கவிதைப் பொருள்கொள்ளல் - சில குறிப்புகள்

கூற்று அல்லது மொழிதல்

கவிதை வாசகர்கள் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். இரண்டாவது அலையின் தனிமையில் -கடந்த இரண்டு மாதங்களில் 50 -க்கும் அதிகமான கவிகளின் ஒரு கவிதையை முகநூலில் பதிவேற்றம் செய்கிறேன். அந்தந்தக் கவிகளின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று என்பதாக நான் நினைக்கும் கவிதையல்ல. அதே நேரத்தில் கவிதையின் சிறப்புகளில் ஏதாவதொன்றைக் கொண்டதாக நான் நினைக்கும் கவிதைகளில் ஒன்றாக இருக்கும். என்னிடமிருக்கும் கவிதைத்தொகுப்புகளிலிருந்து அதனைத் தெரிவு செய்கிறேன். அப்பதிவேற்றத்தில் ஒரு தொகுப்புப் போட்டவர்களின் கவிதைகளும் உண்டு ஓராயிரம் கவிதைகள் எழுதியவர்களின் கவிதைகளும் உண்டு.

செய்யுளியல் என்னும் இலக்கியவியலைப் பேசும் தொல்காப்பியம் கூற்று என்னும் சொல்லைத் திரும்பத்திரும்பப்பயன்படுத்துகிறது. யார் இந்தக் கவிதையின் கூற்றாளராக இருந்து சொல்கிறார் என்பதை விளக்கிப் பேசுகிறது. அகத்திணைக் கவிதைகளில் யாரெல்லாம் கூற்றாளராக இருக்க முடியும் என்பதையும் வரையறுத்துக் கூறுகிறது. அவ்வளவு விரிவாகவும் கறாராகவும் புறக்கவிதைகளுக்குச் சொல்லவில்லை. கூற்றாளர் ஒருவர் தொடங்க, கேட்குநராக ஒருவர் இருக்கும்போது கவிதையில் செயல்பாடு ஓரளவு முழுமையடைகிறது.

கூற்று என்பது பெயர்ச்சொல்; பாவியலில் அது ஒரு கலைச்சொல். கூறு என்னும் வினையடி வழியாக உண்டான தொழிற்பெயராக மாறும்போது கூறுதல் என்பதாக மாறும். இதனையொத்த சொற்களாக உரைத்தல், சொல்லுதல், மொழிதல் என்ற தொழிற்பெயர்ச் சொற்கள் இருக்கின்றன. உரைத்தலின் வேர்ச்சொல் உரை, சொல், மொழி என்பனவும் இலக்கியவியலின் கலைச்சொற்கள் தான்

நவீன கவிதைகளைப் பற்றிப்பேசும்போது கூற்று என்பதைப் பயன்படுத்துவதைவிட உரைத்தல், மொழிதல் என்பதை அதிகம் பயன்படுத்துகின்றனர் திறனாய்வாளர்கள். மொழிதல் கோட்பாடு என்ற கலைச்சொல்லைத் தமிழவன் பயன்படுத்தித்தொடங்கி வைத்தார்.
சொல்பவருக்கும் கேட்பவருக்கும் இடையே சொல்லப்படுவது கவிதைப்பொருளாக மாறிவிடுகிறது. என்ன சொல்லப்படுகிறது என்பதைத் தேடுவது மட்டுமே கவிதை வாசிப்பு என நினைக்கவேண்டியது. செவ்வியல் கவிதைகளைப் பதிப்பித்தவர்கள், கூற்றையும் சொல்லி, சில நேரங்களில் சூழலையும் சொல்லிப் பதிப்பித்துள்ளனர். இரவுக்குறி மறுத்த தோழி கூற்று என்கிறபோது சொல்பவர் தோழி, கேட்பவர் தலைவன், சொல்லப்படும் கவிதைப்பொருள் அச்சவுணர்வு என்பது புலனாகிறது. இப்படியான புரிதலை ஒரு நவீன கவிதையில் பெறுவதற்கு வாசிப்பவர் முதலில் யார் கூற்றாளராக - உரைப்பவராக இருக்கிறார் என்ற முதல்வினையைச் செய்யவேண்டும்.
பெரும்பாலும் நவீன கவிதையின் தன்னை உரைத்தல், முன்னிலையில் இருக்கும் நபரை உரைத்தல், இருவரையும் தாண்டி படர்க்கையிடத்தில் இருக்கும் மூன்றாம் நபரைக் குறித்துப் பேசுதல் நடக்கிறது. நபர்களைத்தாண்டி இடத்தை, காலத்தை, கருத்துரைகளை, வினைகளை, விளைவுகளைப் பேசுவன இருக்கின்றன. எல்லாவற்றையும்
#தன்னிலையுரைத்தல்
#முன்னிலையுரைத்தல்
#அதனையுரைத்தல்
என்ற மூன்றுக்குள் நிறுத்த முடியும். அதனை என்பதை எல்லாக் கவிதைப்பொருளாகவும் விரிக்கமுடியும். தன்னிலைக்குள் , முன்னிலைக்குள் நபர்களைக் குறித்த கவிதைகளை அடையாளம் காட்ட முடியும். இப்படியான குறிப்புகளோடு கடந்த இரண்டு மாதங்களாகப் பதிவுகளாகப் போட்ட கவிதைகளை முகநூலில் பலரும் வாசிக்கின்றனர் என்பது அதற்குக் கிடைக்கும் விருப்பக்குறிகளும் அன்புக்குறிகளும் ஆச்சரியக்குறிகள் பின்னூட்டங்களும் காட்டுகின்றன.
*********
இலக்கியவியல் கூற்றின் இடம் குறித்த இக்குறிப்போடு பின்வரும் - கவிதைப்பொருள்கொள்ளல் - என்ற கட்டுரையையும் வாசித்துப்பாருங்கள்

நிகழ்காலத்தில் கல்விப் புலங்களில் விளக்கமுறை ஆய்வு என்ற பெயரிட்டு அழைக்கப்படும் ஆய்வுகளே அதிகம் நடக்கின்றன. இக்கால இலக்கியப்பரப்பு என்பதில் மட்டுமல்ல; மொத்தத் தமிழியல் பரப்பில் கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக ஆதிக்கம் செலுத்தும் ஆய்வு முறையாக அல்லது முறையியலாக இருப்பது விளக்கவியல் ஆய்வுகளே. இவ்விளக்க முறை ஆய்வுகளைச் சற்று நுணுகி நோக்கினால், அவை வெறும் விளக்கமுறை ஆய்வுகள் மட்டுமல்ல என்பது புலப்படலாம். ஒருவிதச் செய்முறைத் தன்மை(Applied) இவ்வகை ஆய்வுகளின் பொதுத் தன்மையாகக் காணப்படுகிறது.

ஏற்கெனவே உருவாக்கப்பட்டுக் கைவசம் உள்ள வரையறைகளைப் புதிய தரவுகளின் மேல் பொருத்திப் பார்க்கும் செயல்முறை அது. ஆனால் இலக்கியம் பற்றிய தமிழ் மரபு இதற்கு எதிரானதா? ஆதரவானதா? என்பதைப் பொருள்கோள் என்னும் கலைச்சொல் கொண்டு விளக்க முயல்கிறது இக்கட்டுரை

ஆய்வுகளின் பொதுத்தன்மைகள்:

இலக்கிய அறிமுகம், இலக்கியத்திறனாய்வு அறிமுகம், இலக்கியக் கோட்பாடுகள் அறிமுகம் என்பதான தலைப்புகளில் மேலைநாடுகளில் மாணாக்கர்களுக்கு இலக்கியக் கல்வியைத் தரும் நோக்கத்தில் பல நூல்கள் வந்துள்ளன. அவைகளில் இலக்கிய வகைகளையும், திறனாய்வு முறைகளையும், கோட்பாடுகளையும் எளிமையாக விளங்கிக் கொள்வதற்கான விளக்கக் குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் எல்லாவற்றையும் பொதுநிலைப்படுத்தி விளக்கங்கங்கள் கூறும் தன்மையுடையன. எடுத்துக்காட்டாக நாடகம் பற்றிய விளக்கமாக நாடகக் கட்டுமானங்கள், நாடகவகைகள், நாடகவளர்ச்சியென்று அவை பேசும். புனைகதைகள் என்றால், எடுத்துரைப்பு, பின்புலம், கதாபாத்திரங்கள், சிக்கல்கள், முடிவு, எனப் பிரித்துப் பேசியிருக்கலாம்.

நமது இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளில் இவைகளே ஆய்வுச் செல்நெறியைத் தீர்மானிக்கும் துணைமை ஆதாரங்களாக விளங்கி வருகின்றன .ஐ.ஏ.ரிச்சற்ஸ், டபிள்யூ. எச்.ஹட்சன், ரெனே வெல்லக் போன்ற பேராசிரியர்களின் நூல்கள் தந்த வெளிச்சத்தில் - வரையறைகளின் உதவியுடன் - தான் இக்கால இலக்கியங்கள் பற்றிய தொடக்க நிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்புகளைத் தொகுத்தும் பகுத்தும் வகைப் படுத்தியும் விளக்கியும் காட்டிய ஆய்வுகளைச் செய்த ஆய்வாளர்களின் பணி என்பது கைவசம் உள்ள வரையறை (definition)களை அந்தப் படைப்பாளியின் படைப்புகள் மீது பொருத்திக் காட்டிய பணிதான்.
இவ்வகையான பொருத்திக்காட்டல்கள் இக்கால இலக்கியங்களைப் பொறுத்தவரை மேற்கத்திய வரையறைகளின் துணையோடு நடந்தன. ஆனால் அதற்கு முந்திய கால இலக்கியங்களுக்கு இங்கேயே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வரையறைகள் இலக்கணங்களாகக் கிடைத்தன. தொல்காப்பியரின் அக, புற இலக்கணங்களைக் கொண்டு சங்க இலக்கியங்களையும், தண்டியின் பெருங்காப்பிய இலக்கணங்களைக் கொண்டு காப்பியங்களையும் பாட்டியல்களின் வரையறைகளைக் கொண்டு சிற்றிலக்கியங்களையும் விளக்கிக் காட்டுவதும் பொருத்திக் காட்டுவதும் எளிமையானதாகவே நடந்துள்ளன. இத்தகைய ஆய்வுகள், இலக்கியப் படைப்பை, இலக்கணத்திற்கேற்ப எழுதும் ஒன்றாகக் கணித்துள்ளன என்பது தான் உண்மை. இத்தகைய கணிப்புகளில் உண்மை ஓரளவுக்கு உண்டு.

ஒரே மாதிரியாக எழுதித் தள்ளப்பட்டுள்ள அறநூல்களும், உலா, பள்ளு, குறவஞ்சி, புராணம், கலம்பகம், அந்தாதி, தூது, மடல், கோவை என்பதான சிற்றிலக்கியங்களும், பதினெட்டாம் நூற்றாண்டுத் தலபுராணங்களும் பிள்ளைத்தமிழ்களும் சீட்டுக்கவிகளும், இக்காலப் பரப்பிற்குள்ளேயே இடம்பிடித்து நிற்கின்ற வரலாற்று, துப்பறியும் தொடர்கதைகளும், காதல், மொழிப்பற்று, புரட்சிக்கு வரவேற்பு, எதிரிகளுக்குச் சவால் என்பதாக எழுதிக் குவிக்கப்பட்ட மரபு மற்றும் புதுக்கவிதைகளும், மனோன்மணீயத்தை அடியொற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பா நாடகங்களும் என ஏராளமாகக் கிடைக்கின்றன இத்தகைய கணிப்புகளை அறஞ்செய்ய.ஆகவே யாரொருவரும் அத்தகைய கணிப்புகளை - விளக்கங்களை - ஆய்வுகள் அல்ல என்று ஒதுக்கி விட முடியாது. ’இன்னாருடைய படைப்புகள் எவ்வாறு உள்ளன’ எனக் கேள்வியைக்கேட்டு அல்லது கருதுகோளை எழுப்பிக் கொண்டு “ இவ்வாறெல்லாம் உள்ளன” எனப் பதில்களைத் தருவது ஆய்வாளனின் வேலை தான். ஆனால் இவ்வகையான ஆய்வுகள், இலக்கணத்திற்கேற்ப எழுதப்பட்ட இலக்கியங்கள் போல, ‘போலச் செய்தல்’ (imitation) என்னும் தன்மையுடையனவாகவே இருக்கும்.

இதுவரைத் தமிழில் வந்துள்ள இக்கால இலக்கிய ஆய்வுகளில் தொண்ணூறு சதவீத ஆய்வுகள் இத்தகையனவே என்பதும் உண்மை. ‘போலச் செய்தல்’ என்னும் தன்மையின் - குறைபாட்டின் காரணமாகவே கல்விப்புல ஆய்வுகளைப் படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் மதிப்பதில்லை; பொருட்படுத்துவதுமில்லை. எனவே ஒரு கல்விப் புல ஆய்வாளன் தனது ஆய்வு கவனிக்கத்தக்கதும் பொருட்படுத்தத்தக்கதுமான ஆய்வாக அமைய முதலில் இந்தக் குறை பாட்டை - ‘போலச்செய்தல்’ அல்லது ‘பொருத்திக் காட்டி விளக்குதல்’ - என்ற குறைபாட்டைக் களைந்தாக வேண்டும். இதற்கான முயற்சிகளே இக்கால இலக்கிய ஆய்வாளர்களின் முன்னுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளாகும்.

கல்விப்புலத்தினர் இலக்கியப் பிரதிகளை எவ்வாறு கணிக்கின்றனர் என்பதும் அக்கணிப்பின் காரணமாக நேர்ந்துள்ள பிழைகளைக் கண்டறிந்து களைய வேண்டியதும் தமிழ் இலக்கியக் கல்வியில் முக்கியமாகச் செய்ய வேண்டிய ஒன்று. இலக்கியம் வெறும் தகவல்களின் களஞ்சியமாகவும் விவரணத் தொகுப்புக்களாகவும் கணிக்கப்படும் நிலை இன்று தூக்கலாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் சமூகத்தின் பிரதிபலிப்பு, காலக் கண்ணாடி என்ற திறனாய்வுக் கருத்தியல்களுக்குள் முடங்கிப் போனதாகவும் ஆகிவிட்டது. மொழியின் இலக்கணத்தை பேசும் தொல்காப்பியத்தையும் அதற்குள் கவிதைகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான இலக்கணங்களாகத் திணைக் குறிப்புக்கள், அவற்றின் பல்வேறு நிலைகளான துறைக்குறிப்புக்கள், கவிதைகளில் இடம்பெறும் புனைவுப் பாத்திரங்கள், அக்கவிதையின் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனப் பொருள் கோட்பாடு எனக் கற்றுத்தேர்ந்துள்ள மரபுத்தமிழ் வாசகர்கள் இலக்கியத்தை இவ்வாறு வாசிக்க நேர்ந்தது எப்படி என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி

.” சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்” எனவும் அகம், புறம் எனவும் களவு, கற்பு எனவும் செவ்வியல் இலக்கியக் கோட்பாட்டையும், கவிதை அழகியலாக நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இணைந்த புலனெறி வழக்கம் பற்றியெல்லாம் படித்துள்ள தமிழ் மாணவனின் ரசனையை வெறும் தகவல் சார்ந்த ரசனையாகவும், இடம் பெறும் குறிப்புக்களின் விளக்கங்களாகவும் மாற்றிய அம்சங்கள் எவை எனச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் நம்முன் இருக்கிறது. அழகியலின் நுட்பங்களாக உள்ளுறை, இறைச்சி, உவமம், வண்ணம், நோக்கு எனச் சிந்தித்துக் கவிதை எழுதி ரசித்த வளமான கவிதைப் பாரம்பரியத்தில் வந்த தமிழ் மாணவனும் ஆய்வாளனும் இன்று கவிதையைப் பற்றிய படிப்பை வெறும் அர்த்தம் சொல்லும் படிப்பாகப் பார்க்கும் அவலம் எவ்வாறு நிகழ்ந்தது எனக் கண்டறிய வேண்டியது தேவையாக உள்ளது. இந்தத் தேவையை உணர்ந்த நிலையில் இலக்கிய வாசிப்பு அல்லது கவிதை வாசிப்புக்கான நமது பார்வை- தமிழின் பார்வை என ஏதாவது உண்டா எனத் தேடியபோது நினைவுக்கு வந்த ஒரு சொல்லே பொருள்கோள் என்பது. நமது மரபு இலக்கணங்களில் ஒன்றான, தமிழ்க்கல்வியின் முக்கிய இலக்கணப்பகுதியாக இருக்கும் பவனந்தியாரின் நன்னூலில் விரிவாகவும், நன்னூலுக்கு முதல் நூலாக அமைந்த தொல்காப்பியத்தில் வண்ணத்தின் பகுதியாகவும் சொல்லப்பட்டுள்ள இந்தப் பொருள்கோள் என்னும் கலைச்சொல் இங்கே உண்டாக்கிய விளைவுகள் தான் இதற்குக் காரணமா? என்ற கேள்வியைக் கேட்டு விடைதேடவேண்டியுள்ளது.

பொருள்கோள்:

நமக்குக் கிடைக்கும் செய்யுள்களில் இடம்பெறும் சொற்களை/ சொற்றொடர்களை அவை அமைந்துள்ள நிலையிலேயே பொருள் கொள்ள முயன்றால் கிடைக்கும் பொருள் பொருத்தமாக இல்லையெனத் தோன்றும்போது, சொற்களை/ தொடர்களை இடம் மாற்றி நிறுத்தி வாசித்துப் பார்த்து பொருள் உண்டாக்குவதைப் பொருள்கோள் என்கிறோம். இப்படி இடம் மாற்றுவதை எட்டுவகை அல்லது நிலையெனப் பவணந்தியின் நன்னூல் கூறுகிறது. அவை:1) ஆற்றுநீர்ப் பொருள்கோள் 2) மொழிமாற்றுப் பொருள்கோள் 3) நிரனிறைப் பொருள்கோள் 4) விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்) 5) தாப்பிசைப் பொருள்கோள் 6)அளைமறிப் பாப்புப் பொருள்கோள் 7) கொண்டுகூட்டுப் பொருள்கோள் 8) அடிமறி மாற்றுப் பொருள்கோள் (நன்னூல் 411 - 419) தொல்காப்பியம் காட்டும் நிரல்நிறை, சுண்ணம், மொழிமாற்று, அடிமறிமாற்று ஆகிய நான்கைத் தனது எச்சவியலில் சொல்கிறது ( 8-13) பின்னர் வந்த இலக்கண நூல்கள் இந்த வகைப்பாட்டில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இப்பொருள்கோள் வகைகளில் சில தண்டியலங்காரத்தில் அணிவகைகளாக ஆகியிருப்பதையும் நாம் பார்க்கிறோம். இவையெல்லாம் வளர்ச்சியா? திசைதிருப்பலா? என்பது நம்முன் உள்ள கேள்வி. இவைகளை விளக்குவதற்கு முயன்ற உரையாசிரியர்கள் விளக்கங்களும் அதற்காக அவர்கள் எடுத்துக்காட்டிய அல்லது எழுதிக் காட்டிய செய்யுள்களையெல்லாம் வாசிக்கும்போது உத்திகளுக்குள் வாசிப்பவர்களை ஆழ்த்தும் நோக்கமே முதன்மையாகப் படுகிறது. செய்யுளின் உரிப்பொருள் நோக்கி நகர்த்தும் வாசிப்பு நோக்கம் பின்னிழுக்கப்பட்டு பாவலனின் அல்லது கவிஞனின் செய்திறன் வல்லமையை விதந்து நிற்கும் வாசிப்பின் பக்கம் நகர்த்திவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது.

இப்போது சில கவிதைகளை வாசிக்கலாம்:

1] கபிலர்


‘மலைவான் கொள்க!’ என, உயர்பலி தூஉய்,
‘மாரி ஆன்று, மழைமேக்கு உயர்க! ‘ எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,
பெயல்கண் மாறிய உவகையர், சாரல்
புனைத்தினை அயிலும் நாட! சினப் போர்க்
கைவள் ஈகைக் கடுமான் பேக!
யார்கொல் அளியள் தானே; நெருநல்,
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்,
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்.
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும்நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்.
முலையகம் நனைப்ப, விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள், பெரிதே?

2] பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

3] சத்திமுத்தப்புலவர்

வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே

4] சு.வில்வரத்தினம்

வெளியாரின் வருகையோடு
வேர்கொண்டவாழ்வையும் பிடுங்கிக் கொண்டு
மக்களெல்லாம் வெளியேறிய ஓரிரவிற்குப்பின்
விடியப் பார்த்தால்
வாழ்வெனும் வெள்ளம் வற்றிக் கிடந்த திடலாய்
கிராமம்


முற்றத்துச் சூரியன்,
முற்றத்து நிலா,
முற்றத்துக் காற்றென,
வீட்டு முற்றங்களுக்கே உரித்தான
வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக் கொண்டன.
வேலிகளையும் வெளியார் வெட்டிப் போட்டார்கள்.
வாசல் கதவுகளை உடைத்துப் போட்டார்கள்.
உள்ளதையெல்லாம் கொள்ளையடித்தார்கள்
வீடுகள் திறந்தபடியே கிடந்தன.

திறந்த வாசல்களூடே நுழைந்த காற்று
கதவுகளை சாத்தியும் ,திறந்தும்,தள்ளியும்
உள்ளோடியோடி எதையெதையோ முயன்று
உறவின்மை கண்டபின் தோற்றோடி

வேற்றாகி நின்ற வெளியிடைத் தோய்கிறது.

5 ஆத்மாநாம்

அந்த நகரத்தில்
இருவர் கூடினால் கூட்டம்
நால்வர் கூடினால் பொதுக்கூட்டம்
சாலையில் கூட்டமாய்ச் செல்லக் கூடாது
வீட்டுக்குள் யாரும் நடக்கலாம்
ஒவ்வொரு வீடும்
தார்ச்சாலையாயால் இணைக்கப்பட்டிருக்கும்
மறைவிடங்கள் அங்கில்லை 
குளிப்பவர்கள் கூட்டங்கூட்டமாய்க்
குளிக்க வேண்டும் 
தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவில் மட்டும்.

சிகரெட் பிடிக்கவும் அங்கு தடை 
ஆஷ்ட்ரேயை அதிகாரி பார்த்தால்
அவரை நகரத்தின் சகாராவுக்கு அனுப்புவார்
அங்கே ஏற்கெனவே உள்ளவரோடு சேர்ந்து
அதனைப் பசுமையாக்க வேண்டும்
நகரத்தில் தள்ளிப் போடாத அவசரம்
உள் நாட்டு மனத் தெளிவு
நகரத்தின் மக்களுக்கு கிடைக்கும் ஒரே டானிக்
கடுமையான உழைப்பு

பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை 
அதை வாங்கு இதை வாங்கு என்று
மலிவாக ஏராளமாகக் கிடைத்தது 
நகரத்தலைவரின் பொன்மொழிகள்

எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்
மந்திரிகள் அவரைப் புகழ்ந்தார்கள்
அரசாங்க அதிகாரிகள் புகழ்ந்தார்கள்

மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்
அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து

6 ] சல்மா


இன்று மறுபடியும் 
 ஒருமுறை
என்னைக் கண்ணாடியில் பார்க்கிறேன்.
பிறர் பயப்படும்படியாக 
குறிப்பாக நீ பயம் கொள்ளும்படியாக இல்லை
எனது தோற்றம்.

என்னைத் தொலைபேசியில் அழைத்த
எனது சிநேகிதியின் குரலில்
உன்னை இவ்வளவு கலவரப்படுத்தும்படி
ஒன்றுமேயில்லை
என்னிடம் ஆயுதங்களில்லையெனினும் 
நிச்சயங்களுடனில்லை நீ

நான் தூங்கும்போது
அதைரியத்துடன் விழித்திருக்கிறாய்

என் சிறு அசைவுகளில் பதறி
உருகி விடுகிறது

உன் எஃகு பிம்பங்கள் 
இன்றும் /என்னை வீழ்த்திக் கொண்டிருப்பது

உன் வலிமையில்லை 
உன் பயங்கள்

7] யோகி
என் கருவறை
அறுவதும் பின் இயங்குவதுமாகவே
இருக்கிறது

எந்த நேரம் என்று
பாராமல்
கருவறை அறுவதால்
யாரிடமும் இயல்பாகவும்
நிம்மதியாகவும் பேச முடிவதில்லை

என் கருவரையில் நுழையவிரும்பாத விந்தைப் பற்றி
கேள்வி கேட்கப்படுகிறது

விந்துகள் கருவறையில்
மரமாவதைப் பற்றியும்
ஆணிவேர்கள் வேறூன்றியதைப் பற்றியும்
திரும்பத் திரும்பக் கூறி வருகிறேன்

பதில்கூறும் ஒவ்வொரு கணமும்
கருவறை அறுவதையும் அதில் நீளும்
கவிச்சி நாற்றத்தையும்
என் மனம் ஒவ்வாதபடியே உள்ளது

என் கருவறை அறுபடுவதையும்
கேள்விகள் கேட்கப்படுவதையும்
எக்காலத்திலும் நிறுத்த முடியவில்லை

உதிரக்குழாயை அடைத்த என் பதில்கள்
9 மாதக் கருவென வளர்ந்து
காத்திருக்கிறது பிரசவத்திற்காக

இக்கவிதைகளின் உரிப்பொருளை அறிய பவணந்தி முனிவர் கூறும் பொருள்கோள் மட்டும் போதுமா? என்ற சிந்தனையோடு வாசித்துப் பார்க்கும்போது பொருள்கோள் என்பது மிகுந்த போதாமை கொண்ட ஓர் உத்தி என்பதாக மட்டுமே இருக்கிறது. அப்படியானால் கவிதையை எப்படித் தான் வாசிப்பது.? கவிதையின் இயல்பு, வாசித்தலின் முறைமைகள் பற்றிக் கூறப்படும் திறனாய்வுக் கூற்றுகளை இங்கே தொகுத்துக் கொள்ளலாம். கவிதைகளைப் பற்றிப் பேசும்போது எப்போதும் பயன்படுத்தக்கூடிய உலகளாவிய கேள்விகள் இவை. அவை சிறு பட்டியல் தான். பொதுவான அந்தக் கேள்விகள்:
• கவிதைக்குள் பேசுபவர் யார்?
• என்ன சூழ்நிலைகளில் இந்தக் கவிதை உருவானது?
• என்ன சூழல் முன் வைக்கப்படுகிறது?.
• கவிதையின் வாசகர்கள்அல்லது பார்வையாளர்கள் யார்?
• தொனி என்ன?
• என்ன வடிவத்தில், கவிதை இருக்கிறது.?
• வடிவம் எப்படி உள்ளடக்கத்தோடு தொடர்பு கொண்டுள்ளது ?
• கவிதையின் ஒரு முக்கியமான, செயலியாக ஒலி இருக்கிறதா?
• கவிதையில் ஒரு அடையாளமாக வரலாற்று தருணம் ஏதும் உள்ளதா?
• கவிதை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் இருந்து உருவாகியுள்ளதா?


• கவிதையில் அதற்கே உரிய மொழி அடையாளம் இருக்கிறதா?


• கவிதையில் ஒரு குறிப்பிட்ட விளைவை உருவாக்கும் நோக்கத்தில் படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
• கவிதை பயன்படுத்தியுள்ள உவமை, உருவகம் போன்ற அலங்கார மொழிகள் எவை ?
கவிதை ஒரு கேள்வியை எழுப்புகிறதென்றால், அதற்கான பதில் என்ன?
கவிதை ஒரு பதிலாக இருந்தால் அதன் கேள்வி என்ன?
• தலைப்பு என்ன சொல்ல நினைக்கிறது?
• கவிதையில் அசாதாரணச் சொல் அல்லது தொடர் பயன்பட்டுள்ளதா? அல்லது அசாதாரண முறையில் சொல்லப்பட்டுள்ளதா?

இப்படி நீள்கின்றன இக்கேள்விகள். இத்தகைய கேள்விகளோடு வாசிப்பவன் ஒரு கவிதையை அணுகி விடைகளைச் சொல்லிவிட்டால் அக்கவிதை புரியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை அந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாமல் இருந்தால் கவிதை புரியாமல் போகவே செய்யும். அந்த நிலையில் அந்தத்தகவலைப் பெற முயற்சிக்க வேண்டுமேயொழிய, கவிதை புரியவில்லையென ஒதுக்கி வைத்தலைச் செய்தல் கூடாது. ஆனால் நிகழ்காலக் கல்விப்புல மாணவனும் ஆசிரியர்களும் அத்தகைய முயற்சியைச் செய்வதே இல்லை. திணை துறைக் குறிப்புகள் என்பன கவிதைப்பொருள் அறிய உதவும் கருவி என்றும், சொற்களை / சொற்றொடர்களை மாற்றிப் போட்டுப் பொருள் தேடுவதும் அதற்கான உத்தியே என்றும் வாசித்திருக்கும் நாம் அதைச் செய்வதே இல்லை.

பொருள்கொள்ளலும் சூழலும்

மேலே வாசிக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் குறிப்பான காலம், இடம், நபர், நிகழ்வு , வாழ்க்கை அனுபவம் போன்ற பின்னணிகள் இருக்கின்றன. வாசிக்கப்பட்ட கவிதைகளின் வரிசையில் 
1] வையாவிக் கோப்பெரும் பேகன். துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகக் கபிலர் பாடியது என்ற குறிப்பும் கைக்கிளைத் திணை, தாபதநிலை என்றதுறையும் தான் முதல் கவிதைக்கான சூழல். 
2] தன் காதலை ஏற்காத பெருநற்கிள்ளியின் மீது கொண்ட நக்கண்ணை கொண்ட கைக்கிளை என்பது குறிப்பான பொருள் அல்லது இரண்டாவது கவிதைக்கான சூழல். 
3] சத்திமுத்தப்புலவரின் இந்தக் கவிதைக்கான பொருளை அதற்கு முந்திய கவிதையான “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்பதைக் கொண்டே பெற முடியும். 
4] தன் சொந்த ஊருக்குச் செல்லும் கால்வாயைத் தாண்ட முடியாமல் ஒவ்வொருமுறையும் பார்த்துவிட்டுத் திரும்பும் கண்ணிவெடி பதிக்கப்பெற்ற நிலப்பரப்பில் வாழ நேர்ந்த யுத்தப்பின்னணிதான் சு.வில்வரத்தினத்தின் கவிதைக்கான அர்த்தத்தைத் தரக்கூடியது. 
5.ஆத்மநாமின் கவிதைக்கான அர்த்தம் 1975-77 இல் இந்தியாவில் இருந்த அவசர நிலைக்காலம் என்னும் ஈராண்டு இந்திராகாந்தியின் ஆட்சியாகும். 
6. திருமணத்திற்குப் பின்னும் அவளுக்குச் சிநேகிதங்கள் தொடர்கின்றன; தன் சிநேகிதியோடு அவள் பேசுவாள் / விவாதிப்பாள் என்ற உறுத்தலே கவிதைக்கான பொருளைப் பெற உதவுகின்றன. சல்மாவின் வாழ்க்கை அனுபவம் அப்படியானது என்ற தகவல் கூடுதலாகி விடுகின்றது. 
7. நிழற்படக் கலைஞராகவும் செய்தியாளராகவும் அலையும் யோகிக்குள் தனிமையையும் இருளையும் நேசிக்கும் மனோபாவம் இருக்கிறது என்பதான சொந்த வாழ்க்கைக் குறிப்பும் கவிதையின் திறவுகோலாக மாறுகிறது.

பொருள் கோள்வகைகள், உவமை வகைகள், வண்ணங்கள் போன்றனவெல்லாம் செய்யுளுக்குள் இருக்கும் உத்திகள் மட்டும் தான். அவை ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த தொடர்கவிதைகளை வாசிக்கும்போது அர்த்தம் உருவாக்கப் பயன்படுமேயொழிய கவிஞன் உணர்த்த விரும்பிய உரிப்பொருளைக் கண்டடைவதற்கு அவை எந்தவிதத்திலும் உதவுவதில்லை. ஆனால் தொல்காப்பியரின் மூன்றாவது அதிகாரம் மட்டுமே தமிழில் கவிதை எப்படி எழுதப்பட்டது என்பதைச் சொன்னதோடு, அக்கவிதையை எப்படிப் பொருள் கொள்ளலாம் என்பதைப் பேசும் கோட்பாடு மற்றும் செய்ம்முறை விமரிசன நூலாக இருக்கிறது.

பாவியல் கோட்பாடு

கவிதையை எப்படி வாசிப்பது அல்லது கவிதை எவ்வாறு உருவாகும்? என்பதற்கான விரிவான பதில் தொல்காப்பியத்தில் கிடைக்கிறது. அதேபோல் அரிஸ்டாடிலிடம் கிடைக்கக்கூடிய பதில் நாடகத்தை எவ்வாறு வாசிக்கலாம் அல்லது நாடக உருவாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதற்கான பதில் மட்டும் தான். இருவரையும் ஆழமாக வாசிக்கும் ஒருவருக்குக் கவிதை எதை எழுதிக் காட்ட முயல்கிறது என்பது புரிந்திருக்கவே செய்யும். கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டுகின்றன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடையை - தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை- பின் வாங்கியதின் காரணத்தை, தோல்வி தந்த துயரத்தை என ஒரு பயணமாக அதைச் சொல்லலாம். இதன் மறுதலையாகத் தேடிக் கண்டடைந்ததின் கொண்டாட்டத்தை - கொண்டாட்ட மனநிலையை அடுத்தவர்க்கும் அளித்துவிட நினைக்கும் பரவசத்தை - பரவசமாய்ப் பரவிக் கிளர்த்தும் முடிவாக நிற்கும் இன்மையை என இன்னொரு பயணமாக அமையலாம். கவிதை எழுதும் பயணம் எத்தகையதாக இருந்தாலும் கவிதை எழுதப்படுவதற்கு ஓர் உணர்வு வேண்டும். அவ்வுணர்வைத் தன்னிலை (self) சார்ந்தும், பிறநிலை (other) சார்ந்தும் இரண்டாகப் பிரிக்கலாம். தன்னிலை தன்னிலையோடு கொள்ளும் உறவும் முரணும் எழுப்பும் உணர்வுகள் என்பன ஒரு பாதை. தன்னிலை பிறநிலையோடு கொள்ளும் உறவும் முரணும் என்பது இன்னொரு பாதை. பிறநிலையும் பிறநிலையும் கொள்ளும் உறவையும் முரணையும் கண்டு நிற்கும் தன்னிலையின் பாடுகள் என்பன மற்றொரு பாதை.இப்படிச் சில பாதைகளில் தான் கலை இலக்கியப் பயணங்கள் நடக்கின்றன என்பதை நிகழ்காலத்திறனாய்வுகள் விளக்குகின்றன. இவற்றையே அகவுணர்வு, புறவுணர்வு, புறப்புற உணர்வு எனத் தமிழின் தொடக்கநிலைக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியம் விரிவாகப் பேசுகிறது.

தன்னிலையின் விருப்பத்தால் குடும்ப அமைப்பு உருவாகிறது. பிறநிலையின் மீது கொள்ளும் அக்கறையால் குடும்பம் தவிர்ந்த அரசு போன்ற அமைப்புகளும், அதன் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிற அமைப்புகளும் உருவாகின்றன. தொல்காப்பியம் இவ்வுணர்வுகளை உரிப்பொருட்கள் எனவும், மெய்ப்பாடுகள் எனவும் பேசியுள்ளது. புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல், ஒருதலைக்கோடல், பொருந்தா நோக்கு என்பன அகநிலை உணர்வுகள். அதன் புறனான வெட்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன புறநிலை உணர்வுகள். இவைகளை ஏற்றுக் கவிதையாக்கும்போது உருவாகும் உணர்வு வெளிப்பாட்டு நிலையை மெய்ப்பாடுகள் எனச் சொல்லி அவை முதன்மையாக நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டாகும் எனவும், இவ்வெட்டே எட்டு எட்டாய் விரியும் எனவும் அது விரித்துள்ளது.

ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம் பெறுதல் அவசியம். அவை முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. இந்த மூன்றும் ஒரே கவிதையில் அமைவது கட்டாயமில்லை. முதல்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றில் எது முக்கியம் என்றால், உரிப்பொருள்தான் முக்கியமானது என்பதை வலியுறுத்த. (அகத்திணையியல்.3) எனவும் தொல்காப்பியம் எழுதியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உரிப்பொருள் இல்லாமல் கவிதை அல்லது இலக்கியம் இல்லை. ஆனால் அவ்வுரிப்பொருள் தெய்வம், உணவு விலங்கு, மாமரம் புல்பறை, செய்தி, யாழ் முதலான கருப்பொருள்களால் விளக்கம் பெறுகிறது (அகத்திணையியல். 20 ) . உரிப்பொருளும் கருப்பொருட்களும் முதல்பொருளால் அர்த்தம் பெறுகின்றன. முதல் பொருள் என்பன நிலம் பொழுதும் (Time and Space). இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தினூடாக விளக்கும் அரிஸ்டாடில் இவ்விரண்டையும் மையப்படுத்தியதோடு பாத்திரங்களையும், அவற்றின் வினைகளையும் மையப்படுத்தியே விளக்கங்கள் அளித்துள்ளார். மூவோர்மைகள்(three unities) - காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள்- பற்றிய அரிஸ்டாடிலின் கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை என்பதை நினைவில் கொள்வோம். தொல்காப்பியமும் இந்த மூவோர்மைகளின் இணைவே கவிதை என்கிறார். இந்த இணைவிலேயே கவிதை உருக்கொள்கிறது. இந்த இணைவை அவிழ்ப்பதில் தான் கவிதையின் பொருள் விளக்கம் பெறுகிறது.

அரிஸ்டாடில் சொன்ன பாத்திர முரண் சார்ந்த தொடக்கம் , சிக்கல், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என அமையும் நாடகவடிவம் நல்திற நாடகவடிவமாக உலகம் முழுவதும் இலக்கியம் கற்பிக்கும் துறைகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கவிதையின் வடிவம் பற்றிப் பேசும் தொல்காப்பியரின் கோட்பாடு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லவேண்டியுள்ளது. இலக்கியத் திறனாய்வு செய்பவர்களும் உணரவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
============================================================

2015 மார்ச் 23-25 தேதிகளில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் செம்மொழி நிறுவன நிதியுதவிக் கருத்தரங்கில் வாசிக்க எழுதப்பட்ட கட்டுரை. வாசிப்பு நாள். 25-03-2015. தொடர்ச்சியாக இதனையும் வாசிக்கலாம்.

முடிவிலிகளில் அலைபவர்களின் கவி அடையாளம்

தனியன்களின் தன்னிலைகள் நவீனத்துவக் கலைகளுக்குள் அலையும் பிம்பங்களாக இருக்கிறார்கள். வாழும் சூழலோடும், அன்றாட நடப்புகளோடும் முரண்படும் இத்தனியன்களின் அடையாளங்கள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்லமு டியும்.ஈடுபாடுகொண்ட வெளிகள், ஆர்வங்கள், வினைகள், மனிதர்கள் என எதன்மீது அக்கறையற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதால், மற்றவர்களைப் பற்றிய வெளிப்பாடுகளைத் தவிர்த்துவிட்டுத் தங்களையே பேசுபொருளாக்கிக் கொள்வார்கள்.

மேற்கில் இத்தகைய தனியன்கள் அதிகமும் செயல்பட்ட கலைவடிவம் ஓவியம். குறியீட்டியல், குரூரவியல், அபத்தவியல், மிகைநடப்பியல் ஓவியங்களை வரைந்தவர்களின் கலைத் தொகுதிகளைக் கவனித்துப் பார்த்தால், அவற்றுக்குள் நிகழ்காலத்தின் மீதான - அன்றாடத்தைக் கடப்பதின் மீதான அச்சமும் பதற்றமும் குலைத்துப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அத்தகைய ஓவியங்களை விவாதிக்கும் விமரிசகர்கள் அவ்வோவியங்களின் வழியாக பெருநகர வாழ்விற்குள் சிக்கித்தவிக்கும் தனியன்களின் முடிச்சுகளாக விளக்குகிறார்கள். இத்தனியன்களுக்கு மேற்கின் வாழ்க்கையில் - அவர்களின் சூழலில் மூர்க்கமாக மீறுவதற்குப் பலவும் இருக்கும். நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த சமயம், புது நம்பிக்கையாக மாறிய சட்டவிதிகள், களிப்பூட்டுவனவாகச் சொல்லப்பட்ட கொண்டாட்டங்கள், கோஷங்கள் என ஒவ்வொன்றையும் மீறிப் பார்க்க நினைக்கும்போது கலையின் பரிமாணங்கள் விரிந்துகொண்டே போகும். ஒன்றை வரையத்தொடங்கும்போதே, என்ன இப்படி இருக்க வைத்த கட்டுப்பாட்டை நான் மீறுகிறேன்; சிதைக்கிறேன்; குலைத்துப் போடுகிறேன் எனப் பிரகடனப்படுத்தும் ஓவியங்களை வரைந்துகொண்டே இருப்பார்கள். அப்படி வரையப்படும் ஓவியத்தொகுதி அவர்களின் முடிவிலியற்ற வாழ்வின் பரப்பாக மாறிவிடும்.

தமிழ்க்கலைப்பரப்பில் அப்படியான ஓவியர்களை அடையாளப்படுத்த முடியவில்லை. அதற்குப் பதிலாகக் கவிகள் அந்த இடத்தைக் கைப்பற்றித் தங்களை முடிவிலிகளின் தனியன்களாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஓவியத்தின் இடத்தைத் தமிழில் கவிகள் தனதாக்கிக் கொண்டு சில கணங்களை, சில காட்சிகளை, சில பரிதவிப்புகளை எழுதிக்காட்டுகிறார்கள். ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நெருக்கடிகள் எவை எனத்தீர்மானிக்கக் கூடிய குறிப்புகளைப் பரந்த வெளிக் குறியீடுகளாகவோ, படிமங்களாகவோ வைக்காமல் அவற்றையும் அவர்களது சொந்த வாழ்க்கையின் சுருங்கிய வெளியிலிருந்தே உருவாக்குகிறார்கள். மிகக்குறுகிய வெளிக்குள் தங்களைத் தாங்களே சிதைத்தும் குலைத்தும் வார்த்தைகளுக்குள் அலையவிடுகிறார்கள். அப்படிக் காட்டுவதில் ஏற்படுத்தும் சலிப்பால் அதிகம் எழுதாத கவிகளாகவும் தேங்கிப் போகிறார்கள். கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் கால் நூறு எண்ணிக்கையில் அப்படியான கவிகளை - கவிதைகளின் தொகுதிகளைப் பட்டியல் போடலாம்.

தமிழின் நவீன கவிகளில் மிகக்குறுகிய வட்டதிற்குள் வாசிக்கப்படும் கவிதைகளை எழுதுபவர்களின் கவிதைகளுக்குள் இருப்பவர்களை வெளியே தேடவேண்டியதில்லை. பெரும்பாலும் கவிகளின் தன்னிலைகளே சொல்லியாகவும் கேட்போராகவும் இருக்கின்றன. கவிதைச் செயல்பாட்டில் அல்லது தொடர்பாடலில் தங்களை முன்வைப்பதற்குப் பதிலாகத் தங்களின் மீதான ஒவ்வாமைகளுக்குள் நுழைந்து முடிவுகளைச் சொல்ல முடியாமல் முடிவிலிகளுக்குள் மாட்டிக்கொண்டதாய் பதற்றப்படும் அவர்களின் தன்னிலையைச் சின்னச் சின்னக் கூட்டமாகக் கூடக் காட்ட முடியாது.
வகைமாதிரிகளாகச் சொல்லமுடியாமல் ஒவ்வொரு தனியன்களாகவே இக்கவிகள் மிதந்து காணாமல் போகிறார்கள். தமிழ்ச் சமூகம் தங்களைக் கவனிப்பதில்லை என்ற கோபமும் ஒதுங்கிப் போகும் நிலைபாடுகளும் இருக்கும். குடிப்பதையும் தற்கொலை செய்து கொள்ளத் தயாராக இருப்பதையும் தொடர்ந்து அவ்வகைக் கவிதைகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. பலரது வாழ்க்கையும் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. எழுதுவதற்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்ந்து முடிந்தவர்களாக அவர்களைக் கொண்டாடும் கவிதை ரசனை, அப்படியானவர்களை உன்னதக கவி மரபினராக வளர்த்தெடுக்கிறது.

மறைந்து திரியும் தனியன்களான இப்பிம்பங்கள் அமைப்புகளுக்குள் இயங்கும் பாத்திரங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாவகைக் கட்டுப்பாடுகளையும் - அவை கட்டுப்பாடுகள் என்று அறிந்துகொண்டும் அதற்குள் உழலும் கணவன்மார்களையும் மனைவிமார்களையும் நகைத்துக் கேலி செய்வதற்கு முன்பு, காதலில் விழும் ஆண்களின், பெண்களின் அபத்தங்களையும் சிரித்துக் கடந்துபோகும். மாதச்சம்பள வாழ்க்கைக்குள் சுகம்காணும் மனிதர்களைச் சமூகவிரோதிகள் போலக் காட்டும் இவ்வகைக் கவிதைகள், அவ்வகை அமைப்புகள் மீது விமரிசனங்களை வைக்காமல், அவற்றுக்குள் இயங்கும் மனிதர்களையே நகைப்புக்குரியவர்களாகக் காட்டும் தன்மை கொண்டவை.

தங்களைச் சுற்றியிருக்கும் பேரமைப்புகளின் இயக்கத்தின் தர்க்கத்தையும் வன்முறை இயல்புகளையும் பேசத்தெரியாத இக்கவிகள், அதற்குள் நுழையாமல், வெளியேறித் தவ வாழ்க்கை அல்லது துறவு வாழ்க்கையில் இருப்பதாகப் பாவனை செய்து கொள்கிறார்கள். எழுத்து இதழின் வழியாக உருவாக்கப்பட்ட நவீனத்துவத் தனியன்களின் நீட்சியைக் கொண்டாடும் மனநிலையை 1990-களில் தோன்றிய இடைநிலை இதழ்களும், அவற்றின் பதிப்பக அமைப்பும் கைகழுவின என்றுகூடச் சொல்லலாம். அதன் காரணமாகவே இடைநிலை இதழ்கள், சிற்றிதழ் மரபுக்குள் இல்லை என்ற விமரிசனங்களும் எழுந்தன. அதற்குப் பின் தோன்றிய சிற்றிதழ்களில் அதிகமும் கவிதைகளே முதன்மையான வெளிப்பாட்டு வடிவமாகவும் தனித்த அடையாளமாகவும் இருந்தன என்பதைக் கவனித்தவர்களுக்கு இது விளங்கலாம். உதிரித்தனம் கொண்ட இவ்வகைக் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பதிப்பகமாகப் புது எழுத்துப் பதிப்பகம் கடந்த பத்தாண்டுகளில் செயல்பட்டுள்ளது. அதே நேரத்தில் புது எழுத்து பதிப்பகத்தின் நோக்கமே அதுதான் என்றும் சொல்ல முடியாது. தமிழின் நவீனக் கவிதைகளைப் பதிப்பிக்க வேண்டும் என்ற விருப்பத்திற்குள் இவ்வகைக் கவிதைகள் பாதிக்குமேல் பதிப்பு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் கவிதைத்தொகுதிகளைத் தனித்தனியாகப் பேசுவதைவிடவும் ஒரு போக்காகக் காட்டி விவாதிக்க வேண்டும். அவ்விவாதம் தமிழின் நவீனத்துவக் கவிதைகளின் இயங்குநிலையை அறிமுகப்படுத்தும் விவாதமாக அமையக்கூடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்