இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கதைசொல்லுதலின் சாகசம் - ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள் கதையை முன்வைத்து

ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை.  சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

ரவிக்குமார்: எழுத்தாளுமையும் அரசியல் ஆளுமையும்

படம்
மக்களாட்சி செயல்படும் நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஒன்றுபோல இருப்பதில்லை. மேற்கு நாடுகளில் தங்கள் சார்பாக அரசமைப்பு அவைகளுக்குச் செல்லும் உறுப்பினர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளே முதன்மையாக எடை போடப்படும். அச்செயல்பாடுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகள் வாய்ப்பு வழங்கும். மக்களும் தேர்ந்தெடுப்படுவார்கள். இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் இந்தத் திறன்மட்டும் -அறிவார்ந்த அவைப்பங்கேற்பு மட்டும் போதாது.

முன்னுரைத்துச் சென்றார் தோப்பில்.

இலங்கையில் வெடித்த குண்டுகளின் ஆணிவேர்கள் எங்கே இருக்கின்றன என்பதைச் சொல்ல இயலாதுதான். ஆனால் ஒரு ஊருக்குள் - ஒரு தெருவுக்குள் நுழையும் புதுவகை அரசியலுக்கும் மரபான மனிதர்களுக்குமான முரணைப் பேசிய தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் நாவல் முன்பே சொல்ல முயன்றது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியாவை முன்வைத்துச் சொல்லப்படும் பல செய்திகளும் விவாதங்களும் விளக்கங்களும் இலங்கைக்கும் பொருந்தும். ஏனென்றால் இலங்கையும் முரண்பட்ட இன, மத, சாதி வேறுபாடுகளால் அலைக்கழிக்கப்படும் பரப்புதான். அஞ்சு வண்ணம் தெரு நாவல் வெளியானது 2008 .வாசித்த பின் அப்போது எழுதிய குறிப்பு இது. திரும்பவும் படித்தால் இன்னும் விரிவாக எழுதலாம்.: ********* **************** அந்நாவலை வாசித்து முடித்தவுடன் ‘இதுசமகால வாழ்வை விசாரிக்கும் நாவல்’ என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்ததை விட ‘அஞ்சு வண்ணம் தெரு சமகால அரசியலை - அதன் நுட்பமான இயங்குநிலைகளை ஆழ்ந்த கரிசனத்தோடு விவரிக்கும் நாவல்’ எனச் சொல்வதே சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு நாவலையும் சாதாரணமாக வாசித்து விட்டுப் போய்விடலாம். ஆனால் அது எழுப்ப

தன்னை முன்வைக்கும் நவீனத்துவம் - கவிதா லட்சுமியின் சிகண்டி

படம்
கேட்கும் இடத்தில் இருந்து வாசிக்கும் கவிதை வாசகர்களுக்குத் தர்க்கம் சார்ந்த புரிதல்களையும் காரணகாரியங்கள் கொண்ட விளக்கங்களையும் முன் வைப்பதைத் தவிர்ப்பது கவிதையின் அழகியல் கூறுகளில் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. நேரடி விளக்கங்களைத் தவிர்த்து முன்வைக்கப்படும் சொற்களின் வழி உருவாக்கப்படும் குறியீடுகள், படிமங்கள், உவமங்கள், உருவகங்கள் போன்றவற்றின் வழியாக வாசிப்புத்தளங்களைக் கவிதைகள் உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் தான் கவிதை எழுத்துக் கலைகளில் உச்சம் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதப்படுவதின் பின்னணிகள் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல. 

கொரோனாவோடு வாழ்ந்தது -ஏப்ரல் வரை

  ஏப்ரல் 15 க்குப் பிறகு   நாடு தழுவிய ஊரடங்கு விலக்கப்படவேண்டும் . முதன்மையாக உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக நடக்கவேண்டும் . வேளாண் உற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக ஊரடங்கு விதிகளில் தளர்வு நடைபெற்றால் மட்டும் போதாது . உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் வகையிலான வடிவங்களில் மாற்றவேண்டும் . அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் . இவை நடக்கவில்லை என்றால் இந்தியா போன்ற நாடுகள் நோயைத் தாண்டிய பெரும்பிணியாகப் பசியை எதிர்கொள்ள நேரிடும் . பசியின் வெளிப்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன . அதனைக் கவனித்துச் சொல்லும் திசையில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை .  அதனால் பொதுச்சமூகம் அறியாமல் இருக்கிறது . 

பெரும்பொறுப்புகளைச் சுமக்கவிரும்பாதவர் க.அன்பழகன்

  பெரியாரின் அரசியல் முன்மொழிவுகளைக் குறிப்பிடும் சொல்லாடல்களாக அறியப்படுபவை பகுத்தறிவுவாதம், சுயமரியாதைச்செயல்பாடுகள், சமூகநீதிக்கான போராட்டங்கள், இவற்றை அடையும் நோக்கத்தில் தடைக் கற்களாக இருப்பனவாகப் பெரியார் அடையாளப்படுத்தியன மத நம்பிக்கைகளே. எல்லா மதத்தின் மீதான பிடிமானங்களும் நம்பிக்கைகளும் எதிர்க்கப்பட வேண்டியவை எனப் பரப்புரைகள் செய்தபோதிலும் இந்தியாவின்/ தமிழகத்தின் பெரும் சமயமாக இருக்கும் இந்துமதத்தின் மீதே கடும் விமரிசனங்களையும் எதிர்ப்பையும் காட்டினார். சமய நம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் தான் அதனைக் காக்கும் நடவடிக்கையில் இருந்த பிராமணர்களையும் கடுமையாகச் சாடினார்.