தேவசீமாவின் வைன் என்பது குறியீடல்ல:

 எல்லாவகை இலக்கிய வகைமையும் தொகுப்பாக வாசித்து முடிக்கும்போது ஒரேவிதமான இலக்கிய நுட்பங்களை வாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. கவிதை எப்போதும் உணர்வுகளையும் கவிதை சொல்வதற்கான கூற்றாளர்/ உரைப்பவரின் த்வனியையும் முன்வைக்கும். புனைவுகளோ பாத்திரங்களின் இருப்பையும் நோக்கங்களும் வளர்சிதை மாற்றங்களையும் முன்வைக்க முனையும். அதிலும் சிறுகதைகள் உருவாக்கப்படும் புனைவுப்பாத்திரங்களின் முடிவெடுக்கும் கணத்தைத் தீட்டிக்காட்டுவதை முதன்மையாக நினைக்கும். இன்னொரு புனைவு வடிவமான நாவலோ பாத்திரங்களின் பின்னணிகளை - காலத்தையும் வெளியையும் விரிவாக்கித்தருவதில் கவனம் செலுத்தும். நாடகங்களோ எப்போதும் கருத்தியல் அல்லது மனவியல் முரண்பாடுகளைக் காட்டுவதையே செய்கின்றன

இந்த அடிப்படைகளோடு இலக்கியவாசிப்பில் ஈடுபடுபவர்கள் அந்தந்த இலக்கிய வடிவத்திற்கேற்ப தங்களின் இலக்கியவாசிப்பைக் குறித்துப் பேசமுடியும். அண்மையில் என் வசம் சேர்ந்த சில கவிதைத் தொகுதிகளை நிதானமாக வாசித்தபோது ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நோக்கங்களோடும் த்வனியோடு எழுதப்பட்டிருக்கின்ற வேறுபாடுகளை உணரமுடிந்தது. கவி.செந்தீ. அவர்களின் புனைவு அமைப்பில் சில தொகுதிகள் குறித்துப் பேச நினைத்து எடுத்து வைத்த குறிப்புகள் சிலவற்றை இங்கே பதிவுசெய்யத் தோன்றுகிறது.
வைன் என்பது குறியீடல்ல.. என்ற கவி .தேவசீமாவின் ( தேநீர் பதிப்பகம், 24/1. மசூதி பின் தெரு, சந்தைக் கோடியூர், ஜோலார்பேட்டை, 635851/ 90809 09600) தொகுதிக்குள் உருவாக்கப்பட்டுள்ள த்வனியும் கவிச் சொல்லுகாக உருவாக்கப்படும் மொழிபவரும் கவியின் தன்னிலையைக் கொண்டிருப்பதனோடு, அதன் பல அடுக்குகளையும் வெளிப்படுத்துகின்றன. மரபான குடும்ப எல்லையை முழுவதும் நிராகரிக்காத தன்னிலையாகவும் மாறிக்கொண்டிருக்கும் அதன் நெகிழ்ச்சிகளைச் சரியாகப் புரிந்துகொண்ட பாத்திரங்களாகவும் கவிமொழிபவர் உருவாக்கப்பட்டிருக்கிறார்.
கவிதைகள் உருவாக்கும் த்வனியோ, தீர்மானமும் உறுதிப்பாடும் சின்னச்சின்ன மகிழ்வான தருணங்களைக் கண்டடைந்து முன்வைக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கின்றன. தொகுப்பின் தலைப்புக் கவிதை இது:
வைன் என்பது குறியீடல்ல..
--------------------------------------
காய்ச்சல்
ஒவ்வொரு செல்லையும்
எண்ணையின்றி பொரித்துக் கொண்டு இருக்கிறது
கொஞ்சம் சிவப்பு வைன் மட்டும் தான் தேவை
ருசித்து ருசித்து
சொட்டுச் சொட்டாய் விழுங்கலாம்
கசப்பின் வெளியில்
நடக்கத்தொடங்கலாம்
உள்நாக்கில்
உன்னதமான இனிப்பின்
உவகையில் மயங்கலாம்
இளைப்பாறுதலாய்
எண்ணைக்கொப்பரையில் இறங்கலாம்
மலை விளிம்பில் நட்டிடலாம்
ஒரு தொழிலாளியின் உடலை
பறக்க விடலாம் ஒரு நொதித்த குடலை
அவன் சென்னியில்/31
இக்கவிதைக்குள் உலவும் தொழிலாளியின் உடல் பற்றிய உருவகம் தரும் த்வனியை நேரடியாகத் தொழிலாளியின் உடலோடு மட்டுமல்லாமல், சமையலறையில் வதங்கும் பெண்பாலின் அவலநகையாகவும் வாசிக்கமுடியும். மரபான வாழ்தலுக்குள் பேசப்படும் அவலநகைக்கு ஈடான இன்னொரு அவலக்காட்சியை நவீனக்கருவிகள் மனிதர்களை ஆளும் நம்காலத்து மனநிலையோடு முன்வைக்கிறது இன்னொரு கவிதை. அதன் தலைப்பு:
தற்கொலை கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்
===================================
உச்சியில் இருந்து ஓசைப்படாமல்
சுழன்று சுழன்று தரை தொடும்
ஒரு மலரினைப் போல் இருக்கட்டும்
அவளின் தற்கொலை விடுதலை
அவளாய் அதுவாய் வெளியாய் மாற
எத்தனம் கொண்டே இருக்கிறாள் அவள்
எத்தனை பேர் இருந்தும்
ஒரு கீறல் கூட இல்லை கண்ணாடியின் மீது
அது நொறுங்கிய ஓசை
யார் காதுக்கும் இல்லை என்பதை அறிவாள்
நொறுவல்களின் மேல் நடந்தே அடைந்தாள்
வெள்ளை நிற விடி மோட்சங்களை
துரோகங்கள் இழைக்கப்படுவதல்ல
ஏற்றுக்கொள்ளப்படுவது
என நம்பும் அவளின்
கடைசி அலைபேசி அழைப்பையாவது
நீங்கள் எடுத்திருக்கலாம். ==================== 66

ஓடியும் போகாத அசிங்கம்

உயிரேற்றி ஒரு உணவு

சமைக்கிறான் ஒருவன்

கெஞ்சிக் கொஞ்சி ஊட்ட முயல்கிறான்

தலை ஆட்டி ஆட்டி மறுக்கிறாள் சிறுமி

கோபமாய்த் திணிக்கிறான் வாயுள்

மாட்டேன் மாட்டேன் என்பதாய் தலை அசைக்கிறாள்

ஓடிப்போன அம்மாவைப் போலவே

இவள் காது ஜிமிக்கியும்

அழகற்று ஊசலாடுகிறது

உள்ளார்ந்த இரசனையில்

ஒரு கணம் பதறி

தலை உதறி தவிர்க்க முயல்கிறான்

தோல்வியுற்ற இருத்தலை.  =======50

இக்கவிதைக்குள் தாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட குடும்ப வாழ்வின் நிர்ப்பந்தங்களை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தவிக்கும் இந்தியத் தன்னிலையின் இந்தச் சித்திரத்தை இதற்கு முன்னொருவரும் எழுதிக்காட்டவில்லை. அதே போலச் சமையல்கட்டு ஏற்படுத்தும் அலுப்பான வாழ்க்கையின் அபத்தத்தைச் சொன்ன பல நூறு கவிதைகளில் இந்தக் கவிதை முன்வைக்கும் அபத்தத்தொனி வித்தியாசமான ஒன்று:

காத்திறமான உப்பு

முதல் தோசை  ஊற்றிக்கொண்டு

இருந்தேன். ஒன்றும்

தோன்றவில்லை


இரண்டாவது தோசை  ஊற்றிக்கொண்டு

இருந்தேன். ஒன்றும்

தோன்றவில்லை

மூன்றாவது  தோசை  ஊற்றிக்கொண்டு

இருந்தேன். ஒரு துரோகம்

லேசாக ஓர்மையில்

நான்காவது தோசை  ஊற்றிக்கொண்டு

இருந்தேன். ஒரு நட்பு

கண் இளக்கத் துவங்கிற்று

அய்ந்தாவது தோசை  ஊற்றிக்கொண்டு

இருந்தேன். நாம் அனாதை

என்ற உணர்வு பக்கத்தில் நின்று

கொண்டு இருந்த து

ஆறாவது தோசை  ஊற்றிக்கொண்டு

இருந்தேன். சத்தமே இல்லாமல்

தோசை கரிப்பேரிக் கொண்டிருக்கிறது

ஏழாவது தோசையை ஊற்றிக்கொண்டு

இருந்தேன். அவசரத்தில்

கரித்துணியால் முகம்

துடைக்கப்பட்ட து

மகன் சாப்பிட்டுக்கொண்டு

இருக்கிறான். ========== ப.43

ஆண்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும் இன்னொரு காதலும் இரண்டாவது மனைவியும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகவும் மறைவாகச் செய்யவேண்டிய திருட்டுத்தனமாகவும் கட்டமைக்கப்பட்டதைக் கேள்வி கேட்கும் இந்தக் கவிதையில் வெளிப்படும் துணிச்சல் நவீன காலமும் வாய்ப்புகளும் ஏற்படுத்தித்தந்துள்ள ஒன்று:

அது அல்ல

அதற்கானதாய் இரண்டு இருந்தன

தொலைந்துவிட்ட து ஒன்று

அச்சு அசலாய்

மற்றொன்று செய்து வாங்கினேன்

சாவிக்காரனிடம்

போலிச்சாவி என அதற்கு

பெயர் சூட்டுகிறீர்கள்

அதுவும் திறக்கும்

அதே உண்மையை.

போலிச்சாவியல்ல

இன்னொரு சாவி என்றே

சொல்லுங்கள்

இன்னொரு காதல் என்பதைப்போல. ===/37

இலக்கியவியலின் அனைத்து வகைமைகளையும் அதனதன் நுட்பங்களோடும் நோக்கங்களோடும் வாசிக்கும் வாசிப்புக்குக் கிடைக்கும் திளைப்பும் மனவிரிவும் விரித்துப் பேசவேண்டியவை. கவிதை வடிவம் எப்போதும் அதில் முதன்மையாக இருக்கிறது. தேவசீமாவின் இந்தத்தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் அதனைச் சரியாகவே செய்துள்ளன. அண்மையில் வந்த தொகுதிகளில் வாசிக்க வேண்டிய தொகுதி.

May be an image of book and text

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்