மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

சரவணன் சந்திரன் நாவலொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது தொடர்பாகப் போகன் சங்கர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். ஹரன் பிரசன்னாவும் கலந்துகொண்டு விவாதம் செய்கிறார்கள். அதில் எதிர்வினை செய்யாமல் இங்கே தனிப்பதிவாகப் போடுகிறேன்.

ஆங்கிலத்தில் நூல்கள் வெளியிடும் இந்தியப் பதிப்பகங்கள் வழியாக இந்தியச் சந்தைக்குள்ளும் உலகச் சந்தைக்குள்ளும் எல்லாவகையான இலக்கியங்களும் மொழிபெயர்ப்பின் வழியாக விற்பனை ஆகாது. இந்திய இலக்கியத்திலிருந்து - உலக இலக்கியத்திற்குள் பேசப்படும் சொல்லாடல் என்று சில சரக்குகள் உண்டு. அவை என்ன என்பது ஆங்கிலத்தில் நூல்கள் வெளியிடும் இந்திய ஆங்கிலப் பதிப்பகங்களுக்குத் தெரியும். அவற்றையே முதன்மையாகத் தேடி மொழி பெயர்க்கின்றன. அவற்றின் முதன்மை நோக்கம் இந்திய ஆங்கிலப் பரப்பையும் சந்தையையும் முதன்மையாக நினைப்பதாக இருக்கிறது. அதன் வழியாக உலகப்பரப்பிற்குள்ளும் சந்தைக்குள்ளும் நுழைகின்றன.இந்திய ஆங்கில இலக்கியத் துறைகள் இந்தியத் தனம் -INDIANNESS - என்ற பதத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்து அவற்றைப் பேசுபொருளாக்கியிருக்கிறார்கள். இந்தியத் தனத்தை முடிவுசெய்வதில் இந்தியச்சாதி அமைப்புக்கு அண்மைக்காலத்தில் முக்கியத்துவம் கூடியிருக்கிறது, அதற்கு முன்பு இந்தியப் பெண்மை என்ற கருத்தியலுக்கு முக்கியத்துவம் இருந்தது, அதற்கும் முன்பு இந்தியக் கடவுள்கள் . - வைதீக மற்றும் நாட்டுப்புறக்கடவுள்கள்- அந்த இடத்தைப் பிடித்திருந்தார்கள்.

இரண்டு ஆண்டுகள் ஐரோப்பாவில் இருந்தபோது கிழக்கு ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களின் இந்தியவியல் கருத்தரங்குகளில் பார்வையாளனாகவும் ஒன்றிரண்டில் கட்டுரை வாசிப்பவனாகவும் இருந்தேன். அந்த அனுபவத்திலிருந்து இதனைச் சொல்கிறேன். பல்கலைக்கழகங்களின் மாநாட்டுக் கட்டுரைகளில் பெரும்பாலும் இவைசார்ந்த கட்டுரைகளே வாசிக்கப்படுகின்றன. அத்தகைய கட்டுரைகளை வாசிக்க அவர்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்புகள் தேவை.
2000 -க்குப் பிறகு அந்தச் சொல்லாடல்களில் முதன்மையாக இருப்பது தலித் சொல்லாடல்கள். இந்திய மொழியில் எழுதப்பெற்ற தலித் சொல்லாடல்கள் ஆங்கிலம் வழியாக உலக இலக்கியப் பரப்பிற்குள் நகர்ந்திருக்கின்றன. தமிழில் இமையம், பாமா, சோ.தர்மன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் தேடித்தேடி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மொழி பெயர்ப்புகளுக்கு இந்தியக் கல்விப்புலம் சார்ந்த ஒரு சந்தை ஒன்றும் இருக்கிறது. தமிழின் முற்போக்கு மற்றும் இருத்தலியல் எழுத்துகளைப் பற்றி உரையாடியபோது. ஐரோப்பாவிலேயே அத்தகைய எழுத்துகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. பிறகேன் மொழிபெயர்ப்பில் வாசிக்க வேண்டும் என்பதே பதிலாக இருந்தது. ஒருவேளை வட்டார எழுத்துகளை மொழிபெயர்த்துக் கொடுத்தால் அவர்கள் வாசிக்கக்கூடும். மொழிபெயர்ப்பில் அதன் அழகு கெடாமல் தருவது சிரமம்.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் இந்தியப் பெண்மை மற்றும் இந்தியக் கடவுள் சார்ந்த சொல்லாடலாக அங்கே உருட்டிவிடப்படுகிறது. அத்தொடு அவரது எழுத்துகளை மொழிபெயர்ப்பவர்களைவிட ஆங்கில இலக்கியத்திற்குள் பேசவைப்பவர்கள் இந்தியக் கிராமப்புறப் பண்பாட்டின் நெருக்கடிகளை சாதிகள் மற்றும் கடவுள்கள் சார்ந்து எழுதுபவராக முன்வைப்பார்கள். அதற்கான வாய்ப்புகள் அவரது எழுத்துகளில் இருக்கின்றன. அதனால் அங்கே அவை விற்கும் சரக்காக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஜெயமோகன் மொழி பெயர்க்கப்பட்டாலும் அங்கு வாசிக்கப்படுவார். அவரது சிறுகதைகளும் காடு, ஏழாம் உலகம், கொற்றவை போன்றனவற்றில் இந்தியத்தனத்தின் கூறுகள் விரிவாக உள்ளன
===================================
சரவணன் சந்திரனின் நாவலை சென்னை சார்ந்த பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதாகப் படித்தேன்.ஏற்கனவே சாருவின் நாவல் ஆங்கிலத்தில் வெளியாகி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்று புரியவில்லை.முன்பே தமிழில் அதை வாசித்தவர்கள்தான் திரும்ப அதனை வாங்க வேண்டும் போலுள்ளது.இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமான ஐடியா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் கவனிக்கப்பட வேண்டுமெனில் சர்வதேச,தேசிய அளவில் புகழ்பெற்ற முக்கியமாக ஆங்கில நூல்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகங்கள் வெளியிடவேண்டும்.பெருமாள் முருகன் நூல்களைப் போன்று. என்னுடைய ஆங்கிலக் கவிதைகளை தமிழ்நாடு சார்ந்த பதிப்பகங்கள் வெளியிடக் கேட்டதுண்டு.அது எனக்கு புதிய வாசகர்களைக் கொண்டுவராது என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இந்தியாவில் ஆங்கிலப் புத்தகங்கள் வேறுவிதமான சந்தை.அதில் பெரும்பாலும் மலையாளிகளும் பெங்காலிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.அந்த ஆதிக்கத்தை அவர்கள் உள்ளூர்ப் பதிப்பகங்கள் மூலமாக அடையவில்லை.இந்த சர்வதேச தேசிய பதிப்பகங்கள் மற்ற இந்திய மொழிகளில் புத்தகங்கள் வெளியிடும் முயற்சியும் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்