குழுக்கள் - கருத்துகள் - செயல்பாடுகள்

நிறுவனங்களின் செயல்பாடுகளில் பலதரப்புக் கருத்துகளும் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குழுக்களை அமைத்தல் நடைமுறைச் செயல்பாடாக இருக்கிறது. அரசர்களின் அதிகாரம் செயல்பாட்டில் இருந்த காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல அமைச்சர்கள் குழுக்கள் இருந்தன என்பதை வரலாற்றுக்குறிப்புகள் தருகின்றன. எண்பேராயம், ஐம்பெருங்குழு போன்ற பெயர்களைத் தமிழ்க் கல்வெட்டுகள் சொல்கின்றன. வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி - நியமனம், குலுக்கல் முறைத் தேர்வுகள் வழியாக உருவான அக்குழுக்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்கமுடியும். முடிவு எடுக்கும் - செயல்படுத்தும் அதிகாரம் அரசர்களின் கையில்தான் இருந்தது.

எல்லா அதிகாரங்களையும் தங்கள் வசம் வைத்திருந்த காலனிய ஆட்சியாளர்களே கூட இந்திய மக்களின் எண்ணவோட்டங்கள், விருப்பு வெறுப்புகளைத் தெரிந்துகொள்ள மேலிருந்து கீழ் வரை அமைப்புகளை உருவாக்கி அதிகாரிகள், நியமனங்கள், தன்னார்வலர்கள், வாய்ப்பற்ற கூட்டங்களுக்கான பிரதிநிதிகள் எனக்குழுக்களை உருவாக்கியே நிர்வாகம் செய்தனர். விடுதலைக்குப் பிந்திய அரசமைப்பில் - மக்களாட்சி முறையில் குழுக்களும் அவற்றின் செயல்பாடுகளும் தவிர்க்கமுடியாதவைகளாக ஆகியிருக்கின்றன.

ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப குழுக்களின் தன்மைகளும் செயல்பாடுகளும் மாறுபடும். நான் இயங்கிய கல்வித் துறையில் - பல்கலைக்கழக அளவில் இயங்கும் குழுக்கள் பலவுண்டு. அவற்றில் இடம்பெறுவதிலும் சில வழிமுறைகள். பதவிவழிப் பேறு, நியமனவழி இடம், போட்டிவழிப் பங்கேற்பு எனக் கல்வித்துறைக் குழுக்களில் ஆளுமைகள் இடம்பெறுகிறார்கள். பாடத்திட்டக்குழு தொடங்கி, கல்வி நிலைக்குழு, ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழு என எல்லாவற்றிலும் இடம்பெறுபவர்கள் இப்படித்தான் வருகிறார்கள். வந்தபின் அனைவருக்கும் சமமான அதிகாரமும் உரிமைகளும் இருப்பதாக நம்பவேண்டும்; நம்பிச் செயல்படவேண்டும். ஆனால் அது எப்போதும் உண்மையல்ல. அந்த நம்பிக்கையும் செயல்பாடுகளும் பாவனைகள் தான். எல்லாக்குழுக்களின் முடிவுகளையும் மாற்றும் அதிகாரம் குழுக்களின் தலைவர்களாக இருப்பவர்களுக்கு உண்டு என்று ஒரு விதி இருப்பதால் இலக்குகள் பலவும் அடைய முடியாமலேயே போய்விடும். எல்லாக்குழுக்களின் முடிவுகளையும் ஏற்று ஆணை பிறப்பிக்கும் துணைவேந்தர்களின் முடிவுகளைக் கூடத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் இருக்கிறது வேந்தருக்கு இருக்கிறது. இந்த நடைமுறைகளின் படி இன்னும்கூட - மக்களாட்சி அமைப்பிலும் கூடத் தனிநபர் அதிகாரமே செயல்படுகிறது எனச் சொல்லலாம். ஆனால் இங்கே குழுவிவாதங்களில் முன்வைக்கப்பட்டு மறுக்கப்பட்ட தீர்மானங்களைப் பொதுவெளியில் விவாதப்படுத்த முடியும். அது ஒன்று மட்டுமே வேறுபாடு.

என்னளவில் நான் உருவாக்கிய குழுக்களிலும், குழு உருவாக்கும் அதிகாரம் கொண்டவர்களின் வேண்டுகோளுக்கு ஒத்த கருத்துடையவர்களை மட்டுமே பரிசீலிப்பதில்லை. வெவ்வேறு கருத்துடையவர்களும் இடம்பெற வேண்டும் என்பதற்காக எல்லாத்தரப்பினரையும் இடம்பெறச்செய்ததுண்டு. பலதரப்பட்ட கருத்துகளை முன்வைப்பவராகப் பத்திரிகையாளர் ஞாநியைப் பரிந்துரைத்துள்ளேன். அவரைப்போலவே பத்ரி சேஷாத்திரியின் பெயரையே கூடப் பரிந்துரை செய்து இடம்பெறச்செய்துள்ளேன். அவரும் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

கருத்துக்கள் பலதரப்பட்டதாக இருக்கவேண்டும் என நினைப்பதைத் தாண்டி, மாற்றுக்கருத்துகளும் வேண்டும் என நினைப்பவர்களும் உண்டு. மாற்றுக்கருத்துகளைத் தாண்டி எதிர்க்கருத்தையும் நோக்குபவர்களும் உண்டு. அவற்றைக் கேட்டுக் கொண்டு, அதனை எப்படி எதிர்த்துக் களமாடலாம் என்னும் சவாலை மேற்கொள்வார்கள். தமிழக அரசியல் களமும் கருத்தியல் களமும் எப்போதும் எல்லாவற்றையும் விவாதிக்கும் மேடையாக இருப்பதற்குக் காரணம் இங்கே மேற்கின் அறிவு வாதத்தை உள்வாங்கிய திராவிட இயக்கமே காரணம். அதன் முன்னோடித்தலைவர்களான பெரியார் ஈவெரா, அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்களே முன்மாதிரிகள். ஆனால் இதனை மறுக்கும் போக்கு சமய நம்பிக்கை அடிப்படையில் உருவாக்கப்படும் குழுக்களில் வெளிப்படுகின்றன. அக்குழுக்களில் மாற்றுக்கருத்தாளர்களுக்கு - எதிர்க்கருத்தாளர்களுக்கு எப்போதும் இடமளிக்கப்பட்டதில்லை. மாற்றுக்கருத்தை மதிக்கும் பக்குவம் இருப்பதாகக் காட்டிக்கொள்வதுகூட இல்லை.

அறிவுத்தளத்தில் மேற்கு - கிழக்கு என்பன திசைகள் அல்ல. மேற்கு என்பது கருத்தியல் தாராளவாதத்தின் அடையாளம்; குறியீடு. கிழக்கு அதற்கு எதிரான ஒற்றைக்கருத்தின் சமயநம்பிக்கைவாதங்களின் அடையாளம்; குறியீடு.

********************

ஜூலை 25, 2017



உதைவாங்கிக் கிளம்பிய வண்டி:

தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்குத் தரப்பட வேண்டிய கல்வி குறித்த பெருநிகழ்வு (ஜூலை 20-22) நடந்து முடிந்திருக்கிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற கல்வியாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்பாளர்களும் பலவிதமாக இருந்தார்கள். பலவிதமாகப் பேசினார்கள். பலவிதமான முன்மொழிவுகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் தமிழ்ப் பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட அமர்வுகளில் இரண்டு நாட்களிலும் அமர்ந்திருந்தேன்; கேட்டுக்கொண்டிருந்தேன்; பலருடன் உரையாடினேன். அந்த அமர்வுகள் அண்ணா நினைவுநூற்றாண்டு நூலக அரங்குகளில் நடந்தன.

இதேபோல் அறிவியல் பாடங்களான உயிரியல், கணிதம், இயல்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், வரலாறு மரபான பாடங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த அமர்வுகளில் பங்கேற்ற பேராளர்கள், கருத்தாளர்களோடும் உரையாடினேன். பலரும் சந்தேகங்களோடுதான் திரும்பியிருக்கிறார்கள். அவையெல்லாம் சிலவற்றை உணர்த்துகின்றன. ஒருசிலர் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அவர்கள் உணர்ந்ததைச் சொன்னார்கள். மொழி இலக்கியக் கல்வி திட்டங்களைத் தாண்டிப் பொதுநிலையில் தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி குறித்தும் தொடர்ச்சியாக உயர்கல்வி குறித்தும் விவாதங்கள் தேவை; மாற்றங்கள் தேவை. தொடர்ச்சியாக எழுதிப்பார்க்கவேண்டும் . எழுதிப் பார்ப்பதின் வழியாக எனக்கே சில தெளிவுகள் கிடைக்கலாம்.
இரண்டு நாட்களும் அங்கே உலவிய கருத்தோட்டம் முதன்மையாக உணர்த்தியது இதுதான். பலவிதங்களிலிருந்து ஒற்றைத் தன்மையைக் கொண்ட பள்ளிக்கல்வியை உருவாக்க வேண்டும்; காலத்தின் கட்டாயம் அது. கட்டாயத்தில் முதலில் இருப்பது தேசியத் தர உறுதித்தேர்வு(NEET).இத்தேர்வு கொடுத்த உதைதான் இந்த நகர்வுக்கு முதல் காரணம். மருத்துவப் படிப்பை முன்வைத்து அறிமுகமாகிவிட்ட அத்தேர்வு, அடுத்தடுத்த ஆண்டுகளில் பொறியியல், வணிகவியல், கலையியல், அறிவியல்,சமூக அறிவியல் என ஒவ்வொரு புலமாகவோ, ஒட்டுமொத்தமாகவோ அறிமுகமாகத்தான் போகிறது.பெருந்தேசக் கருத்துக்கு ஒப்புக்கொடுத்தபின் விலகல்கள் சாத்தியமில்லை. இப்போட்டித் தேர்வு மட்டுமே நமது மாணாக்கர்கள் முன்னிருக்கும் ஓட்டப்பந்தயம் அல்ல. பலப்பல பந்தயங்களில் ஏற்கனவே கலந்துகொண்டு கோப்பைகளை வென்றிருக்கும் தமிழ் இளையோர்களைப் பாராட்டவும் செய்துள்ளோம்; செய்வோம்.
இந்திய அரசின் குடிமைப்பணிக்கான (IAS,IPS,IRS...) போட்டித்தேர்வுகளில் எந்தவிதத் தயக்கமில்லாமல் பங்கேற்றுவருகிறோம். பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசியத்தகுதி (NET), அறிவியல் பாடங்களுக்கான ஆய்வுத்தேர்வுகள், ரயில்வே துறை, முன்பு தபால் துறைக்கு, ராணுவம் சார்ந்த துறைகளுக்கு மட்டுமல்லாமல், மைய அரசின் பணிகளுக்கும் பொதுத்துறைகளுக்கும் தேசிய அளவுத்தேர்வுகள் நடந்துகொண்டுதான் இருந்தன. மையப்பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கும் நடக்கும் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் பற்றி இங்கே விவாதங்கள் இல்லை. இவற்றில் சிலசில வேறுபாடுகள் இருக்கின்றன.. அவையெல்லாம் மைய அரசின் கையிலிருக்கும் துறைகளுக்கான தேர்வுகள்.

இப்போது நடத்தியுள்ள தேசிய தர உறுதித்தேர்வு தொடங்கி இனித் தொடர்ந்து நடத்த நினைக்கும் தேர்வுகளெல்லாம் மாநில அரசின் கையிலிருக்கும் துறைகளைப் பின்வாசல் வழியாக மைய அரசு கைப்பற்ற நினைக்கும் முயற்சியின் வெளிப்பாடு. அம்முயற்சியின் முதல் அடியிலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு - குறிப்பாகச் சமூக நீதி அடிப்படையில் கிடைத்த இடங்கள் பறிபோகின்றன. இட ஒதுக்கீடு அடிப்படையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இடங்களைப் பெறும் வாய்ப்பில்லாமல் இருந்த - சாதிக்குழுக்களுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்கும் விதமாக இந்தத் தேர்வின் முடிவுகள் அமைந்துள்ளன. இதுதான் மைய அரசு அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களிலும் முன்வைப்புகளிலும் இருக்கின்றன. வரலாறு தெரிந்த நாள் தொடங்கித் தங்களை மூளை உழைப்புக்குழுவாக மட்டுமே கருதிக்கொண்ட சாதிக்குழு, அதனைத் தங்களின் பிறப்புரிமையாகக் கருதும் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தும் பின்னணி இருக்கிறது. இதனை உணர்ந்தபோதிலும் அரசியல் சட்ட அடிப்படையில் எதிர்த்துவிட முடியாத நிலையில் போட்டியில் இறங்கித்தான் பார்த்துவிடலாம் என்ற ஏற்பாட்டின் முதல்படிதான் கல்வித்திட்ட மாற்றங்கள் எனப் பலரும் நினைக்கிறார்கள்; பேசுகிறார்கள்.


ஆகஸ்ட் 11, 2015
நம்பிக்கையளித்த இரண்டு நாட்கள்:


தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்னை கோட்டூர்புரத்தில் செயல்படுகிறது . அண்ணாநூலகம் பக்கத்தில் இருக்கிறது. இணையத்தில் தமிழின் என்னவெல்லாம் இருக்கின்றன; என்னவெல்லாம் இருக்கவேண்டும்; இணையத் தமிழ் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அவற்றை எப்படித் தருவது போன்றவற்றை விவாதிக்கலாம்; இரண்டு நாட்கள் முழுமையாக இருந்து கலந்துரையாடல் செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பார்த்தேன். அழைப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இக்கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்திய ஆட்சிப்பணியாளர் திரு த.உதயசந்திரனின் ஒப்பம் இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றிய நம்பிக்கையூட்டும் தகவல்களே அழைப்பை ஏற்க முதன்மைக் காரணம்.ஆகஸ்டு முதல் இரண்டாம் தேதிகளில் நடக்க இருந்த நிகழ்வுகள் முன்னாள் குடியரசுத்தலைவர் அ. ப. ஜெ. அப்துல்கலாமின் மரணத்தினால் ஒருவாரம் தள்ளி 8, 9 - சனி, ஞாயிறு- நடந்தது நம்பிக்கையோடு ஒப்புக் கொடுத்து வந்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை

தொடக்க நிகழ்வில் திரு. த. உதயசந்திரனின் உரை வானவில்லின் வண்ணங்கள் எனக் கவித்துவமாகத் தொடங்கி ஏழு தலைப்புகளில் விவாதங்களுக்கான முன் வைப்புகளை தனது உரையில் முன் வைத்தார். தொடர்ச்சியாக மூன்று இடங்களில் தனித்தனி அமர்வுகள். 
1 எண்மியமாக்கம்
2 கணினி மொழியியல், மொழித்தொழில் நுட்பம் என்ற இரண்டு குழுவினர் மூன்று அமர்வுகளில் விரிவாக விவாதித்து செயல்திட்டங்களைத் தயாரித்தார்கள். 
3. பொதுவள ஊடகப்பரப்புரை என்னும் பொருளில் ஒரு குழுவினர் இரண்டு அமர்வுகளில் செயல்திட்டங்களை உருவாக்கினார்கள். 
4 கற்றல் கற்பித்தல் என்னும் பொருளில் ஒரு குழுவினர் இரண்டு அமர்வுகளில் விவாதித்து செயல் திட்டங்களை உருவாக்கினார்கள். நிறைவு அமர்வு திரும்பவும் பொது அமர்வாக மாற்றப்பட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் உருவாக்கிய செயல்திட்டங்களை முன்வைத்தனர். அனைத்தும் பொதுவில் திரும்பவும் விவாதிக்கப்பட்டன. விவாதம் முழுவதும் அமர்ந்திருந்த இயக்குநர் தனது முன்னெடுப்புகளும் செயல்பாடுகளும் எப்படி இருக்கும் என்பதை விளக்கிப் பேசினார். இதுவரை இந்தக் கழகம் தன்னை ஒரு பல்கலைக்கழகம்போலப் பாடங்கள் தயாரித்து அனுப்பிவிட்டுத் தேர்வுகள் நடத்தும் அமைப்புபோலச் செயல்பட்டது; இனி அப்படி மட்டும் செயல்படாது என்றதோடு இந்தக் கழகத்தைப் பொறுத்தவரை நான் இரண்டு மாதக்குழந்தைதான்; ஆனால் தொடர்ந்து அழுது அடம்பிடிக்கும் குழந்தையாக இருக்கப்போகிறேன் என்று சொன்னபோது நம்பிக்கை கூடியது.

120 பேர் பங்கேற்கலாம் என்று தொடங்கி 220 ஆக மாறி 300 பேர்வரை கலந்து கொண்ட இரண்டு நாள் நிகழ்வுகளையும் திட்டமிட்டுப் பிரித்து ஒருங்கிணைப்புக்குழுக்களை உருவாக்கியதோடு அரசின் பல்வேறு பொறுப்புகளிலிருக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள் 17 பேர் வந்து கலந்து கொள்ளும்படியும் செய்திருந்தார். தகவல் தொழில்நுட்பம், கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பதிவுகள் மற்றும் புள்ளியியல் துறைகளின் அதிகாரிகள் இருந்தார்கள்; கவனித்தார்கள்; கேட்டார்கள்; கருத்துக் கூறினார்கள் என்பதைப் பார்த்தேன். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடக எனப் பிற மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து நேரில் சிலர் வந்திருந்தனர். சிலர் காணொளி வழியாக உரையாற்றினர். ஆனால் இலங்கையிலிருந்து பேராசிரியர்கள் ஒருவரும் ஏனோ அழைக்கப்படவில்லை.

ஓராண்டுக்கு முன்பு இது போன்றதொரு கலந்துரையாடலைத் தமிழியல் பாடத் திட்டங்களை உருவாக்குவதற்காகத் தமிழ்நாடளவில் எமது பல்கலைக்கழகத்தில் நடத்தினேன். அதைவிடக் கூடுதலாகப் பயனளிக்கும் அளவில் இந்த இரண்டுநாள் அமர்வுகள் இருந்தன என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். நான் நடத்திய விவாதங்களின் தொடர்ச்சியாக எதுவும் நடக்கவில்லை என்பது எனது அனுபவம். சாத்தியமாக்கும் அதிகாரம் என்னிடத்தில் இல்லை என்பது முக்கியக்காரணம். பல்கலைக்கழக அளவிலும் மாநில அளவிலும் அதிகாரத்திலிருந்தவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை; தொடர் நிகழ்வுகளைக் கோரவில்லை. என்னைப்போலத் தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் தோல்வியடைய மாட்டார் என்பது உறுதி. காரணம் அவரிடம் அதிகாரமிருக்கிறது; செயல்திட்டமிருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு மேலாகக் கணினியைப் பயன்படுத்துகிறேன். பத்தாண்டுகளாகக் கையால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். 2007 இல் இணையத்திற்குள் எனது எழுத்துகளை ஏற்றும் வேலையைத் தொடங்கியவன். எனது வலைப்பூ [அ.ராமசாமி எழுத்துகள் http://ramasamywritings.blogspot.in/ ] 2007 வில் பதிவுகள் ஆரம்பம். முதல் கட்டுரை நகல்களின் பெருக்கம் என்பது. இணையத்தில் மூலங்கள் குறைவு; நகல்களே அதிகம். ஒருவர் செய்ததைக் கொஞ்சம் மாற்றித் தாங்களும் மூல ஆசிரியர்கள் என்பதாகக் காட்டிக் கொண்டாலும் நகல்களின் பெருக்கங்கள் அதிகம் தான். தமிழ் இணையப்பதிவுகள் சொல்லியது சொல்லல் என்னும் வகைப்பாடு கொண்டவை. இது எனது 430 பதிவு. இணைய நெடுஞ்சாலையில் தினசரிப் பயணி நான். போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகப் பணியில் இருந்த காலத்தில் அங்கு கிடைத்த முழுமையான -வேகமான -இலவச இணையவசதி என்னை அதில் முழுநேரப் பயணியாக மாற்றிவிட்டது. இனி அதிலிருந்து விலகித் துறவுகொள்ளுதல் சாத்தியமில்லை. எனது தொடர் பயணங்களால் எனக்குக் கிடைத்த பயன்பாடுகளும் தொடர்புகளும் நட்புகளும் பொழுதுபோக்கும் சொல்ல முடியாதவை. இந்த அனுபவத்தோடு இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில் பொது நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்றதோடு இரண்டு குழுக்களிலும் பங்கெடுத்து எனது ஆலோசனைகளை முன்வைத்துள்ளேன். பங்கேற்புக்குப் பின் நம்பிக்கை கூடியுள்ளது

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழை மூன்றாவது மொழியாகக் கற்பித்த அனுபவத்தைக் கற்றல் கற்பித்தல் குழுவில் பங்கேற்றுப் பகிர்ந்துகொண்டதோடு எல்லாவகையான தமிழ்மொழிக் கல்விக்கும் பொதுவான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொன்னேன். அக்குழு விவாதங்களில் வழக்கம்போல மொழியியல் ஆசிரியர்களுக்கும், மரபான இலக்கண அடிப்படைகளைத் தக்கவைக்க நினைக்கும் மொழியாசியரியர்களுக்கும் உரசல்கள் நடக்கவே செய்தன. மொழிக்கல்வியில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரைவான நடவடிக்கைகள் தேவை. (மொழிக்கல்வி குறித்த எனது அனுபவங்களையும் முன்வைப்புகளையும் தனியாக எழுதவேண்டும்)

பொதுத்தளத்தில் கட்டுரை ஆசிரியனாகவும் விமரிசகனாகவும் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்ற புரிதலின் அடிப்படையில் பொதுவள ஊடகப்பரப்புரை என்னும் பொருளில் விவாதங்கள் செய்த விக்கிப்பீடியர்களோடு அமர்ந்து தமிழ்விக்கிப்பீடியாவின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைச் சொன்னேன். அதைப் பரவலாக்கப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயனர்களையும் பங்கேற்பாளர்களையும் உருவாக்கும் சாத்தியங்கள் பற்றிய திட்டங்களை முன்வைத்துள்ளேன். ஒரு லட்சம் தலைப்புகளில் விக்கிப்பீடியா கட்டுரைகள் இடம்பெறச் செய்வதைக் கொஞ்சம் கறாராகத் திட்டமிட்டால் ஓராண்டிலேயே எட்டிவிடலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்