பேச்சுமரபும் எழுத்துமரபும்



பேச்சும் எழுத்தும்

உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு. 
இருபெரும் உரையாளர்கள்.

கோவை புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு நாட்கள் (2022,ஜூலை, 23,25) போயிருந்தேன். இரண்டு நாட்களும் இருபெரும் உரைகள். எழுதிக்குவிப்பதில் சலிப்பில்லாத இவ்விரு எழுத்தாளர்களும் பேசுவதிலும் சலிப்பில்லாமல் இருக்கிறார்கள். தமிழ்ப்பேராசிரியராக இருந்தபோதிலும் இப்படியெல்லாம் ஓர் உரையை நடத்திக்காட்ட எப்போதும் முயன்றதில்லை. உரையாடல் வடிவமே எனது வெளிப்பாட்டு வடிவம்.

எல்லாத் தொடர்பாடல்களும் வெளிப்பாடுகளும் மொழியின் வழியாகவே நடக்கின்றன என்ற போதிலும் உரைத்தலை மட்டுமே கொண்ட மொழிதல் எளிய கருவியாகக் கருதப்படுகின்றது. உரைப்பவரிடம் இருப்பவை சொற்களும் சொற்களால் ஆன தொடர்களும் மட்டுமே. அசைவற்ற உடலோடு குரல் உருவாக்கத்தின் வழியாக நடக்கும் அந்த வினையின் வழியாகவே அறியப்பட்ட ஆளுமைகள் உலக வரலாற்றில் இருக்கிறார்கள். தமிழிலும் நீண்ட பட்டியல் உண்டு. நான் நேரில் கேட்ட உரையாளர்களாகப் பின்வரும் பெயர்கள் உள்ளன. அவர்களின் உரைகளைச் சாலைகளின் நாற்சந்தியிலும் முச்சந்தியிலும் உள்ளரங்குகளிலும் கேட்டிருக்கிறேன். பெரியார் ஈவெரா தொடங்கி. முதல்வர்கள் காமராஜ், மு.கருணாநிதி ஆகியோரின் உரைகளைக் கேட்டிருக்கிறேன். குன்றக்குடி அடிகளார், குமரி அனந்தன், வை. கோபால்சாமி, ஆ.ராசா, சோ.ராமசாமி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ், திருமாவளவன் முதலான அரசியல்வாதிகளின் பேச்சைப் பயணம் செய்து கேட்டுள்ளேன். தனி உரைகள் நிகழ்த்தும் பாரதி கிருஷ்ணகுமார், சாரதா நம்பி ஆரூரன் போன்றவர்களின் உரைகளுக்கும் முழுமையாக அமர்ந்து விடுவதுண்டு.

இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்கத் தொடங்கியதின் ஆரம்பம் எஸ்.ஆர்.கே,. அறந்தை நாராயணன், ஜெயகாந்தன் கூட்டணியில் தொடங்கியது. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனைப் போலவே ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேச்சிலும் வல்லவர்கள் என்பதைப் பலதடவை கேட்டு உணர்ந்துள்ளேன்.

பேசுவதற்கான தலைப்பு தொடங்கி, அதனை விளக்குவது, விவரிப்பு, அதனையொட்டித் தமிழ்ச் சமூகம் காட்டும் அக்கறையின்மையைச் சுட்டிக் காட்டுவது, அதே நேரம் இதுபோன்ற வாய்ப்புகளும் இங்குதான் நடக்கின்றன என்பதைச் சொல்லிப் பாராட்டுவது எனக் கட்டமைக்கப்பட்ட உரைகளைத் தருகிறார்கள் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும். கல்வி நிறுவனங்கள் இவர்கள் இருவரின் உரைகளை ஏற்பாடு செய்வதின் மூலம் இலக்கியவாசிப்பின் பக்கம் இளையவர்களை நகர்த்தமுடியும் என்று தோன்றுகிறது.
*************************
பேச்சுமரபுக்கும் நிகழ்த்துப் பண்பாட்டுக்கும் தமிழ்நாட்டில் எப்போதும் பேராதரவு உண்டு. பேச்சு மரபு என்பது பேச்சு மொழியின் வழியாக வெளிப்படும் இலக்கியங்கள், கலைவடிவங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள் போன்றனவும் அவற்றின் வழியாக உருவாக்கப்படும் பண்பாட்டு நடவடிக்கைகள் என விரியும். இக்கூறுகள் எல்லாவற்றையும் உள்வாங்கி அரங்கியல் வெளிப்பாடாகத் தகவமைத்துக் கொள்வது நிகழ்த்துப்பண்பாடு. பேச்சு மரபையும் நிகழ்த்துப்பண்பாட்டையும் ஆதாரமாகக் கொண்டு கருத்துகளை உருவாக்கி நிலைநிறுத்தும் ஆய்வாளர்கள், அதனை எழுத்து மரபின் மாற்றாகவும், பல நேரங்களில் எழுத்துமரபுக்கு எதிராகவும் நிறுத்துகிறார்கள். பேச்சுமரபே சரியானது என வாதிடும் அந்த ஆய்வாளர்களும் அறிஞர்களும் கடைப்பிடிக்கும் தர்க்கங்களும் கோட்பாடுகளும் எழுத்துமரபின் கண்டுபிடிப்புகள் என்பது சுவாரசியமான முரண்நிலை.

பேரா. தொ.பரமசிவன் எங்கள் துறையின் தலைவராக இருந்த காலத்தில்(1998-2008) அவரையும் என்னையும் அறிந்த நண்பர்கள் “ அவரோடு உங்கள் உறவு எப்படி ? என்று கேட்பார்கள். அவர் துறையின் தலைவர். நான் அவரது தலைமையின் கீழ் செயல்படவேண்டிய ஓர் ஆசிரியர். இந்த உறவுநிலை காப்பாற்றப்பட வேண்டும் என நினைப்பவர் அவர். பல்கலைக்கழக வளாகத்தில் அந்த உறவுநிலையைப் பேணுவதில் விலகல் தேவையில்லை என்று நினைப்பவன் நான். அதனால் எங்களுக்கிடையே எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். அதையும் தாண்டிக் கேட்பவர்களிடம் அவர் பேச்சுமரபைப் போற்றுபவர்; நான் எழுத்துமரபுக்காரன். இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள கொடுக்கல் வாங்கலில் என்னென்ன உறவும் முரணும் உண்டாகுமோ அவையெல்லாம் எங்களுக்கிடையே உண்டு என்று சொல்வேன். புரிந்துகொண்டவர்கள் புன்சிரிப்பைப் பதிலாகத் தருவார்கள். புரியாதவர்கள் எதோ பிரச்சினை இருக்கிறது, ஏதோ சிக்கல் இருக்கிறது. சொல்லத்தயங்குகிறேன் என நினைத்துக்கொள்வார்கள்.

*********************
விளக்குப் பூஜைகள்

உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன.

புலப்படா நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொதுப்புத்தியில் உலக அளவில் இரு பெரும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. மேற்கத்திய தேசத்து மனிதர்களின் பொதுப்புத்திக்கு எதிரான முரண்பாடுகளோடு கீழ்த்திசை நாடுகளின் மனிதர்களின் பொதுப்புத்தி அமைந்துள்ளது என்பது ஐரோப்பியச் சிந்தனையாளர்களின் வாதம். ஓரியண்டலிசம் எனச் சொல்லப்படும், கீழ்த்திசை நாடுகளின் பொதுப்புத்தி பெரும் மாற்றங்களை எப்போதும் விரும்பாது எனவும், ஏற்கெனவே இருப்பனவற்றின் தொடர்ச்சிகளின் மீது தீராத மோகத்தை வெளிப்படுத்தக் கூடியது எனவும் மானிடவியல் சார்ந்த சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உலக அளவில் இருக்கும் பல்வேறு தேசத்து மனிதர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால் பொதுப்புத்தியை இருபெரும் முரணாக மட்டுமே கொள்ளுதல் போதாது என்று சொல்லலாம். ஆப்பிரிக்க நாடுகளின் கருப்பு மனிதர்களின் பொதுப்புத்தி மேற்கத்தியப் பொதுப்புத்திக்குள் அடங்கி நிற்கக் கூடியது அல்ல; இதே தன்மையை லத்தீன் அமெரிக்க தேசத்துப் பொதுப்புத்திக்குள் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

இந்த வேறுபாடுகளைப் பார்த்து விட்டு தெற்காசிய- குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளின் பொதுப்புத்தியைக் கணிக்க முயன்றால் அவற்றுக்குள் ஒரு பொதுத் தன்மை இருப்பதை உணரமுடியும் அதனால் தான் சொந்த வாழ்க்கையில் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக நம்பும் தென்னாசிய/ தென்கிழக்காசிய மனம், பொதுவெளியில் அவற்றிற்கான அர்த்தத்தை முக்கியமாகக் கருதுவதில்லை. தங்களது பாரங்களைச் சுமக்க தீர்மானிக்கப் பட்ட தலைவர்கள் /குடும்பங்கள் இருக்கும் போது புதிய மனிதர்களைப் பரிசோதனைக்குட்படுத்துவது அனாவசியமானது எனக் கருதுகிறது. நமது பொதுப்புத்தி மாற்றமின்மையை நேசிக்கும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதே இல்லை.

************* 


கருத்தியல் உருவாக்கத்தில் பேச்சுமரபுக் கலைவடிவங்கள் பலவும் பலவிதமான தன்மையில் பங்காற்றியுள்ளன. கதாகாலட்சேபம், வில்லடிப் பாட்டு, உடுக்கடிப்பாட்டு, பகல்வேசம் போன்றன பெரும்பாலும் பாட்டு, விரித்துரைத்தல் என்னும் வடிவங்களில் சமய நம்பிக்கைகளையும் கடவுள்களையும் மக்களிடம் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்துள்ளன. இப்பரப்புரையில் ஈடுபட்டவர்களுக்குக் கோயில் மானியங்களில் பங்குகள் தரப்பட்டுள்ளன. அதே ஆட்டங்கள், கூத்துகள் வழியாகவும் பரப்புரைகள் நடந்துள்ளன. அவற்றின் பரப்புமுறையில் கருத்துகள், செய்திகள் தாண்டி மக்களைக் கிளர்ச்சிப்படுத்தும் கூறுகள் கொண்டனவாக இருந்ததால் கோயில் சார்ந்த வடிவமாக இல்லாமல் தனித்துச் செயல்படும் குழுக்களின் நிகழ்வுகளாக இருந்துள்ளன. காலப்போக்கில் அவற்றின் இடத்தை நாடகங்கள், திரைப்படங்கள் போன்றன பிடித்தன. ஒலிபெருக்கிகளின் பயன்பாடு அறியப்பட்ட நிலையில் தனிமனிதர்களே பேச்சுமரபின் அடியாளமாக மாறினார்கள். அந்த மாற்றம் உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டுவந்தது. ஒலிபெருக்கியின் வரவோடு அரசியல்பேச்சும் இணைந்துகொண்டது. அரசியல் பேச்சுகளைக் கண்டனம் செய்த சமயப்பேச்சுகள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் வடிவத்தை மாற்றிக்கொண்டன. தனிப் பேச்சுகள் மூவர் பங்கேற்ற வழக்காடு மன்றங்களாகவும் எழுவர், ஒன்பதின்மர் பங்கேற்கும் பட்டிமன்றங்களாகவும் மாறின. நகர் முற்றங்களும் கிராமத்துத் தெருக்களும் அவை நிகழ்த்தப்படும் இடங்களாக மாறின.

தொலைக்காட்சி ஊடகங்களின் வரவு இவற்றை இடம்பெயரச்செய்தன. பேச்சுக் கச்சேரிகளின் அனைத்து வடிவங்களையும் தொலைக்காட்சி தனதாக்கிக் கொண்டது. தொலைக்காட்சி ஊடகங்களோடு சமூக ஊடகங்கள் போட்டியில் இறங்கியிருக்கின்றன நமது காலத்தில். புதிதாக வரும் ஊடகங்களைச் சில நேரம் எதிர்ப்புக்காட்டிவிட்டுப் பின்னர் அதன் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவது பழைய வடிவங்களின் இயல்பு. முகநூல் வழியாகத் தொலைக்காட்சியின் நேரலைகள் நடக்கின்றன. அவற்றை வாட்ஸ் அப்கள் இணைத்துக்கொள்கின்றன.

வாட்ஸ் அப்கள் மற்றெல்லா ஊடகங்களைவிட எளிமையான வடிவமாகத் தன்னைக் காட்டியிருக்கிறது. உருவாக்கம், படைப்பாக்கம், தொழில்நுட்பத் திறன் என எதுவும் தேவைப்படாத ஒருவடிவம் வாட்ஸ் அப். அத்தோடு அது தனிநபர் ஊடகமாக இருப்பதைவிடக் குழு ஊடகமாகச் செயல்படுவதில் - செயல்படுத்துவதில் கவனம் கொண்ட வடிவமாக இருக்கிறது. சீர்மிகு அலைபேசிகளை இயக்கத்தெரிந்த அனைவரும் வாட்ஸ் அப் ஊடகத்தைக் கையாளலாம். அவர்களுக்கு ஒருசொல்லையும் எழுதத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. பேசிப்பதிவுசெய்யவும் தெரிந்திருக்கவும் வேண்டியதில்லை. தன்னைக் குழுக்களில் இணைத்துக்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் தகவல்களைப் பெற்றுக்கொண்டும் பரப்பிக் கொண்டும் இருக்கலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அனைவரும் அதன் பரப்பிற்குள் வந்துவிட்டார்கள்.

தொடக்க நிலையில் முகநூல் போன்ற சமூக ஊடங்களின் பயன்பாட்டைத் தடுக்க நினைத்த கல்வி நிறுவனங்கள் வாட்ஸ் அப்பின் வரவைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒதுங்கிக்கொண்டன. முகநூலில் இல்லாதவர்கள் எல்லாம் வாட்ஸ் அப்பில் இருக்கிறார்கள். வகுப்புக்கு வராத மாணவிக்கு அவளது தோழன் வாட்ஸ் அப் நேரலை மூலம் வகுப்பறையைக் காட்டிக்கொண்டிருக்கிறான். சமையல் செய்யும் விதங்களை நாடுவிட்டு நாட்டிற்கும் கண்டம்விட்டுக் கண்டத்திற்கும் தாண்டிவிட்டவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள் முன்னோடிகள். பதிவுசெய்து அனுப்புகிறார்கள்.
நம் காலத்தில் பேச்சுமரபின் உச்சம் வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடகம் தான்.

************************************
பேச்சுமரபைப் பயன்படுத்தியதோடு நிகழ்த்துக்கலையின் பாவனைகளை உள்வாங்கிய இரண்டு பெண்கள் பரபரப்பாக வந்து, அதே வேகத்தில் மறக்கவும் பட்டார்கள். தொலைக்காட்சியில் செய்தி அலைவரிசைகளின் பக்கமே திரும்பாத குடும்பப்பெண்கள் லதா மேடத்தின் விளக்கவுரையைப் பற்றிப் பேசினார்கள்; ஏற்றுக்கொண்டார்கள். அந்த லதா எந்த லதா? என்ற கேள்வியில் அவரவருக்குத் தெரிந்த லதாக்களைப் பொருத்திக்கொண்டார்கள். பலரும் பொருத்திக் கொண்ட லதாவாக லதா ரஜ்னிகாந்த் இருந்தார். அவரது உறவினர் மதுவந்தி அவரோடு போட்டியிட்டு பேச்சும் நிகழ்வுமாக வந்தார்.  மதுவந்தியின் உரை ஒருவித விரித்தி உரை. அதையும் புரிந்துகொண்டார்கள்; ஏற்றுக் கொண்டார்கள்; விளக்கேற்றினார்கள். கொரோனா என்னும் கொடிய நோயை மறந்து, கொண்டாட்டம் ஒன்றில் பங்கேற்ற மனநிலையில் குலவையிட்டு மகிழ்ந்தார்கள். அதனைத் தங்கள் தலைமையின் சாதனையாக்க நினைத்தவர்கள் வெடிபோட்டுக் கொண்டாடினார்கள். நரகாசுர வதம்போல, கரோனாசுர வதம் முடிந்துவிட்டது என நினைத்தார்கள். ஆனால் கரோனா அசுரன் என்னும் மாயலோகத்து மனிதன் அல்ல; அறிவியல் உலகத்து கிருமி எனச் சொல்லிக்கொண்டிருக்கிறது..

பொதுப்புத்தி உருவாக்கம் எப்போதும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும்; பயன்படுத்தும்; ஆனால் ஏற்கெனவே இருக்கும் கருத்தியல் நிலைபாட்டையே தொடரும். அதிலும் கனவான்களின் பொதுப்புத்தி தந்திரங்கள் கொண்டது. தங்கள் நலனில் சிறிய கீறலும் வராத வகையில் எல்லாவற்றையும் பயன்படுத்துவார்கள். லதாக்களும் மதுவந்திகளும் வெறும் கருவிகள் மட்டுமே.

 தொலைக்காட்சிகளில் பண்டிகை நாட்களுக்குச் சிறப்பு ஒளிபரப்பைத் தொடங்கிய பிறகு, சடங்குகளுள் ஒன்றாகப் பட்டிமன்றம் ஆகிவிட்டது. தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகளுக்குச் சுலபமாகத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுள் பட்டிமன்றமும் ஒன்று. விடுமுறையாகவும் இருந்து, விழா நாளாகவும் ஆகிவிட்டால் ‘பட்டிமன்றம்‘ ஒன்று நம் வீட்டிற்குள் வந்து விடுகின்றது. விழா நாட்களில் தொலைக் காட்சியைத் தொடுவதில்லையென விரதம் பூண்டிருப்பவா்களுக்கு மட்டுமே பட்டிமன்றம் என்றால் என்ன? பட்டிமன்ற நடுவர்களென பிரசித்தி பெற்றுள்ள சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி என்பவா்கள் யார்? எனறு சொல்ல வேண்டும்.

புத்திசாலித்தனம்Xகோமாளித்தனம் =பட்டிமன்ற நடுவர்கள்

‘பட்டிமன்றம் பாப்பையா‘ எனப் பெயா் வாங்கிய பேரா. சாலமன் பாப்பையாவை விடவும் லியோனியின் குரல் தமிழகக் கிராமங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சென்னையிலிருந்து கன்னியாகுமாரிக்குப் பயணிக்கும் ஒரு தமிழ் உயிரி. தேநீா் குடிக்க நிறுத்துமிடங்களில் அந்தக் குரலைக் கேட்காமல் தப்பிக்க முடியாது. அவை வெறும் குரல்கள் மட்டும் தானா? நல்லது x கெட்டது; இன்பம் x துன்பம்; சரி x தவறு; உண்டு x இல்லை; சிறியது x பெரியது போன்ற எதிர்வுகளை முன்மொழிதல் மூலம் கட்டியெழுப்பப்படும் அமைப்பைக் கொண்டதாகப் பட்டிமன்ற வடிவம் இன்றுள்ளது. ‘நடுவா் - இரண்டு அணிகள்‘ என்பது அதன் பொதுவான வடிவம். இதனையொத்த இன்னொரு வடிவம் (மாற்று வடிவம் என அதனைச் சொல்லலாம்). வழக்காடு மன்றம் என அழைக்கப்படும். அதில் வழக்குத் தொடுப்பவா், வழக்கை மறுப்பவா், தீா்ப்புச் சொல்லுபவா் என்று மூன்று நபா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் பட்டிமன்றத்தில் பொதுவாக ஏழு போ் பங்கேற்கின்றனர். மூன்று மூன்று பேராக இரண்டு அணிகள், என்ற வடிவமும், கீழ்மன்றவாதம் - தீா்ப்பு, அதன்பிறகு மேல் முறையீட்டு மன்ற வாதங்கள், இறுதி தீா்ப்பு என்பதான வடிவமும்கூட சில இடங்களில் காணப்படுகின்றன. பொதுவான பட்டிமன்ற வடிவமாக இரண்டு அணிகள், ஒரு நடுவா் என்பதைக் கொள்ளலாம்.

மணிமேகலை சொல்லும் ‘பாங்கறிந்து ஏறும் பட்டிமண்டபத்தை‘ இன்றைய பட்டிமன்றத்தின் முன்னோடி வடிவமாகக் கருதலாம் என்றாலும், அதன் தொடா்ச்சியை உறுதிசெய்வதில் சிரமங்கள் உண்டு. இன்றைய பட்டிமன்றங்கள் பெரும்பாலும், ஐரோப்பியா்களின் ஆளுகையில் உண்டான நீதிமன்ற வடிவத்தையே நமக்கு நினைவூட்டுகின்றன. ‘நடுவா் அவா்களே ! கனம் நீதிபதி அவா்களே! எதிரணி வழக்கறிஞா் அவா்கள், வாதம், சான்றுகள், மடக்குதல், பாய்ண்ட் (Point) விளக்கம், போன்ற சொல்லாடல்கள் பட்டிமன்றங்களில் திரும்பத் திரும்ப வரும் நிலையில் நடப்பது நீதிமன்ற விசாரணை போன்றது என்பதைப் பார்வையாளா்கள் நம்புகிறார்கள்; நம்ப வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.

ஐரோப்பிய பாணி நீதிமன்ற விசாரணைகளில் உண்மை அல்லது நியாயம் அல்லது தா்மம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புக்கு இடமில்லை வாதம்தான் வெல்லும். வழக்குரைஞரின் வாதத் திறமையின் - சாட்சிகளிடமிருந்து பெறப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நீதிபதி தனது தீா்ப்பை எழுதுவார். பட்டிமன்றங்களிலும்கூட வாதங்களின் அடிப்படையிலேயே தீா்ப்பு எழுதப்படுவதாகப் பார்வையாளா்கள் நம்புகின்றனா்.

தொடக்கத்தில் இலக்கியக் கதாபாத்திரங்களே பட்டிமன்ற விவாதப் பொருள்களாக இருந்தன; பட்டிமன்றங்களைத் தங்களது ஊடகமாகக் கொண்ட தமிழ்ப் புலவா்களும், பேராசிரியா்களும், அதன் வழியே இலக்கிய ரசனையைப் பாமர மக்களிடம் வளா்ப்பதாகவும், இலக்கிய விமர்சனத்தைப் பரந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நம்பியதும் காரணங்களாக இருந்திருக்கலாம்.

1. கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?

2. பத்தனித் தெய்வம் பாஞ்சாலியே ! சீதையே!

3. பதிவிரதம் காத்தவா்களில் விஞ்சி நிற்பவள் நளாயினியே!

மண்டோதரியே!! சாவித்திரியே!!!

4. ராமகாதையில் விஞ்சி நிற்பது காதல் சுவையே! வீரச் சுவையே! பக்திச்

சுவையே!

5. திருக்குறளில் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுவது அறத்துப் பாலே! பொருட்பாலே!! காமத்துப் பாலே!!!

6. காவிய நாயகா்களில் தலைசிறந்தவன் ராமனே! கோவலனே! போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட்டு, ஓா் ஊரில் கண்ணகியும் இன்னொரு ஊரில் மாதவியும் கற்பில் சிறந்தவளாக ஆக்கப்பட்டார்கள். ஓா் ஊரில் ராமனுக்காக வாதாடியவா், இன்னொரு ஊரில் கோவலனுக்காக வாதாடுவதும் உண்டு. பட்டிமன்றப் பேச்சாளா்களுக்குள் ‘இலக்கியப் பணி புரிபவா்‘ என்ற பிம்பமும், ‘வழக்கிற்கு வாதாடுபவா்‘ என்ற பிம்பமும் ஒரே நேரத்தில் செயல்பட்டதால் இந்தக் குழப்பங்கள் நோ்வதுண்டு. நடுவா்களுக்குள்ளும் அந்தக் குழப்பங்கள் செயல்படுவதால் இலக்கிய விவாதங்களுக்குத் தலைமை தாங்குபவா்கள் என்பதாகவும், நீதிமன்ற விசாரணையின் நடுவராகவும் அவா்கள் செயல்பட்டார்கள்.

தமிழ்ப் பேராசியா்களும், புலவா்களும் மட்டும் பெரும்பாலும் பங்கேற்று வந்த பட்டிமன்றங்களுக்கு நடுவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் மூலம் அவற்றின் விவாதப் பொருளில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவா் குன்றக்குடி அடிகளார். அதுவரை அரசியல் மேடைகளில் மட்டுமே விவாதப் பொருளாக இருந்து வந்த பகுத்தறிவு. சோசலிசம், ஆன்மீகம், வாக்குச்சீட்டு போன்றன பட்டிமன்ற வாதப்பொருளாக மாறியதில் அடிகளார் முன்னோடி.

‘நாட்டின் வளா்ச்சிக்குத் தேவை முதலாளியப் பொருளாதாரம்! சமதா்மப் பொருளாதாரம் !‘ என்று அணிகள் பிரிந்து வாதம் செய்ததுண்டு. தீா்ப்பு வழங்க வேண்டிய அடிகளார் இரண்டும் கலந்த கலப்புப் பொருளாதாரமே இந்தியாவை வளமடையச் செய்யும் என்று தீா்ப்பு வழங்குவார். கூட்டம் ஏற்றுக் கொண்டு கலைந்து போகும். நேருவின் வார்த்தைகளைத் திரும்பக் கேட்பதாகப் பார்வையாளா்களுக்கு எண்ணம். அடிகளாரில் பங்கேற்பு, பட்டிமன்றத்தின் தத்துவார்த்த அடித்தளத்தில் உடைப்பேற்படுத்திய ஒரு மாற்றம் எனலாம்.

‘வாதங்களின் அடிப்படையில் தீா்ப்பு வழங்கப்படும்‘ என்ற அடித்தளத்தில் இயங்கிய பட்டிமன்றத்தை ‘நடுவரின் புத்திசாலித் தனத்தினால் தீா்ப்பு வழங்கப்படும்‘ ஒன்றாக மாற்றினார் அடிகளார். ‘ஆன்மீகத் தலைவர், அறிவியற் சிந்தனை கொண்ட சாமியார், காவி வேட்டியில் சிவப்புச் சிந்தனையாளா்‘ போன்ற, அவருக்கிருந்த பிம்பங்கள் அதற்குப் பெரிதும் உதவின. மிக விரிவான சான்றுகளும் தா்க்கங்களும் கொண்டு ஓா் அணி விவாதித்த போதிலும், அதனை எதிர்க்கும் அணிக்குச் சார்பாக அடிகளார் தீா்ப்பு வழங்கினாலும் கூட்டம் ஏற்றுக்கொள்ளும். அதற்குக் காரணம் அடிகளாரின் ‘சமூக நீதியின் ஆதரவும், மனிதநேயக் கொள்கையும்‘ கேள்விகளுக்கப் பாற்பட்டவையாக இருந்தன. அணிகளின் வாதங்களுக்கு மேலாக தனது மனிதநேயச் சிந்தனைகள் மூலம் கட்டியெழுப்பும் அடிகளாரின் வாதங்கள் அவரது தீா்ப்புக்கு அரண்செய்தன.

‘இது நியாயமான தீா்ப்பு; தா்மத்தைக் காப்பவா் நீதிபதி; நோ்மைக்குத் துணை நிற்பவா் நடுவா்‘ போன்ற சொல்லாடல்களை ஐரோப்பியப் பாணி நீதிமன்றங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ பயன்படுத்தவதில்லை. ஆனால் இந்தியாவின் பாரம்பரியப் பஞ்சாயத்துக்களைப் பற்றிப் பேசும்பொழுதும், பஞ்சாயத்துக்களின் தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுதும் பயன்படுத்துவதுண்டு. இந்தியாவின் கிராமப் பஞ்சாயத்து முறையில் பஞ்சாயத்துத் தலைவரின் தீா்ப்பே இறுதியானது. தர்மம் அதன்படி நடப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவரது தீா்ப்பை அனைவரும் ஒப்புக் கொள்வா். அடிகளாரின் தீா்ப்புக்களைக்கூட கிராமப் பஞ்சாயத்துக்களில் தரப்படும் தீா்ப்புகளோடு ஒப்பிட்டுப் பேச வாய்ப்புண்டு.

ஐரோப்பியப் பாணி நீதிமன்றங்களையொத்த பட்டிமன்ற வடிவத்திற்கு இந்தியப் பாணி ‘பஞ்சாயத்துத் தன்மையை‘ உண்டாக்கியவா் அடிகளார். இதற்காகப் பெருமைப்பட்டுக்கொள்பவா்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வெண்டும். கிராமப் பஞ்சாயத்துகள் தனிமனித பிம்பங்களை - நாயகா்களை - முன்னிறுத்தும் வடிவம். ஒரு அமைப்பில் மற்றவா்களின் வாதங்களை - குரலை - இடத்தைச் சாதுர்யமாக ஒதுக்கிவிட்டு, தனிமனிதனின் புத்திசாலித்தனத்திற்கும், தந்திரங்களுக்கும், இடந் தரக்கூடிய ஒரு வடிவம். இன்று தொலைக்காட்சிகளில் இடம்பெறும். ‘பஞ்சாயத்துக்களை‘யும் ‘அரட்டை அரங்கங்களை‘ யும் அதனை நடத்துபவா்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தால் (விசு. சோ) அதன் தத்துவார்த்த அடித்தளம் புரியக்கூடும்.

பட்டிமன்றம் என்பதை ஒரு ஊடக வடிவமாக கொள்ளும் நிலையில், அனுப்புநா்களாக மேடையில் இருக்கும் அணிப் பேச்சாளா்களும், நடுவா்களும் இருக்கின்றார்கள். கேட்பவா்களான ஒரு பெருங்கூட்டம் - பார்வையாளா்களாக இருக்கிறார்கள். இவா்களிடையே செய்திகளைப் பரிமாறும் சாதனம் சாதாரண வார்த்தை மொழி. இந்த வார்த்தை மொழி என்னும் ஊடகத்தின் இயல்பை நேரடித் தொடா்பு முறை எனலாம். பொதுவாக எந்தவொரு ஊடகத்திற்கும் மூன்று நோக்கங்கள் உண்டு. தகவல், கல்வி, மகிழ்வூட்டல் என்பன அவை. இம்மூன்று நோக்கங்களில், வார்த்தை அல்லது பேச்சுச் சாதனம் முதலிரண்டு நோக்கங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியது. வெறும் பேச்சு மொழியோடு நடிப்பு, இசை போன்ற மற்ற சாதனங்களின் கூறுகளைச் சோ்க்கும்பொழுது மகிழ்வூட்டும் நோக்கம் கூடுதலாகிவிடும். அதாவது பட்டிமன்றம், நிகழ்த்துக்கலைகளின் கூறுகளைச் சோ்த்துக்கொள்வதன் மூலம் மகிழ்வூட்டும் அம்சங்களை அதிகப்படுத்திக் கொண்டு, தகவல் மற்றும் கல்விக் கூறுகளில் குறைவுடையதாக மாறுகிறது. அதனால் வெகுவாக மக்களைக் கவா்வதாக மாற்றம் அடைகிறது.

பட்டிமன்றங்களின் பேச்சாளா்களும், நடுவா்களும் தங்கள் உரையில் மகிழ்வூட்டும் அம்சங்களைக் கூடுதலாக்கவே முயல்கின்றனா். நடுவா்களாக இருப்பவா்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகமென்று சொல்லலாம். ஏனெனில், ஒரு பட்டிமன்ற நடுவா் இயல்பாகவே மூன்று பணிகளைச் செய்கிறார். விவாதப் பொருளை அறிமுகம் செய்வது முதல்பணி. பேச்சாளா்களை அறிமுகம் செய்வதும் அவா்களது பேச்சின் சாராம்சத்தைச் சொல்லும் இரண்டாவது பணி. மூன்றாவது பணி, விவாதங்களச் சீா்தூக்கி, முடிவை - தீா்ப்பைச் சொல்லுவது. அதற்கும் மேலாக அவா் அமா்ந்திருக்கும் இடம் நடுநாயகம். ஒரு மேடையின் மையப் பகுதிக்கான முக்கியத்துவம் நாயகப் பிம்பத்திற்கானது என்பது அரங்கியலின் அரிச்சுவடி.

இந்த அளவில் பட்டிமன்றம் என்ற பொதுப் பொருளைக் குறிக்கும் கருத்துக்கள் நிறுத்தப்பட்டு, சிறப்புப் பொருளான அதன் நடுவா்களுக்கு வரலாம். பட்டிமன்ற நடுவா்களில் நம் காலத்தில் மிகப் பிரபலமான இருவா் சாலமன் பாப்பையாவும், திண்டுக்கல் லியோனியுமாவா். இவ்விருவரும் பட்டிமன்ற நடுவா்களுள் நாயகப் பிம்பங்கள் என்பதை அவ்விருவரையும் மற்ற சாதனங்கள் பயன்படுத்திக்கொள்ள முயல்வதிலிருந்தும், அச்சாதனங்கள் அவா்களைப் பற்றி உருவாக்கும் பிம்ப அடுக்குகளிலிருந்தும் உணரலாம்.

இப்போதைய நுகர்வுப் பொருளாதார அடித்தளமே, ஒவ்வொரு துறையிலும் பிரபலங்களை முன்னிறுத்தும் வேலையைச் செய்கிறது. இது அதன் கடமையும்கூட. ஏனெனில் தனிநபா்களுக்கு கிடைக்கும் பிரபல்யம் நுகா்வுப் பொருளாதார அடித்தளத்திற்கு அவசியம். அந்தப் பிரபல்யங்களை மற்றைய சாதனங்களுக்கும் - ஊடகங்களுக்கும் அறிமுகப்படுத்தி, அவா்களின் மூலம் பொருள்களை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும், நுகா்வுப் பொருளாதார மதிப்பீடுகளை - போதனைகளை வழிய விடவும் செய்யலாம். திண்டுக்கல் லியோனியின் முகம் தமிழ்ச் சினிமாவின் அப்பா முகமாக மாற்றப்படுவதையும், குமுதம் பாப்பையாவின் நதி மூலத்தையும் ஊா்மணத்தையும் தேடுவதையும் இந்தப் பின்னணியிலேயே புரிந்துகொள்ளத் தோன்றுகிறது. சன்.டி.வி.யின் காலை ஒளிபரப்பு, பாப்பையாவின் ‘தினம் ஒரு குறளை வழிய விட்டு, அவருக்கு இன்னொரு பரிமாணத்தை உண்டாக்கியது.

பட்டிமன்ற நடுவா்களாகப் பாப்பையாவும், லியோனியும் தீா்ப்பு வழங்குவதில் குன்றக்குடி அடிகளாரின் வழியையே பின்பற்றுகின்றனா் வாதங்களின் அடிப்படையில் தீா்ப்புகளை வழங்குவதற்குப் பதிலாக, தங்கள் மனம் விரும்பிய தீா்ப்புகளையே பெரும்பாலும் இவ்விருவரும் வழங்குகின்றனா் என்றாலும் அவா்களிடையே வேறுபாடுகளும் உண்டு. பாப்பையா பல நேரங்களில் அணியினா் செய்யும் வாதங்களை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அவா்களின் உரைகளில் தொடா்ந்து இடையீடு செய்துகொண்டே இருப்பார். என்றாலும் அவா் வழங்கும் தீா்ப்பு ‘குறையுடையது‘ என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பது இல்லை. ஏறத்தாழ பஞ்சாயத்துத் தலைவரின் நிலையைப் போன்றது இது.

பட்டிமன்றத்திற்குப் ‘பஞ்சாயத்து‘ என்ற தன்மையை உண்டாக்கிய அடிகளாருக்கு இருந்தது போன்ற ‘அறிஞா், சிந்தனாவாதி, ஆன்மீகத் தலைவா்‘ போன்ற பிம்பங்கள் பாப்பையாவுக்கு இல்லை. ஆனால் அவா் போலவே தன் மணம் விரும்பிய தீா்ப்பை - வாதங்களை ஒதுக்கிடும் தீா்ப்பை - வழங்குகிறார். அதைப் பெரும்பான்மையோர் மனம் ஏற்றுக்கொள்கிறது.


இது எப்படி….? அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான நிறமோ உருவமோ தனக்கில்லை, என்று சொல்லிக்கொண்டே தொலைக்காட்சிக் காமிராவின் பார்வையைத் தன்வசப்படுத்திக்கொள்ளும் சூட்சுமம் எது…..? இவ்விரு அம்சங்களும் லியோனிக்கும் பொருந்தக்கூடியதுதான். இந்தக் கேள்விகளுக்கு ஒரு வரியில் விடை சொல்வதென்றால், ‘அவா்களது பட்டிமன்றங்களை ஒரு அரங்க நிகழ்வாக மாற்றுகின்றனா்? என்பதுதான். அசைவுகளும், நகா்வுகளும், சைகைகளும், உரையாடல்களும், பேச்சுதொனி மாற்றங்களும் நிரம்பிய அரங்க நிகழ்வை உட்கார்ந்த இடத்திலேயே நிகழ்த்துவது சாத்தியமா? என்று கேள்வி எழலாம். அது சாத்தியம் ஆகிறதென்றால் அந்த அரங்க நிகழ்வில் இவ்விரு நடுவா்களின் பாத்திரம் என்ன? கதாநாயகா்களா? எதிர்நிலைக் கதாநாயகா்களா? அல்லது துணைப் பாத்திரங்களா? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் பாப்பையாவுக்கும், லியோனிக்கும் ஒன்றாக இல்லாத நிலையில் அவா்கள் எங்கு வேறுபடுகின்றார்கள் என்பது புரியலாம்.

பாப்பையா நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றங்களைத் தொடா்ந்து கவனிப்பவா்களுக்கு அவரிடம் இருக்கும் சில தனித் தன்மைகள் புலப்படும். முதலில் விவாதப் பொருளை அறிமுகம் செய்கிறபொழுது, உயரிய செம்மொழியில் பேச்சைத் தொடங்கி உச்சஸ்தாயியில் மாறிவிடுவார். செம்மொழியின் மூலம் வாதப் பொருள்களுக்கான ‘வெளியும், தரநிலையும் உருவாக்கப்படுகிறது. வாதப் பொருளுக்கான ‘வெளி‘ யில் உலவும் கதாபாத்திரங்களைச் சித்திரங்களாக மாற்றும் முயற்சியில் அவா்களுக்கிடையே நடக்கும் நுணுக்கமான உரையாடல் ஒன்றை அவரே மாறிமாறிப் பேசுவார். அதன் மூலம் அவ்வுரையாடலுக்கான காலம் உருவாக்கப்படுவதோடு யதார்த்த உரையாடல் மூலம் நம்பகத் தன்மையும் உண்டாக்கப்படுகிறது.

விவாதப் பொருளை அறிமுகம் செய்யும் பாப்பையாவின் அறிமுக உரையில் இப்படியான சித்தரிப்புகளை அதிகம் காண முடியும். புனைவுக் காலமும், புனைவு வெளியும் உணா்த்தப்படுவது அரங்கக் கலையின் முக்கியமான ஓா் அம்சமாகும்.

பேச்சு வழக்கிற்கு மாறி சித்திரிப்புகளைத் தரும் அறிமுக உரை திரும்பவும் தரப்படுத்தப்பட்ட மொழிக்கு மாறி, திரும்பவும் தலைப்பையும் முதலில் பேச வருபவரையும் அறிமுகம் செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் பாணி பாப்பையாவினுடையது. உரையில் பேச்சு மொழியையும், தரப்படுத்தப்பட்ட மொழியையும் பயன்படுத்துவதன் மூலம் மொழியின் ஒலி ரூபங்களில் வேறுபாடுகளையும் உண்டாக்க முடியும். ‘முனிசாமி மகன் பழனிசாமி‘ என்பது துரியோதனனாக வேடமிட்டுள்ளவனின் - நடிகனின் உண்மையான அடையாளம். அந்த இடத்தில் புனைவு மறக்கடிக்கப்பட்டு நிகழ்வு - உண்மை - சொல்லப்படுகிறது. இதையொத்த பல நிகழ்வுகளைப் பாப்பையா நடுவராக இருக்கும் பட்டிமன்றங்களில் பார்க்கலாம்.

“இங்கேதே இவ்வளவு வீரம்….. வீட்டுக்குப் போயிட்டா…..

மூச்….. ம்ன்னா எந்திரிக்கணும்.“

இப்படியானதொரு இடையீட்டில் அணிப் பேச்சாளரின் ‘சொந்த வீடு, மனைவிக்குப் பயப்படும் அவரது இயல்பு‘ போன்ற விஷயங்களைப் பேசிவிடுவார். பேச்சாளரும் சிரித்துக்கொண்டு பேச்சைத் தொடா்ந்து விடுகிறார். இதில் எது புனைவு?, எது உண்மை? என்பதை நாம் அறிய முடியாவிட்டாலும் அணிப் பேச்சாளா் பற்றிய உண்மை ஒன்றைத் தெரிந்து கொண்டவா்களாகப் பார்வையாளா்கள் நம்புகிறார்கள்.

நடுவர் பாப்பையா மற்ற நடுவா்களிலிருந்து அதிகம் வித்தியாசப்பட்டு நிற்பது அறிமுகத்திலோ, முடிப்பிலோ அல்ல. பலரும் கூட இந்த உத்தியைப் பின்பற்றுகிறார்கள்தான். ஆனால் அணிப் பேச்சாளா்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும்பொழுது அவா் செய்யும் இடையீடுகளே மற்ற நடுவா்களிலிருந்து அவரை முழுமையாக வேறுபடுத்துகிறது. ம்…… ஆங்…. என்ற ஒலிகளை எழுப்புவதன் மூலம் ஒரு கதை கேட்பவனின் இடத்தைப் பல இடங்களில் நிரப்புகிறார். ‘ஆஹா …… அருமை…. ரொம்பச் சரி…. அப்படிப் போடு……‘ என்ற வார்த்தைகளைச் சொல்லி, பேச்சாளரை, பேச்சாளரின் வாதங்களில் சந்தேகம் கேட்பவா் போலவும், மாற்றுக் கருத்து கூறுபவராகவும் நுழைந்து பேச்சை ஓா் உரையாடலாக மாற்றவும் செய்கிறார். அணிப் பேச்சாளரின் சொற்பொழிவை நீண்ட பேச்சு என்ற நிலையிலிருந்து கதை சொல்லல், உரையாடல், ரசிப்புக்குரிய செய்தி (Message) என்பதாக மாற்றும் நுட்பங்கள்கூட கட்டியக்காரனிடம் காணப்படும் கூறுகளே என்பதைக் கூத்துப் பார்த்தவா்கள் அறிந்திருப்பார்கள். கட்டியக்காரனுக்கு வெவ்வேறு கதாபாத்திரங்களாக மாறும் சுதந்திரம் கூத்தில் உண்டு. நடுவா் என்ற பாத்திரத்தைத் தாங்கி, கட்டியக்காரனுக்குரிய சுதந்திரம் முழுவதையும் பயன்படுத்தும் பாப்பையா, பெரிதும் நம்பியிருப்பதும் அவரது குரலை மட்டுமே. தன் குரலை மட்டுமே கொண்டு உட்கார்ந்த இடத்தை விட்டு நகராது பல்வேறு ஸ்தாயியில் ஒலிக்கக்கூடிய பல்வேறு பாத்திரங்களாக மாறும் பொழுது அவரது குரலோடு முகபாவங்களும் கையின் சைகைகளும் ஒரு நடிகனின் சில அம்சங்களைத் தெரிவு செய்துகொள்கின்றன.

பட்டிமன்ற நடுவா் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை ஒரு நிகழ்த்துக் கலையின் அம்சங்கள் நிறைந்ததாக மாற்றுகிறார். அதிலும் தெருக்கூத்துக் கட்டியக்காரானின் பாத்திரத்தைத் தனது பாத்திர வார்ப்பாகக் (Role Model) கொள்கிறார். கட்டியக்காரனுக்குள் இருக்கும் கோமாளி - புத்திசாலி என்ற இரு நிலைகளில் கோமாளி என்பது புனைவிலும், புத்தசாலி என்பது நிகழ்விலும் பயன்படும்படி அவரது இயங்குதல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கட்டியக்காரனிடம் இருக்கும் கோமாளித்தனத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பெருங்கூட்டத்தைக் களிப்பில் ஆழ்த்தும் இன்னொரு கதாபாத்திரம் பபூன். தென் தமிழ்நாட்டில் பரவலாக உள்ள ஸ்பெஷல் நாடகத்தின் முன்னொட்டு நிகழ்வு ‘பபூன் - காமிக்‘ எனப்படும். வள்ளித் திருமணம், அல்லி அா்ஜுனா போன்ற புராண, இசை நாடகங்களின் மையக் கதாபாத்திரங்கள் வருவதற்கு முன்பாக ஆடல், பாடல், சிரிப்புத் துணுக்குகள், கொச்சையான குரல் மற்றும் பாவனைகள் மூலம் பார்வையாளா்களுக்கு ‘விருந்து‘ அளிக்கும் பகுதி இந்த ‘பபூன் - காமிக்‘. ஒரு ஆண்; ஒரு பெண் அல்லது இரண்டிரண்டாக நான்கு நடிகா்கள் இடம் பெறுவா். பின்னா் வரப்போகும் கதையோடு எந்தத் தொடா்பும் இல்லாமல் காமெடிக்காக ஒரு கதை உருவாக்கப்பட்டு முடிந்துவிடும். இந்தப் பகுதியின் முக்கியக் கதாபாத்திரம் பபூன் எனப்படும் விதூஷகன். இவனது சாராம்சம் தெருக்கூத்துக் கட்டியக்காரனின் சாராம்சத்தோடு ஒத்துப்போவதுதான் என்றாலும் முழுமையும் அல்ல.

ஸ்பெஷல் நாடகத்துப் பபூன், முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைப்பதில்லை. மேடை நிகழ்வில் இடையீடு செய்வதில்லை. முடிவில் வந்து ‘சுபோஜெயம்‘ சொல்லி முடித்து வைப்பதில்லை. அவனது பணி மகிழ்வூட்டுவது……. மகிழ்வூட்டுவது…… அதிலும் தொடக்கத்தில் குழுமும் இளம் வயதினரைக் களிப்பூட்டுவது என்பதோடு நிறைவு பெற்றுவிடும். இதற்குப் பபூன் வேஷம் போடும் நடிகா்களுக்குத் தேவை ‘புத்திசாலித்தனம்‘ அல்ல; கோமாளித்தனம் மட்டுமே.

புத்தசாலித்தனங்களை ஒதுக்கிவிட்டு கோமாளித்தனங்கள் மூலம் வருவாயைப் பெருக்கும் உத்திகளைப் பின்பற்றுவது தமிழ்த் திரையுலகம். நவீன அறிவியலின் நுட்பமான கண்டுபிடிப்புகளையும் களிப்பூட்டும் அம்சங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் தொழில்நுட்ப வல்லுநா்கள் நிரம்பியது தமிழ்க் கனவுத் தொழிற்சாலை. தமிழ் மொழியின் பயன்பாட்டு விதிகளைச் சுலபமாக ஒதுக்கிவிட்டு தமிழ்ப் பாடல்கள் தரும் வார்த்தை அடிகளின் ஒலிக்குவியல்களாலும், நடிக, நடிகையா்களின் கிளா்ச்சியூட்டும் உடல்களின் அசைவுகளால் உண்டாகும் பிம்பக்குவியல்களாலும் தமிழா்களின் அன்றாட வாழ்வின் மனப் பிராந்தியம் நிரப்பப்பட்டிருக்கிறது. மிகவும் மெல்லிய குரலுக்கு மாறுவது, அதிலிருந்து கட்டையான குரலில் பேசுவது போன்ற மாற்றங்கள் ஒரு ‘பலகுரல் பேச்சு‘ (Mimicry) என்ற அளவில் பார்வையாளா்களால் ரசிக்கப்படுகிறது. பட்டிமன்றம் கேட்க வந்த பார்வையாளா்களுக்கு அந்தப் பலகுரல் பேச்சு அதிகப்படியான லாபம் (Bonus).

இதே முறையையே விவாதத்தின் முடிவில் தீா்ப்பு வழங்கும் போதும் பின்பற்றுகிறார். சித்திரிப்பு, சித்திரிப்பு,மேலும் சித்திரிப்பு,…. மேலும் மேலும் சித்திரிப்பு என அடுக்கிக்கொண்டே போவதன் மூலம் இரண்டு அணியினரும் எடுத்து வைத்த வாதங்களை மறக்கச் செய்து, பார்வையாளா்களைத் தன் வசப்படுத்திக் கொள்கிறார். அவரது சித்திரிப்புகள் மிகவும் நுணுக்கமான வர்ணனைகளாக, உரையாடல்களாக, வேடிக்கைப் பேச்சுகளாக அமையும் பொழுது பார்வையாளா்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த அதனையொத்த நிகழ்விற்குள் (Nostalgia) நுழைக்கப்படுகின்றனா். அப்படியானதொரு உள்ளிழுக்கப்பட்ட மனநிலையில் தனது புத்திபூர்வமான - மேற்கோள்கள் கொண்ட - திருக்குறள், சங்கப் பாடல்கள், பைபிள், புத்தர் போதனைகள், குா் - ஆன், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ், காந்தியடிகள் என அனைவருக்கும் தெரிந்த சிந்தனையாளா்களிடமிருந்து, எழுத்துக்களிலிருந்து எடுத்தாளப்படும் மேற்கோள்கள் கொண்டு தரப்படுத்தப்பட்ட மொழியில் தனது தீா்ப்பை வழங்கிவிடுவார். பார்வையாளா்களின் மனநிலை சிந்தனையைத் தவிர்த்து நிற்கும்பொழுது தரப்படும் ஆணை அல்லது உத்தரவு போல அவரது தீா்ப்புகள் வந்து சேரும் பொழுது, அத்தீா்ப்பு செய்யப்பட்ட வாதங்களின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டதா? என்று யோசிக்க மறந்துவிடுகிறது பார்வையாளா் மனம்.

இந்த இடத்தில், நடுவா் பாப்பையாவின் அறிமுக உரை, தீா்ப்பு வழங்கும் முறை ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் பாராம்பரிய அரங்கக் கலையான தெருக்கூத்தில் வரும் கட்டியக்காரனின் செயலோடு ஒப்பிட விரும்புகிறேன். தெருக்கூத்தில் வரும் கட்டியக்காரனின் பணி ஏறத்தாழ பட்டிமன்ற நடுவரின் பணியைப் போன்றதே. ஆரம்பத்தில் அவையோர் முன் தோன்றி,

‘வாரான் இதென்ன பாருங்க - கட்டியக்காரன் வாரான்

இதென்ன கேளுங்க‘

என்று பாடி, தான் அணிந்துள்ள கோணக் குல்லாய், பலவண்ண ஆடை, கெந்திக் கெந்தி நடக்கும் நடை எனத் தன்னையே ஒரு கேலிச்சித்திரமாக்கி அறிமுகம் செய்துகொள்வான் (பாப்பையாவும் தனது கருப்பு நிறம், வழுக்கைத் தலையைப் பற்றி அத்தகைய சித்திரத்தைத், தருவதுண்டு). சுய எள்ளல் கொண்டு தன்னை அறிமுகம் செய்யும் கட்டியக்காரன், திடமான மொழியில் அன்று நடக்கும் கூத்துப் பற்றியும். கூத்தை நடத்தப் போகும் குழு பற்றியும், அன்றைய கூத்துக் கதையின் சாரம் பற்றியும் கூறிவிட்டு வேடிக்கை காட்டத் தொடங்கிவிடுவான். அறிமுகம் செய்யும்பொழுது பாடப்படும் பாடல்களும், (பேசும் பேச்சு மொழியும் வேடிக்கை காட்டத் தொடங்கும்பொழுது வரும். பேச்சு மொழியும்) பாடல்களிலிருந்தும் தொனியிலும், சைகைகளிலும், வார்த்தைகளிலும் முற்றாக மாறி கேளிக்கை அம்சத்தை உரியதாக்கிக்கொள்ளும். அவனும் அன்றாட ஊா் நடப்பு, நாட்டு, வீட்டு நடப்பு எனப் பல சித்திரங்களை, கதைகளைக் கூறுவான். அதே கட்டியக்காரன் கூத்து முடிவில் சமயஞ்சார்ந்த தத்துவங்களை, வாழ்க்கை நியதிகளை - புராண இதிகாசக் கதாபாத்திரங்களான துரியோதனை, துச்சாதனன், கீசகன், ராவணன் போன்ற எதிர்நிலைக் கதாபாத்திரங்கள் கடைப் பிடிக்க மறக்க தத்துவங்களை - நியதிகளை - எடுத்துக் கூறி, பயமுறுத்தி - அவ்வாறில்லாமல் பக்தி மார்க்கத்தில் சென்று வாழும் படி கூறி, ‘சுபோஜெயம்‘ சொல்லி முடிப்பான். கடைசி முடிப்பின் போது நகைச்சுவைத் தொனி முற்றிலும் மாறிய பேச்சு மறைந்து போய் உச்சநிலைக் குரலைக் கொண்டு பேசுவான் கட்டியக்காரன்.

கூத்தை ஆரம்பித்து, முடித்து வைக்கும் கட்டியக்காரனிடம் இரண்டு அம்சங்கள் வெளிப்படுவதைக் காணலாம். ஒன்று: எல்லா விபரமும் தெரிந்தவன் - புத்திசாலி, இன்னொன்று : கோமாளி. கோமாளி x புத்தசாலி என்ற இருநிலை எதிர்க்குள் ஒரு கதா பாத்திரம் இயங்கும்பொழுது பார்வையாளா்களின் ஈடுபாடு அதிகமாகுமே தவிர குறையாது. தெருக்கூத்துக் கட்டியக்காரனுக்குக் கூத்தை ஆரம்பித்து வைப்பதும், முடிப்பதும் மட்டுமே வேலை அல்ல. அன்றைய கூத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அறிமுகம் செய்து வைப்பதும் அவனுடைய பணியே. அப்படி அறிமுகம் செய்யும்பொழுது கூத்தில் நடப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

‘துரியோதன மகாராஜா் வருகின்ற விதம் காண்க‘ என்று கூறிவிட்டு ஒதுங்கி நிற்கும் கட்டியக்காரன்.

‘அடேய் காவலா….. நான் யார் தெரியுமா?‘ என்று கேட்க,

‘தெரியுமுங்களே, நொண்டிக்காலு முனிசாமி மகன் பழனிசாமி.‘

தமிழ்த் திரைப் படங்களின் மாய உலகத்தைத் தவிர்க்கவும் முடியாமல், அதற்குள் இறங்கிக் குளித்து சந்தோஷிக்கவும் முடியாமல் இருக்கும் தமிழ் மனத்தின் சாட்சியாக இருக்க முயல்கிறார் திண்டுக்கல் லியோனி.

திரைப்படப் பாடல், திரையிசைப் பாடல்களில் வரும் வாழ்க்கை மதிப்பீடு என அவரது இயங்கு வெளியும், மேற்கோள் வெளியும் அனைவருக்கும் தெரிந்த - அறிந்த திரைப்பட வெளிதான். அதன் மீதான விமா்சனங்களில் முடிவுகளற்றவா்களாய் இருப்பவா்களுக்கு லியோனியின் பொதுப் புத்தி சார்ந்த தா்க்கங்கள் முடிவுகளாய் நிற்கின்றன. அம்முடிவுகளுக்கு வர லியோனி பின்பற்றும் உத்தி, பாப்பையாவின் உத்தியிலிருந்து மாறுபட்டதாய் இருக்கிறது. பார்வையாளா்களின் மனதில் தங்கியுள்ள பழைமையின் மீதான நேசத்தை - நல்லெண்ணத்தை - பிடிமானத்தைத் தனது தீா்ப்புக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார். தங்களின் நிகழ்கால நடப்புகளின் மீது கோபங் கொண்டவா்களாய் - ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளும் வகையற்றவா்களாய் நிற்கும் பார்வையாளா்களின் பதிலியாக மாறி லியோனியின் குரல் ஓங்கி ஒலிப்பதை அவரது முடிப்புரைகளில் காணலாம். கிண்டல், எள்ளல், கோபாவேசம் எனத் தனது சமகாலத்தின் மீது, திரையுலகம் சார்ந்த வெளிப்பாடுகள் மீது - மாரியெனப் பொழிந்து நனைக்கின்றன லியோனியின் வார்த்தைகள். லியோனியின் ஆவேசத்தில் - கிண்டலில் - எள்ளலில் தனது பதிலிகள் இருப்பதாக நம்பி, கைதட்டிவிட்டு வெளியேறுகிறான் பார்வையாளன்.

சாலமன் பாப்பையாவின் பரிமாணம் கோமாளித்தனம்+ புத்திசாலித்தனம் என இயங்கும் கட்டியக்காரனின் பரிமாணம் என்றால், லியோனியின் பரிமாணம் பத்திசாலித்தனம் தேவையற்ற ஸ்பெஷல் நாடகத்து விதூஷகனின் - பபூனின் - ஒற்றைப் பரிமாணம் போன்றது. அவரோடு பட்டிமன்றங்களில் இடம்பெறும் அடையாளங்களற்ற அணிப் பேச்சாளா்களின் பிரபலமின்மையுங்கூட அந்த ஒற்றைப் பரிமாணத்தைத்தான் உறுதிசெய்கின்றன. பபூன் காமெடிக்கு அந்த விதூஷகன் மட்டுமே போதுமானவன்.

காலச்சுவடு, 1998

சரிநிகா், 1999

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்