ஞானபீடத்துக்கான பாதை

இந்த வருடம் தமிழுக்கு ஞானபீட விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என அதன் பரிந்துரைக் குழுவில் இருக்கும் அந்தப் பேராசிரியர் சொன்னார். 1977 இல் அகிலனுக்குக் கிடைத்தபின்னர் 23 ஆண்டுகள் காத்திருந்து ஜெயகாந்தனுக்கு வழங்கப் பட்டது. இனியும் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை. நமது அண்டை மாநில மொழிகளான மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் ஐந்து தடவை ஞானபீடம் வழங்கப்பட்டு விட்டதைச் சுட்டிக் காட்டியே தமிழுக்கான வாய்ப்பைப் பெற்று விட முடியும்; அதற்கு முன்னால் நாம் செய்ய வேண்டியது பரிந்துரைக்கத் தக்க எழுத்தாளர் யார் என்பதை முடிவு செய்வதும், அவரைப் பற்றி ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தின் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிற இந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டியதும் தான் முதல் பணி என்றார்.திராவிட இயக்கங்கள் பின்பற்றிய இருமொழிக் கொள்கை காரணமாக தமிழர்கள் ஆங்கிலத்தைத் தவிர அனைத்து இந்திய மொழிகளையும் எதிரி மொழிகளாகவே பார்த்துப் பழகிவிட்டோம். அதன் சாதக பாதகங்களைப் பிறதுறை நிகழ்வுகளில் எப்படி உணர்கிறார்களோ தெரியவில்லை. கலை இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் நிச்சயம் உணர முடியும். இந்திய நாடகவிழாக்களில் இடம் பெறும் நாடகங்களும் நாடகங்கள் பற்றிய பேச்சுக்களும் இந்திய மொழிகளில் தான் இருக்கின்றன. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வருகிறவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இந்தியையும் கற்றுத் தேர்ந்திருப்பதால் அதன் மூலமே தங்களுக்குள் உரையாடிக் கொள்கிறார்கள். ஆங்கிலம் வழியாக உரையாட அவர்கள் தயாராக இருப்பதில்லை. தமிழர்களாகிய நாம், நமது அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஆங்கிலம் வழியாக மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. கூடுதலாக ஒரு மொழி கற்றிருக்கலாம் என்ற நினைப்பு அப்போது தோன்றுவதை மறைப்பதற்கில்லை.
 
ஞானபீடம் பற்றிய பேராசிரியரின் அந்தப் பேச்சு முன்பொரு முறை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் நானும் பேசிக் கொண்டதை நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரும் இதே போல் தான், “பொருத்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவரைச் சரியான அறிமுகத்துடன் பரிந்துரை செய்தால் இந்த ஆண்டிலேயே தமிழுக்கு ஞானபீடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். சொன்னவர் அத்தோடு நிறுத்தாமல், ”தமிழில் ஞானபீட விருது கொடுத்தால் யாருக்குக் கொடுக்கலாம்? நீங்கள் பரிந்துரைக்கக் கூடிய மூன்று பெயர்களைச் சொல்லுங்களேன் என்றும் கேட்டார்.சற்றுத் தயங்காமல் ”ஜெயகாந்தன் தான் எனது முதல் விருப்பம்” என்று சொல்லி விட்டு அடுத்தடுத்த வரிசையில் கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி ஆகியோர் இருக்கிறார்கள் என்றேன். இந்த மூன்று பெயர்களுக்குப் பின்னால் தான் எனது பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று அவரிடம் சொன்னபோது சிரித்துக் கொண்டார்.
 
அவரிடம் சொன்னது மட்டுமல்லாமல் அந்த வருடம் வாசகர் விருப்பத்திற்காக அனுப்பப்பட்டிருந்த பரிந்துரைப் படிவத்திலும் ஜெயகாந்தன் பெயரைத் தான் எழுதி அனுப்பினேன். ஆனால் அந்த வருடம் தமிழின் பக்கத்திலேயே ஞானபீடம் திரும்பிப் பார்க்கவில்லை. ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் வழங்கப் பட்டது 2000-இல். நானும் இந்திரா பார்த்தசாரதியும் பேசிக்கொண்டது 1991-இல். அப்போது நான் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியின் விரிவுரையாளராக இருந்தேன்; இந்திரா பார்த்தசாரதி அதன் தலைவராக இருந்தார். எங்களது பேச்சு ஞானபீடப் பரிசுக்கான பட்டியல் பற்றியதாக இருந்தாலும், அப்போது நாங்கள் தயார் செய்து கொண்டிருந்த பட்டியல் வேறொன்று.
 
அந்தப் பணியும் ஒரு பட்டியல் தயாரிக்கும் பணி தான். ஞானபீட விருது அளவுக்கான பட்டியல் அல்ல; கலைமாமணி விருதுக்கான பட்டியலைப் போன்ற பட்டியல். பெங்களூரில் நடக்க இருக்கும் நாடக நிகழ்வு ஒன்றிற்குத் தமிழ் நாட்டிலிருந்து 30 கலை, இலக்கிய வல்லுநர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்படும் 30 பேருக்கும் முதல் வகுப்பு ரயில் கட்டணம், வசதியான தங்குமிடம், உள்ளூர்ப் போக்குவரத்து என அனைத்தையும் மைய சங்கீத நாடக அகாடெமி வழங்கும். பட்டியலைத் தயாரித்து அனுப்ப வேண்டிய வேலை பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளியின் இயக்குநர் இந்திரா பார்த்தசாரதியின் பொறுப்பு. இந்திரா பார்த்தசாரதிக்கு உதவியாக நான் பெயர்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தேன்.
 
1991 இல் இந்தியப் பெருநகரங்களுக்குத் தனது மேடை நிகழ்வோடு பயணம் செய்ய இருந்தவர் பீட்டர் ப்ருக். இங்கிலாந்தில் பிறந்து பிரான்சில் புகழ் பெற்ற நாடக இயக்குநராக அறிமுகமானவர். உலகச் செவ்வியல் நாடகங்களை மட்டுமல்லாமல், உலகமொழிகளில் பெரும்படைப்புகளாகக் கருதப்பட்ட பேரிலக்கியங்களையும் மேடை நிகழ்வாக ஆக்குவதில் வெற்றி கண்ட அரங்கவியலாளர். நாடக நிகழ்விற்கான மேடை என்பதைப் பற்றிய அறிவையும் புரிதலையும் அடியோடு மாற்றி, நாடகக் காட்சிகளையும், பார்வையாளர்களையும் நிலையானவை என்பதாக நடத்திக் காட்டாமல் நகர்ந்து கொண்டே இருப்பவை என்பதாகப் புரிய வைத்தவர்.
 
1990 இல் அவர் இயக்கிய மகாபாரதம் உலக அளவில் கொண்டாடப்பட்ட பெரும் நிகழ்வு. மொத்த மகாபாரதத்தையும் ஒன்பதரை மணிநேர நிகழ்வாக மாற்றி ஐரோப்பாவின் பல நகரங்களில் நிகழ்த்திக் காட்டிவிட்டு மகாபாரதத்தின் தோற்றப் பூமியான இந்தியாவிற்கு வந்திருந்தார். மகாபாரதத்தின் தோற்றம் இந்தியாவாக இருக்கலாம்; ஆனால் அது ஒரு சர்வதேச இலக்கியம் என்பதை இந்தியர்கள் மறுக்கக் கூடாது என்பதை முதன்மைப் படுத்தியிருந்தார். உலக மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கும் ஆகக் கூடிய நல்ல மனங்களும் கெட்ட குணங்களும் வியாசரால் பாத்திரங்களாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள் எனப் பேசிய பீட்டர் ப்ரூக் அதை வார்த்தைகளால் சொன்னால் போதாது என்பதைக் காட்டவே ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பதாகவும் சொன்னார்.
 
மகாபாரதத்தின் மையப்பாத்திரமான திரௌபதியாக இந்திய நடிகையைத் தேர்வு செய்திருந்தார். ஐரோப்பிய வெள்ளையர்களும் ஆப்பிரிக்கக் கறுப்பர்களும் பாண்டவர்களாக- சகோதரர்களாக- வந்து நின்ற காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. முக்கியமான காட்சிகளை மட்டும் பார்வையாளர்கள் முன்னால் நிகழ்த்திக் காட்டிய பீட்டர் ப்ருக்கின் தயாரிப்பில் ஆஸ்திரேலியா, ஜப்பான், லத்தீன் அமெரிக்க நாடுகள் எனப் பலதேசத்து நடிகர்களும் பங்கேற்று நடித்திருந்தார்கள். மகாபாரதத்தின் ஒன்பதரை மணி நேர அரங்க நிகழ்வு எங்கள் முன்னால் நிகழ்த்தப் படவில்லை. அதன் திரைவடிவம் நான்கரை மணி நேரக் காட்சிவடிவில் காண்பிக்கப்பட்டது.
நடத்தப் போகும் நிகழ்வும் உலகத்தரம் வாய்ந்த ஒரு சோதனை முயற்சி. எனவே தமிழ்நாட்டிலிருந்து அதைப் பார்க்கும் வாய்ப்பை நாடகக்காரர்கள் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே கொண்டு போக வேண்டும் எனத் திட்டமிட்டுப் பட்டியலைத் தயாரித்தோம். முப்பது பேரில் செம்பாதியாக நாடகக்காரர்களை அழைப்பது எனவும், மீதமுள்ள பாதியில் எழுத்தாளர்கள், விமரிசகர்கள், பத்திரிகையாளர்கள் எனக் கலந்து கட்டி அழைக்கலாம் எனவும் நான் சொன்ன யோசனையை மறுப்பின்றி இ.பா. ஒத்துக் கொண்டார். வரப்போகும் நாடகக் குழு சாதாரண நாடகக் குழு அல்ல என்பதை நாங்கள் அறிவோம்; அதனைப் பார்ப்பதும், அதைப் பற்றிப் பேசுவதும், அதன் வழியாகத் தமிழில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துவதும் அவசியம் எனச் சொன்ன காரணங்கள் இந்திரா பார்த்தசாரதிக்கும் உடன்பாடு என்பதால் தான் ஏற்றுக் கொண்டார்.முதலில் நாடகக்காரர்கள் பெயர்களைப் பட்டியலிட்டு விட்டு, பத்திரிகையாளர்கள் பெயர்களை எழுதினேன். கடைசியாக எழுத்தாளர்கள் என்ற வகைப்பாட்டில் சுந்தரராமசாமியின் பெயரை முதலில் எழுதினேன்.
 
எழுதி முடிக்கும் முன்பு ஜெயகாந்தன் வேண்டாமா? என்று சிரித்தபடியே கேட்டார் இந்திரா பார்த்தசாரதி. அந்தக் கேள்வி உங்களின் வரிசைப்படுத்தலில் ஒரே நிலைப்பாடு இல்லையே என்று குத்திக் காட்டுவதாக நினைத்துக் கொண்டேன். ஞானபீடத்திற்காக எழுத்தாளர்களைப் பட்டியலிடுவதும், பீட்டர் ப்ரூக்கின் நாடகக்குழுவைச் சந்திப்பதற்காக எழுத்தாளர்களைத் தேர்வு செய்வதும் ஒன்றல்ல என்பதையும், அவை ஒவ்வொன்றின் பின்னும் வெவ்வேறு காரணங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை இந்திரா பார்த்தசாரதி அறியாதவர் அல்ல என்பதை நானறிவேன். காரணங்களை அறிந்து கொண்டே சீண்டிப் பார்க்கும் வித்தையை நான் பழகிய பல எழுத்தாளர்களிடம் கவனித்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியிடம் அது வெளிப்படையாக இருக்கும்; கி.ரா.விடம் கமுக்கமாக ஓடிக் கொண்டே இருக்கும்; சுந்தரராமசாமியிடம் திரைபோட்டுக் கவிழ்ந்து கிடக்கும்.
 
இந்திரா பார்த்தசாரதியை நான்காவது இடத்தில் நிறுத்திக் காட்டி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி ஆகியோரை மூவர் முதலிகளாகப் பட்டியலிடக் காரணங்களாக இருந்தவற்றை இந்திரா பார்த்தசாரதியிடம் சொல்லவில்லை. ஆனால் இந்த வருடம் தமிழுக்கு ஞானபீட விருதை வாங்கும் முயற்சியில் இருக்கும் அந்தப் பேராசிரியரிடம் சொன்னேன். ஏற்கெனவே நான் போட்ட பட்டியலில் ஜெயகாந்தனுக்கு விருது கிடைத்துவிட்டது; சுந்தரராமசாமி இப்போது இல்லை. இருப்பது கி.ராஜநாராயணனும் இந்திரா பார்த்தசாரதியும் தான். இவ்விருவரில் எனது முதல் விருப்பம் கி.ரா. இவ்விருவரோடு இன்னும் சிலரைச் சேர்க்க வேண்டுமென்றால் முதலில் நான் சேர்ப்பது ஜெயமோகனைத்தான். பின்னொரு முறை தயாரிக்கும் பட்டியலில் ரவிக்குமாரையும், இமையத்தையும், சேர்க்கலாம் என்றால், அவர்களின் அரசியல் களம் படைப்பியல் தளத்தைச் சிதறடித்து விடக்கூடும் என்ற அச்சம் உடனடியாகத் தடுக்கிறது.
 
ஜெயகாந்தன் கடந்து விட்ட இடத்தை ஜெயமோகனுக்கு வழங்கிட நான் கொண்டிருக்கும் காரணங்கள், ஜெயகாந்தனை முதலிடத்தில் வைக்க இருந்த அதே காரணங்கள் தான். ஒரு மொழியின் இலக்கியப்பரப்பில் ஞானபீடத்தை அளிக்க வேண்டுமென்றால் அவனுக்கு முன்னோடியாக யாரும் இருக்கக் கூடாது; அதே நேரத்தில் அவனது பின்னோடிகள் என ஒரு கூட்டம் நிற்க வேண்டும். ஜெயகாந்தன் அப்படித்தான் இருந்தார். ஜெயகாந்தனைப் புதுமைப்பித்தனின் வாரிசு எனச் சொன்னவர்கள் நிரூபித்துக் காட்டும்படியாக ஒன்றிரண்டு காரணங்களைக் கூட எடுத்துக் காட்டவில்லை,
 
ஜெயகாந்தனின் எழுத்துப் பரப்பும் சிந்தனைப் பரப்பும் தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் இல்லாத ஒன்று.தமிழ்ப் புனைகதை எழுத்திலும் உரைநடை எழுத்திலும் அவருக்கு முன்னோடியாக ஒருவர் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதைப் போலவே இன்னொரு உண்மையும் இருக்கிறது. அவரது எழுத்துக்களைப் படித்தும் பதிய வைத்தும் அவரைப் போலவே எழுதி விட வேண்டும் என நினைத்த பின்னோடிகளைத் தமிழ் இலக்கியப்பரப்பில் உடனடியாகச் சுட்டிக் காட்டி விட முடியும். அவரைப்போலவே எழுத வேண்டும் என நினைத்தவர்கள் மட்டுமல்ல; அவரைப்போலவே ஒலிபெருக்கியில் பேச வேண்டும்; உடை உடுத்திக் கொள்ள வேண்டும்; முடி வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என நகலெடுத்த எழுத்தாளர்களை நான் எண்பதுகளில் பார்த்திருக்கிறேன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத என்றொரு தொடர் தமிழில் உண்டு. இத்தொடரின் பொருளாக இருந்தவர் ஜெயகாந்தன்.
 
ஜெயகாந்தனை அடுத்து எனது பட்டியலில் இடம் பெற்ற கி.ராஜநாராயணன், ஜெயகாந்தனைப் போல ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆளுமை அல்ல. ஆனால் அவரும் சமகாலத்தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு போக்கின் முன்னோடி என்பதையும் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் அவரது பங்களிப்பின் தன்மை பல பரிமாணங்கள் கொண்டது என்பதையும் மறுத்து விட முடியாது. வட்டார வழக்குச் சொல்லகராதி என்றொரு முன்னத்தி ஏரைக் கரிசல் காட்டில் ஓட்டிக் காட்டியதைப் போல கிராமியக் கதைகளைத் திரட்டிக் காட்டித் தொல் மனங்களை அறியச் செய்ததும் அவர் தான். வட்டார மொழியின் வழியாக குறிப்பிட்ட வட்டாரத்து மனிதர்களை உலக மனிதர்களின் குறியீடுகளாக ஆக்கிக் காட்டும் இலக்கியப் போக்கு இன்று உலகம் முழுக்க அங்கீகரிக்கப்பட்ட ஓர் இலக்கியப் போக்கு. அதன் தமிழ் அடையாளம் கி.ரா. அவரைப் பின்பற்றி முத்தானந்தன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச் செல்வன் போன்ற நகல்கள் மட்டுமே உருவாகவில்லை; அவரிலிருந்து புதிய கிளைகளும் பிரிந்து வளர்ந்துள்ளன. பூமணியும் சோ.தர்மனும் ஒரு கிளையென்றால் பா.செயப் பிரகாசம் இன்னொரு கிளை. கோணங்கியும் கூட அவரது அடியாழத்திலிருந்து கிளர்ந்தெழுந்த கிளைதான்.
 
ஞானபீடம் அவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சுந்தரராமசாமி ஒரு பீடத்தின் அதிபதியாகவே கருதப்பட்டார். இலக்கியம் சார்ந்த தளங்களில் மட்டுமல்லாமல் அரசியல், தத்துவம், காலனி ஆதிக்கத்துக்குப் பிந்திய இந்தியர்களின் மனநிலை, வெகுமக்கள் பரப்பில் கலை இலக்கியவாதிகளின் பங்களிப்பு, கல்வி, மதம், சட்டம் எனப் பொதுப்பரப்பில் நிகழும் பெரும் நிகழ்வுகளில் தனது கருத்தைப் பதிவு செய்தல் என அவர் காட்டிய அக்கறைகள் விரிந்து கொண்டே இருந்தவை. இதன் காரணமாகவே அவரது ஆளுமையின் பாதிப்பும் விரிந்து கொண்டே இருந்தது. அவரைப் போய்ப் பார்ப்பதையும், அவரிடம் இலக்கியம் குறித்து விவாதிப்பதையும் அக்கறையோடு செய்த அவரது பின்னோடிகள் அல்லது சீடர்கள், அவரைத் தங்களது முன்னோடியாகப் பதிந்து கொள்ள முடியாமல் திணறி நிற்கவும் அவையே காரணங்களாக இருந்துள்ளன. அவரை ஆதர்ச எழுத்தாளராகக் குறிப்பிடும் சில எழுத்தாளர்கள் உண்மையில் அவரது பாணியையோ, அவர் எழுதிய நோக்கங்களையோ புரிந்து கொண்டவர்கள் இல்லை. இலக்கிய நண்பர்கள் பலரைக் கொண்டிருந்த சு.ரா., தன்னைப் பின்பற்றி நகலெடுப்பவர்களோ, கிளை பிரிந்தவர்களோ இல்லாத ஆளுமையாக இருந்தார்.
 
இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துப் பரப்பு இம்மூன்று பேரின் பரப்பிற்குச் சற்றும் குறைந்தது அல்ல. சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், அங்கதத் தொடர்கள் என உரைநடையின் அனைத்துப் பரிமாணங்களிலும் தனக்கான இடத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாதவர்; தனித்தன்மையைக் காட்டியவர். இந்திய அரங்கியல் செயல்பாடுகளை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புப் பெற்ற இ.பா. மேற்கத்திய வாழ்க்கை முறையை மனத் தடைகளோடு எதிர்கொள்ளும் நடுத்தரவர்க்க மனிதர்களை உலவவிடும் நாடகங்களையும், மரபான இந்தியக் கதாபாத்திரங்களின் வழியாக நிகழ்கால அரசியலைப் பேசும் இந்தியத்தனம் நிரம்பிய நாடகங்களையும் எழுதிக்காட்டியதன் மூலம் இந்திய அரங்கில் தனக்கான இடத்தை உறுதி செய்த தமிழ் ஆளுமை. சமகால மனிதர்களின் அரசியல், சமூக நடவடிக்கைகளிலும், பொருளாதாரத்தேடல்களிலும் உளவியல் சிக்கல்களின் நரம்புகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன என அவரது எழுத்துக்கள் - குறிப்பாகப் புனைகதைகள் - உணர்த்தியுள்ளன. இந்தப் புரிதலோடு அவரை முன்னோடியாகக் கொண்ட படைப்பாளுமை தமிழில் வேறொன்றில்லை. அந்த வகையில் இந்திரா பார்த்தசாரதி தனிமரம். பின்னோடிகள் அற்றவர். அதனால் தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பரப்பில் அதிகம் தாக்கங்களைச் செய்யாதவர்.
 
தனித்துவம் வாய்ந்த படைப்பாளிகளே ஞானபீடம் என்னும் உயரிய இடத்திற்குத் தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால் இந்திரா பார்த்தசாரதியே முதலிடத்தில் இருப்பார். அதற்குப் பதிலாக தனது படைப்பாளுமையாலும், இலக்கியச் செயல்பாடுகளாலும் தனக்குப் பின்னேயும் தொடரும் ஒரு கூட்டத்திற்குக் காரணமாக இருக்கும் ஒருவரை ஞானபீடம் அளித்துப் பாராட்ட வேண்டும் என்றால் இப்போதுள்ள எழுத்தாளர்களில் கி.ராஜநாராயணனே அந்த இடத்திற்கு உரியவர். நான் சொன்ன இந்தக் காரணங்களை அந்தப் பேராசிரியர் ஏற்றுக் கொண்டு பரிந்துரைப்பாரா? அல்லது அவருக்கான காரணங்களின் அடிப்படையில் வேறு ஒரு பட்டியலைத் தயார் செய்து அதில் ஒருவரை முன்னிறுத்துவாரா என்று தெரியவில்லை.
தமிழுக்கு மூன்றாவது ஞானபீடம் கிடைத்தது என்ற செய்தி சில நாட்களுக்கு மகிழ்ச்சியாகத் தானே இருக்கும்.

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
என் கால எழுத்தாளர்கள் சாரு, வண்ணதாசன், ஜெயமோகன் ஆகியோரும் ஞான பீட விருதுக்கு உரியவர்களே. . இன்னும் சொல்லப் போனால் அதை விட பெரிய உலக அளவிலான விருதுக்கு உரியவர்கள் இவர்கள்
கானகம் இவ்வாறு கூறியுள்ளார்…
//நமது அண்டை மாநில மொழிகளான மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் ஐந்து தடவை ஞானபீடம் வழங்கப்பட்டு விட்டதைச் சுட்டிக் காட்டியே தமிழுக்கான வாய்ப்பைப் பெற்று விட முடியும்;//

இதுவா ஞானபீடப்பரிசு பெறத் தகுதி?

//ஜெயகாந்தன் கடந்து விட்ட இடத்தை ஜெயமோகனுக்கு வழங்கிட நான் கொண்டிருக்கும் காரணங்கள், ஜெயகாந்தனை முதலிடத்தில் வைக்க இருந்த அதே காரணங்கள் தான். ஒரு மொழியின் இலக்கியப்பரப்பில் ஞானபீடத்தை அளிக்க வேண்டுமென்றால் அவனுக்கு முன்னோடியாக யாரும் இருக்கக் கூடாது; அதே நேரத்தில் அவனது பின்னோடிகள் என ஒரு கூட்டம் நிற்க வேண்டும். ஜெயகாந்தன் அப்படித்தான் இருந்தார். //

ஜெயமோகன் நல்ல தேர்வு. வாசக்ர் உடனான மனம்திறந்த உரையாடல் நடத்துபவர். எல்லாவித விவாதங்களுக்கும் அவரே ஆரம்பமாயும், முன்னெடுத்துச் செல்பவராகவும் இருப்பவர். நண்பர் ராம்ஜி யாகூ பட்டியலில் இருக்கும் சாரு போன்றவர்களையெல்லாம் எழுத்தாளர்கள் கணக்கில் எப்படி எடுக்க முடியும்? வாசகனை சாக்கடைப் புழுபோல மதிப்பதும், நான் தமிழில் எழுதவந்தது எனது தலையெழுத்து எனச் சொல்லிக்கொண்டே தமிழில் சாக்கடை எழுத்துக்களைப் படைப்பது மட்டுமே அவர் செய்த சாதனைகள். பெயர்களை உதிர்ப்பதும், தன்னை எல்லோரும் கலகக்காரன் எனச் சொல்வதற்காக என்னவேண்டுமானாலும் எழுதித் தள்ளுவது சாருவின் பாணி.

ஜெயமோகனுக்கு இந்த விருதெல்லாம் கொடுத்துத்தான் தமிழில் அவரை யாரும் அறிந்துகொள்ள வேண்டும் என இல்லை. அவரே நான் விருது கொடுப்பவன் என சொல்லி அதை செய்தும் காட்டிக்கொண்டிருக்கிறார்.
N Kalyan Raman இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தக் கட்டுரையில் நீங்கள் அசோகமித்திரனைக் குறிப்பிடக்கூட இல்லை என்பது கட்டுரையின் மிகப் பெரிய குறைபாடு
ஜடாயு இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த வருட ஞானபீடம் தமிழுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பே மகிழ்ச்சியளிக்கிறது. வர வேண்டும். ஆனால், அசோகமித்திரன் என்ற ஒரு பெரிய ஆளுமையின் இருப்பைக் கூட உங்களது கட்டுரை பொருட்படுத்தவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. தனித்துவம், முன்னோடித்தன்மை இரண்டிலும் நீங்களே முன்வைக்கும் அளவீடுகளின் படி தகுதியானவர் அசோகமித்திரன். எனது வாசிப்பு மற்றும் இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் இன்றைய தமிழ்ப் படைப்பாளில் ஞானபீடத்திற்குத் தகுதியானவர்கள் - ஜெயமோகன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் (அந்த வரிசையில்). ஆனால், வயது மற்றும் சீனியாரிட்டியை முன்வைத்து அசோகமித்திரனுக்கு இந்த வருடம் வழங்கப் படவேண்டும்.
இரா. பாலா இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழுக்குக் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி.
ஞானபீட விருதுக்குத் தகுதியானவர்கள் என நான் நினைப்பது.
1) சு.ரா
2) ஜெயமோகன்
3) அசோகமித்திரன்

நல்லவேளை திமுக மத்திய அரசில் இல்லை. எனவே வைரமுத்துவுக்குக் கிடைக்காது :p
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெயமோகன் முதலிடத்திலும் சுந்தரராமசாமி ,அசோகமித்திரன் ஆகியோர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தப்பரிசுகள் பரிசுகள் வழங்கப்படும் சமகாலத்தில் ஏராளம் வாசகர் வட்டம் உடையோரை கருதியே வழங்கப்படுகிறது. unto the last - சிறந்த நூல் என்றாலும் சுமார் 100 வருடம் ஆகிவிட்ட நூலுக்கு இன்று பரிசு வழங்கமுடியாது அல்லவா? மகாத்மா காந்திக்கு இன்று நோபல் பரிசு வழங்குவது அவரை அவமதிப்பது போல அல்லவா ஆகிவிடும். ஜெயமோகன் தான் முதல் சாய்ஸ்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்