தண்டனைகளும் மன்னிப்பும்


விலக்கும் விதியும்

பெர்ட்டோல்ட் பிரெக்ட் எழுதிய - EXCEPTION AND THE RULE விதிவிலக்கும் விதியும் என்றொரு நாடகத்தைச் சென்னையின் மேக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் - தோட்ட அரங்கில் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கப் புதுச்சேரியிலிருந்து மாணவர்களோடு சென்றிருந்தேன். புதுச்சேரியிலிருந்த காலத்தில் சென்னையில் நடக்கும் நாடகங்களைப் பார்க்க மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். அவர்களும் ஆர்வத்துடன் வருவார்கள். கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா, ஐக்யா, சென்னைக் கலைக்குழு எனப் பல நாடகக்குழுக்கள் நவீன நாடகங்களை மேடையேற்றிய காலகட்டம். அப்போது பார்த்த நாடகங்கள் குறித்து எதுவும் எழுதி வைக்கவில்லை. நாடகங்கள் முடிந்தவுடன் நடக்கும் கலந்துரையாடலின் போது விமரிசனங்களைச் சொல்லிவிடுவதால் எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை. அத்தோடு எழுதும் அளவுக்குப் போதிய திறனாய்வுப் பார்வையும் இருக்கவில்லை. பத்தண்ணாவின் இயக்கத்தில் அரங்கேறிய விலக்கும் விதியும் நாடகம் பற்றிய கலந்துரையாடலில் விமரிசனமாக எதனையும் சொல்லவில்லை. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கேட்டது மட்டுமே நினைவில் உள்ளன.

பிரெக்டிய அரங்கு குறித்துப் பல இரவுகளிலும் பகலிலும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் உண்டு. நான்கு பக்கமும் தரையிலும் கொஞ்சம் உயர்த்தப்பட்ட படிக்கட்டுத் தளத்திலும் உட்கார்ந்து பார்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட சதுர அரங்கில் இந்த விலக்கும் விதியும் நாடகத்தைச் சதுர அரங்கில் ஏன் மேடையேற்றுகின்றேன் என்ற விளக்கத்தைப் பின்னர் நடந்த உரையாடலின் போது சொன்னார்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் இருந்த பல்கலை அரங்கத்திற்காக இளைய பத்மநாதன் இயக்கியிருந்தார். அக்குழுவினரை வைத்துப் பின்னர் அ.மங்கை இயக்கிய நாடகங்களையும் பார்த்திருக்கிறேன். ஈழத்து நாடகக்காரரான 'பத்தண்ணா' இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.
*****
பத்தண்ணாவும் அவர் இயக்கிய அந்த நாடகமும் அவ்வப்போது நினைவுக்கு வரும். இப்போது நினைவுக்கு வருவதற்குக் காரணம் நமது அரசுகள் காட்டும் தயக்கம் தான். மக்களாட்சி நடைமுறைகளைப் பின்பற்றும் ஒன்றிய/ மாநில அரசுகள் சட்டப்படியான -விதிகளின் படியான நடவடிக்கைகளை எடுப்பதில் காட்டும் காட்டும் தயக்கங்களின் பின்னால் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற நிலையைக் காற்றில் பறக்கவிடுகின்றன.

தனிநபர்களைத் தண்டிக்கும் விதிகள் ஒவ்வொன்றையும் நபர்களுக்கேற்பவே பின்பற்றுகின்றன. பொதுவெளியில் இயங்கும் அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கு அனைத்திலிருந்தும் விலக்குகள் அளிக்கப்படுகின்றன. சமய அமைப்புகளின் பக்கம் சட்டம் நெருங்குவதே இல்லை. அவற்றின் திருவிழாக்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இருக்கும் சட்டமீறலைக் கண்டுகொள்வதே இல்லை. சாதிச்சங்கங்களின் செயல்பாடுகளில் கூட்டத்தின் அளவைப் பொறுத்தே காவல்துறையும் சட்டமும் கடுமை காட்டுகின்றன. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி என ஒவ்வொன்றையும் பார்த்தே விதிகளும் விலக்குகளும் நடைமுறைப்படுத்துகின்றன. ஆனால் இந்தியச் சட்டங்கள் எதிலும் அப்படி எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அண்மையில் நடந்த கரூர் நெரிசல் மரணங்களை ஒட்டி விதிகளும் விதிவிலக்குகளும் எப்படி இருக்கின்றன என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

தண்டனைகளற்ற உலகம்
டிசம்பர் 05, 2014

ஒவ்வொரு பருவம் முடியும்போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பாடம் கற்க வந்தவர்களின் வருகைப் பதிவைச் சோதித்து, அவர்களைத் தேர்வுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப் பல்கலைக்கழகங்களில் விதிகள் உண்டு. நடத்தப்பெற்ற வகுப்புகளில் மாணாக்கர் 75% வந்திருந்தால் கவலையே பட வேண்டாம். ஆசிரியர் அவரைத் தேர்வுக்கு அனுப்பித் தான் ஆக வேண்டும். வகுப்புக்கு வந்து பாடம் தான் கேட்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. வருகை, பதிவில் இருந்தால் போதும். 60% க்கும் குறைவாக வந்தால் தேர்வில் பங்கேற்பது முடியாது. இது கடுமையான தண்டனை. ஆனால் 60-75 சதம் வந்திருந்தால் தண்டத் தொகையைக் கட்டிவிட்டுத் தேர்வுகளை எழுதிவிடலாம். இந்த நடைமுறையை நீங்கள் தண்டனையாகவும் கருதலாம்; மன்னிப்பாகவும் நினைக்கலாம்.

சிறந்த கல்லூரிகள் எனக் கருதப்படுபவை மாணாக்கர்களின் வருகைப் பதிவேட்டிலும், அதனை முன்வைத்து அளிக்கப்படும் தண்டனை மற்றும் மன்னிப்பில் கவனமாக இருக்கின்றன. அதிலிருந்து விலகுவதன் வழியாக ஒரு கல்லூரி தனது தரத்தினை - கட்டுப்பாட்டினை இழந்து விடுகின்றது. ஆனால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துறைகளில் தினசரி வருகைப் பதிவேடுகள் முறையாகப் பதிவு கூடச் செய்யப்படுவதில்லை. அப்படிப் பதிவு செய்தாலும், ஒவ்வொரு ஆசிரியரின் வகுப்பிற்கும் ஒரு மாணவி அல்லது மாணவன் வந்திருந்தான் எனக் கணக்கிடும் முறையிலான பதிவுகளை வைத்திருப்பதில்லை. ஆனால் தன்னாட்சிக் கல்லூரிகள் இவற்றையெல்லாம் கறாராகச் செய்கின்றன. அதன் வழியாகவே தங்களின் கட்டுப்பாடுகளை உறுதி செய்கின்றன. பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் வருகையைப் பதிவு செய்வதைத் தங்களின் பொறுப்பாக நினைப்பதில்லை. பாடம் சொல்வது மட்டுமே தங்களின் பொறுப்பு என நினைப்பதன் வெளிப்பாடாகக் கருதி வருகைப் பதிவைச் செய்யும் பேராசிரியர்களைக் கேவலமாகக் கூட நினைப்பதுண்டு. நானே மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உரிமை, கடமை, சுதந்திரம் என்பதைப் பற்றிப் பேசுவதையும் நடைமுறைப்படுத்துவதையும் மூச்சுவிடுவது போன்ற இயல்புடன் செய்யும் ஐரோப்பியப் பல்கலைக்கழக வளாகங்களில் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கறாரானதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் வருகைப் பதிவைத் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். பருவம் முடியும்போது மாணாக்கர்களின் வருகைப்பதிவைக் கடைசி வகுப்பில் அறிவிப்பு செய்கிறார்கள்.அந்த நடைமுறையை இப்போது இங்கேயும் நான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஆனால் இந்திய மனநிலையோடு செய்யத் தொடங்கினேன் என்பதும் உண்மை.

பெரும்பாலும் இங்கே ஆசிரியர்கள் எதையும் பொதுவில் வைப்பதில்லை; விவாதிப்பதுமில்லை. எல்லாவற்றையும் விதிகளின்படி செய்வதாகக் காட்டுவார்கள். அல்லது விதிகளையே பின்பற்றாமல் கட்டற்ற சுதந்திரம் வழங்குபவர்களாகக் காட்டுவார்கள். இரண்டுமே சிக்கலானது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதனால் இந்த இரண்டையும் நான் செய்வதில்லை. நான் பாடம் எடுக்கச் செல்லும் மூன்று வகுப்புகளிலும் மாணாக்கர்களின் வருகைப் பதிவை வாசித்துவிட்டு யார்யார் தேர்வெழுத முடியாது; யார்யார் தண்டத் தொகை கட்ட வேண்டியவர்கள்; யாரெல்லாம் சிக்கலில்லாமல் தேர்வெழுதலாம் என அறிவித்த போது வகுப்பறையில் பேரமைதி நிலவியது. 50 சதவீதம் வகுப்புக்கு வராமல் இருந்தவர்கள் எழுந்து தவறை ஒத்துக் கொள்ளும் தொனியில் சில காரணங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். அந்தக் காரணங்களில் சில தவிர்க்க முடியாத காரணங்கள். சில காரணங்கள் அவர்கள் சார்ந்ததாக இல்லாமல் பொதுநலனுக்கான வேலையாக இருந்தன. நண்பர்களுக்காக எடுத்த விடுப்புகளாக இருந்தன. அந்தக் காரணங்களை நான் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கவில்லை. வகுப்பில் அனைவருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சொல்லிமுடித்தபின் தண்டனையை அல்லது மன்னிப்பை நான் வழங்காமல் மாணாக்கர்களிடம் விட்ட போது ஒருவர் கூடத் தண்டனை வழங்கலாம் எனச் சொல்லவில்லை. மன்னிக்கலாமா? என்றால் அதையும் உறுதியாக ஏற்றுவிடவில்லை. அப்படியானால் என்ன செய்யலாம்? தண்டனையாகவும் இல்லாத மன்னிப்பாகவும் இல்லாத ஒன்றிற்கே அவர்கள் வழிநடத்தினார்கள். தங்களோடு உள்ள ஒருவரை விதிகளின்படி தண்டிக்க பொதுமனம் எப்போதும் விரும்பவில்லை என்பதையே இம்மூன்று வகுப்பு மாணாக்கர்களின் மனநிலையும் காட்டுகிறது எனப்புரிந்து கொண்டேன். கடைசியில் செய்தவை மன்னிப்பாகவும் இல்லை; தண்டனையாகவும் இல்லை. கேளிக்கையாக மாறிவிட்டது. உங்களோடு படித்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களைத் தண்டிக்காது மன்னிக்கும் மனநிலையில் தான் ஆயிரக்கணக்கான கோடிகளில் பணம் சம்பாதித்துப் பதுக்கியிருக்கும் அரசியல்வாதிகளை மக்கள் மன்னிக்கிறார்கள் என்று சொன்னேன். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் மனநிலையும் பாமரர்களின் மனநிலையும் பொதுவில் ஒன்றாகவே இருக்கிறது.


கண்டிக்கவே முடியாத நிலையில் தண்டனை
செப்டம்பர்.29/2014



இதனை எதிர்பார்த்துத் தமிழகம் இருந்திருக்கவில்லை.குற்ற நிரூபணம், அதற்கான தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அத்துடன் அபராதத் தொகையாக ரூ 100 கோடி என்பதை நினைவுக்குள்கொண்டுவரவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் மனநிலையை அ இ அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் நிச்சயம் தவறான நினைப்பு என்றே சொல்வேன். தமிழ்ப்பொதுமனமே அப்படித்தான் நினைக்கிறது. இப்படிச் சொன்னால் அந்தப் பொதுமனம் எங்கே இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.

18 ஆண்டுகளாக நடந்த ஒரு வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வரும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் எதிர்பார்க்கவில்லை, அதைவிடக் குற்றஞ் சாட்டியவர்களே எதிர்பார்த்திருப்பார்களா? தமிழ்நாட்டின் அரசாங்கமும், அதனை நடத்தும் ஆளும் கட்சியினரும் மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் கூட எதிர்பார்க்கவில்லை என்பதையே இரண்டு நாட்களாகச் செய்தி அலைவரிசைகளில் வாசிக்கப் பெற்ற செய்திகளும், முன் வைக்கப்பெற்ற விவாதங்களும் காட்டப்படும் காட்சிகளும் சொல்கின்றன; விளக்குகின்றன. பெங்களூரை நோக்கிய ஒட்டுமொத்தப்பயணங்கள், கொண்டாட்ட மனநிலைக் காத்திருப்புகள், எதிர்கொள்ள முடியாத சோகத்திரட்சி, கண்ணீர்க்காட்சிகள், கட்டுப்பாடற்ற கலவரங்கள், தொடர்பற்ற வசைபாடல்கள் என நீளும் நிகழ்வுகள் சொல்வன சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதைத் தான்.

அரசு, ஊடகங்கள், கருத்துரைப்போர், ஊடகக்காரர்கள் போன்றோர் முழுமையாக நம்பிக்கையால் முடிவெடுக்காமல் கொஞ்சம் அறிவால் முடிவெடுப்பவர்கள்; அவர்களே எதிர்பார்க்கவில்லையென்றால், முழுமையாக நம்பிக்கைகளாலும், நடைமுறைகளாலும் முடிவெடுக்கும் வெகுமக்களின் பொதுமனம், அவரைத் தெய்வமாகவும் தாயாகவும் நம்பிய தொண்டர்களும் இப்படியொரு தீர்ப்பை நிச்சயம் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எதிர்பார்க்காத தீர்ப்பு வந்தபோது உண்டான தவிப்பே இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அலைவுற்று எதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘குற்றவாளி தண்டிக்கப் பெற்றிருக்கிறார் என்பதற்கு மாறாக, எல்லாக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டதில்லையே;இவர் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்’ என்ற கேள்வியாக மாறிக் கொண்டிருக்கிறது. தனது ஆழ்மன நம்பிக்கைக்காக எந்தப் புனிதத்தையும் தனது முந்திய நிலைபாடுகளையும் காவுகொடுக்கத் தயங்காத தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரின் கூற்று உண்மையாகவே நிறைவேற வாய்ப்பிருக்கிறது. இத்தண்டனை அனுதாப அலையாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. அவர் பொதுமனத்தின் குரலாகவே ஒலிக்கிறார். அப்படியானால் பொதுமனத்தை யார் உருவாக்குகிறார்கள்?

தொடர்ச்சியாக நடக்கின்ற- நடக்கப்போகும்- நிகழ்வுகள் அனுதாபத்தைத் தூண்டும் நிகழ்வுகளாகவே அமைய இருக்கின்றன. திட்டமிட்ட நல்திறக் கட்டமைப்புக் காட்சிகள் உருவாக்கப்பெற்று மொழியப்படுகின்றன. எல்லாவற்றையும் இரட்டை எதிர்வாகவே நிறுத்திப் பார்க்கப்பழக்கப் பட்டிருக்கும் பொதுமனம் மிகச் சுலபமாக எண்கள், கோடிகள், நபர்கள், சொத்துகள், பட்டியல்கள் என எல்லாவற்றையும் நிரல்படுத்திப்பார்த்தே எடைபோடத் தொடங்கியுள்ளது.

அரிசி, பருப்பு, எண்ணெய் என நியாயவிலையில் வழங்குவதற்கு அனுப்பப் பெற்ற பொருட்களைப் பதுக்கியவர்கள் - கள்ளச்சந்தையில் கூடுதல் விலையில் விற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்தவர்களிடம் தங்கியிருக்கிறது பொதுமனம். கடன் வாங்கிக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட பக்கத்துவீட்டுக்காரர் ஐந்தாண்டுக்குப் பின் காரில் பவனி வர உதவிய காரணிகளைக் கண்டவர்களுக்குள் இருக்கிறது அந்தப் பொதுமனம். பத்திரப்பதிவு அலுவலகம், சாலைப்போக்குவரத்து அனுமதி அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், வருவாய்ப்பிரிவு ஊழியர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் என்றில்லாமல் நகராட்சியின் சைக்கிள் நிறுத்துமிடம், கக்கூஸ் காண்ட்ராக்டுகள், டாஸ்மாக்கில் பாட்டில் எடுத்துக் கொடுப்பவர்கள்என எல்லாரும் லட்சத்திலும், சில ஆண்டுகளில் கோடிகளிலும் புரள உதவும் பொதுத்துறை நிறுவனங்களின் சட்டதிட்டங்கள், விதிகளின் தளர்வில் உருவாவது அந்தப் பொதுமனம். அப்பொதுமனம் கண்டனங்களைக்கூட நினைத்துப் பார்த்ததில்லை. அப்புறம் எப்படி தண்டனையை ஏற்றுக் கொள்ளும்?

இந்தியா என்னும் ஜனநாயக நாட்டின் அரசு மற்றும் பொதுத் துறைகள் இயங்கும் விதத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதற்குள்ளிருந்து கவனிக்கிறவன் என்ற நிலையில் என்னால் இந்தத் திசைமாற்றத்தைச் சுலபமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் நிலையை உயர்வாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘கடவுள் நிலை’ என்று சொல்லலாம். தாழ்வாகச் சொல்லவேண்டுமென்றால் ‘அடிமைநிலை’ என்று சொல்லலாம். ‘உயர்ச்சி- தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்று நினைத்தால் ‘பித்துநிலை’ என்று கருதிக் கொள்ளலாம்.இப்போது பித்து நிலையை நோக்கிய பயணத்தையே பொதுமனம் அவாவிக் கொண்டிருக்கிறது.

தான் பொறுப்பேற்கும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பு அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடம் இருப்பதாக நம்பிக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கேற்பச் செயல்படக் கூடாது. இதுதான் கடந்த கால் நூற்றாண்டு நிலை. (எனது நேரடி அனுபவக்காலம் இது) பல்வேறு திசைகளிலிருந்து வரும் உத்தரவுகளுக்குப் பணிந்து முடிவுகளை எடுக்க வேண்டும். உத்தரவிடும் இடத்தில் இருப்பது யார் என்பதே பல நேரங்களில் அவருக்குத்தெரியாது. அப்போது தான் தங்களின் நிலையைக் கடவுள் மனம் கொண்ட நிலையாகக் கருதிக்கொள்கிறார்கள். அதனால் பாவிகளை ரட்சிப்பது அல்லது மன்னிப்பதை மட்டுமே முழுநேரப் பணியாகக் கொள்கிறார்கள். அதற்காக அவர்களின் உண்டியல்கள் அகண்ட வாய்களோடு பூட்டப்பட்டுள்ளன. எப்போதாவது கண்டனங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், அடிமை நிலையை நோக்கிப் பின்னகர நேரலாம்.அப்படி நகரும்போது உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நெருக்கடிகளால் பிதுங்கிப் போய்விடுவார்கள்.

கட்சியதிகாரம், தொழிற்சங்க அதிகாரம், நட்பதிகாரம், எதிர்ப்பதிகாரம், மிரட்டலதிகாரம் எனப் பல்வேறு அதிகாரங்களின் ஆவேசத்தையும் மௌனத்தையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் தண்டனைகளைக்கூட எச்சரிக்கை என்பதாக மடைமாற்றியே வழங்க முடியும். உறுதி செய்யப்பெற்ற குற்றங்களுக்கே எச்சரிக்கை மட்டுமே சாத்தியம் என்று நிர்வாக நடைமுறை அமுலில் இருக்கும் ஒருநாட்டில் தண்டனை வழங்கல் என்பதை - அதுவும் எல்லாச் சட்ட நியதிகளையும் உருவாக்கும் இடத்தில் இருப்பதாக நம்பப்பட்ட ஒருவருக்குத் தண்டனை வழங்குவதை எப்படிப் பொதுமனம் ஏற்கும்? ஏற்கவில்லை என்பதைத் தான் இரண்டு நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது; காட்டிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனத்துக்குமான தனிவிதிகளோடு மாதச் சம்பளக் கணக்கில் கட்டுப்பாடுகளை உறுதி செய்யும் அரசுத்துறை நிறுவனங்களிலேயே தண்டனைகளைக் கண்டனங்களாகத்தர முடியாது என்ற நிலை நிலவும் போது, எச்சரிக்கை மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில் தண்டனை உறுதி செய்யப்பெற்றால் பொது மனம் என்ன செய்யும்? இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அப்பொதுமனம் தண்டிக்கும் அமைப்புக்கே எச்சரிக்கைகளை விடுக்கும்.அதை நோக்கி நகர்வுகள் நடக்கின்றன.

இந்த வழக்கும், அதன் விசாரணை முறையும், வழங்கப்பெற்ற தண்டனையும் தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாக நம்பப்பெற்ற நீதியமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் பொதுமனத்திடம் மண்டியிடப் போகிறது. பொதுமனத்தின் வெளிப்பாடுகள் பொதுத் தேர்தல்களாக வடிவமைக்கப் பெற்றுள்ள இந்த தேசத்தில் ஜனநாயகம் புதிய வடிவில் அமுலில் இருக்கிறது எனப் புரிந்துகொள்கிறேன்.


உயிர்மை / செப்டம்பர்,


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி

தமிழில் பாரம்பரிய அரங்கும் நவீன அரங்கும்

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்