ஒன்று ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு கைகூடும் கனவு அது. 1957இல் பிறந்த, அப்போதைய கோவை மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமொன்றில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த, தன் சக ஆசிரியர்களால் கே.என். எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட நல்லமுத்து ஆசிரியர் - முத்தம்மாள் தம்பதியின் மூத்தமகன் எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியொன்றில் குமாஸ்தாவாக இருப்பவன், 1993இல் எழுதி வெளியிட்ட 'பலி' என்னும் தமிழின் புகழ்பெற்ற தலித் சிறுகதை 2012இல் கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ரானடே ஆடிட்டோரியத்தில் தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்றுநாள் கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய நிகழ்வாக மேடையேற்றப்படவிருந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இப்போதைய தமிழ்த்துறைப் பேராசிரியரும் முன்னாள் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியரும் முன்னாள் வார்சா பல்கலைக்கழக ஆசியவியல் துறைத் தலைவரும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவரும் அதன் இயக்குனருமான பேராசிரியர் அ. ராமசாமியின...