ராசேந்திர சோழனின் இசைவு: பிறழ்வெழுத்தின் மோசமான முன் மாதிரி


ஆண் - பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை - பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் மீறலை -பிறழ்வு உறவை நியாயப்படுத்தும் உரையாடல்களையும் காரணங்களையும் முன்வைத்து விவாதித்துக் கதையை நகர்த்துவதுண்டு. அப்படி இல்லாமல் பிறழ்வு உறவுகளில் ஈடுபடுகின்றவர்கள் அதனைப் பிறழ்வாகக் கருதாமல் இயல்பான உறவாகவே நினைக்கின்றனர்; ஏற்று நகர்கின்றனர் என்ற பார்வையைப் புனைவுக்குள் வைத்து எழுதியவர்கள் பட்டியல் ஒன்று உள்ளது. தமிழில் அப்பட்டியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தனது “ எட்டுக் கதைகள்” என்ற தொகுப்பின் வழியாக அந்தப் பட்டியலில் இடம் பிடித்த ராசேந்திரசோழன் காமம் சார்ந்த புதிய கதையொன்றை எழுதியுள்ளார். சில நாட்களுக்கு முன்னால் பதிவேற்றம் பெற்றுள்ள ‘தமிழினி’யில் இடம்பெற்றுள்ள அக்கதைக்கு அவரிட்டுள்ள தலைப்பு “இசைவு”. உடல்சார்ந்த கவர்ச்சி மற்றும் ஈர்ப்பு காரணமாகப்பிறழ்வு உறவில் ஈடுபடும் இருவருக்கும் தங்களுக்கிடையே இருக்கும் சமூக உறவான “மருமகன்- மாமியார்” என்ற தடை சிறிதும் உறுத்தவே இல்லை என்பதாகக் கதையின் விவரிப்பும் மொழிநடையும் அமைக்கப்பட்டுள்ளது. தனது தாய்க்கும் கணவனுக்கும் இடையே இருக்கும் காமம் சார்ந்த விருப்பமும் ஈர்ப்பும் தெரிந்தபோதிலும் மகள் பெரிய அளவில் எதிர்ப்புக்க் காட்டாமல் இசைவு காட்டுவது போல நடந்து கொள்வதும் ஏற்கத்தக்கதாக இல்லை.

மாமியின் உடல் மேல் ஏற்படும் ஈர்ப்பைக் குற்றவுணர்வுடன் விவரிக்காமல் இயல்பான ஒன்றாக நகர்த்திப் போகிறார். குற்றவுணர்வும் அச்சமும் எழும்பித் தவிக்கும் மனநிலை எதுவுமில்லாமல் இந்த உறவுக்கு தொடர்புடைய ஒவ்வொருவரும் இசைவு தருவார்களா? என்ற கேள்விகள் வாசிப்பவர்களுக்கு நிச்சயம் ஏற்படவே செய்யும். ஆனால் கதையை எழுதிய ராசேந்திரசோழன் அதற்குள் நுழையவே இல்லை. தன் மகளைப் பொருட்படுத்தாமல் “அவ கெடக்கறா.. ஒக்காருங்க” என்ற சொல்லும் மாமியின் மனக்குரலாகவே கதையை நகர்த்திச் செல்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் கர்ப்பமுற்றுப் பிறக்கும் பிள்ளைக்குத் தனது மருமகனே அப்பா என்று அவள் மனம் இசைவு தெரிவிப்பதாகவும் கதையை முடிக்கிறார்.

இந்தத் தன்மை அவரது எட்டுக்கதைகள் எதிலும் இல்லாத ஒன்று. அக்கதைகளும் பிறழ்வு உறவுகளைப் பேசிய கதைகளே என்றாலும் தடையை உணரும் மனங்களை விசாரிக்கும் உரையாடல்கள் கொண்ட கதைகள். இந்தக் கதை அப்படியான விசாரணைக்குள் நுழையாமல் - விசாரணைகளை எழுப்ப வேண்டும் என்ற நோக்கமின்றி, விடலைப்பருவத்து வாசிப்புக்கான பாலியல் தூண்டல் கதையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே வெளிப்பட்டுள்ளது.

https://ramasamywritings.blogspot.com/2010/01/blog-post_773.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்