தனித்தமிழ் இயக்கம்
தனித்தமிழ் இயக்கம் நூறு வயதைத் தாண்டுகிறது. 1916 இல் தோற்றம்கண்ட அவ்வியக்கத்திற்கு அந்த நேரத்தில் ஒரு தேவை இருந்தது. ஒருவிதத்தில் தமிழ்மொழி சந்தித்த நெருக்கடியினால் உருவான பெருநிகழ்வு. செய்யுள் வடிவில் இருந்த தமிழ்க்கல்வி மற்றும் வெளிப்பாட்டு நிலைகள் உரைநடைக்கு மாறியபோது உருவான நெருக்கடிகளின் விளைவாக உருவானது தனித்தமிழ் இயக்கம். மணிப்ரவாளத்தின் ஆதிக்கம் தமிழ்நடையைச் சீர்குலைக்கிறது எனக் கருதிய தமிழ்ப் புலவர்களும் தமிழர்களும் இணைந்து உருவாக்கிய தனித்தமிழ் இயக்கம் வரலாற்றின் தேவை.
தமிழ் மொழியில் சொல்லுருவாக்கத்தின் அடிப்படைகளைச் சொன்ன முதன்மைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் மொழிமுதல் எழுத்துகள், மொழியிறுதி எழுத்துகள், மெய்மயக்கம் போன்றவற்றைச் சொல்லியிருக்கிறது. அதாவது ஒருசொல்லின் முதலில் நிற்கக்கூடிய தமிழ் எழுத்துகள் எவை; சொல்லின் இறுதியில் நிற்கக்கூடிய எழுத்துகள் எவை; இடையில் நிற்கும்போது உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் எவ்வாறு அடுத்தடுத்து வரும்; அதிக அளவில் எத்தனை மெய்கள் அடுத்தடுத்து வரமுடியும் போன்றனவற்றை விரிவாகப் பேசியுள்ளது. இந்த விதிகளைப் பயின்ற ஒருவரால், தமிழ்ச் சொல் எது? வேற்று மொழியிலிருந்து வந்த சொல் எது என்று கண்டுபிடிக்க முடியும். இதனைப் பேசும் அதே தொல்காப்பியம் தான் வடசொல்லைத் தமிழ்ப்படுத்துவதற்கும் திசைச் சொற்களைத் தமிழுக்குள் உள்வாங்குவதற்கும்கூட அடிப்படைகளைச் சொல்லியிருக்கிறது. தற்பவம், தற்சமம் என்னும் கலைச்சொற்களை அறிந்தவர்கள் என்பதால் திரும்பவும் விளக்க வேண்டியதில்லை. தொல்காப்பியமோ, தொல்காப்பியரின் மொழியிலக்கணத்தைக் காலத்திற் கேற்றவகையில் திரும்பவும் எழுதிக்காட்டிய நன்னூலோ பிறமொழிச் சொற்களைத் தமிழ்மொழிக்குள் அனுமதிக்கக்கூடாது எனச் சொல்லவில்லை. எப்படி அனுமதிக்கவேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்துகின்றன. பழையன கழிதலும் புதுவது புகுதலும் கால வழுவல என்பது தமிழர் பின்பற்றிய கொள்கை. அக்கொள்கையை - மொழி, கலை, பண்பாடு, அறிவு என எல்லாத் தளங்களிலும் பின்பற்றினார்கள் என்பதுதான் தமிழின் - தமிழரின் வரலாறு.
தொல்காப்பியமும் நன்னூலும் சொன்ன அடிப்படைக்கட்டமைப்பையோ, வழிகாட்டுதலையோ பின்பற்றாமல் எழுதிய நடையை ‘ மணிப்பிரவாள நடை’ எனச் சொன்னது ஒரு கூட்டம். அப்படிச்சொன்னவர்களால், மணியையும் முத்தையும் பவளத்தையும் கலந்து கோர்க்கப்பட்ட மாலைபோலத் தமிழ்நடை மிளிர்கிறது என விளக்கங்களும் சொல்லப்பட்டன. ஒரு சொல் தமிழ், இன்னொரு சொல் சம்ஸ்க்ருதம், அடுத்தொரு சொல் தெலுங்கு எனக் கலந்து எழுதப்பட்ட அந்த நடைதான் அப்படிப்பெயர் பெற்றது. அப்படிக் கோர்க்கப்பட்டு எழுதிய மாலைகள் பெரும்பாலும் உரைகளாக இருந்தன. கி.பி.13 ஆம் நூற்றாண்டிலிலிருந்து கிடைக்கும் நஞ்சீயர், அழகிய மணவாளர், திருக்குருகைப் பிள்ளைபிரான், பெரியவாச்சான் பிள்ளை, வடக்கு திருவீதிப் பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியர், சி.ஜெகன்னாதாச்சாரியார் வழியாக உருவான வைணவ உரையாசிரியர்களின் நூல்களே மணிப்ரவாள நடையின் தோற்றக்காரணிகள்.
இதன் பின்னணியில் ஓர் உண்மை இருப்பதாக நம்பப்பட்டது. பக்தி, இறையியல், தத்துவம் போன்ற துறைகளின் சொல்லாடல்களைச் சொல்லத் தமிழ் மொழியின் எழுத்துகளும், சொற்களும் போதாமல் இருக்கின்றன என்று நம்பிக்கையே அது. அதனால் தான் தத்துவத்தின் மொழியான சம்ஸ்க்ருதத்தைக் கலந்து எழுதுகிறோம் என்றும் அந்த உரையாசிரியர்கள் நம்பினார்கள். இந்த வாதத்தை முதன்மையாக மறுத்த இன்னொருகூட்டமும் சமய உரைகாரர்கள்தான். அவர்களின் உரைகள் பதினெண்சாத்திரங் களுக்கும், சைவ இலக்கியங்களுக்கும் எழுதப்பெற்ற உரைகள். சிவஞான முனிவர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரின் வழி உருவான நீட்சியை ஆறுமுகநாவலர் வரை, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை வரை காணலாம். இதனை மறுத்துப் பேசத்தொடங்கியவர்கள் சைவ சித்தாந்திகள். சைவ நூல்களுக்கான உரைகளிலும் சித்தாந்த விளக்கங்களிலும் பெரிதும் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தி எழுதினார்கள். கடவுள், பக்தி, தத்துவம், இறையியல் என எல்லாவற்றையும் தமிழின் வேர்ச்சொற்களைக் கொண்டே எழுதமுடியும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது.
மணிப்ரவாளம் X தனித்தமிழ் என்பது அடிப்படையில் வைணவ X சைவ முரண்பாடு. இந்த முரண்பாட்டில் சைவம் தமிழ் மொழிக்காக நிற்பதாகவும், வைணவம் தமிழ்மொழிக்கெதிராகவும், சம்ஸ்க்ருத ஆதரவோடு இருப்பதாகவும் புலப்பட்டது. இத்தகைய முரண்பாடுகள் மேலோங்கிய காலகட்டத்தில் தான் கால்டுவெல் பாதிரியாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, Horrison, London , 1856) என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார். அதில் “சிறந்த ஒன்றிருந்தால், அதற்கு சம்ஸ்க்ருத மூலம் காட்டும் பிராமணர்களின் வாடிக்கை” யான செயல்பாட்டையும் சுட்டிக்காட்டினார். அந்தச் சுட்டிக்காட்டல், தனித்தமிழ் இயக்கத்தின் திசைவழியையையும் அதன் தொடர்ச்சியான திராவிட இயக்கத்தின் போராட்டங்களின் தன்மைகளையும் தீர்மானித்தது. இந்த வரலாற்றைச் சொல்லவும், நடந்த விவாதங்களைப் பேசவும், போராட்டங்களை அடையாளங்காட்டவும் பல நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கின்றன. பேரா.கா.சிவத்தம்பி விரிவாக எழுதியிருக்கிறார்.
தோற்றநிலையில் சமயப்பூசலாகத் தோன்றி, மொழியியக்கமாக மாறியதோடு பண்பாட்டியக்கமாகவும் அரசியல் இயக்கமாகவும் நிலை பெற்றது தனித்தமிழ் இயக்கம். மணிப்ரவாளம் X தனித்தமிழ் என்ற பண்பாட்டரசியல் முரண்பாட்டை, அரசியல் முரண்பாடாக ஆக்கியது திராவிட இயக்கம். தனித்தமிழ் இயக்கத்தின் இன்னொரு நீட்சியே திராவிட இயக்கம். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளாகத் தேவநேயப் பாவாணர், மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன், பரிதிமால் கலைஞர், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரைத் தமிழகம் அறிந்து வைத்திருக்கிறது. திராவிட இயக்கம் கழகங்களாக மாறியபின் தனித்தமிழ் இயக்கத்தின் சாரமும் சாராம்சமும் விடைபெற்றுக்கொண்டன, என்றாலும் இன்றிருக்கின்ற தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.தி.மு,க. போன்றனவற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தனித்தமிழ் இயக்கத்தின் தொடர்ச்சியிருப்பதாகப் பலரும் நம்புகிறார்கள். அதன் தாக்கத்தால் தக்ஷிணாமூர்த்தி என்ற தனது பெயரை கருணாநிதி என்று மாற்றிக் கொண்ட நபர் இன்னும் அதன் தலைவராக இருக்கிறார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தனித்தமிழ் இயக்கத்தின் நீட்சியாக நினைப்பது ஒரு நம்பிக்கை என்பதைவிட, அது “ஒரு பாவனை” என்று சொல்வது சரியாக இருக்கும். தனித்தமிழ் இயக்கத்தின் தேவை இருப்பதாக நினைக்கும் பழைய தலைமுறை ஒன்று இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறது; அந்தத் தலைமுறை அடுத்தடுத்த தலைமுறையில் இன்னும் தொடர்ச்சியை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் தான் இன்னமும் தனித்தமிழில் சிற்றேடுகளைக் கொண்டுவருகிறார்கள். கால்டுவெல்லின் ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பிக்கிறார்கள். சிறுசிறுகுழுக்களாக இருக்கும் அவர்களுக்கெல்லாம் ஒருபேரியக்கம் தேவைப்படுகிறது. அந்தத் தேவையைப் பாவனையாகவாவது ஏற்றுக்கொள்ளும் நிலையில் இன்னும் திராவிட முன்னேற்றக்கழகம் இருக்கிறது. அதன் தலைவர் மு.கருணாநிதி இருக்கிறார்.

“பாவனை” என்பது ஒரு கலைச்சொல். அது ஒற்றைப் பரிமாணத்தில் இயங்குவதல்ல. ஒரு நபருக்கும், இயக்கத்திற்கும், நிகழ்வுக்கும் பொருந்தும் அதேநேரத்தில் அதன் எதிர்நிலைகளுக்கும் தேவையாக இருக்கும். ஒன்றை எதிர்நிலைப்படுத்தும் நபர்களும், இயக்கங்களும், நிகழ்வுகளும்கூட அந்தப் பாவனையைத் தனது எதிர்நிலையில் பொருத்தியே எதிர்ப்பதுண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பொருந்துவதாக இருக்கும் ‘தனித்தமிழ் இயக்கத்தின் நீட்சி’ என்ற பாவனை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பாளர்களுக்கும் தேவைப்படுகிறது. அதன் மாற்றாக நினைப்பவர்களுக்கும்கூடத் தேவைப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பவர்கள், தனித்தமிழ் இயக்கத்தை எதிர்ப்பதிலிருந்து தொடங்குகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடத்தை, அது சென்ற வழியிலேயே பயணம் செய்து, அதன் இடத்தை இல்லாமல் ஆக்கவிரும்புகிறவர்கள் அந்தப் பாவனையைத் தனதாக்க முயல்கின்றது. இதுவே பாவனைகளின் இயங்குநிலை. இவ்வியங்கு நிலையைப் பலமாகவும் நினைக்கலாம்; பலவீனமாகவும் கருதலாம்.

பெரியாரின் கடவுள் மறுப்பை முன்வைத்து தொடக்கநிலையிலிருந்து திராவிட இயக்கத்தையும், தி.மு.க.வையும் எதிர்ப்பதாக நம்பும் பிராமணர்களுக்கும் தி.மு.க.வோடு இணைந்து நிற்கும் பாவனை தேவைப்படுகிறது. தி.மு.க.வையும் பெரியாரையும் தமிழ் நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட முடியும் என நம்பும் நாம் தமிழர் கட்சி, அவர்களின் வழியிலேயே சென்று அந்தப் பாவனையைத் தனதாக்க முயல்கிறது. தங்கள் கட்சியே தனித்தமிழ் இயக்கத்தின் உண்மையான வாரிசு என நிறுவ முயல்வதையும் பாவனை என்றுதான் சொல்லவேண்டும். பாவனை என்பது வெறும் கலைச்சொல் அல்ல; பின் நவீனத்துவக் கலைச்சொல். தமிழ் நாட்டில் தி.மு.க.வை முன்வைத்து நடக்கும் பாவனை யுத்தங்கள் பின் நவீனத்துவ வெளிப்பாடுகள்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம், 20 ஆம் நூற்றாண்டின் முன்பாதியில் திராவிட முன்னேற்றக்கழகமாக வளர்ச்சியடைந்து, 1960 -களில் ஆட்சிக்கு வந்தபின் தளர்ச்சியடைந்துவிட்டது என்பதும் வரலாறு. அந்தத் தளர்ச்சியில் தமிழகத்தின் முரண்பாடு இரட்டை முரண்பாடாக இல்லாமல், பிராமணர்- இடைநிலைச்சாதிகள் - தலித்துகள் என்ற முப்பரிமாணமாக வளர்ந்தது. முப்பரிமாணம் 21 ஆம் நூற்றாண்டில் தலித் X தலித் அல்லாதோர் என்ற முரண்பாடு கூரடைந்துகொண்டிருக்கிறது. அந்தக் கூரடையும் போக்கில் பிராமணர்களின் இடம் காலியாகிக் கொண்டிருக்கிறது. வெகுமக்களுக்கான கலை, இலக்கியம் போன்ற தளங்களில் மட்டுமல்லாமல் கல்விப்பரப்பிலும்கூட மும்முனைமுரண்பாடுகள் இருமுனையாக மேலோங்கி நிற்கும்போது பிராமணர்களின் இடம் காலியாக ஆனது என்பது பலராலும் உணரப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் போகன் சங்கர் தனது முகநூல் ஒரு பதிவு போட்டார். அந்தப் பதிவில் “ இன்னும் தமிழ் இலக்கியப்பரப்பில் சொல்லிக்கொள்ளும்படியாகப் பிராமண எழுத்தாளர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டிருந்தார். பிராமணீயத்தின் மீது நம்பிக்கையும் கண்மூடித்தனமான பிடிமானமும் கொண்ட பெரும்பான்மை பிராமணர்கள் கூடத் தமிழ்நாட்டில் தங்களைக் கவனிக்க யாரும் இல்லையெனக் கூவத்தொடங்கியிருக்கின்றனர். ஒய்,ஜி, மகேந்திரன், எஸ்.வி.சேகர் போன்ற நகைச்சுவை நடிகர்கள் ஓர் இளம் பெண்ணின் கோரக்கொலையை முன்வைத்துப் பிராமணர் X பிராமணரல்லாதார் என்ற எதிர்வை உயிர்ப்பிப்பது காணாமல் போய் விட்டோமோ என்ற பரிதவிப்பின் வெளிப்பாடுதான். அவர்கள் வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள். பதற்றம் வரலாற்றையும் படிக்காது; நிகழ்காலத்தையும் கவனிக்காது. ஆனால் அறிவுஜீவிகள் பதற்றமானவர்கள் அல்லர்.
தங்களைப் பிராமண அறிவுஜீவிகள் என நம்புபவர்களுக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றில் மொழித்தூய்மை இயக்கம் என்னென்ன முரண்பாடுகளைச் சந்தித்து வளர்ந்திருக்கிறது என்பது தெரியும். திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சிக்கு வந்தபின், தனித்தமிழ் இயக்கத்தின் அடிப்படைகளைக் கொண்டு மொழி அமைப்புகளை உருவாக்கியதில்லை. அப்படியான அமைப்புகளின்வழி உருவாக்கப்படும் மொழித்தூய்மைவாதம், நவீன அறிவியல் வளர்ச்சிக்கும், நவீன இலக்கிய வடிவங்கள் உருவாகத் தடையாக அமைந்துவிடக்கூடும் என்ற காரணத்தால், தனித் தமிழ் என்னும் மொழிக்கொள்கையை முதன்மைப் படுத்தவில்லை. பொதுத்தமிழில் எழுதவேண்டுமென வலியுறுத்தவில்லை. இதன் காரணமாக முத்தமிழ் இப்போது ஐந்தமிழாகவும் அதற்கு மேற்பட்ட வெளிப்பாட்டு வடிவத்திலும் வளர்ந்துகொண்டிருக்கிறது. நவீனத்தமிழ் இலக்கியத்தின் மொழியாகத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வட்டாரத்தின் மொழியும்,சமூகங்களின் மொழியும் உருமாறிக் கொண்டிருக்கின்றன. அதன் எதிர்நிலையில் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் தமிழ் ஆக்கப்படாமல், ஆங்கிலமே இன்னும் தொடர்கிறது என்பதும் வரலாற்றின் சோகமுரண் என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று.
தங்களைப் பிராமண அறிவுஜீவிகள் என நம்புபவர்களுக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றில் மொழித்தூய்மை இயக்கம் என்னென்ன முரண்பாடுகளைச் சந்தித்து வளர்ந்திருக்கிறது என்பது தெரியும். திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சிக்கு வந்தபின், தனித்தமிழ் இயக்கத்தின் அடிப்படைகளைக் கொண்டு மொழி அமைப்புகளை உருவாக்கியதில்லை. அப்படியான அமைப்புகளின்வழி உருவாக்கப்படும் மொழித்தூய்மைவாதம், நவீன அறிவியல் வளர்ச்சிக்கும், நவீன இலக்கிய வடிவங்கள் உருவாகத் தடையாக அமைந்துவிடக்கூடும் என்ற காரணத்தால், தனித் தமிழ் என்னும் மொழிக்கொள்கையை முதன்மைப் படுத்தவில்லை. பொதுத்தமிழில் எழுதவேண்டுமென வலியுறுத்தவில்லை. இதன் காரணமாக முத்தமிழ் இப்போது ஐந்தமிழாகவும் அதற்கு மேற்பட்ட வெளிப்பாட்டு வடிவத்திலும் வளர்ந்துகொண்டிருக்கிறது. நவீனத்தமிழ் இலக்கியத்தின் மொழியாகத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வட்டாரத்தின் மொழியும்,சமூகங்களின் மொழியும் உருமாறிக் கொண்டிருக்கின்றன. அதன் எதிர்நிலையில் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் தமிழ் ஆக்கப்படாமல், ஆங்கிலமே இன்னும் தொடர்கிறது என்பதும் வரலாற்றின் சோகமுரண் என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று.
நிகழ்காலத்தை விளக்க வரலாற்றைப் பயன்படுத்துபவர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் வரலாற்றைச் சொல்லி நிகழ்காலத்தை விளக்குவார்கள்; மறைத்தும் நிகழ்காலத்தைப் பேசுவார்கள். பத்ரிசேஷாத்ரியும் பக்ஷிராஜன் கிருஷ்ணனும் வரலாற்றை மறைத்து நிகழ்காலத்தை முன்வைக்கிறார்கள். அவர்களின் இரண்டு பதிவுகளிலும் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றை மறுப்பதற்கு உரிமையிருப்பதுபோல மறைப்பதற்கும்கூட ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அப்படி உரிமைகோருவதில் அவர்களின் நலன் இருக்கும் என்பதும் ஓர் உண்மை. அந்த உண்மைக்குள் தனிநபரின் நலன்கள் மட்டுமல்ல; அவர்கள் சார்ந்த குழுக்களின் நலன்களும் இருக்கும்.
முடிந்துபோனதாக நம்பப்படும் முரண்பாட்டைத் திரும்பவும் உயிர்ப்பிக்கும் நோக்கம் என்னவாக இருக்கும்.? முரட்டுத்தனமாக அப்பாவி வேடமிடும் ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி.சேகர் போன்ற பிராமண அடிப்படைவாதிகளைப் போலல்லாமல், நடைமுறை எதார்த்தத்தை முன்வைத்து இவர்கள் எழுப்புகிறார்கள். இவர்கள் அவர்களைப் போல நகைச்சுவை நடிகர்கள் அல்ல. அறிவுஜீவிகள். சமகாலத்தமிழ் வாழ்வை அகலமாகவும் ஆழமாகவும் விமரிசித்துப் பேசும்/ எழுதும் அறிவுஜீவிகள்.
ஒருவரின் பேச்சில் - எழுத்தில் - செயலில் - அவரது குழுவின் நலன்.(வர்க்கநலன் என்று சொல்வது தேய்வழக்கு) இருக்கும் என்பது கண்டறியப்பட்ட உண்மை. இந்தியாவில் குழு என்பது சாதி.
ஒருவரின் பேச்சில் - எழுத்தில் - செயலில் - அவரது குழுவின் நலன்.(வர்க்கநலன் என்று சொல்வது தேய்வழக்கு) இருக்கும் என்பது கண்டறியப்பட்ட உண்மை. இந்தியாவில் குழு என்பது சாதி.
=================
பின் குறிப்புகள்
-------------------------
தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டைப் பிராமண அறிவுஜீவிகள் எதிர்கொள்ளும் விதத்தை அறிய இந்தக் குறிப்புகள் உதவலாம். 29/06/2016 இல், பத்ரி சேஷாத்ரி தனது முகநூலில் ஒரு பதிவு எழுதியிருந்தார். கூகிளில் தேடிய புள்ளிவிவரங்களோடு தரப்பட்டிருக்கும் அந்தப் பதிவிலிருக்கும் அடிப்படைத் தொனி கிண்டல். அவர் பதிவின்மேல் வந்து கொண்டிருந்த பின்குறிப்புகளின் தொனிகளை வாசித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு நான்குமணி நேரத்திற்குப் பிறகு பக்ஷிராஜன் அனந்த கிருஷ்ணன் ஒரு பதிவு போட்டார். பத்ரியின் பதிவைப்பார்த்தபின் அவர் எழுதினாரா? அவருக்கே அப்படியொரு பதிவை எழுதவேண்டுமென்று தோன்றியதா? என்று தெரியவில்லை. அவரது பதிவில் வெளிப்பட்டதும் கிண்டல் தொனிதான். கிண்டலோடு கொஞ்சம் கோபமும் வெளிப்படுவதாகப்பட்டது.இரண்டு பதிவுகளைகளையும் இங்கே தருகிறேன்.
முதலில் பத்ரி சேஷாத்திரி https://www.facebook.com/badriseshadri
=========================================================
ஜூலையை ஜீலை என்று எழுதுவதைவிட சூலை என்று எழுதுவதோ எவ்வளவோ மேல். ஜூன் - ஜீன் - சூன் இவ்வாறே.
கிரந்தத் தவிர்ப்பாளர்களுக்கு ஏற்புடைய தமிழாக்கப்பட்ட ஆங்கில மாதங்கள் இவையாக இருக்கலாமா? இதுகுறித்து தமிழறிஞர்கள் யாரேனும் எழுதியிருக்கிறார்களா?
சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செத்தம்பர், அக்குதோபர், நவம்பர், திசம்பர்
பிற்சேர்க்கை: கூகிளில் தேடினால் ஜீலை என்பது 28,700 முறை. ஜூலை 4,49,000, சூலை 1,26,000.
ஜூன் 4,46,000, ஜீன் என்பது நியாயமற்ற தேடுதல் 97,600 (ஏனெனில் ஜீன் = மரபணு என்ற சொல் ஆங்கிலத்தில் உண்டு), சூன் = 92,900.
=========================================================
இனி பி.ஏ.கிருஷ்ணன் https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan?fref=nf&pnref=story
=========================================================
தமிழ் மொழிக்கு ஷ, ஜ, ஸ, ஹ, க்ஷ போன்ற எழுத்துக்கள் அழகு சேர்க்கின்றன - அவற்றை பயன்படுத்த வேண்டிய இடங்களில் பயன்படுத்தினால் இவற்றை விலக்கி எழுதுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. என்னுடைய பெயர் கிருஷ்ணன். அதை நான் கிருட்டினன் என்று எழுத விரும்பவில்லை. என்னுடைய தந்தையின் பெயர் பக்ஷிராஜன். அதை நான் பட்சிராசன் என்று எழுத விரும்பவில்லை. இது எனது விருப்பம். தமிழ் எனது மொழி.
=======================================================
இந்தப் பதிவுகளில் தொடரும் விவாதங்களில் வெளிப்படும் நகை, அழுகை, இளிவரல்,மருட்கை, அச்சம், பெருமிதம்,வெகுளி, உவகையெனச் சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளையும், அவை முப்பத்திரண்டாக விரியும்போது உண்டாகும் உணர்வுகளையும் அவரவர் முகநூல் பக்கங்களுக்குச் சென்று தேடி வாசித்துக் கொள்க.
பத்ரி சேஷாத்ரி, ப.அ. கிருஷ்ணன் ஆகிய இருவரின் பதிவுகளின் பின்னணியில் இருப்பது தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலத்து அரசியல். 100 வயதான பிறகும் அது நெருக்கடியை உருவாக்கும் ஒரு இயக்கமாக இருக்கிறது கொஞ்சம் ஆச்சரியம் தான்.
-----------------------------------------------
நன்றி: மலைகள்
கருத்துகள்