் சொல்கின்றேன் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்றுத் திரும்பியவர் பேரறிவாளன். அவர் மீது கொலைக்குற்றம் தொடர்பில் வழங்கப்பட்ட மரணதண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதும் குறித்தெல்லாம் எனக்குக் கருத்துக்கள் இருந்தாலும் அதனை இப்போது விவாதிப்பதில் பொருள் எதுவும் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் காலத்தை முடித்து வெளியே வந்துவிட்டார். சிறையில் இருந்தபோதும், சிறையிலிருந்து வெளியே வந்தபின்னும் தனது கல்வி ஆர்வத்தைத் தக்கவைத்துத் தொடர்ந்து கற்றுத் தேர்வு எழுதி வழக்குரைஞராகத் தன்னைத் ...