மாஜீதா பாத்திமாவின் உம்மாவின் திருக்கை மீன்வால் : தந்தைமையைத் தாக்குதல்


வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். மாஜிதா பாத்திமா எழுதிய உம்மாவின் திருக்கை மீன் வால் என்ற கதையை (அம்ருதா, மே, 2019) பெண்மையக் கதையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பல கூறுகள் கதைக்குள் இருக்கின்றன. 
கதையை எழுதியது பெண் என்பதால் அக்கதையைப் பெண்ணியப் பிரதி என வகைப்படுத்துவது பிழையாக மாறிவிடக் கூடும். மரபான வாழ்க்கைக்குள் தங்களைப் பற்றிய விசாரணையில்லாத பல பெண் எழுத்தாளர்கள் ஆண்மையப் பிரதிகளையே உருவாக்குகிறார்கள். தமிழ் இலக்கிய வெளிக்குள் அறியப்பெற்ற பெண் எழுத்தாளர்களின் கதைகளுக்குள்ளேயே கூட இந்தியக் குடும்ப அமைப்பின் புனிதங்களும், தந்தைமையின் மறைமுக ஆதிக்க நிலைபாடும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் தந்தைமையின் ஆதிக்கத்தனத்தைக் காக்கும் அமைப்பாகக் குடும்பவெளி இருக்கிறது என்பதைச் சிந்தனை பூர்வமாக உணர்ந்து எழுதும் எழுத்தாளர்களே பெண்ணியத்தின் அனைத்துத் தளங்களையும் முன்வைக்கும் பிரதிகளை உருவாக்குவர். மாஜிதா இந்தக் கதையில் அதனைச் செய்திருக்கிறார். தன்னை முழுமையாக விடுதலை பெற்ற பெண்ணாக நினைக்கும் ஒருத்தியின் கதையைச் சொல்லும் மாஜிதா, கதையைச் சொல்லும் முறையில் இதனைச் சாதித்திருக்கிறார்.

சுதந்திரமாக உணர்தலைத் தொடர்ந்து தடுக்கும் அமைப்பாகக் குடும்பம் இருக்கிறது என்ற விமரிசனத்தை முன் வைக்கும் கதை மிகச் சிறிய குடும்ப அமைப்பையே காட்டுகிறது. வாப்பா, உம்மா, மகள் என மூன்று பாத்திரங்களையும் சம அளவில் எழுதிக்காட்டும் பிரதி, கதையின் நிகழ்வுகளை இருவேறு காலத்தில் அடுக்கியிருக்கிறது. கதையின் தொடக்கப் பாதி இருப்பிலிருந்து நகர்கிறது. இப்போது அவள் தனியள், விடுதலை பெற்றவள், தனது தேவைகளைத் தாண்டி, சமூகத்தின் நகர்விற்காக உழைக்கும் பொதுவெளி மனுசி. ஆனால் முன்பு வீட்டின் சுவரில் தொங்கும் திருக்கை மீன் வால் தரும் அச்சத்தில் வாழ்ந்தவள். இவ்விரு வேறுபாடுகளை – வித்தியாசங்களைச் சொல்வதின் வழியாகவே தந்தைமையின் குரூரத்தைக் கடுமையாக விமரிசிக்கிறார் மாஜிதா பாத்திமா.

இப்போதிருக்கும் வாழ்க்கை அவள் நினைத்தபடி இருக்கும்- விடுதலையை உணரும் வாழ்க்கை என்கிறது கதையின் பகுதி. தான் கற்ற கல்வியின் மூலம் குடும்ப நல வழக்குகள், பெண்கள் உரிமைகள், பெண்களுக்கான நலத்திட்டங்களை உணரச் செய்யும் ஆலோசகராக இருக்கிறாள். அதன் பொருட்டுத் தனியாகவே இருக்கிறாள். இப்போதைய வாழ்தலைப் பற்றிய நினைவுகள் பற்றிய கதைக் குறிப்பு இது: 

“இன்று அவள் தனித்த யாத்திரிகராக மாறி விட்டாள். அவளுடைய பயணத்திற்கு இலக்கு உண்டு. பறவையின் கண்களைப்போன்று அவளது பயணம் எதையாவது தேடிக் கொண்டேயிருக்கும். அமெரிக்காவின் சிறைச்சாலையிலிருந்து அவுஸ்திரேலிய பழங்குடிகள் வரை அவளது இலக்கு விரிவடைந்திருந்தது. ”
அவள் குடும்பத்தில் – வாப்பா, உம்மாவோடு இருந்த காலத்தைப் பற்றிய குறிப்போ இதற்கு மாறானது:
“அவளுக்கான சுதந்திரக் காற்று வீட்டிற்கு வெளியே தான் வீசிக்கொண்டிருந்தது. வீட்டினுள்ளே இருந்த தளைகள் அவளை நெருக்கிப் பிடித்து உக்கிரப் பிரவாகமெடுக்கச் செய்தன. பாதணிகளை கழற்றி விட்டு உள்ளே நுழைவது போல் தனது சுதந்திர இறகுகளை முறித்து விட்டு வீட்டிற்குள் நுழைவாள். கேள்விகளை கோர்த்த சாட்டை எப்பொழுதும் அவளது வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது. வேலையை முடித்து விட்டு பஸ்ஸிலேறி இருக்கும் பொழுதே இன்று வீட்டில் என்ன நடக்குமோ என்ற பீதி அவளைச் சுற்றிக் கொள்ளும்.
எனத் தெளிவாக வேறுபடுத்தப்படுகிறது. இந்த வேறுபாடுகளை -விடுதலை உணர்வோடு x அச்சமும் தடைகளும் கொண்ட நிலையை முன்வைப்பதின் வழியாகவே பெண்ணெழுத்து உருவாகிறது. அவ்வேறுபாடுகளைக் கண்டறிந்து பேசுவதின் வழியாகவே பெண்ணியத் திறனாய்வும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 

பெண்ணியம் ஒரு நவீனக் கலைச்சொல். நிகழ்காலக் கலை இலக்கிய விவாதங்களில் தவிர்க்க முடியாத கலைச்சொல். அப்படி ஆவதற்கு அடித்தளம் இட்ட அறிவுத்துறை சமூக அறிவியல். மானிடவியல், சமூகவியல், வரலாறு வழியாகப் பொருளியல் சுதந்திரத்தை நாடும் பெண்களின் விருப்பத்தை முன்வைக்கும் கலைச்சொல்லாகத் தன்னைக்கட்டமைத்துக் கொண்ட கலைச்சொல் அது. அக்கலைச்சொல்லின் விவாதங்கள் முதன்மையாக மூன்று நிலைகளை- பெண்ணின் இருப்பு, சமத்துவம், விடுதலை -என மூன்று நிலைகளை முன்வைத்துப் பெண்ணை அடையாளப் படுத்துகிறது. இம்மூன்று நிலைகளையே பின்னர் பெண்ணியம் தனது வகைப்பாடாக விளக்கவும் செய்தது. 

சார்ந்து நிற்கும் பொருளியல் உறவுகள் இல்லை என்ற நிலைதான் எல்லாவகையான விடுதலையின் அடையாளம். விடுதலை அடைந்த நாடு என்பது கூடச் சுயச்சார்புப் பொருளாதார உற்பத்தியில் அல்லது பொருளாதார உறவுகளில் தான் அடையாளப்படுகிறது. மனித உயிரியின் விடுதலை மனமும் இன்னொருவரைச் சார்ந்து நான் இல்லை என்பதில் தான் இருக்கிறது. தனது சம்பாத்தியம் தனது தேவைகளைத் தீர்த்துவிடும் என்ற நிலையில் பெண்ணொருத்தி தனது விடுதலையை உணர்வாள். 

ஆணாயினும் பெண்ணாயினும் விடுதலையை விரும்பும் நிலையில் முதலில் அதன் இருப்பைப் பற்றிய விசாரணையை முன்வைக்கிறது. இருபாலாரின் இருப்பாக இருக்கும் மிகச்சிறிய அலகு குடும்பம் என்னும் அமைப்பு. குடும்ப அமைப்பை விளக்கை நினைக்கும் எல்லா வரையறைகளும் ஆண் முதன்மையைச் சொல்லிப் பெண்ணை இரண்டாமிடத்திலேயே நிறுத்துகின்றன. இரண்டாமிடம் என்பதும் ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பதுபோலச் சமநிலைப்பட்ட இரண்டாமிடம் அல்ல. கணவன் முதல் இடம் மனைவி அவனைச் சார்ந்து நிற்கும் இரண்டாமிடம். பிள்ளைகளுக்கு – ஆணாயினும் பெண்ணாயினும் - தந்தையைச் சார்ந்து நிற்கும் மற்ற இடங்கள் தான்.தந்தை, கணவன், உடன்பிறந்தோர் என ஆண்களைச் சார்ந்து நிற்கும் சூழ்நிலையை உருவாக்கும் குடும்பம் என்னும் அமைப்பைப் போலவே சமூகம் உருவாக்கும் ஒவ்வொரு அலகுகளிலும் பெண்ணின் இடம் சார்ந்து நிற்கும் இடங்களாகவே இருக்கின்றன என்பது பெண்ணிய விவாதங்கள் எழுப்பும் சொல்லாடல்கள். சார்ந்து இருப்பதிலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில் தனித்து வாழ்வதற்கான பொருளியல் தேவைகளைப் பெற வேண்டும் என்பது நிபந்தனை. அந்நிபந்தனைக் கடந்து விடுதலையை அடைவதற்கான வழிகள் எளியன அல்ல. மேடுகளையும் பள்ளங்களையும் உண்டாக்கும் சமூக அமைப்புகளை விடவும் அவளது குடும்ப அமைப்பே முதல் தடைச்சுவர். அச்சுவரை எழுப்பிக் குரூரமான ஆயுதத்தைத் தரித்து நிற்கும் நபராக இருப்பது குடும்பத்தின் தலைவராக இருக்கும் தந்தை. தலைமைப் பொறுப்பில் இருந்து குடும்பத்தின் லாப நட்டங்களைப் பார்க்கும் தந்தை என்னும் ஆண் ஒரு தனிநபர். அந்தத் தனிநபர் குடும்ப அமைப்பின் அதிகாரத்துவக் குறியீடாக மாறும்போது ஆணாதிக்கச் சமூகத்தின் தலைமைக்குணங்களைத் தாங்கி தந்தைமையாகிவிடுகிறார். 

பெண்ணிய அணுகுமுறை மட்டுமல்ல; பெண்ணிய அணுகுமுறைக்கு முன்னோடியாக இருக்கும் மார்க்சியம், உளவியல், அமைப்பியம் போன்ற திறனாய்வு அணுகுமுறைகளுமே பிரதியைத் தனது கருத்தாடல் சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டே வாசிக்கின்றன. பிரதியின் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள பிரதியின் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதைவிட அந்த அறிவுத்துறைகளின் கலைச்சொற்களே பயன்படுகின்றன. அக்கலைச் சொற்கள் வழியாக எழுதப்பட்ட பிரதிக்குள் உருவாக்கப்படும் பாத்திர அடையாளம் கண்டறியப்படுகிறது. அதன் பிறகு எழுதப்பெற்ற பிரதியிலிருந்து பாத்திரங்களின் உடலியல், சமூகவியல், உளவியல் குறிப்புகளை முன்வைத்து விவாதிக்கின்றன திறனாய்வு அணுகுமுறைகள் . இதன் காரணமாகவே சுத்த இலக்கியவாதிகளால் – கலை கலைக்காகவே என வாதிடும் இலக்கியவாதிகளால் இவ்வகை அணுகுமுறைகளும் கருத்தியல்களும் வெறுக்கப்படுகின்றன.
********* ********* ********* 
மாஜிதா பாத்திமாவின் பிரதிக்குள், ‘திருக்கை மீன் வால்’, உம்மாவின் உடைமை என்பதாகச் சொல்கிறது கதைத் தலைப்பு. ஆனால் கதைக்குள் அந்தத் திருக்கை மீன் வாலைப் பயன்படுத்துவது அம்மா அல்ல; வாப்பா. 
உம்மாவின் அறையின் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் திருக்கை மீன் வால் அவளது மனத் திரையில் ஓடி வந்து பயமுறுத்தும். மரம் அறுக்கும் அரம் போல் சொர சொரவென்ற திருக்கை மீன் வாலின் தோலின் மேல் நல்ல பாம்பின் கழுத்தில் இருக்கின்ற வளையம் போன்று உருண்டைகள் ஒட்டியிருக்கும். அவளுக்கு வயது தெரிந்ததிலிருந்து தண்டனை என்ற பெயரில் அவள் மீது ஒவ்வொரு தடவையும் வாப்பா நிகழ்த்தும் வன்மப் போரின் பொழுது இந்த இராட்சத உருவம் கொண்ட திருக்கை மீன் வால் இவளைப் பார்த்து சிரிக்கும். திருக்கை மீன் வால் வீட்டில் இருப்பது அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஆனால் அந்த வாலினை சுவரிலிருந்து கழற்றி வெளியே வீசுவதற்கான இயலாமை அவளிடம் இழைந்து கொண்டிருந்தது.
இதற்குப் பதிலாக அம்மாவிடம் இருந்த ஆயுதம் வேறு. அது சொல்லாயுதம். அச்சொல்லாயுதம் எப்போதும், 

தீர்ப்பின் இறுதிக்கட்டத்தில் தண்டனையை விபரிப்பது போல் உன்னப் போல பொம்புள புள்ளயொன்ற படிப்பிக்க வெச்சத போல பெரிய பிழை வேறொன்றுமில்லை என்ற வாசகம் உம்மாவிடமிருந்து வெளியேறும். 
இந்தச் சொற்களையே ஒவ்வொரு முரண்பாட்டின் போதும் உம்மா சொல்கிறாள். ஆனால் வாப்பா எதுவும் பேசாமல் தண்டிக்கும் கருவியான திருக்கை மீன் வாலையே பார்ப்பார். அப்படியான முரண்பாடுகளை நினைத்துக் கொள்ள நேர்ந்த தின் தொடக்கம் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல்தான். அப்படித்தான் கதை தொடங்குகிறது:
பராமரிப்பு வழக்குத் தாக்கல் செய்வதற்காக வாகரையிலிருந்து அலுவலகத்திற்கு வந்த இரண்டு பெண்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த தொலைபேசி அழைப்பு அவளுக்கு வந்தது .
உம்மாவுக்கு இரத்தப்போக்கு கடுமையாக இருக்கு . நேற்று பொலநறுவைக்கு அஜ்வத் டொக்டரின் ஆஸ்பத்திரிக்கு உசன் நானா கூட்டிக்கிட்டு போனாரு. பதிமூன்று வருஷத்துக்கு பிறகு மீண்டும் மாதவிடாய் வந்திருப்பது உடம்பில் ஏதோ ஒரு பிரச்சனைக்கான அறிகுறி .
அப்படியொரு தகவல் வந்தவுடனேயே அவள் கிளம்பிவிடவில்லை. அப்படிக் கிளம்பியதாக எழுதப்பெற்றிருந்தால் இந்தக் கதையின் – கதாசிரியரின் பெண் நிலைப்பாடே அர்த்தமற்றுப் போயிருக்கும். அம்மாவின் மீது கொண்ட பாசம் என்பதான மிகையுணர்ச்சிக் கதையாக மாறிப்போயிருக்கும். அதற்குப் பதிலாக அவள் நிதானமாகவே செயல்பட்டாள் என எழுதியதின் மூலம் மாஜிதாவின் பெண்ணியப் புரிதல் தெளிவாக முன்வைக்கப்படுகிறது.

வேலைகளை நிதானமாக முடித்துவிட்டு, ஆலோசனைகள் தர வேண்டியவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிவிட்டு நிதானமாகவே கிளம்புகிறாள். இந்த இடைவெளியில் தான் அவளது கடந்த கால வாழ்க்கை – வாப்பா, உம்மாவோடு குடும்பத்தின் உறுப்பினளாக இருந்த வலி நிறைந்த வாழ்க்கை நினைவுகளாக வந்துபோகின்றன. அந்த நினைவுகளில் அவள் வாப்பாவால் அடிக்கப்பட்ட தும் உம்மாவால் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கப்பட்டதும் வீட்டை விட்டுக் கிளம்ப நேர்ந்ததும் வருகிறது. தனியாகப் போனபின்பும் உம்மாவின் வேண்டுகோளை ஏற்று – 
உடனே உம்மாவுடன் போனில் பேசுவாள். நீ வருவாய் என்டு ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டு அரிசியை சேர்த்து ஆக்கி வெச்சிட்டு இஷா நேரம் வரையும் காத்துட்டு இருக்கன். உனக்கு எப்ப லீவு கிடைக்கும். கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுடி என்ற உம்மாவின் வார்த்தையில் இவள் உடைந்து விடுவாள். உடனே உம்மாவைப் பார்க்க வேண்டும் என அவளது மனது சஞ்லப்படும். 

சனி, ஞாயிறு தினங்களில் சில வேளை வீட்டிற்கு செல்வாள். இவளைக் கண்டதும் உம்மாவுக்குள் மண்டியிட்டுக்கிடந்த பித்து கரைந்து விடும். இவளுக்கு பிடித்த விறால் கருவாட்டுக் கறியும் சூடை மீன் போட்டு முருங்கையிலைப் பாலாணமும் , இறைச்சிக் கறியும் புளியாணமும், நெத்திலி பொறியலும் பருப்புக்கறியும் என சோடி சோர்த்து சமைப்பாள். காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி இவள் விழுந்து விழுந்து சாப்பிடுவாள்.? காலையில் எழும்பும் பொழுது தேநீரையும் மொறு மொறு வென்று திகட்டும் பாலாப்பத்தையும் இவள் கையில் நீட்டுவாள். 
ஆனால் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல அந்த வீட்டில் நீண்ட காலம் அவளால் தங்க முடியாது. 
போன நிலைபாடும் வருகிறது. ஒரு முறை அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுச் சண்டை போட்ட வாப்பாவைக் கோபமாகத் திட்டி வெளியே அனுப்பியதும் நினைவில் வருகிறது:
பொம்புள புள்ளயொன்று இப்படி வீட்டில தனியே இருந்தா ஆயுதம் தூக்கிக்கொண்டு திரியிற எவனாலும் வந்து ஒரு ராவைக்கு கற்பழிப்பிச்சுப் போட்டு போவான் என்று கூறி முடிப்பதற்குள் ஊசியொன்று காதில் ஏறுவது போல் இவளை வலிக்க வைத்தன. 
ஏன் வாப்பா என்ட குண்டியில தான் என்ட பாதுகாப்பும் இருக்குதா? என்று கேட்டு விட்டாள்.

அவரை அறியாமலேயே பேரதிர்ச்சியிற்கு உள்ளாக்கிய அந்த கேள்வியில் ஒரு கணம் ஸ்தம்பித்து போயிருந்தார். பின்னர் திடீரென அவர் தேநீர் குடித்துக் கொண்டிருந்த கோப்பை விழுந்து நொறுங்கியது போல் சளார் என்றொரு அறை இவளது கன்னத்தில் விழுந்தது.
இதுக்குத்தானா வந்தீங்க, வெளியே போங்க என்று கத்தினாள். 
எவ்வளவு தைரியம் இருந்தா வாப்பாவை பார்த்து இப்படியாரு கேள்வி கேட்பாய், உன்ன படிப்பிச்சதப் போல பெரிய பிழை ஒன்றுமில்ல என்ற உம்மாவின் வாசகம் மீண்டும் எழுந்து நின்றது
வெறுக்கத் தக்க நினைவுக்குமிழிகளூடே அவரிடமிருந்து கற்றுக்கொண்ட குழந்தமைப் பருவப் பயணங்களும் கூட நினைக்கப்படுகிறது. 
நிதானமாகத் திட்டமிட்டுக் கொண்டு போனவளுக்குக் காத்திருந்த து அதிர்ச்சி:
உங்களுடைய அம்மாவிற்கு கருப்பைக் குழாயில் கென்ஸர் ஏற்பட்டிருக்கு. டீ என் ஸி டெஸ்ட் செய்த பொழுது உள்ளேயிருந்த கிருமித் துகள்கள் செதில்கள் போல வெளியே கொட்டிப் படுகுது. அதனால் இது கென்ஸரின் கடைசிப் படிநிலையாகக் கூட இருக்கலாம். நீங்க அவசரமாக அவவை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு கொண்டு போகணும் 
என்ற தகவல் அழுகையை வரவழைக்கிறது. அந்தக் கருப்பையிலிருந்துதான் அவள் வந்தாள் என்ற தவிப்பு. தவிப்பிற்குப் பின் தோன்றிய நிதானம், அம்மாவிற்குத் தேவையான மருத்துவக் கவனிப்புகளில் ஈடுபடுத்துகிறது. ஒருமாத காலக் கவனிப்பிற்குப் பின் அம்மாவின் நோய் கட்டுக்குள் இருப்பது தெரிகிறது.வாழ்வா? சாவா? என்ற அந்த ஒரு மாத கால போராட்டத்தில் வெற்றி எனும் பாதைக்கு உம்மா குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டாள். அப்போது அம்மாவின் சொற்கள் தண்டனையாக இல்லாமல் வரமாக ஒலிக்கிறது:

உன்னைப் படிப்பிச்சதற்கான பலன் இப்ப தான் எனக்கு விளங்குது. ஒரு ஆம்புள புள்ள மாதிரி அங்கயும் இங்கயுமா ஓடி ஓடி என்னால எவ்வளவு கஸ்டப்பட்டுட்டாய்.
படிக்கச் செய்ததின் பலனை அனுபவித்த அம்மாவின் இந்தக் கூற்று, அவளை உணர்ந்து ஏற்றுக்கொண்ட கூற்றும் கூட. ஆனால் அந்த ஏற்பும் சொற்களும் கூட அவளுக்கு உடன்பாடாக இல்லை. ஏனெனில் அந்தக் கூற்றில் அவள் ஒரு ஆணோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கவனிக்கிறாள். அதனாலேயே அதை நிராகரிக்கிறாள். நிராகரிப்பின் சொற்கள் இப்படி வெளிப்படுகின்றன:
உம்மா நான் எந்தவொரு ஒப்பீடுமற்ற பெண். சுழித்து ஓடும் நதியில் எதிர்த்து நீந்துபவள். எனது உடல் எனது பெண்மையின் வலிமையிலிருந்து பிறப்பிக்கப்பட்ட திரட்சி. எனது இந்த அதீத விசையை உனக்கு நிரூபிப்பதற்கு எத்தனை தடவை போராடினேன். எனது உடற்கூற்றினை இன்னுமா நீ புரிந்து கொள்ளவில்லை? எனக்கு வலிக்கிறது, எனது ஒவ்வொரு அங்கமும் உடைந்து நொறுங்குகின்றது. ! நீ என்னை ஆண் என்ற உடற்கூற்றுக்குள் வைத்து ஒப்பீடு செய்யும் பொழுது திருக்கை மீன் வாலினால் எனது உடலின் மேல் ஓங்கி அடித்து தோல் உரிந்து இரத்தம் பீரிட்டு எழுவது போல் நான் உணர்கின்றேன்.

இந்த உணர்வே பெண் விடுதலையின் – தனித்துவமான – சார்ந்து நிற்காத பெண்ணாகத் தன்னை உணர்தலின் அடையாளம். அப்படியொரு பெண்ணைத் தனது கதையில் உலவ விட்ட மஜீதாவே இக்கதையில் உயிரோட்டமாக உலவும் அவளாக இருக்கவும் வாய்ப்புண்டு. இப்படிச் சொல்வதற்கு அவரது புனைவுகள் மட்டுமே காரணம் அல்ல. அண்மையில் இலங்கையில் ஈஸ்டர் நாளில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் அவர் எழுதிய குறிப்புகளை வாசித்ததைக் கொண்டும் இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. 

பெண்ணியம் ஓர் அரசியல் சொல்லாடல். அதனை உள்வாங்கிய- அரசியல் புரிதல் கொண்ட ஒருவரின் - புனைவின் திறமான வெளிப்பாடு இக்கதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்