ஆர். எம். வீரப்பன் -ஒரு நினைவுக்குறிப்பு

தமிழ்நாட்டின் வெகுமக்கள் மனப்போக்கைத் தீர்மானிக்கும் சினிமாவையும் தேர்தல் அரசியலையும் தனது இணை நேர்கோடுகளாகக் கொண்டு வாழ்ந்த ஆளுமைகளில் ஒருவர் ஆர். எம் .வீரப்பன். இவ்விரு கோடுகளில் தனித்தனிப்பாதையில் பயணித்தாலும், இரண்டுக்குள்ளும் ஒட்டியும் வெட்டியும் பயணம் செய்ததாகவும் அவரது வாழ்க்கையின் முடிச்சுகள் இருந்தன. எம்ஜிஆரின் சத்யா மூவிஸ் நிறுவன நிர்வாகி. அதன் மூலம் எம்ஜிஆரின் முக்கியமான படங்களைத் தயாரித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களைக் கொண்டு வெற்றிகரமான சினிமாக்களைத் தயாரித்துப் பெரும்பணம் சம்பாதித்தவர். குறிப்பாக ரஜினிகாந்தின் பாட்ஷா படம் அவரது சினிமா, அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனைகளை உருவாக்கிய படம். ஒருகட்டத்தில் இனியும் அப்படியான முடிச்சுகளில் சிக்கியோ, முடிச்சுகளை அவிழ்த்தோ வாழ்க்கைப் பயணத்தைத் தொடரவேண்டிய தேவை இல்லை என உணர்ந்த நிலையில் அரசியலையும் சினிமாவையும் விட்டுவிலகிக் கொண்ட ஆர். எம்.வீரப்பன் தனது 97 வயதில் மரணம் அடைந்துள்ளார். ஆனால் அவரோடு ஜானகி அணியில் சேர்ந்தவர்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அரசியலிலிருந்து ஒதுங்கினார் என்பதும் உண்மை. மிதக்கும் குமிழிகளின் மீது படரும் சூரியனின் கதிர்கள் உருவாக்கும் வண்ணக்கோலங்கள் மட்டுமே கண்கள் பார்க்கின்றன; பரவசம் அடைகின்றன. ஆனால் அடியாழத்தில் சுழித்து ஓடும் ஆற்றின் நீரோட்டமும் பாறைகளை மோதித்தள்ளும் வேகமும் காட்சிக்கு வருவதில்லை; ஆனால் வரலாற்றை உருவாக்குகின்றன. ஆர்.எம்.வீரப்பன் அடியாழத்தில் இருந்த அசைவற்றுக் கிடந்த ஒரு பாறை

எனது மாணவப்பருவத்தில் நெருங்கிப் பழகிய-உரையாடிய ஒன்றிரண்டு அரசியல்வாதிகள் வழியாகக் கேட்ட செவிவழிச்செய்திகள் வழியாகவே ஆர்.எம்.வீரப்பனின் பிம்பம் எனக்குள் புகுந்தது. அதன் தொடர்ச்சியாகவே அவரது ஆளுமையைப் பற்றி அறிந்து கொண்டேன். அவரைக் குறித்து முதலில் சொன்னவர் கம்யூனிஸ்டாக இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்து பின்னர் அ இ அதிமுகவிலும் இணைந்து தோல்வியுற்ற அரசியல்வாதியாக மறைந்த கே.சுப்பு. அ அதிகம் எனக்குச் சொன்னவர் சேடபட்டி இரா. முத்தையா. இன்னொருவர் கே.சுப்பு.

கே.சுப்புவோடு ஒரே காரில் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் இருந்த அவரது சொந்தக்கிராமத்திற்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. வாடகைக் காரோட்டி எனக்குத் தெரிந்தவர். சில ஊர்களுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அவரது பேச்சுத்துணைக்காக என்னை அழைத்துப் போவார். காரில் நான் வருவதில் கே.சுப்புவுக்கு ஆட்சேபனை இல்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அழைத்துப் போனார். நான் ஓட்டுநர் இருக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து எனது பைக்குள் இருந்த பத்திரிகைகளில் ஒன்றான கணையாழியை வாசிக்கத்தொடங்கினேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டுக் கையில் வைத்துக்கொண்டே என்னோடு பேச ஆரம்பித்தார். அவருக்கு இலக்கிய, அரசியல் பத்திரிகைகள் அறிமுகம் உண்டு என்பது எனக்குத் தெரியும். பத்திரிகைகளில் பெயர் சொன்னதே அறிமுகமாகிவிட, அரசியல் பேசத்தொடங்கினார். இந்திராவின் அவசரநிலைக்காலம், கருணாநிதியின் தந்திரங்கள், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தது எனப் பேச்சு சென்று முடிந்தது. அந்தப் பேச்சிலும், பின்னர் சேடபட்டி முத்தையா சொன்ன அரசியல் நிகழ்வுகளிலும் அதிகமும் வந்து போன பெயர்களாக இருந்த மூன்று பெயர்களில் ஆர். எம்.வீரப்பன் பெயரும் ஒன்று. மற்ற இரண்டு பெயர்கள் கலைஞர் மு.கருணாநிதி, எஸ்.டி.சோமசுந்தரம்.

இரா.முத்தையாவோடு எனக்குப் பழக்கம் ஏற்படக்காரணம் சேடபட்டி எங்கள் தொகுதி. எனது அண்ணன் எங்கள் ஊர் அ இ அதிமுகவின் கிளைச்செயலாளர் என்பதோடு முத்தையாவின் வலதுகரமாக இருந்தார். தனது மாணவப் பருவத்தில் திராவிட இயக்க மாணவ அரசியலில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராக ஆனவர்.அதனால், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றார்.அப்போது நான் அங்கே மாணவன்; பின்னர் ஆய்வாளர். அவர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருப்பார். தனியாக இருக்கும்போது என்னை வரச்சொல்லிப் பேசிக்கொண்டிருப்பார். தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் குறித்துப் பேசிக்கொண்டே நடப்போம். அவரது தந்தையின் பெயர் ராமசாமி என்பதால் என்னிடம் பெரிய மரியாதை காட்டுவார்.நான் கட்சி அரசியல் தாண்டிப் பேசும் மாணவனாக இருந்ததால், வயது வித்தியாசம் இல்லாமல் என்னோடு உரையாடுவார். அந்த உரைகளில் தேசிய அரசியலும், மாநில அரசியலும் திராவிட இயக்கங்களின் அரசியலும், அதற்குள் இயங்கும் சாதிக்கணக்குகளும் இருக்கும். அவர் தான் எனக்கு
எம்ஜிஆருக்கும் ஆர். எம். வீ.க்குமிடையே இருந்த உறவைச் சொல்லியிருக்கிறார்,பின்னர் ஜானகி அணி, ஜெ. அணி எனப் பிரிந்தபோது ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் இரா.முத்தையா. ஜானகி அணியின் முதுகெலும்பு ஆர்.எம்.வீரப்பன்.

கலைஞர் மு.கருணாநிதி X எஸ்.டி.சோமசுந்தரம்; எஸ்.டி.சோமசுந்தரம் X எம்ஜிராமச்சந்திரன்; எஸ்டி சோமசுந்தரம்
X ஆர்.எம்.வீரப்பன்; ஆர்.எம். வீ X ஜெயலலிதா; ஜெயலலிதா X ஜானகி எனப் பல எதிர்வுகள் வழியாக நகர்ந்த திராவிட இயக்க அரசியல் நிகழ்வுகள் பலவும் வெளிப்படையாகத் தெரியாத முடிச்சுகள். அந்த முடிச்சுகள் ஒவ்வொன்றிலும் எம்.ஜி.ஆரின் பின்னணியில் இருந்து அவரது சொத்துகளுக்கும் பெயருக்கும் பங்கம் வராமல் காத்தவர் ஆர்.எம்.வீரப்பன். எனக்குப் பெரிய ஆச்சரியம் அளித்த ஒன்று சேடபட்டி முத்தையாவின் வலதுகரமாக இருந்த எனது அண்ணன், அவரைப் பிரிந்து ஜானகி அணியின் சார்பில் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஆனார் என்பதுதான். சேடபட்டி முத்தையாவோடு இருந்தால் கிளைச்செயலாளராக மட்டுமே இருக்கமுடியும், அணி மாறினால் பதவி உயர்வுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர் இடம் மாறினார். அதே நேரம் அண்ணன் தீவிர எம்ஜிஆர் ரசிகர். அதனால், ஆர்.எம்.வீரப்பன் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக மாறியபோது அதனை ஏற்றுக்கொள்ளாமல் அரசியலிலிருந்து ஒதுங்கும் மனநிலையில் இருந்து மறைந்தார்.அண்ணன் வீட்டிற்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வருகை தந்த அரசியல்வாதிகளில் அமைச்சர் அளவில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்பதே இந்த நினைவுக்குறிப்பை எழுதத் தூண்டியது.

அண்ணன் மறைந்த சில ஆண்டுகள் கழித்துச் சேடபட்டி முத்தையாவே திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தார் என்றாலும் ஆர்.எம்.வீரப்பனைச் சந்தித்துப் பேசினார்; ஆசிபெற்றார் போன்ற செய்திகள் வரவே இல்லை. திராவிட இயக்க அரசியலில் கொள்கை கோட்பாடுகளைத் தாண்டித் தனிநபர் ஆளுமைகளும் இருப்பும் முக்கியமான முடிச்சுகளாக இருந்தன என்பதை விளங்கிக் கொள்ள ஆர் எம் வீரப்பனின் வாழ்க்கை ஓர் உதாரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்