பத்மசேஷாத்ரியும் அதன் தொடர்ச்சியும் : சில குறிப்புகள்

நான்கு குறிப்புகள்
1. பாலியல் கல்வி: உடனடித்தேவை
2. விதிகள்: மாற்றமும் மாற்றமின்மையும்
3. முன்னோடியாக இருப்பதின் சூட்சுமம்
கிறித்தவப்பள்ளிகளே மாதிரிகள். ஆனால் 


பாலியல் கல்வி: உடனடித்தேவை

இருகோடுகள் என்றொரு சினிமா வந்தது. இருகோடுகள் என்றால் இரண்டும் சமமாகவும் இணையாகவும் இருக்கவேண்டும் என்று நினைக்கும் மனத்தின் சிக்கலைப் பேசியது. ஒருகோட்டுக்குப் பக்கத்தில் இன்னொரு கோட்டைக் கொஞ்சம் நீளமாக நீட்டிவிட்டால் இரண்டும் வேறுவேறாக மாறிவிடும். ஒன்றைக் கிடைநிலையிலும் இன்னொன்றைக் குத்துநிலையில் வரைந்தால் செங்குத்தாக மாறிவிடும். செங்குத்தின் முனையையும் கிடைக்கோட்டின் முனையையும் இணைத்தால் முக்கோணமாகிவிடும். கிடைக்கோட்டின் மையத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இன்னொரு முக்கோணம் வரையத் தோன்றும். சம பரப்புகொண்ட இரண்டு முக்கோணங்கள். செங்கோண முக்கோணங்கள். கோடுகளை வைத்து உருவாக்கப்படும் கணக்கின் விதிகள் போலவே பண்பாட்டு நிகழ்வுகளும் இருக்கும் என நினைப்பது பொதுப்புத்தி நினைப்பு. இருசகோதரர்கள்/ இருசகோதரிகள் என்ற சொல்லாடலும் கூட அப்படி நினைப்பது தேவையா? என்று கேள்வி எழுப்பும் ஒன்றுதான்.

சமூக ஊடகமான முகநூலில் நேற்று முழுவதும் பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் = கவி. வைரமுத்து என்ற எதிரிணை உருவாக்கம் நடக்கிறது. பத்ம சேஷாத்ரி பள்ளியினைச் சேர்ந்த ராஜகோபாலன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவர் ஆசிரியர் என்ற வரையறைக்குட்பட்ட பொறுப்பிலிருந்து விலகினார். அதற்குரிய ஆடைவிதிகள், உரையாடல் எல்லைகள், மாணாக்கர் உறவு போன்றனவற்றை மீறினார் என்பன. அதன் மூலம் அவர் அடைய நினைத்தவை பாலியல் சார்ந்த லாபங்கள். பாதிக்கப்பட்டவர்களில் பலர் நடப்பன என்ன என அறியாத வயதினர். பால், பாலினம், பால் வேறுபாடு, பாலியல் ஒழுக்கம், அதனை மீறும் விருப்பம் என எதனையும் முறையாகக் கற்றுக்கொள்ளாதவர்கள்.

வைரமுத்துவின் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் அப்படியானவர்கள் அல்ல. அவர் இயங்கும் சினிமாவில் இயங்குபவர்கள். பாலியல் சார்ந்த அறிவை ஓரளவு பெற்றவர்கள். அவரது விருப்பத்தை நிராகரிக்கவும் வெளிப்படுத்தவும் கூடிய பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் அவரைப் பகைத்துக்கொண்டால் தங்கள் துறையில் முன்னேறும் வாய்ப்புகள் தடுக்கப்படும் என்று அத்துமீறல்களுக்கு எதிர்வினையாற்றாமல் இருந்தவர்கள். காலங்கடந்த பின்னர் பாடகி சின்மயி வைரமுத்துவின் சொற்கள், செயல்கள் பாலியல் நோக்கத்தோடு இருந்தன என வெளிப்படையாகக் கூறத்தொடங்கினார். - Me Too - சட்டப்பாதுகாப்பு உரிமையான பின்னர் இன்னும் சிலரும் நாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பொதுத்தளத்தில் முன்வந்து சொல்கிறார்கள். ஆனால் குற்றச்சாட்டைச் சட்டப்படியாகத் தொடங்க நினைக்கத் தயங்குகிறார்கள். ஆதாரங்களோடு நிரூபிக்க முடியாத ஒன்று என்பதால் அந்தத்தயக்கம் என்பது புரிகிறது.

ஆண் -பெண் உரையாடலில் எது நட்பான உரையாடல், பாலியல் உள்நோக்கம் கொண்ட உரையாடல் என்ற வரையறைகளைச் செய்வது எளிதானதல்ல. பாலியல் விருப்பத்தைச் சொல்லும் சொற்கள், நகர்வுகள், உடல்மொழி என்பன இருபாலாரிடம் வெளிப்படக் கூடியன. காட்டப்படும் கவன ஈர்ப்புச் செயல்பாடுகளின் உள்நோக்கம் என்ன என்பதைத் தொடர்புடைய இருவர் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். ஒரு பெண் அல்லது ஆண் இத்தகைய நகர்வுகள் மூலம் எதிரிணையான ஆண் அல்லது பெண்ணின் பாலியல் விருப்பத்தைத் தூண்டுவதில் அடையக்கூடியது உடல்சார்ந்த தேவை என்றாகிறபோது நிறைவேறாத காமத்தின் இழப்பீடு எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனைப் பெண்ணின் நிறைவேறாத உணர்வுகளுக்கான விருப்பம் எனப் பெண்ணிய வரையறைகள் பார்க்கின்றன. அதில் இணைகின்ற ஆணைக் குற்றவாளியாகப் பார்க்காமல் கரிசனத்தோடு பார்க்கின்றன. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எதிர்பாலினத்தின் தேவையை நிறைவேற்றத் தங்கள் முன்னேற்றத்தைச் சாதகமாக்கும்போதும் பெண்ணின் செயல்பாடுகள் மட்டுமே குற்றமாகப் பார்க்கப்படுகிறது; ஆணின் செயல்பாடுகள் இரக்கமாகக் கணிக்கபடுகிறது. அறிவுட்பட்ட அதிகாரத்தைச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும்போது பாலியல் இச்சையைத் தாண்டிய வேறு நோக்கங்கள் செயல்படுகின்றன. இவையனைத்திற்கும் உடனடித் தீர்வுகள் எதுவும் இல்லை. இந்திய சமூகம் உடனடியாகப் பாலியல் கல்வியை வெளிப்படையாகக் கற்கத்தயாராக வேண்டும்.

முன்னோடியாக இருப்பதின் சூட்சுமம்


இப்போது பேச்சில் அடிபடும் பத்மசேஷாத்ரி பள்ளி பலவற்றில் முன்னோடிப் பள்ளி. அப்படி முன்னோடிப்பள்ளியாக இருப்பதும் ஒருவித வியாபார உத்திதான். 1991 இல் புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியின் முதலணி மாணவர்கள் வெளியேறினார்கள். வெளியேறிய முதலணி மாணவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். அவர் தனது அரங்கியல் செயல்பாடுகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது சென்னையில் வெளிப்படுத்தியிருந்தார். படிப்பை முடித்தவுடன் பத்மசேஷாத்ரி பள்ளியில் நாடக ஆசிரியராகப் பணியேற்கும்படி அழைப்பு விடுத்தார்கள். அவர் சில மாதங்கள் இருந்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.
வெளியே வரும்போது அவருடைய இளவல் - இரண்டாவது அணி மாணவர் ஒருவரை அங்கு நாடக ஆசிரியராக வேலையில் சேர்த்தார். அவர் மலையாளி. வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு எடுத்துவிட்டுப் பாண்டிச்சேரி திரும்பிவிடுவார். வரும்போது அங்கு நடப்பதைச் சொல்வார்.
மாணவர்களிடம் நாடகம் சிறப்புப் பாடமாகச் சொல்லிக் கொடுக்கிறோம். நாடகத்தை முறையாகக் கற்றுக் கொண்ட ஆசிரியர் இருக்கிறார் என்று சொல்லி வசூலிக்கும் பணத்தில் தரும் சம்பளம் மிகக்குறைவு என்றார். 100 மாணவர்களாவது நாடகத்தைச் சிறப்புப்படிப்பாகப் படிக்கச் சேருகிறார்கள். ஆனால் அவர்கள் தரும் சம்பளம் இரண்டு மாணவர்களிடம் வாங்கும் கட்டணம்கூடக் கிடையாது. அதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். மாணாக்கர்களின் மீது செலுத்தும் ஆதிக்கம், பாரபட்சம் போன்றவற்றைச் சகிக்கவில்லை என்று சொல்வார். அவரும் ஆறுமாதங்களுக்குப் பின்னர் இன்னொருவரைச் சேர்த்துவிட்டு விலகிவிட்டார். மூன்று பேருக்குப் பின் எங்கள் துறை மாணாக்கர்கள் ஒருவரும் அங்கு வேலைக்குச் சேரவில்லை.


விதிகள்: மாற்றமும் மாற்றமின்மையும்


நடந்தது நடந்துவிட்டது. இப்படி நடக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறது. விதியின் முடிவை யார் மாற்ற முடியும். நீங்கள் சொல்லும் விதி தலைவிதி என்றால் மாற்றுவதைப் பற்றிப் பேசிப்பயனில்லை. அதே விதிகள் அரசியல் சட்டமும் பின்னர் வந்த அரசுகள் உருவாக்கிய விதிகளென்றால் மாற்றவும் முடியும்; வளைக்கவும்.
சாதாரண இந்தியர்கள் தங்கள் வாக்குகளைப் பெற்று சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களாகச் செல்பவர்களைக் கொண்டு உரையாடல் நடத்தி மாற்ற நினைக்கிறார்கள். ஆனால் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகாரவர்க்கத்தின் துணையோடும் அரசாங்கப்பதவிகளில் இருக்கும் நபர்களின் உதவியோடும் வளைக்கப்பார்க்கிறார்கள்.
இப்போது பேசப்படும் பத்மா சேஷாத்ரி பாலர் பள்ளியின் நிர்வாகிகள் விதிகளை வளைத்து வளைத்து மேலேறியவர்கள்; அதனையே இப்போதும் செய்வார்கள். நடந்தது நடந்துவிட்டது; இனி இப்படி நடக்காது என்று சொல்வார்கள். ஆனால் தலைவிதியை மாற்றமுடியாது என்று போதனை செய்வார்கள்

கிறித்தவப்பள்ளிகளே மாதிரிகள். ஆனால்....


எனது பள்ளிப்படிப்பு எட்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளி. அதன் பிறகு திண்டுக்கல் டட்லி உயர்நிலைப்பள்ளி. அது கிறித்தவச் சமயத்தில் புராட்டஸ்டெண்ட் என்னும் சீர்திருத்த வகைக் கிறித்தவப் பள்ளி. கல்லூரியும் அதே கிறித்தவப் பிரிவில் வரும் அமெரிக்கன் கல்லூரி. விடுதி வாழ்க்கையும் உண்டு. எட்டாம் வகுப்புவரை பள்ளியில் வாரம் ஒருமுறை மட்டுமே கூட்டம் நடக்கும். ஆனால் கிறித்தவப் பள்ளியான டட்லியில் தினசரி உண்டு. ஏதாவதொரு ஸ்தோத்திரப்பாடலைப் பாடிப் பள்ளியின் தினசரிப்பணிகளைத் தொடங்கும் நிலை. பள்ளிக்கு வருவதற்கு முன்பு விடுதியில் காலையில் எழுந்ததும் பைபிள் வாசிப்பும் ஸ்தோத்திரப்பாடலும். பின்னர் படிப்பு, குளியல் முடித்து உணவுத்தட்டின் முன்னால் உட்கார்ந்து இந்தக் காலை உணவைக்கொடுத்த பரமபிதாவுக்கு நன்றி. அதேபோல் மதியம், இரவு உணவுக்கு முன்பும் நன்றிகள் உண்டு. மாலையில் ஒரு பைபிள் வாசிப்பும் ஸ்தோத்திரமும். இரவு தூக்கத்திற்கான மணியடிக்கும்போது படுக்கையிலேயே அன்றைய நாளில் செய்தனவற்றை நினைத்து மன்னிப்பும் நன்றியும் சொல்வதுண்டு. இவை தினசரி வாழ்க்கை.

வாரக்கடைசிகளில் ஞாயிறு வகுப்புகளும் உண்டு. கிறித்தவ மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருக்கும் ஆலயத்திற்குச் செல்வார்கள். மற்றவர்கள் விரும்பினால் போகலாம். ஞாயிறு பள்ளிக்கும் அதே நடைமுறைதான். இந்த நடைமுறைகளின் பின்னணியில் கிறித்தவ மத அறிமுகம், பைபிளின் அத்தியாயங்கள் உள்ளே செலுத்துதல் போன்றன உண்டு. நான் அறைக்கு வாடகையும், உணவுக்குக் கட்டணமும் கட்டிப்படித்தேன். யாரையும் கட்டாயமாக மதமாற்றம் செய்ததில்லை. அதே நேரம் இலவச விடுதி ஒன்று உண்டு. வாடகையில்லை; கட்டணம் இல்லை. அதில் இடம் கிடைக்கவேண்டுமென்றால் கிறித்தவ மாணவராக இருக்க வேண்டும். மதம் மாறினாலும் இடம் கிடைக்கும். இரண்டு விடுதிகளின் உணவும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.


அமெரிக்கன் கல்லூரியின் விடுதி வாழ்க்கையில் சமய நடவடிக்கைகளே கிடையாது. கிறித்தவ மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருக்கும் தேவாலயத்திற்குப் போவார்கள். மற்றவர்களும் போகலாம். எப்போதாவது சிறப்பு நிகழ்ச்சிகளின் போது நானும் போயிருக்கிறேன். அங்கு பாடப்படும் ஆங்கிலப் பாடல்களின் இசை கேட்பதற்கு இனிமையாக இருக்கும். முதுநிலை வகுப்பு மட்டும் இருபாலர் படிப்புகள். அந்த வகுப்புகளில் இருக்கும் பெண்கள் பாடுவார்கள். மொத்தமான கூட்டத்தைக் கல்லூரியின் முதன்மைக் கட்டிடத்தில் நடத்தும்போது கிறித்தவ ஆராதனைகளுடன் தொடங்குவதுண்டு. முடிப்பதுண்டு. கிறித்தவ மதத்தின் மற்ற பிரிவுகள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திச் சமயப்பரப்புரை செய்வார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. கிறித்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடவுளின் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதும் அவர்களைத் தங்களவர்களாக ஆக்குவதும் கடமையென நம்புகிறார்கள். அது கடவுளுக்குச் செய்யும் தொண்டுகளில் ஒன்று என்ற நம்பிக்கையும் உண்டு.


நான் படித்த திண்டுக்கல்லில் அரசு கல்வி நிறுவனங்களைத் தாண்டி அதிகம் இருந்தவை கிறித்தவக் கல்வி நிறுவனங்களே. இசுலாமிய நிறுவனங்களும் உண்டு. சமயம் சாராத தனிநபர்களின் நிறுவனங்கள் இருந்தன; அவற்றின் பெயர்களில் இந்து அடையாளங்கள் இல்லை. நான் வாழ்ந்த மதுரையிலும் புதுவையிலும் நெல்லையிலும் இதுதான் நிலைமை.


1990 களில் இதில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்து அமைப்புகள் கிறித்தவப் பள்ளிகளுக்கு இணையாகப் பள்ளிகளைத் தொடங்கின. ஜெயேந்திரர், விவேகானந்தர் போன்றவர்களின் பெயர்களில் தொடங்கப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும் கிறித்தவச் சமயப்பள்ளிகளை மாதிரிகளாகக் கொண்டு நகலெடுத்தன. கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்ரம், வித்யாஸ்ரம் என்று முடியும் கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன. அங்கு சம்ஸ்க்ருதம் முக்கியப் பாடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்து மதப் பரப்பில் முதன்மை வேலையாக மாறியிருக்கிறது. சுதேசியமும் சுதேசியப்பண்பாடும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. கடும்போக்குக் கூடி இசுலாமிய , கிறித்தவ எதிர்ப்பும் பேசப்படுகின்றன. இதன் விளைவுகளை ஒவ்வொரு வீடும் தெருவும் ஊரும் நகரமும் உணரத் தொடங்கியுள்ளன.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்