ஒரு தேசத்தின் மொத்தப் பரப்பின் சமுதாயநிலையை அறிய முயலும் அறிஞர்களும் சரி, அதன் பகுதியான ஒரு பகுதியை அறியும் நோக்கம் கொண்ட அறிஞர்களும் சமுதாயத்தின் பேரலகுகளான அரசமைப்பு, அதன் உட்கூறுகளான நிர்வாக அமைப்புக்கூறுகள், சமயம், சாதி, நாகரிகம் என்பன போன்ற அமைப்புமுறைகளை அறியவே முதன்மையாக விரும்புகின்றனர். ஆனால் சமுதாயக் கட்டமைப்புக்குக் காரணமாகவும், அதனை வழி நடத்துவதற்குரிய உந்துசக்தியாகவும், அதன் சாராம்சமாகவும் இருக்கின்ற பொருளாதாரச் செயல்பாடுகளையும் உறவுகளையும் அறிவது முதன்மை தேவையாகும். ஏனெனில் மனிதகுலம் தான் வாழ்வதற்கும், வளர்வதற்கும் உணவு, உடை, உறையுள் எனும் மூன்றையும் அடிப்படைத் தேவைகளாகக் கொண்டு முயன்று வருகிறது