நவீனத்துவமும் பாரதியும்

ஆங்கிலத்தில் மாடர்ன் (Modern), மாடர்னிட்டி (Modernity), மார்டனிசம்(Modernism) என மூன்று சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இம்மூன்று சொற்களின் வேர்ச்சொல் மார்டன் (Modern) என்பதே என்றாலும் பயன்பாட்டு நிலையில் வேறுபாடுகள் உள்ளன. இம்மூன்று சொற்களையும் தமிழில் நவீனம், நவீனத்துவநிலை, நவீனத்துவம் என மொழிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தலாம். தமிழில் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டியது. 
நவீனம் என்பது அன்றாட வாழ்க்கையில் பெரிதும் பயன்பாட்டில் உள்ள சொல். நவீன நிலை என்பது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் முடிவுகளின் மீது மனிதர்கள் காட்டும் நிலைபாட்டின் பக்கச் சார்பைக் குறிக்கும் சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. இம்மூன்றிலிருந்தும் விலகிக் குறிப்பிட்ட காலகட்டத்துக் கலை இலக்கிய விவாதங்களைக் குறிக்கும் சொல்லாக நவீனத்துவம் இருக்கிறது. அச்சொல்லின் வருகையும் செல்வாக்கும் மேற்குநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் கலை இலக்கியப்பரப்புகள் பலவற்றிலும் இருந்தது.

டிசம்பர்,11,1882 இல் பிறந்து செப்டம்பர், 11, 1921 இல் மறைந்த பாரதி வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள். பாரதியின் வாழ்நாள் காலமும் நவீனத்துவத்தின் செல்வாக்குப் படிந்த காலகட்டமும் ஏறத்தாழ இணையாக வைத்துப் பார்க்கத்தக்கது. எட்டுத்திக்கும் செல்வது பற்றியும் மேலைக்கலைகளையும் ஞானத்தையும் கொண்டுவந்து சேர்ப்பது பற்றியும் தனது எழுத்துகளில் பேசியுள்ள கவி. பாரதி நவீனத்துவம் என்னும் இலக்கியப் பார்வையை – நவீனத்துவ நிலை என்னும் வாழ்க்கையின் இயங்குநிலையை – நவீனமென்னும் அன்றாடச் செயல் நிலைகளை எவ்வாறு எதிர்கொண்டிருக்கிறார் என்பதை அவரது எழுத்துகளிலிருந்து காட்ட முனைகிறது இக்கட்டுரை
நவீனத்துவம் என்னும் செல்நெறி
பொதுவாகக் கலை இலக்கியங்களின் தோற்றம், வெளிப்பாட்டு முறை, அவற்றின் உள்ளடக்கம் போன்றவற்றைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்குவதும் விமரிசனம் செய்வதும் மேற்கத்தியக் கற்கை முறையின் பாற்பட்டது. இலக்கியம் பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் ஓர் எழுத்தாளர் அல்லது கலைஞர் எதன் விளைவு எனச் சொல்ல முனைகின்றன. இலக்கிய உருவாக்கம் என்பது மனிதர்களின் ஆதாரப்பிரச்சினையின் வெளிப்பாடு என்பதில் வெவ்வேறு கருத்தியல் நிலைபாட்டாளர்களும் ஒன்று படுகின்றனர். அதனைக் கண்டறிவதற்கு இலக்கியப்பிரதி மட்டுமே போதுமானவையல்ல; அவை உருவாகக் காரணமான கருத்தியலைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற நிலைபாடே திறனாய்வு அணுகுமுறைகளை முன்மொழிந்தன. அத்தோடு குறிப்பிட்ட காலகட்டத்து வாழ்க்கைப் பார்வையின் செல்நெறியாக விளங்கும் ஒரு செல்நெறி எவ்வகையான கலை இலக்கிய வெளிப்பாடுகளை உருவாக்குகின்றன என்பதையும் விளக்க முனைகின்றன. 
மரணத்தைக் கண்டு பயப்படுதலே மனிதர்களின் ஆதாரப் பிரச்சினை என்பது ஒருவகைக் கருத்தியல். இக்கருத்தியலின் தோற்றுவாய்களாகவும் காரணி களாகவும் இருப்பன சமயங்களும், அவற்றின் பரப்புரைகளும், அவை முன்மொழியும் தீர்வுகளும் ஆகும். இமானுவேல் காண்ட் என்ற நவீன அறிஞர் இதனை விரிவாகப் பேசியுள்ளார். மனித அனுபவங்களுக்குப் பின் இருக்கும் காரணிகள் பற்றிப் பேசும்போது மரண பயம், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைத் தேடுதல் என்பதே மனிதனை இயக்குகிறது என விவரிப்பார். இதிலிருந்து உருவான இலக்கிய அணுகுமுறை அறவியல் அணுகுமுறையாக அறியப்படுகிறது.

இரண்டாவதாக இருக்கும் இன்னொரு கருத்தியல் மனிதர்களின் எதிர்பால் கவர்ச்சியும் இச்சையுமே வாழ்க்கையின் காரணிகளாக இருக்கின்றன என்பது. அதைத்தான் இலக்கியம் எழுதிக் காட்டியிருக்கிறது என்பது ப்ராய்டியத்தை இலக்கியப்பார்வையாக முன்மொழிபவர்களின் நிலைப்பாடு. அதிலிருந்தே உளவியல் அணுகுமுறையும் அதன் கிளைகளான தொல்படிமவியல் அணுகுமுறை போன்றன உருவாகி இருக்கின்றன. மூன்றாவதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் கருத்தியல் மனிதர்களின் உணவுத்தேவை அல்லது பொருட்தேவை உருவாக்கும் நெருக்கடிகளை மையப்படுத்துவது. பொருளாதார உடைமை காரணமாக மனிதர்கள் வர்க்கமாகப் பிளவுபட்டிருக்கிறார்கள் எனவும், ஆளும்வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்ற இருபெரும் பிளவுக்குள்ளான முரணே மனிதவாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளது; அவற்றையே இலக்கியங்கள் எழுதிக்காட்டின என்பது அந்தக் கருத்தியலின் அடிப்படை. கார்ல் மார்க்சின் அடிப்படை விளக்கங்களிலிருந்து உருவான இந்தக் கருத்தியலின் கொடையே சமூகவியல் அணுகு முறையும், மார்க்சிய அணுகுமுறையும். அதன் கிளைகளே பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலைப் பார்வை போன்றனவாக வளர்ந்துள்ளன. மொழியைக் கண்டுபிடித்ததே மனித ஆற்றலின் முதல் சாதனை. அதுவே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது என்ற கருத்தியல் வழி உருவான அணுகுமுறைகள் பல. மொழியியல் அணுகுமுறையாகவும், அமைப்பியல், பின்-அமைப்பியல் அணுகுமுறை யாகவும் வளர்ந்த வளர்ச்சிக்குப் பின்னணியாக இருப்பன மொழி பற்றிய பார்வைகளே. இவ்வணுகுமுறைகளும் அவற்றின் பார்வைகளும் ஐரோப்பிய நவீனத்துவப் பார்வையின் வெளிப்பாடுகளே.

இன்று வரையிலான வாழ்க்கைப் போக்கைத் தீர்மானித்த செல்நெறிகளாக மூன்றினைக் கூறுகின்றன மேற்குலகச் சிந்தனைமுறைகள். மரபு அல்லது பாரம்பரியம் (Traditional) நவீனத்துவ நிலை (Modernity) பின் நவீன நிலை (Post Modernity) என்பன அம்மூன்றும். பாரதியின் காலகட்டமும் நவீனத்துவ நிலையின் கால கட்டமும் ஏறத்தாழ ஒன்று என்பதால் பாரதியையும் நவீனத்துவத்தையும் இணைத்துப் பேச, அதற்கு முந்திய மரபுநிலை அல்லது பாரம்பரிய நிலை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். அதன் தொடர்ச்சியாகவே நவீனத்துவத்தையும் அதன் பிரதியாக்க நபரான பாரதியையும் விளங்கிக் கொள்ள முடியும்.

மரபுநிலையும் நவீனத்துவ நிலையும்:

வரலாற்றை உருவாக்குதல் என்பதை வெற்று நம்பிக்கைகளின் பேரில் நடத்திய காலகட்டம் ஒன்று உண்டு. அந்தக் காலகட்டத்தை வெற்று நம்பிக்கைகளின்பேரில் அமைந்த காலகட்டம் என்று சொல்லுவது இன்னும் சரியாக இருக்கும். எல்லாவிதமான நம்பிக்கைகளின் பின்னணியில் மதமும், கடவுளும் அவை வலியுறுத்திய மரபும் (tradition) அந்தக் காலகட்டத்தின் இயங்குநிலைகளாக இருப்பன. வாழ்தலின் அனைத்துக் கூறுகளும் மரபின் பெயரால் தீர்மானம் பெறும். நிகழ்வுகள் தொடங்குவதும் தொடர்வதும் மரபின் காரணமாகவே எனத் தனிமனிதனாலும் சமூகத்தாலும் நம்பப்படும்; மறுப்பு எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இதனைத் தான் மரபான வாழ்தல் முறை அல்லது பாரம்பரிய வாழ்தல் முறை (traditional life style) எனக் கருதுகிறோம். இந்த வாழ்தல் முறையின் காலகட்டம் ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை தொடர்ந்தது எனக் கூறலாம். இந்தியச் சமூகங்களுக்கு இன்னும் கூடத் தொடரத்தான் செய்கிறது. ஆனால் அதிலிருந்து விடுபட்ட மனிதர்களும் கூட்டமும் உருவாக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மை .

நம்பிக்கையின் இயங்கும் மரபுநிலையின் மையம் என்பது இறை அல்லது கடவுள். உலகம் இறையால் படைக்கப்பட்ட து என்ற நம்பிக்கையின் மேல் உருவாகும் படைப்பாக்கச் செயல்பாடு உலகத்தின் பருப்பொருட்களையும் அரூபமான கலை, இலக்கியச் செயல்பாடுகளையும் இறையோடு சேர்த்தே பேசுகின்றன. இறையே ஆக்கவும் அழிக்கவும் வல்லது என்பதின் நீட்சியாகக் கவிதை எழுதுவதும் கதை எழுதுவதும், காட்சிக்கலைகளையும் கேட்புக்கலைகளையும் உருவாக்குவதும் இறையின் கட்டளைப்படியே நடக்கின்றன என்று நம்புகிறார்கள். தமிழில் ஞானசம்பந்தர், குமரகுருபரர் போன்றோரின் கவி ஆற்றலுக்குக் காரணம் இறையின் அருளே என்று கதைகள் உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் பாட உலகெலாம் என இறைவன் அடியெடுத்துக் கொடுத்ததாக நாம் படித்திருக்கிறோம். இந்தக் கதைகளின் காரணம் எல்லாம் இறையின் அருள் என்பதன்றி வேறில்லை.

கடவுளின் இடத்தில் அறிவை நிறுத்தி மரபு என்று சொல்வதற்குப் பதிலாகக் காரணகாரியங்கள் எனப் பேசும் காலகட்டம் அறிவொளியின் காலமாகும் (age of enlighten). தனிமனிதன் கடவுளின் இடத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு, கேள்விகளற்ற நம்பிக்கை என்பதற்குப் பதிலாக கேள்விகளுக்கான பதில்கள் என்பதால் எல்லாவற்றையும் இட்டு நிரப்பினான். அறிவின் தர்க்கம், அறிவியலின் வளர்ச்சி, அறிவியல் பூர்வமான வரலாறு, அறிவியல் பூர்வமான அர்த்தங்கள், விளக்கங்கள் என அறிவு எல்லா நிலையிலும் மையங்கொண்ட காலகட்டம் ஒன்று உருவானது. அந்தக் காலகட்டத்திற்கு இங்கு வேறுவேறு பெயர்கள் உண்டு. மறுமலர்ச்சிக் காலம், சீர்திருத்தக் காலம், முதலாளித்துவக் காலம் என்றெல்லாம் பெயர்பெற்ற அந்தக் காலகட்டத்திற்கு நவீனக் காலம் என்று மற்றொரு பெயரும் உண்டு, மதமும் அரசும் இணைந்து செயல்பட்ட பழைய நிறுவனங்களின் அதிகாரத்துவத் தன்மைக்கெதிராக மாற்றுக்களை முன்வைத்தது இதன் வெளிப்பாடாகும். ஜனநாயகம், குடியரசு, சட்ட ஆட்சி, சமய நீக்கம், அனைவரும் சமம் என்பனவற்றை முன்மொழிவதாக அதனை நாம் அறிந்துள்ளோம். இவை அதன் பரந்த வெளிப்பாடுகள். அதன் குறிப்பான வெளிப்பாடு, தனிமனிதன் ஒவ்வொருவனின் குரலும் முக்கியம் எனப்பேசுவது முன்னிறுத்துவதும் ஆகும். இந்த வெளிப்பாட்டின் உச்சகட்டமாக மார்க்சீயம் சமத்துவத்தையும் உதிர்ந்து போகும் அரசதிகாரத்தையும் பற்றிய கதைகளை முன்வைத்தது. நவீனச்சிந்தனை முன்வைத்த புதிய நம்பிக்கைகளின் மேல் அதன் எல்லைக்குள் நின்று சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் சிலர் முன்வைத்தனர். அவர்களையும் நவீனத்துவம் தனது எல்லைக்குள்ளேயே வைத்துக் கொண்டு நவீனத்துவவாதிகள் (modernists) அல்லது முன்னணிப் படையினர் (avant garde) எனப் பெயரிட்டு உள்வைத்துக் கொண்டது. இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் கூட இதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது.

பாரம்பரியம், கட்டிடக்கலை, இலக்கியம், சமய நம்பிக்கை, தத்துவம், சமூக அமைப்பு, தினசரி வாழ்க்கை மற்றும் அறிவியல் ஆகியவற்றின் செயல்கள், காலாவதியாகிவிட்டன என்று பேசுகின்றன நவீனத்துவக் கலைகளும் இலக்கியமும். அவை காலாவதியானவை என்று உணர்ந்தவர்கள், வளர்ந்து வரும் முழு தொழிற்துறை உலகின் புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சூழலில். போக்கோடு இணைந்து எழுதினர். ஐரோப்பாவில் இதனைத் தொடங்கி வைத்தவராக்க கவிஞர் எஸ்ரா பவுண்டின் அறியப் படுகிறார். "புதியதை உருவாக்கு!" (1934) என்ற அவரின் பிரதி, கடந்த காலத்தின் வழக்கத்திற்கு மாறான கலாச்சாரம் என்ற கருத்தை முன்வைத்தது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேற்கத்திய சமுதாயத்தில் பரந்த அளவிலான மற்றும் தொலைதூர மாற்றங்களுடனான பண்பாட்டுப் போக்குகள் மற்றும் மாற்றங்களுடன் சேர்ந்து ஒரு தத்துவ இயக்கமாக நவீனத்துவம் மாறியது என்றே சொல்லலாம். நவீனத்துவத்தை வடிவமைப்பதற்கான காரணிகளில் நவீன தொழில் சங்கங்கள் மற்றும் நகரங்களின் விரைவான வளர்ச்சி ஆகியவை இருந்தன. பின்னர் உலகப் போருக்குப் பின்னால் ஏற்பட்ட வன்முறை விளைவுகள் காரணமாக நவீனமயமாக்கப்பட்டது. அறிவொளி சிந்தனையின் உறுதிப்பாட்டை நவீனமயமாக்கியது, மற்றும் பல நவீனவாதிகள் மத நம்பிக்கையை நிராகரித்தனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், சமூகத்தை முன்னேற்றும் சிந்தனைப் போக்கு என்று கருதுபவர்கள், அவை மனிதனின் சக்தியை உறுதிப்படுத்துகின்றன, சுற்றுச்சூழலுக்கு உதவுதல், விஞ்ஞான அறிவு அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றல் மேம்படுத்துதல் நடக்கின்றன என நம்புகின்றனர். இந்த நோக்கிலிருந்து, நவீனத்துவம், இருப்பு, பொருளியல், தத்துவம் ஆகியவற்றின் மறு மதிப்பை மாற்றியது. இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயமாக்கல் தொடர்ந்தது.

நவீனத்துவத்தின் தொடக்கம்:

வரலாற்று ஆசிரியர்கள், மற்றும் பல்வேறு துறைகளின் எழுத்தாளர்கள், நவீனத்துவத்திற்கான தொடக்கப்புள்ளிகளில் மாறுபடுகின்றனர். வரலாற்றாசிரியர் வில்லியம் எவெர்டெல், 1870- களில் நவீனமயமாக்கல் ஆரம்பிக்கப்பட்டபோது நவீனத்துவம் தொடங்கியது என்கிறார். ​​ மறுபுறம், காட்சி கலை விமர்சகர் கிளெமென்ட் கிரீன்பெர்க் இம்மானுவேல் கான்ட்டை (1724-1804) "முதல் உண்மையான நவீனவாதி" என்று அழைத்தார். கலை மற்றும் எழுத்துகளில், பிரான்சில் 1860 களில் தொடங்கி இரண்டு முக்கிய அணுகுமுறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டன.

நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க தன்மை, இலக்கிய மற்றும் சமூக மரபுகள் தொடர்பான தன்னிலை நனவுகளும் சமூகத்தின் கூட்டு நனவுகளும் இலக்கியத்தின் பதிவுகளாகின. தொடக்கத்தில் இயற்பண்பு வாதத்தை முற்றிலும் புறக்கணித்து நடப்பியலை நவீனத்துவத்தின் வெளிப்பாடாகக்கொண்டது. பின்னர் நடப்பியலும் நவீனத்துவத்தின் வெளிப்பாட்டுக் கருவியாக இருக்க முடியாது என்று கருதி படிமம், குறியீடு, அபத்தம், மிகையதார்த்தம், நேர்கோடற்ற கூற்றுமுறைமை என ஒவ்வொன்றையும் சோதனை செய்து பார்த்தது. ஒரு ஓவியம், கவிதை, கட்டிடம், முதலியவற்றை உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் செயல்முறைகளையும் பொருட்களையும் கவனத்திற்கு கொண்டு வந்த நுட்பங்களைப் பயன்படுத்தியது. கடந்த காலத்தின் படைப்புகளை மீண்டும் ஒழுங்கமைத்தல், ஒருங்கிணைத்தல், மறுபடியும் எழுதுதல், மறுபரிசீலனை, திருத்தல் மற்றும் பகடி ஆகியவற்றின் மூலம் நவீனத்துவ வெளிப்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டன.

பாரதி: பன்முக அடையாளம்:

நவீனத்துவம் என்னும் செல்நெறியைப் பற்றிய இப்புரிதல்களுடன் கவி பாரதியை இணைவைத்துப் பேசும்போது கவிதை மற்றும் உரைநடை எழுத்துகளில் அவன் உருவாக்கிய அடையாளங்கள் குறித்து விரிவாகப் பேசவேண்டும். அவன் தனது காலத்தின் பொதுவாழ்க்கையையும், தேசத்தின் ஆன்மத் துடிப்பையும், கனன்று எரிந்த விடுதலைத் தீயையும் அறிந்தவனாக இருந்தான் என்பதை அவனது படைப்புகள் காட்டுகின்றன. பொதுப்புத்தி சார்ந்த இலக்கிய அணுகல் வழியே பாரதியின் கலையியல் பார்வையாக நமக்குக் கிடைப்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவனைப் பல நேரங்களில் தேச விடுதலையை முன் வைத்துக் கவிதைகளை எழுதிய ‘தேசியக் கவி’என்னும் அடையாளத்தை முதன்மைப்படுத்தியே பேசியாக வேண்டும். சின்னஞ்சிறு தேசங்களாக எல்லை வகுத்துக்கொண்டு பிரிந்துகிடந்த பாரத தேசத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனியும் பிரிட்டானிய ஆட்சியும் ஒன்றிணைந்த தேசமாக அடையாளப்படுத்திக் காட்டியதைப் பாரதி அப்படியே உள்வாங்கியவனாகத் தனது கவிதைகளில் வெளிப்பட்டுள்ளான். “மன்னும் இமையமலை எங்கள் மலையே - மாநிலத்தில் அதற்கீடிணையில்லேயே” என வடக்கெல்லையை அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்குட்பட்ட இந்திய தேசம் அடிமைப்பட்ட வரலாறும், அதனால் இந்தியப் பொருளாதார, சமூக, பண்பாட்டு வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் அவனது கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.

நாட்டு வணக்கம், பாரதநாடு, பாரத தேசம், எங்கள் நாடு, புதிய பாரதம், பாரதமாதா, எங்கள் தாய், பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி, பாரதமாதா நவரத்தினமாலை, பாரதமாதா திருத்தசாங்கம், தாயின் மணிக்கொடி பாரீர், பாரத ஜனங்களின் தற்கால நிலைமை, போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்,பாரத சமுதாயம், பாரதீய கீதம் எனத் தலைப்பிட்டு எழுதிய 20 பாடல்களின் சொல்லாடல்களும் உணர்வுகளும் அதனை வெளிப்படுத்துவன.

தனது காலத்தில் நின்று கொண்டு கண் முன்னே நடக்கும் சுதந்திர வேட்கையைப் பற்றிப் பேசும் எந்தவொரு கவியும் தன்னையறியாமல் கடந்த காலத்திற்குள் செல்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குள் செல்வதோடு நின்றிருந்தால் பாரதி இன்று வரை நினைத்துப் பார்க்கப்படும் கவியாக- கவி ஆளுமையாக ஆகியிருக்க மாட்டான். அவனது ஆளுமையின் தனி அடையாளமே நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் பயணம் செய்தது போலவே எதிர்காலத்திற்குள்ளும் பயணம் செய்தான் என்பதுதான். போகின்ற பாரதமும், வருகின்ற பாரதமும் அவனது கவிப்பொருளாக இருந்தது என்பதோடு, விடுதலை அடையும் பாரதம், எத்தகைய பரிமாணங்கள் கொண்டதாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டும் பாரத சமுதாயம், புதிய பாரதம் போன்ற கவிதைகளையும் அவன் வாசிக்கத் தந்துள்ளான். 

தேச விடுதலைப் போராட்டக்காலத்தோடு இணைத்துப் பேசப்பட்ட பாரதியின் தேசியக்கவி என்னும் அடையாளம், காலனிய ஆட்சியின் முடிவுக்குப் பின் , உண்டான பின் காலனிய மனநிலையில் வேறு வேறு அடையாளங்களுக்குள் நகர்த்தப்பட்டது. சிலர் அவனைப் புரட்சிக் கவி எனவும், சர்வதேசப் புரட்சியை வரவேற்ற முன்னோடி எனவும் அடையாளப்படுத்திக் காட்டினர். சோவியத் யூனியனில் நடந்த மாற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ‘ஆகாவென்றெழுந்ததுபார் யுகப் புரட்சி’ எனவும், 

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)

மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்

வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ ?

இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு,

கனியும் கிழங்கும் தானி யங்களும் கணக்கின்றித் தரு நாடு - இது

கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத) 1


இனியொரு விதிசெய் வோம் – அதை எந்த நாளும் காப்போம்,

தனியொரு வனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க!

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!

எனவும் அவன் எழுதிய வரிகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டன. சமதர்ம சமுதாயம் குறித்த அவனது கவிதைப் பதிவுகளும் கட்டுரைக் குறிப்புகளும் சேர்ந்து அவனை உலகக் கவியாகவும், புரட்சிக்கவியாகவும் அடையாளங்காட்டின

பின்-காலனிய இந்தியாவில் எழுந்த புதிய நடைமுறைகளும், அதிகாரப் படிநிலைகளும், தேர்தல் அரசியலும் நடைமுறை வாழ்க்கை சார்ந்த மாற்றங்கள் பலவற்றைக் கொண்டு வந்து சேர்த்தன. புதிய விழிப்புணர்வுகள் பலவற்றை இந்திய வாழ்க்கை எதிகொண்டது. குறிப்பாகச் சமூக அமைப்பின் படிநிலைகளைத் தீர்மானித்த வருணக் கோட்பாடு ஆட்டம் கண்டதும், பாலினம் சார்ந்த வேறுபாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டது முக்கியமான போக்குகள். சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் கருத்தியல்களின் வழியாக உருவான சமூக நீதியும், அதற்குக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் முக்கிய விளைவுகளை உண்டாக்கியுள்ளன. அதே போல் பாலினம் சார்ந்த மறுமலர்ச்சிக் கருத்துக்களும் புதிய திசை வழிகளைக் காட்டியுள்ளன. தமிழில் இத்தகைய கருத்தோட்டங்களின் முன்னணிப் படையாக- அதற்கான முதல் பேச்சாளராக இருந்து நவீனத்துவச் சொல்லாடல்களை உருவாக்கியவன் பாரதி என்பதை அவனது கவிதைகளும் கட்டுரைகளும் காட்டுகின்றன.

காலனிய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்தவன் என்றாலும், ஐரோப்பிய அறிவு, ஐரோப்பியப் பண்பாடு, ஐரோப்பியச் சிந்தனை முறை, ஐரோப்பியக் குடும்ப அமைப்பு, ஐரோப்பியக் கல்வி முறை, ஆண் - பெண் உறவுகளில் அவர்களின் நடைமுறை போன்றவற்றை முழுமையாக எதிர்த்தவன் அல்ல பாரதி. பல நேரங்களில் அதனை விரும்புகிறவனாகவும் கூட இருந்துள்ளான். எட்டுத்திக்கும் சென்று, செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தைச் சொன்னவன். அவன் சொன்ன செல்வங்கள் பொருள்சார்ந்த செல்வங்கள் மட்டுமல்ல; கல்வி அறிவும் கலைகளின் பெருமையும் என்பதையும் பல நேரங்களில் சுட்டிக் காட்டியுள்ளதை அவனது உரைநடை நூல்கள் காட்டுகின்றன. கருத்தியல் சார்ந்த மாற்றங்களையும் அறிவையும் தேடி அடைய வேண்டிய செல்வமாகப் பாரதி குறிப்பிட்டுள்ளான்.

இந்திய சமூகத்தில் நிலவிய சாதிய வேறுபாடுகளும் பாலின வேறுபாடுகளும் ஆதிக்க நிலையும் சுதந்திர இந்தியாவில் இருக்காது என்றே கனவு கண்டவன் அவன். ‘பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே’ எனக் கட்டியங்கூறியதோடு, “சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி; சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்” என்று சொல்லிச் சாடி முடிக்கும் அந்த கவிதையை (உயிர் பெற்ற தமிழர் பாட்டு) “மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவது இல்லை” என்று தொடங்கியவன் பாரதி. அதே போல் இந்தியப் பெண்களின் நிலையில் பெருமளவு மாற்றங்கள் வேண்டுமெனச் சொன்னவனும் பாரதிதான். ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்றும், ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ எனப் பெண்களின் குரலாகவே மாறிப்பேசியவனும் அவனே என்பதை இங்கே நினைவு படுத்திக் கொள்ளலாம். உச்சமாகக் ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால்- இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ என்று எழுதினான். இத்தகைய கவிதை வரிகளே அவனைச் ’சமூகச் சீர்திருத்தக் கவி’ யாகவும், ’பெண்ணிய மறுமலர்ச்சிக்கான கவி’ யாகவும் அடையாளப்படுத்தின.

தேசியக்கவி, சமூக சீர்திருத்தக் கவி, பெண்ணியக் கவி என்ற அடையாளங்கள் எல்லாம் பாரதியைப் பொதுவெளியில் அடையாளப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்றால், அவன் எழுதிய குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, வசன கவிதை, தோத்திரப்பாடல்கள் வழி உருவாக்கப்படும் அடையாளங்கள் தனிமனித வாழ்க்கை சார்ந்த - தன்னிலையுணர்வுடன் அகம் சார்ந்த பயணத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. இந்தியச் சமயமரபான வைதீகம் கடவுள் பற்றியும், மனிதன் பற்றியும், இரண்டிற்குமான உறவைத் தீர்மானிக்கும் வாழ்க்கை முறை பற்றியும் பேசும் கருத்தியல்களை இவ்வகைக்கவிதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசுவதன் வழியாகத் தன்னை இந்திய மரபின் ஆழத்திற்குள் சென்று நிற்கின்ற ஒரு ஞானக் கவியாகவும் ,வாசிப்பவர்களிடம் காட்டிக் கொள்ளும் சாத்தியங்கள் கொண்டவன் பாரதி.

இத்தகைய அடையாளங்களோடு அறியப்படும் பாரதி தனது பிரதிகளுக்குள் கவி என்பவனின் இருப்பு, சமூகப் பார்வை, எதிர்பார்ப்புகள், அவை நிறைவேறாத போது கொள்ளும் மனச்சிக்கல் போன்றனவற்றையும் ஆங்காங்கே குறிப்பிட்டுச் சென்றுள்ளான். இவை அனைத்தும் பாரதியின் எழுத்தியக்கம் நவீனத்துவத்தின் பக்கமே இருந்தன என்பதைக் காட்டுகின்றன.

நவீனத்துவ ஆதரவும் அதன் மீதான விமரிசனங்களும்

விடுதலைக்குப் பின்னர் இந்தியா எவ்வாறு இருக்கும்; எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப் பற்றிக் கவி பாரதி பல கருத்துகளைக் கவிதையாக எழுதியுள்ளார். அவற்றுள் பலவும் நவீனத்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்டவை. தொழில்மய ஆதரவு, சமூகத்தில் சமநிலை, பெண்களின் மேம்பாடு போன்றன முக்கியமானவை. அவற்றில் சிலவற்றைக் காணலாம்

தொழில் மய ஆதரவு:

இந்தியாவில் -விடுதலை அடையப்போகும் இந்தியாவில் உருவாகப்போகும் தொழிற்புரட்சி எவ்வாறு இருக்கும் என்பதைப் பாரத தேசம் என்னும் கவிதை விரிவாகச் சொல்கிறது.

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்

வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,

எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். 

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,

மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. 


கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.



காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்

ராசபுத் தானத்து வீரர் தமக்கு

நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.



பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்



ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.



குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்

கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

இந்தியப் பரப்பு முழுவதையும் கவனத்தில் கொண்டு பேசும் பாரதி ஐரோப்பியத் தொழில் மயம்போல இந்தியாவும் மாறவேண்டும் என விரும்பினான் என அறியலாம். தொழில் மயமாக வேண்டும் எனப் பேசும் பாரதி, இறை நம்பிக்கையிலிருந்து உருவான நம்பிக்கைகள் மீது கடும் விமரிசனங்களும் வைத்துள்ளான்.

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,

கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு

கோடிஎன் றால் அது பெரிதா மோ?

ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்

ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.


சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே

கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்,

ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்

அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்.

என நெஞ்சு பொறுக்குதிலையே என்ற தலைப்பில் விமரிசனங்களை வைப்பதும் பாரதிதான்

சமூக நிலையில் மாற்றங்கள்

நவீனத்துவத்தின் செல்நெறிகள் மீது விருப்பம் கொண்டவன் என்ற நிலையைத் தனது சமூக விமரிசனக் கவிதைகளில் விரிவாகப் பேசியவன் பாரதி.

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

தரும மொன்றி யற்றிலாய் போ போ போ

நீதி நூறு சொல்லுவாய் காசொன்று

நீட்டினால் வணங்குவாய் போ போ போ

தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே

தீமை நிற்கி லோடுவாய் போ போ போ

சோதி மிக்க மணியிலே காலத்தால்

சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ

இவ்வரிகள் அவனது வருகின்ற பாரதமும் போகின்ற பாரதமும் என்ற தலைப்பிலான கவிதையின் வரிகள். இன்னொரு முக்கியமான கவிதையான பாரத சமுதாயம் என்னும் தலைப்பின் வரிகளைக் கீழே வருகின்றன. அவ்வரிகள் ஆவேசத்துடன் கூடிய வரிகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை - வாழ்க!

மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்

வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ ?

இவ்வரிகளைவிடவும் கூடுதல் அழுத்தத்துடன் வந்து விழுந்த வரிகளாகப் பின்வரிகளைச் சொல்லலாம்.



பறைய ருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) 1



ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே

வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்ச மானமாக வாழ்வமே! (விடுதலை) 2



மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம்

வைய வாழ்வு தன்னில் எந்த வகையி னும்ந மக்குள்ளே

தாதர் என்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும்

சரிநி கர்ச மான மாக வாழ்வம் இந்த நாட்டிலே.

பாரதியின் சமூகப்பார்வை வெளிப்படும் ‘விடுதலை! விடுதலை!! விடுதலை!!! இந்தக் கவிதைக்கு நிகராகவும் கூடுதலாகவும் வெளிப்படும் கவிதையாக இருப்பது சுதந்திரப்பள்ளு.

பாரதியின் பெண்கள்:

தங்கள் வியாபார வளர்ச்சிக்காகப் புதிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்ட ஐரோப்பியர்கள் அந்நாடுகளைத் தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். வியாபாரம் காரணமாகவே தங்கள் கருத்துகளைப் பரப்பும் கல்விமுறையையும் அறிமுகப்படுத்தினர். அந்த அறிமுகம் காரணமாக 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவின. அப்படிப் பரவிய கருத்துகள் பலவாகும். அவற்றுள் முதன்மையானது பெண்கள் பற்றிய சிந்தனைகளாகும். பெண்கள் பற்றிய மேற்குலகச் சிந்தனைகள் கூட்டுக்குடும்பம் என்னும் அடித்தளத்தில் இயங்கிய இந்தியச் சிந்தனை மரபுக்கெதிரானது. சிறுகுடும்பம், தனிமனித விடுதலை என்ற சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அடிப்படையில் விரியும் தன்மையுடையது.

தொடக்கநிலையில் பெண் தன்னிலை தனது அடையாளத்தைக் கண்டடைதலை மையப்படுத்தி நிகழ்காலத்தையும் வரலாற்றையும் கற்க வேண்டும் என்ற சிந்தனைகள் எழுந்தன. ஆண் என்னும் உயிரியைப் போலவே பெண்ணும் ஓர் உயிரி என்பதற்கான போராட்டங்களை முன்வைத்தது பெண்ணியச் சிந்தனை. அதில் பெண் மதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப ப்பட்ட து. உலகமெங்கும் பரவத் தொடங்கியிருந்த பொதுவுடைமைச் சிந்தனையின் தாக்கத்தால் இந்தப் பெண் சமத்துவச் சிந்தனையும் தோன்றியது. இதிலிருந்து பெண்ணியச் சிந்தனை வரலாறு ஒரு பாய்ச்சலை நடத்தியது. ஆணின் துணையின்றிப் பெண் தனித்து இயங்க முடியும் என்ற சிந்தனைதான் அந்தப் பாய்ச்சலின் வெளிப்பாடு. இந்த மூன்று கட்டங்களும் தான் பெண்ணியச் சிந்தனை வரலாற்றில் தாராளவாதப் பெண்ணியம், சமத்துவப் பெண்ணியவாதம், தீவிரவாதப் பெண்ணியம் எனப் பெயரிட்டு அடையாளப்படுத்துகின்றன.

“பெண் விடுதலை வேண்டும்” இந்த வரி பாரதியின் பெண்கள் விடுதலைக்கும்மியின் இடம் பெற்றுள்ள வரி அல்ல. ஒரு துதிப்பாடல் என்று நினைக்கத்தக்க வகையில் வேண்டுவன என்ற தலைப்பில் எழுதப்பட்ட எட்டுவரிகளில் இடையில் உள்ள ஒரு வரி. கவி பாரதி தேசத்தைப் பற்றிப்பாடும்போதும், மொழியைப் பற்றிப் பாடும்போதும், பெண் விடுதலை பற்றிப் பாடும் இயல்பு கொண்டவனாக இருந்தான் என்பதைத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை.

கீழ்த்திசை மரபை ஆழமாக க் கற்றிருந்த பாரதியிடம் மேற்குலகச் சிந்தனையான பெண் விடுதலைக்கருத்துகள் தீவிரமாக வெளிப்படும் இடங்கள் பலவாகும். பாஞ்சாலி சபதம், சந்திரிகையின் கதை எனக் குறிப்பான படைப்புகளோடு, கவிதைகளிலும் பெண் முன்னேற்றம் பற்றி விரிவாகப் பேசியவன் கவி பாரதி. கவி பாரதியை ஒரு மறுமலர்ச்சிக் கவிஞன் எனவும், நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடி எனவும் அடையாளப்படுத்தும் கூறுகளுள் முதன்மையானது பெண்களைப் பற்றி அவன் தீட்டிக் காட்டிய சித்திரங்கள்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"

இவ்வரிகளில் வெளிப்படும் பெண்களின் உறுதித்தொனிக்கீடாக அவன் எழுதிய பெண் விடுதலைக்கும்மியின் வரிகள் இருக்கின்றன



"பெண் விடுதலை யென்றிங்கோர் நீதி

பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றிகேளீர்

மண்ணுக்குள் ளெவ்வுயிருந் தெய்வமென்றால்

மனையாளுந் தெய்வமன்றோ? மதி கேட்டீரே!

விண்ணுக்கு பறப்பதுபோற் கதைகள் சொல்வீர்

விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்

பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை

என்றும், ஐம்பூதங்களும் சிவனுக்கானதாய் பாடியதிலிருந்து விடுபட்டு

"பூதமனைத்தும் ஆனாய் காளி" என்று, பெண்ணை ஐம்பூதத்துக்குமானவளாய் பாடியதிலிருந்தும் தாய் மாண்பு எனும் கவிதையில்,

பெண்ணாட்டி தனையடிமை படுத்த வேண்டிப்

பெண் குலத்தை முழ்தடிமை படுத்தலாமா?

என்று கேள்வியெழுப்புபவனாகவும்,

பெண்ணடிமையுற்றால்

மக்களில்லாமடிமையுறல் வியப் பொன்றாமோ?

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டாம்

வீட்டினிலே தனக்கடிமை பிறராமென்பான்

நாட்டினிலே.....



என்று விளக்கம் அளிப்பவனாகவும் பாரதி வெளிப்பட்டுள்ளான். கவிதைகளில் இப்படி வெளிப்படும் பாரதியின் புனைகதைகளில் பெண்ணுக்குக் கல்வி உரிமையையும் தனித்துவத்தோடு விளங்குவதையும் உச்சநிலையாக இளம் வயதுத் திருமணங்களைக் கேள்விக்குள்ளாக்குபவனாகவும், அதனால் விதவைகள் உருவாவதையும் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு மறுமணம் வேண்டும் எனப் பேசுபவனாகவும் வெளிப்பட்டுள்ளான். அவனால் எழுதத் தொடங்கி நிறைவடையாமல் நின்று போன சந்திரிகையின் கதையின் பேசுபொருள் முழுவதும் பெண் விடுதலையின் களமாகவே இருக்கிறது. 

முடிவுரை: 

எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்பதைக் கவிதை நோக்காகக் கொண்டு இலக்கியச் செல்நெறியை உருவாக்கிக் கொண்ட பாரதி, சொல்புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவகவிதை என்றும் தன்னை முன் வைத்தான். அந்த நவகவிதையின் வெளிப்பாடு என்பது ஐரோப்பிய நவீனத்துவத்தின் விளைவு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு ஆதாரமாக இருப்பன அவனது தேசிய கீதங்களும், சமூகக் கவிதைகளும் பெண்கள் பற்றிய கவிதைகளுமே ஆகும். அதே நேரத்தில் அவனது ஆன்மீகப்பாடல்களுக்குள்ளும் ஞானப்பாடல்களுக்குள்ளும் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு போன்ற பெரும்பாடல்களுக்குள் இன்னொரு பாரதி வெளிப்பட்டான் என்பதைக் கண்டு சொல்ல இன்னொரு கட்டுரை எழுத வேண்டும். அந்தக் கட்டுரையில் இந்திய அத்வைத வேதாந்தமும் கடவுள் பற்றிய பார்வையும் அவனது இன்னொரு தன்னிலையை உருவாக்கியது என்பதையும் பேசும் கட்டுரையாக அமையும். ஆம் பாரதி என்னும் கவிஞன் ஒற்றைத் தன்னிலையாக வெளிப்பட்டவன் அல்ல. அவனது தன்னிலை ஒருவிதத்தில் அத்வைதத்திலிருந்து விலகிய த்வைதத் தன்மையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்