ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் எழுத்து, செயல்பாடு, திட்டமிடல், முன்னெடுப்பு எனப் பல நிலைகளில் கல்விப்புலத்திற்குள் செயல்பட்டவன் என்ற நிலையில் நான் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைத் தாண்டிப் பிற பல்கலைக்கழகங்களிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழியல் சார்ந்து மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்விப்புலத் திட்டமிடல்களில் கருத்துரைப்பவனாகவும் இருந்துள்ளேன். அதன் காரணமாகப் பல நேரங்களில் கல்வியுலகச் சிக்கல்களைப் பற்றிய கருத்துரைகளை எழுதியுள்ளேன். அப்படியெழுதிய சில குறிப்புகளின் தொகுப்பு கல்வியில் கொள்கையின்மை நவம்பர் 30, 2011 நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இ