எட்டுப்பட்டிகளும் பதினெட்டுப்பட்டிகளும்


சில எண்கள் சார்ந்து சில மரபுத்தொடர்கள் உருவாகியிருக்கின்றன; சில நம்பிக்கைகளும் உள்ளன. மூன்று, ஆறு, எட்டு, ஒன்பது முதலான எண்களோடு கடவுள்களுக்குத் தொடர்புகள் உண்டு. மும்மூர்த்திகள், ஆறுமுகன், நமசிவாய நமஹ என்னும் எட்டெழுத்து, நமோ நாராயணாய நமஹ என்னும் ஒன்பது எழுத்து போன்றன கடவுள்களின் அடையாளங்கள். பெருமாள் என்னும் நாராயணனோடு ஒன்பது எழுத்து தொடர்பில் இருக்க, நெல்லைக்குப் பக்கத்தில் தாமிரபரணிப்படுகையில் பெருமாள் இருக்கிறார். அவரது கோயிலுக்குப் பெயர் எட்டெழுத்துப் பெருமாள் கோயில். 

எட்டு, பதினெட்டு என்ற எண்கள் தமிழ்நாட்டுக்கிராமங்களில் அதிகம் சொல்லப்படும் எண்கள்கூட. எட்டுப்பட்டி ஜமீன், பதினெட்டுப்பட்டி ஜமீன்கள் இருந்த காலத்தை நினைவூட்டும் அந்த வழக்காறுகள் சில வரலாற்றைச் சொல்வன. சின்னதான ஜமீன்தாரின் ஆளுகைக்குள் எட்டுக்கிராமங்கள் அடக்கம். அதைவிடப் பெரிய ஜமீன்தாரின் ஆளுகையில் பதினெட்டுக்கிராமங்கள் அடக்கம். எனது கிராமம் எழுமலை என்னும் ஜமீனில் அடக்கம். அந்த ஜமீன்தாரின் கீழ் பதினெட்டு ஊர்கள் இருந்தன என்பதற்கு ஆதாரமாக இருந்த நிகழ்வாக இருந்தது அங்கு கொண்டாடப்படும் முத்தாலம்மன் திருவிழா. ஒரே நேரத்தில் பதினெட்டு அம்மன்கள் கிளம்பி அந்தந்த ஊர்களுக்குப் போகும். கிளம்பும் இடம் என்பது பானை வனையும் குயவர்களின் தொழிற்கூடம் தான். பதினெட்டு அம்மன்களும் ஒரே நேரத்தில் கண் திறக்கப்பட்டுக் கிளம்பும்; ஆனால் மூன்று ஊர்களில் இருந்த குயவர்களின் கூடங்களிலிருந்து. 

நான் பார்க்க எழுமலையிலிருந்து ஒரே நேரத்தில் ஒன்பது அம்மன்கள் கிளம்பின. வரும் வழியில் அந்த ஜமீன் தாரின் பெரிய வீடு இருக்கும்;அங்கே நின்று அந்தக் குடும்பத்தினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு அம்மன் கிளம்பிவிடும். ஒவ்வொரு ஊர்க்காரர்களும் தங்கள் கொண்டாட்டத்தை வெடிகள் மூலமாகவும், ஏற்பாடு செய்த நாதஸ்வரக் கச்சேரி மூலமாகவும் கெத்துக்காண்பிப்பார்கள். அன்றிரவு முழுவதும் எழுமலையின் பேருந்து நிலையத்திற்கு அருகில் போடப்பட்ட மேடையில் திறமான நாதஸ்வரக்கலைஞர்களின் கச்சேரியைக் கேட்டிருக்கிறேன். அது ஒருவிதப் போட்டிதான். அடுத்த திருவிழாவரை அந்த இசைக்கச்சேரி மட்டுமே நினைவில் இருக்கும். என் தந்தையின் காலத்தில் எழுமலையிலிருந்து ஒரே நேரத்தில் பதினெட்டு அம்மன்களும் கிளம்பியதாகவும் பின்னர் மூன்று ஊர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டதாகவும் சொன்னார். அந்தப் பிரிப்பில் சாதியப்பாகுபாடு இருந்ததாகவும் சொன்னார். அந்தத் திருவிழாவை நடத்த குறிப்பிட்ட கால இடைவெளியெல்லாம் கிடையாது. ஏழாண்டு இடைவெளி, பத்தாண்டு இடைவெளி என அவ்வப்போது நடத்துவார்கள். இதுவரை நான் நான்கு முத்தாலம்மன் திருவிழாக்களைப் பார்த்திருக்கிறேன். ஒன்று நடந்தபோது பாண்டிச்சேரியில் இருந்தேன்; போகவில்லை. சுதந்திரத்துக்குப் பின் பதினெட்டு ஊர்களிலும் ஏதாவது பஞ்சாயத்து என்றால் ஜமீன்தாருக்கு முன்பெல்லாம் தகவல் தெரிவிக்கப்படுமாம். அவரோ, அவரது சார்பில் ஒருவரோ வருவார்களாம். எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் அந்த வழக்கம் நின்றுபோய்விட்டது. நிலமானிய காலத்து அதிகாரம் நின்றுபோனதின் அடையாளம் அது. ஆனால் முத்தாலம்மன் திருவிழா நிலமானிய காலத்து பண்பாட்டு நடவடிக்கை. திடீரென்று சமூகத்தின் கூட்டு நனவிலியிலிருந்து கிளம்பிவிடும் 

கூட்டு நனவிலிக்குள் இருக்கும் எட்டு, பதினெட்டு போன்ற எண்களின் நினைவை நமது சினிமாக்காரர்கள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கிராமிய சினிமா அல்லது மண்வாசனை சினிமா என்ற அடையாளத்தோடு வரும் படங்களில் இந்தச் சொற்றொடர்கள் வந்துவிழுந்துவிடுகின்றன. அந்த எண்களோடு சேர்ந்து நாட்டாமைகள் என்ற சொற்களும் சேர்ந்துகொள்வதுண்டு. நாட்டாமைகள் அந்தக் காலத்து ஜமீன் தார்களின் பதிலிகள். நிலவுடைமையாளர்கள்; பெருந்தனக்காரர்கள். எட்டு எட்டாய் மனித வாழ்க்கையைப் பகுத்துப் பேசிய ஒரு பாட்டால் பெயர் பெற்றவர் உச்சநடிகர் ரஜினிகாந்த். பாட்ஷா படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுக்குப் பின்னர் தன்னைத் தமிழ்நாட்டின் நாட்டாமைகளில் ஒருவராக நினைத்துக்கொள்கிறார் என்பது கூடுதல் தகவல். ஆனால் பாடலை எழுதியவர். திராவிட அடையாளம் – பகுத்தறிவு சிந்தனை கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து என்பதும் கூடுதல் தகவலே. 

*********** 

இப்போதும் எட்டுப்பட்டி, பதினெட்டுப்பட்டி என்ற மரபுத்தொடர்கள் தேர்தல் காலத்தில் ஆட்சிக்கு வந்துவிடுகின்றன. அதிலும் உள்ளாட்சித்தேர்தல் காலத்தில் அதன் புழக்கம் அதிகம். உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நடக்க வேண்டிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அச்சு மற்றும் செய்தி ஊடகங்களின் மையப் பொருளாக இருப்பவை உள்ளாட்சி அமைப்புக்கள் தான். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஊடகங்களின் கவனம் முழுவதும் அவை பற்றித் தான் இருக்கும்.தேர்தல்கள் முடிந்து பதவி ஏற்பது வரை இந்தக் கவனம் நீடிக்கும். அதன் பிறகு ஊடகங்கள் வேறு பக்கம் கவனத்தைத் திருப்பி விடும். மக்களும் கூட அப்படித்தான். 

தேர்தல்களம் என்பது போட்டியின் களம். ஆனால் கிராமங்களில் நடக்கும் கோழிச்சண்டை, ஆட்டுக்கிடாய் மோதல் மாதிரியான களம் அல்ல. மனிதர்கள் ஒருவரோடு மோதிக் கொள்ளும் மல்யுத்தக் களம் போன்றதும் கூட அல்ல. உடல் வலிமையில் சமநிலை இருப்பதாக நம்பும் இருவர் மோதி , ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் போட்டி முடிவுகள் இங்கு இல்லை. இப்போட்டி பலருக்கும் இடையே நடக்கும் போட்டி. போட்டியில் பங்கேற்கும் நபரின் பலம் என்பது குறிப்பிட்ட வட்டாரத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பலம் தான். உண்மையில் ஒருவரின் பலம் என்பது அவரே உண்டாக்கிக் கொள்ளும் பலம் அல்ல; அவரைப் பற்றி உண்டாக்கப் படும் கருத்து பலம் தான் அது. 

ஒருவரைப் பற்றிய கருத்து அவர் வாழும் வாழ்க்கை முறையாலும் பிறரோடு கொள்ளும் உறவு முறையாலும் உண்டாக்கப்படும். மக்களாட்சி முறைக்கு மாறிய பின்பு ஒருவரைப் பற்றிய கருத்தைத் தீர்மானிப்பதில் அவர் சாந்துள்ள கட்சியும் அதன் கொள்கைளும் முக்கிய பங்கு வகிப்பனவாக மாற்றம் பெற்றன. இவர் இப்படிப் பட்டவர்; அவர் சார்ந்த கட்சி இத்தகைய கொள்கைகளைக் கொண்டது; அதனால் அவரது வாழ்க்கை முறையும், பழகும் முறையும் இவ்வாறு இருக்கும் என்று நம்பப்பட்டது. இன்று நடைமுறையில் ஒருவரைப் பற்றிய கருத்துருவாக்கத்தில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் இடம் பிடித்துள்ளனவா? கேள்வியை எழுப்பிக் கொள்ளுங்கள். பதிலைப் பின்னர் பார்ப்போம். 

எல்லாக் கட்சிகளும் இந்திய தேசத்தின் பொதுக்குடிமைச் சட்டங்களை ஏற்றுக் கொண்டவைகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப் படுவதின் பின்னணிகளை நினைவுக் கொண்டு வாருங்கள். அப்படிச் சொல்வதின் நோக்கம் என்ன? ஒவ்வொரு கட்சியும் அக்கட்சிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை - குறிப்பாக குடிமைச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதுதான். சட்டத்தின் அதிகாரமும் சட்டப்படியான நிர்வாகமும் நடைபெற வேண்டும் என்பதுதான். அதனை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புக்கு வருபவர்கள் குடிமைச் சமூகத்தின் நோக்கத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். அப்படி அறிந்தவர்கள் தான் ஊராட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளாக வருகிறார்களா.? இந்தக் கேள்வியையும் எழுப்பி வைத்துக் கொள்ளுங்கள். 

சுதந்திர இந்திய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும்; பல தளங்களில் ஆட்சி அதிகாரம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அந்த அதிகாரத்தைச் செயல் படுத்த விரும்பும் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர்களின் நிர்வாகத்தை அருகில் இருந்து மக்கள் கண்காணிக்க வேண்டும்; தங்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை அதன் வழியாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் அந்த அமைப்புகளில் உறுப்பினர்களாகும் நபர்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அந்தந்தப் பகுதியின் பிரச்சினைகளை நன்கு அறிந்து அதை நிறை வேற்றுவர் என்ற உயரிய நோக்கமும் விருப்பமும் அதன் பின்னணியில் இருக் கிறது. தேர்ந்தெடுக்கப்பட உள்ள நபர்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பகுதியின் தேவையை நிறைவேற்றும் நோக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்களா? இது இன்னொரு கேள்வி. கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். பதில் கிடைத்தால் நல்லது. 

ஒரு தேசத்தின் கட்டமைப்பு எத்தகைய குடிமைச் சமூகக் கட்டமைப்பாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த தேசத்தின் பொருளாதார, சமூக வாழ்வின் மேன்மைகளும் அமையும் என்பது அறிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு மட்டும் அல்ல; நடைமுறை உண்மையுங்கூட. 

இந்தியாவின் குடிமைச் சமூக அமைப்பு ஆங்கிலேயர்களின் வருகையால் பலவிதங்களில் மாற்றம் பெற்றது என்பது உண்மை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற துறைகளில் ஆங்கிலேய அரசாங்கம் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் இன்று பல்கிப் பெருகி வளர்ந்திருக்கிறது. மைய அரசின் வலிமை, நோக்கம் போன்றவற்றை நெறிப்படுத்தி அதில் கவனம் செலுத்தித் தங்கள் வியாபார வெற்றியைச் சாதித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் கிராம அளவில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் விட்டு வைத்தனர் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியான மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போது ஏற்படாமல் இருந்தது கூடக் காரணமாக இருக்கலாம். 

அதே நிலையை இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் நமது தேசத்து அரசுகளும் தொடர்ந்து கொண்டிருப்பது ஆச்சரிய மூட்டுவதாக இருக்கிறது. வட்டாரங்களில் அதிகாரம் செலுத்தி வந்த ஜமீந்தார்களை மானியம் கொடுத்து ஒழித்து விட்டதாக வரலாறு சொல்கிறது. ஜமீந்தார்களின் அதிகாரம் என்பது ஒரு நபரின் அதிகாரம் அல்லது ஒரு குடும்பத்தின் அதிகாரம் என்று மட்டும் கருதினால் அந்த அதிகாரம் ஒழிந்து விட்டது என்று மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இந்தியக் கிராமங்களில் ஜமீந்தார்களின் அதிகாரம் என்பது சாதிகளின் அதிகாரம் தான். ஒவ்வொரு கிராமத்திலும் ஆதிக்க சாதியாக எது இருக்கிறதோ அதுதான் அங்கு அதிகாரத்தை நிலை நாட்டுகிறது. 

குடிமைச் சமூக அமைப்பில் நிர்வாகிகளாகப் பங்கேற்கும் உறுப்பினர்கள் பற்றிய கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுவதாக இருப்பது அவரது சாதி தான் என்பது வெளிப்படையான ஒன்று. பாராளுமன்றத்தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிடும் நபர்களைப் பற்றிய கருத்தை அவரது சாதி பலமும் பணபலமும் சேர்த்து தான் உருவாக்குகின்றன. இன்று இவ்வெளிப்பாட்டின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு சாதிப் பின்னணியுடன் அடையாளப்படுத்தப்படும் நிலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. 

கோயில் திருவிழாக்கள், மழை, நோய், கலவரம் போன்ற அவசரக்காலத் தேவைகள் எவை என்று அறிந்து அவற்றை நிறைவேற்றிக் காட்டுவதன் மூலம் மனிதநேயம் மிக்கவர்கள் என்ற நேர்மறைக் குணம் கொண்டவர்களாகத் தோற்றமளிக்கும் நாட்டாமைகளைப் பெரிய மனிதர்கள் என்று அழைப்பது வெளிப்புறத் தோற்றம் தான். உள்ளே அவர்கள் கேள்விக்கப் பாற்பட்டவர்களாக வலம் வருபவர்கள் என்பதுதான் உண்மை. சிவில் சட்டம் என்பதற்குப் பதிலாகக் கிராமமரபு எனப் புதிய சட்டவிதிகளைத் தான் அவர்கள் நடைமுறையில் பின்பற்றுவார்கள். 

பொதுக்குடிமை [சிவில்] சமூகத்திற்குத் தொடர்ந்து சவால் விடும் இவர்களின் அதிகாரம் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலின் போது வெளிப்படையாகத் தெரிய வருவதும் உண்டு. பெரியவர் போட்டி போடுகிறார் அவரை எதிர்த்து யாரும் நிற்க வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கி வைத்திருப்பது பெருந்தன்மையான நாட்டாமைக் குணம். அதன் தொடர்ச்சியாகத் தான் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்ற நடைமுறைக்கெதிராக அப்பதவிகளை ஏலம் விட்டு முடிவு செய்யலாம் என்பதையும் கருத வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் அதிகாரத்தின் பலனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கிராமத்தின் பெரும்பான்மை என்ற பெயரில் அந்தப் பஞ்சாயத்துக்களில் தேர்தலே நடத்த விடாமல் தடுப்பதும் நாட்டாமைக் குணத்தின் வன்மையான வெளிப்பாடு அல்லாமல் வேறல்ல. 

நாட்டாமைகளின் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் நாயகத் தனமாக்கிப் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் தமிழ் திரைப்பட உலகம் விவேக் மாதிரியான காமெடி நடிகர்களைக் கொண்டு விமரிசனமும் செய்கிறது. காமெடி அந்த நேரத்தில் சிரிப்பை வரவழைத்துவிட்டுக் காணாமல் போய்விடும். நாட்டாமைக் குணத்தின் வேட்டைக் காடாக இருக்கும் இந்தியக் கிராம சமுதாய அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் உருவாக்காதவரை இந்திய ஜனநாயகத்திற்கு உள்ள சவால்கள் குறையப் போவதில்லை. பயங்கரவாதம் வெளியிலிருந்து வருவன மட்டும் அல்ல. உள்ளிருந்து கிளம்புவனவும் கூடத்தான். 
---------------------------------------------
தினமலர்/ செய்திமலரில்(  01-10-06) எழுதிய கட்டுரையின் இற்றைப்படுத்திய வடிவம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்