அரசியல் தலைமையும் பொருளியல் தலைமையும்

அரசியல் தலைமையைத் தாண்டி பொருளாதார வல்லுநர்களின் தலைமையே நாட்டைச் சரியாக வழிநடத்தும் என்ற கருத்து உலகமயத்தோடு உருவான கருத்து. உலகமயம் வெளியிலிருந்து அறிமுகமானது போலவே மன்மோகன் சிங் போன்ற பொருளாதார வல்லுநர்களின் அறிமுகமும் தொடர்ந்தது. அவரையொத்த இன்னொரு பொருளாதார முதன்மையை வலியுறுத்தியவரே ப.சிதம்பரம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். இதுவரை அவரே அதிக ஆண்டுகள் அப்பதவியிலிருந்து நிதித்திட்டங்களை முன்மொழிந்திருக்கிறார். அவரைக் கடந்த ஆண்டு இப்போதுள்ள அரசு நிதிக்காரணங்களுக்காகவே கைது செய்து சிறையில் அடைத்தது. 

அப்போது இப்படி எழுதினேன்:

அரசியலிலும் சமூக இயக்கங்களிலும் செயல்படும் தனிநபர்களை மதிப்பிடச் சாராம்சவாத அடிப்படைகளைப் பயன்படுத்துவது மட்டுமே சரியாக இருக்கும். அதே நேரத்தில் இலக்கிய வகைகளில் செயல்படும் ஆளுமைகளை மதிப்பிட சாராம்சவாதத்தைப் பயன்படுத்தக்கூடாது. தமிழ் அறிவுலகம் இவ்விரண்டையும் தலைகீழாகவே புரிந்துவைத்துள்ளது.

அரசியல் தள ஆளுமைகளைத் தனித்த சில நிகழ்வுகளைக் கொண்டு மதிப்பிடும்போது பெரும்பிழைகள் ஏற்பட்டுவிடும் என்பதற்குக் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் உதாரணங்கள் இருக்கின்றன. .இப்போது யோசித்தால் அவசரநிலை அறிவிப்பைக் கொண்டு இந்திரா காந்தியை மதிப்பிட்டது பெரும்பிழையாகவே தோன்றுகிறது. அது கடந்த கால உதாரணமென்றால் நிகழ்கால உதாரணம் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய நினைப்பதைச் சொல்லலாம்.

திரு. ப.சிதம்பரத்தை மதிப்பிடத் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? என்பதை மட்டுமே வைத்து மதிப்பிட்டால் பிழையான முடிவுகளுக்கே சென்று சேர்வோம். உலகமயப்பொருளாதார மாற்றங்களை ஏற்றுக்கொண்டு நாடு நகர்ந்தபோது அவரது பங்களிப்புகளும் திட்டமிடல்களும் ஏற்படுத்தியவை நேர்மறையானவைகளா? எதிர்மறைத்தன்மை கொண்டவைகளா? எனப்பார்க்கவேண்டும். மதிப்பிடும் நபர் இடதுசாரிப் பொருளியல் நடவடிக்கைகளின் ஆதரவாளர் என்றால் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன்சிங், ப.சிதம்பரம் என மூவரையுமே நிராகரிக்கலாம். யோசிக்கவே வேண்டியதில்லை. அவர்களை நிராகரிப்பதற்கு இருக்கும் காரணங்களைப் போல இரண்டு மடங்கு காரணங்கள் இந்த ஆட்சியின் பொருளியல் நடவடிக்கைகளை வழி உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொருளியல் நடவடிக்கைகளோடு கடும்போக்கு அரசியல் நெருக்கடிகளை இப்போது திரும்பவந்துள்ள மோடி -அமித்ஜா கூட்டணி ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் ப.சிதம்பரத்தைக் கைவிடுவதும் கைகழுவ வேண்டியவராக நினைப்பதும் ஏற்கத்தக்கதல்ல.

*********

உலகமயம் இந்தியாவில் ஒத்துக்கொள்ளப்பட்ட பொருளியல் உறவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு 30 ஆண்டுகளைத் தாண்டிவிட்டோம். அதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார உறவுகள் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. அரசு தன்னைப் பெருந்தொழில்களில் முதலீடு செய்யும் முதலாளியாக நினைத்துகொண்டு முதலீடு செய்தது. அவை பெரும்பாலும் கனரகத் தொழில்களாக இருந்தன. சிறு மற்றும் குறுந்தொழில்களில் தனியார் துறைக்கு அனுமதிகளை வழங்கியது. அனுமதிகள் வழங்குவதில் கட்டுப்பாடுகளும் தேக்கநிலையும் இருந்தன.ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு ஒரே அனுமதி என்பதைத் தாண்டிப் பல்வேறு கட்டங்களில் அனுமதிக்காக அரசு நிர்வாகத்திடம் தனியார் செல்லவேண்டியதிருந்தது.

தொழில் தொடங்குவதையும் உற்பத்தி செய்வதையும் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்படுத்திய அரசாங்க நடைமுறைகள் தேக்கத்திற்கு வழிசெய்வதாக இருந்தது. நிர்வாகம் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், பயன் அடைந்த மக்கள் என அனைவரிடமும் தேக்கம் நிலவுவதாக நம்பப்பட்டது. நடைமுறைகளின் மேல் அதிருப்தியும் நம்பிக்கை இன்மையும் ஏற்பட்ட நிலையில் தோன்றிய மாற்று முயற்சிதான் திறந்த பொருளாதார நடைமுறை. இந்த நடைமுறைகள் திரு. ராஜீவ்காந்தியின் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றாலும் திரு. நரசிம்மராவின் ஆட்சிக் காலத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னணியில் உலகவங்கியில் பணியாற்றிவிட்டு நிதி அமைச்சராக வந்த முனைவர் மன்மோகன் சிங் இருந்தார். பின்னர் அவரே நாட்டின் முதன்மை அமைச்சரானார். உலகமயத்தைப் புரிந்து வைத்திருந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். புரியாத அமைச்சர்களுக்குப் புரியவைக்கும் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கக் கூடும். அந்தப் புரிதலை மாநில முதல்வர்களுக்கும் மாநிலங்களில் ஆட்சியிலிருந்த மாற்றுக் கட்சியினருக்கும் புரியவைக்கும் முயற்சி அவ்வளவு விரைவாக நடந்தன என்று சொல்லமுடியாது.

**********

இந்திய தேசிய காங்கிரஸ் தனது தலைமைப் பொறுப்பில் அரசியல் தலைமைகளையும் பொருளாதார நிபுணத்தலைமைகளையும் அருகருகே வைத்திருக்கும் கட்சி. விடுதலை இந்தியாவின் முதல் தலைமையமைச்சரான பண்டித ஜவகர்லால் நேரு இந்த இரண்டையும் ஒருசேரக்கொண்டிருந்தவர். இந்தியாவிற்கேற்ற பொருளாதாரமாக தனியார் பங்களிப்பும் அரசின் பங்களிப்பும் கொண்ட கலப்புப்பொருளாதாரமே ஏற்றது என முன்மொழிந்து விவசாயத்தையும் தொழிற்துறைகளையும் நவீனப்படுத்துவதற்கான ஐந்தாண்டுத்திட்டங்களை முன்வைத்தவர். நிலத்திற்கு மேலே வேளாண்மை வழியாகத் தாவரங்கள் என்னும் வளத்தை உருவாக்குவதற்கிணையாகவே, நிலத்திற்கடியில் இருக்கும் உலோகத்தாதுக்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளையும் வளர்த்தெடுக்க பேரணைகளைக் கட்டியவர்; பெருந்திட்டங்களை உருவாக்கியவர். அவருக்குப் பின் அவரது குடும்பத்திலிருந்து வந்து தலைமைதாங்கிய இந்திரா காந்தியும் ராஜீவ்காந்தியும் வெறும் அரசியல் தலைமைகள். அவர்களுக்குப் பொருளியல் துணையாக இருந்தவர்கள் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், பிரணாப் முகர்ஜி, நரசிம்மராவ் போன்றவர்கள். பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அமைச்சர்களான திரு. அடல்பிகாரி வாஜ்பாயி முழுமையான அரசியல் தலைமை இல்லை என்றாலும் திரு நரேந்திரமோடி முழுமையான அரசியல் தலைமை மட்டுமே. அவருக்குத் துணையாக இருந்த நிதி அமைச்சரும் திருமதி நிர்மலா சீதாராமனும் பொருளாதாரத் திட்டமிடல்களை விடவும் வணிக முறைகளை முதன்மையாகக் கருதுபவர்கள். மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் போட்டுத்தந்த வழித்தடத்தில் நிதிவருவாயை வைத்துக்கொண்டு பங்கீட்டு முறைகளைத் திட்டமிடுபவர்களாகத் தங்களை அடையாளம் காட்டியுள்ளார்கள்.
 
திறந்த பொருளாதார முறைக்கு முன்பிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார முறையினால் விளைந்த நன்மைகளைவிடத் தீமைகளும் தடைகளும்தான் அதிகம் எனப் பொருளாதார வல்லுநர்களும் புதிய சிந்தனையாளர்களும் எழுதினார்கள்; பேசினார்கள். அதனை மறுத்துப் பேசிய - எழுதிய சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளில் ஒருசாராரும் -குறிப்பாக இடதுசாரிகள்- தங்கள் கருத்துக்களை வலுவாகச் சொல்லி மக்களை நம்பச் செய்ய முடியாமல் தவித்தார்கள்.அந்தப் பின்னணியில் தான் திறந்த நிலைப் பொருளாதாரம், இந்திய அரசின் மையக் கொள்கையாக மாறியது.

அந்த நேரத்தில் உலக அளவில் சோசலிசப் பொருளியல் உறவுகளையும் கட்டுமானங்களையும் கொண்டிருந்த ரஷ்யா, போலந்து, உக்ரைன், ஹங்கேரி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் உலக ஊடகங்களால் விரிவாகப் பேசப்பட்டன. இந்தியாவின் தேசிய ஊடகங்களும் ஊதிப் பெருக்கின. அவை பெரும்பான்மை மக்களைத் திசைமாறச் செய்தன. மனதளவில் இந்தியர்கள் தாராளமயத்தையும் உலக மயத்தையும், பெருமுதலாளிகளை மையமிட்ட உற்பத்தி மற்றும் விநியோக முறைமைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். மாறத் தயாரானார்கள்.

உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என வெவ்வேறு பெயர்களில் அறிமுகமாகிப் பரவிக் கொண்டிருந்த திறந்தநிலைப் பொருளாதாரம் இந்தியப் பரப்பில் ஏற்படுத்திய சாதகங்களும் பாதகங்களும் எத்தகையன என்று விவாதங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கின, விவாதங்களும் விமரிசனங்களும் இரண்டு வகையாக இருந்தன. இடதுசாரிகள் உலகமயம் ஆபத்தானது என்ற கோணத்தில் விமரிசனங்கள் வைத்தார்கள். அதைத் தடுக்க நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற சொல்லும் தெம்பும் கட்சிப்பலமும் அவர்களுக்கு இல்லை. இதற்கு மாறாகப் பா.ஜ.க.வினர் உலக மயம், தாராளமயம், தனியார் மயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊழல் நடக்கிறது என்று விமரிசித்தார்கள். அத்தோடு இந்தியத் தன்மை பொருளியல் நடவடிக்கைகளின் ஆதரவாளர்கள்போலக் காட்டிக்கொண்டார்கள். . நாங்கள் வந்தால் அந்த ஊழ்ல்கள் நடக்காது என்றார்கள்; இந்தியப் பண்பாடு, இந்தியக் கல்விமுறை, இந்தியச் சிந்தனை முறை போன்றனவற்றைத் திரும்பக் கொண்டுவந்து விடுவோம். அந்நிய அடையாளங்கள் இல்லாமல் ஆக்கப்படும் எனப் பொருளியல் மற்றும் பண்பாட்டுப் பாதைகளைப் பற்றிப் பேசினார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மை மக்களின் ஏற்புடன் நுழைந்த அல்லது நுழைக்கப்பட்ட திறந்த நிலைப் பொருளாதாரம் அதன் சாத்தியங்களைப் பலவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பெருநகரங்களில் முழுமையாகவும், சிறுநகரங்களில் ஒன்றுக்குப் பாதியாகவும் காணலாம். வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் எதாவது ஒரு ரூபத்தில் தனது அடையாளத்தைக் கிராமங்கள் அளவிற்கும் கொண்டு போய்விட்டது உலகமயம். அனைவரையும் நுகர்வோராக மாற்றும் அதன் முதன்மை நோக்கம் இந்தியாவில் வெற்றிகண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் உரிமங்கள் பெறுவது எளிதாக்கப்பட்டதாலும் தொழிற்பேட்டைகளுக்குப் பதிலாகப் பதிலாகத் தொழிற்பூங்காக்கங்கள் அமைக்கப்பட்டு அரசின் நேரடிக்கவனிப்பில் சலுகைகள் தரப்பட்டு உற்பத்தியும் பங்கீடும் நடக்கின்றன. அவற்றிற்குப் பெறப்பட வேண்டிய வரிவிதிப்பு முறை தேசந் தழுவிய முறையாக ஆக்கப்பட்டிருக்கிறது. சில பிரிவுகளில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அரசின் தேர்வு வாரியங்களும் கூட இன்னும் சில ஆண்டுகளில் தேவையில்லாமல் போய்விடக் கூடும். ஏனென்றால் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்திக் காட்டித்தான் மாணவர்களைத் தங்கள் நிறுவனத்தின் பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.

உலகமயப் பொருளாதாரம் சில புதிய துறைகளில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதற்கென உருவாக்கப்பட்ட நபர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. மின்னணுவியல் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு, சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான் ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பு போன்றன வளர்ந்துள்ளன, தகவல் தொழில் நுட்பம், தொடர்பியல்துறை, நுகர்வோர் வணிகம் ஆகிய ஏராளமான இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதோடு கூடுதலான சம்பளத்தையும் வழங்கு அவர்களை நுகர்வுக் கலாசாரத்தின் பங்காளிகளாகவும் ஆக்கி விட்டது. சமைத்துண்ணும் குடும்பங்கள் தொலைந்துகொண்டிருக்கின்றன; இணையவழியில் மதுரை முருகன் இட்லியும் குற்றாலம் பார்டர் பரோட்டாவும் இருட்டுக்கடை அல்வாவும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியும் வீட்டின் கதவைத் தட்டுகின்றன. அடிப்படைத்தேவையான உணவில் தொடங்கி உடை, உறையுள் என அனைத்தும் இப்போது கண்ணில் காணா வணிகம் வழிதான் நடக்கின்றன. ஓட்டிப்பார்த்து இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் அளிக்கப்படும் உத்தரவாதச் சான்றுதழ்களை நம்பியும் காப்பீடுகளின் மேல் வைக்கப்படும் நம்பிக்கையின் அடிப்படையிலும் வாங்கப்படுகின்றன.

இதன் அடுத்த கட்டத்தை அரசியல் கட்சிகளிடம் வெளிப்படையாகப் பார்க்கிறோம். மக்களிடம் தங்கள் அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளைப் பேசுவதற்காகத் தெருமுனைப் போராட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்த அவை இப்போது வேலை வாய்ப்பு முகாம்களைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதன் மூலம் அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் திருப்பி விட முடியும் என நம்புகின்றன.நகரங்களை மையமிட்டுத் தொடங்கப்பட்ட புதுவகைக் கல்வி நிறுவனங்கள் விளிம்புகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. வகைவகையான பாடங்களை அவை அறிமுகப்படுத்துகின்றன. இவையெல்லாம் வியாபார உத்திகளின் நீட்சி எனக் குற்றம் சாட்டப்படும் வாய்ப்புகள் என்றாலும் அவை நடக்கின்றன. ‘வழிகளைப் பார்க்க வேண்டாம்; விளைவுகளைப் பாருங்கள் ’ என்று சொல்லும் அற மறுப்புவாதிகளின் பேச்சு என்றாலும் மாற்றங்கள் நடந்துள்ளன. மாற்றங்களே நடக்கவே இல்லை என்று வாதிட்டால் உண்மையின் பக்கம் இல்லாதவர்கள் என்பதாகிவிடும்.

இந்தியக் காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் மைய, மாநில அரசுகள் இரண்டுமே- பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கி அவற்றை வளர்த்த பின்னர் அவர்களிடமிருந்து வரிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கி மக்கள் நலனுக்குப் பயன்படுத்த முடியும் என நம்புகின்றன. அந்த நம்பிக்கை ஓரளவு நிறைவேறவே செய்துள்ளது. பெருநகரங்களில் தொடங்கும் நான்கு வழிச் சாலைகளும், எட்டு வழிச்சாலைகளும் அவற்றில் கட்டப்படும் பெரும்பாலங்களும் கிராமங்களுக்கும் போகின்றன. வண்ணத் தொலைக்காட்சிகளை விளிம்பு நிலை மக்களும் பார்க்கவே செய்கின்றனர். புது வகை ஆடைகளையும் கல்வியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளத் தடைகள் எதுவும் இல்லை. ஆனால் எப்படிப் பெறுவார்கள் என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்ல முடியாது.ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்துள்ள இந்த ஆறு ஆண்டுகளிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருமுதலாளிகளை உருவாக்குவதற்குப் பதிலாக எண்ணிக்கை குறைவான முதலாளிகள் இருந்தால் போதும் என்று பொருளியல் நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. அதானி, அம்பானி என்ற பெயர்கள் எல்லாவற்றிற்கும் பரிசீலிக்கப் படுகின்றன. காங்கிரஸ் அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட சுரங்கத்தொழில், மின்னுற்பத்தி, பொதுப்போக்குவரத்துகளான ரயில்வே, விமான சேவைகள் போன்றன அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. வேளாண்மையிலும் கூடப் பெரும்பண்ணைகள் அமைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைக்குப் பிந்திய 50 ஆண்டுகள் நடந்த வளர்ச்சிகளைக் கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிட்டு அண்மைய வளர்ச்சியே வேகம் கொண்டது என வாதிட முடியும். ஆனால் அந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்ட உள்கட்டுமானங்கள் இல்லாமல் இப்போதைய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மாற்றங்களும் வளர்ச்சியும் உலகமயப் பொருளாதாரத்திற்குப் பின் ஏற்பட்டுள்ளன என்றாலும் அவை எல்லாம் ஓர்மைப்பட்டனவாக இல்லை.ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் ஒன்றாகக் கருதாமல் குறிப்பிட்ட வகை மனிதர்களை மட்டும் மேன்மைப்படுத்தும் ஒரு கொள்கையை ஏற்கமுடியவில்லை என்பதால் அதன் வெளிப்பாடுகள் பாதகமானவை என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட இந்தியாவில் உலகமயம் எல்லா வகையிலும் தோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல வலுவான ஒரு காரணம் இருக்கிறது.

உலகம் தழுவிய நோக்கம், அமைப்பு, வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கு என வளர்த்தெடுக்க வேண்டிய உலகமயப் பொருளாதாரம் இவை எல்லாவற்றிலும் எதிர்த் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அதன் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில் தவறு ஏதேனும் இருக்கிறதா?உலக அரசுகளின் ஒரு கிளையாக இந்திய அரசும் இருக்கிறது; எனவே உலகத்தின் சட்ட திட்டங்களுக்கு இந்தியர்களும் கட்டுப்பட வேண்டும் எனப் பேசும் அதே நேரத்தில் நமது அரசு அமைப்பின் கடைக்கோடியான உள்ளாட்சி நிர்வாகங்களும் மாவட்ட நிர்வாகங்களும் எந்தவிதச் சுதந்திரமும் இல்லாமல் தனிநபர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகிக் கொண்டிருப்பது நன்றா? தீதா?

இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாகப் பல கேள்விகளை எழுப்பலாம்

1.இங்கே தோன்றிக் கொண்டிருக்கும் வட்டார ஆதிக்க மனோபாவமும் அதன் தொடர்ச்சியாகப் பழைய சாதிப்பெருமைகளின் வளர்ச்சியும் நன்றா? தீதா? இதற்கும் உலகமயப் பொருளாதாரத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி விட முடியுமா?

2.நவீனத்துவ வரவின் மூலம் விடுதலை அடைந்தவர்களாகக் கருதிய பெண்கள், ஒடுக்கப்பட்ட குழுவினர், இடம் சார்ந்த சிறுபான்மைக்குழுவினர் தங்கள் விடுதலை உணர்வைத் தொலைத்து விட்டு அச்ச உணர்வில் வாழ நேர்ந்துள்ளதற்கும் உலகமயத்திற்கும் தொடர்பு இல்லையா?

3. அரசியல் தளத்தில் புதுவகைப் பண்பாடு எதுவும் நுழைந்து விடாமல் தடுக்கும் வாய்ப்பே உலகமயப் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னும் தொடரும் என்றால் எதற்காக அதனை நாம் வரவேற்க வேண்டும்?

4, கல்வி, வேலைவாய்ப்பு, தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்ளத் தேவையான அடையாளங்களை உருவாக்குதல் போன்றவற்றை மறுப்பதாகப் பெரும்பான்மை மக்கள் நம்புவதாக மாறிப் போனால் உலகமயத்தின் பின் விளைவுகள் எத்தகைய ஆபத்தைச் சந்திக்கும் என்பதை உணரவேண்டியது அவசியமில்லையா?

5. ஆளுங்கட்சி உருவாக்கும் பெரும்பான்மை வாதம் – மதப்பெரும்பான்மை வாதம் நிலவுடைமைப் பொருளாதார உறவுக்காலத்துக்குரியது. அது இப்போதைய அரசு பெரிதும் நம்பும் தாராளமயத்தை அடிப்படையாகக் கொண்ட தனியார் மயத்திற்கே வேட்டுவைக்கும் என்பதை உணராமல் இருப்பது ஏன்?

இப்படிப் பல கேள்விகளை எழுப்பி நம் காலத்தை விசாரிக்கும் போது நன்மையும் தீமையும் எதுவெனப் புரியவரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்