புத்தகக்கண்காட்சி-2023/ எனது பரிந்துரைகள் - முதல் தொகுதி

இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு ஆசிரியனாக ஆனவன் நான். சிற்றிதழ் வாசிப்பில் அறிமுகமான க.நா.சு.வும், வெ.சாமிநாதனும் காரணங்களைச் சொல்லாமல் பெயர்களை முன்வைக்கிறார்கள் என்பதை உணர்த்தியவர் சி.சு.செல்லப்பா. அவரது விமரிசனப்பார்வையில் பனுவலுக்குள் நின்று பேசும் ஓர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்கைத்தாண்டிப் பனுவல்களைச் சூழலில் வைத்து வாசிக்கவேண்டும்; பனுவல்களுக்குள் இருக்கும் தரவுகளையும் நிகழ்வுகளையும் காலப்பின்னணியில் காரணகாரியங்களோடும், தர்க்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு கருதுகோளை நிறுவிக்காட்ட முடியும் என்ற திறனாய்வு முறையியலைக் கற்பித்த முன்னோடிகள் இலங்கையின் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும். அவர்களின் பாதையில் முதன்மையாகக் கல்விப்புலங்களுக்குள் அறிமுகமான தமிழக முன்னோடித் திறனாய்வாளர் கோ.கேசவன். அவரது பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, மண்ணும் மனிதர்களும் என்ற இரண்டு நூல்களும் வாசிப்புத்திளைப்பை உருவாக்கிய திறனாய்வு நூல்கள். இவை படித்த நூல்கள். படிக்கச் சொல்கிறேன். படித்துப்பாருங்கள்.

நானும் நீதிபதி ஆனேன் -எனத்தலைப்பிட்டு கே.சந்துரு எழுதியுள்ள இந்த நூலை அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. சமஸின் அருஞ்சொல் வெளியீடாக ஜனவரி 2022 இல் வந்து இரண்டாம் பதிப்பாகவும் வந்துவிட்டது என நினைக்கிறேன். வழக்கறிஞராகவும் களச்செயல்பாட்டாளராகவும் அவரை அறிவேன். புதுச்சேரியில் இருந்தபோது பேரா.கல்யாணியின் கல்வி சார்ந்த செயல்பாடுகள், ரவிக்குமாரின் மனித உரிமைகள் சார்ந்த செயல்பாடுகளோடு உடன்பாடு கொண்டு பங்கேற்றபோது சந்துருவைப் பற்றி அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பின்னர் மேடைகளில் அவர் பேசும்போது பார்வையாளனாக இருந்திருக்கிறேன்.
நெல்லைக்கு வந்த பின்னர் சில மேடைகளில் அவரும் நானும் ஒரே மேடையில் இருந்துள்ளோம். மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள், இவர்தான் சந்துரு, காலச்சுவடு வெளியீடான கனம் கோர்ட்டார் அவர்களே போன்ற நூல்களை வாசித்துள்ளேன். அவற்றையெல்லாம் தாண்டி அருஞ்சொல் வெளியீடான ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற அவரது தன்வரலாறு எனக்குப் பிடித்த ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் எனக்கும் ஓராசை இருக்கிறது. எனது தன்வரலாற்றை எழுதவேண்டும் என்பது அந்த ஆசை.
 
புனைகதைகள் வாசிக்கும் ஆர்வத்திற்கிணையாக எனக்குத் தன்வரலாறுகள் படிக்கும் ஆர்வமும் உண்டு. மாக்சிம் கார்கியின் தாய் நாவலை வாசித்தபின் அடுத்துப் படித்தது அவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் தான். எனது இளமைப்பருவம், யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் போன்றனவற்றை வாசித்தபோது இதுபோல நாமும் எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பின்னர் மேயோ, நேரு, காந்தி, வனவாசம், நெஞ்சுக்கு நீதி, ஜெயகாந்தன், கமலாதாஸ் என வாசிப்புத் தொடர்ந்தது.

சந்துருவின் நூலை வாசித்தபின் ”நானும் பேராசிரியரானேன்” என்ற தலைப்பு வைத்து எனது வரலாற்றை எழுதலாமா என்று இப்போது நினைக்கும் அளவுக்கு அது பிடித்திருக்கிறது. ஒரு துறையில் அறியப்பட்ட மனிதராக இருந்து தன் வரலாற்றைச் சொல்வதற்கு முன்மாதிரியாக இருக்கிறது இந்த நூல். இதற்குள் அவரது வரலாறு மட்டுமாக இல்லாமல் அந்தக் காலகட்டத்துப் பொது எண்ணங்களும் அதன் திசை மாற்றங்களும் இருக்கின்றன. அதற்கு துறைசார்ந்த ஆளுமையாக விளங்கும் ஒருவர் என்னவிதமான வினைகளையும் எதிர்வினைகளையும் தருவார் என்பதைப் பல இடங்களில் வாசிக்க முடிந்தது. இது எனது காலகட்டத்தின் பதிவுகள்; நமது காலகட்டத்தின் பதிவுகள். வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
 
இரண்டு கட்டுரை நூல்கள்

கோயம்புத்தூருக்கு வருவதற்கு முன்பு இவர்கள் அதிகம் அறிமுகம் இல்லாதவர்கள். நிஷா மன்சூரின் கவிதைகளைத் தனித்தனியாக வாசித்ததுண்டு. தொகுப்பாக வாசித்ததில்லை. ஆங்காங்கே வாசித்த கவிதைகளைத் தாண்டித் தொகுப்பாக வாசித்தது அவரது மூன்றாவது கவிதைத் தொகுதி. வெளியீட்டு விழாவிற்குப் போனபோது அத்தொகுதியோடு -விடுதல்களும் தேடல்களும் -என்ற இந்தக் கட்டுரை நூலையும் தந்தார். இரண்டையும் வாசித்து முடித்தபோது கட்டுரைத் தொகுதியின் சொல்முறைமை எனக்குப் பிடித்திருந்தது. அப்படிப்பிடித்துப் போகக் காரணம் அவரது வாசிப்பிலும் எழுத்திலும் வெளிப்படும் சூஃபித்துவப் பார்வை. குறிப்பான தத்துவப் பார்வையோடு கவிதைகளை அதிகம் வாசித்துக் காட்டியிருக்கிறார். இலக்கியவாசிப்பில் ஈடுபடுபவர்கள் இப்படியான பார்வையோடு வாசித்து முன்வைக்கும்போது இலக்கியப்பனுவல்கள் புதிய அர்த்தங்களைக் கொண்டதாக வெளிப்பட வாய்ப்புண்டு. இந்நூலின் கட்டுரைகளில் அப்படியான தெறிப்புகள் உள்ளன. அவரது நூல்களை ஜோலார் பேட்டையின் தேநீர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 
கவிதை, ஹைக்கூ திறனாய்வு என இலக்கியம் சார்ந்து எழுதும் கோ.லீலாவின் சூழலியல் கட்டுரைகள் தகவல்கள் நிரம்பிய கட்டுரைகளாக மட்டுமல்லாமல் சூழலைக் கவனிக்கத் தூண்டும் கட்டுரைகளாகவும் உள்ளன. வரையாட்டின் குளம்படிகள் (படைப்பு பதிப்பகம், கூத்தப்பாக்கம், கடலூர்) என்ற நூலில் அனைவருக்கும் தெரிந்த கரிச்சான் குருவி, யானை, மைனா, ஆந்தை, எலி, இருவாய்ச்சி, கரையான், புலி, வண்ணத்துப்பூச்சி, நீலகிரி வரையாடு, காக்கா, எறும்பு, வௌவால், மீன்கொத்தி, தேனி, மயில் முதலான உயிரினங்களைப் பற்றிய வாழ்வியல் தகவல்களோடு சூழலியல் பார்வையைத் தருகிறார். அத்தோடு இவ்வுயிரினங்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புகளைத் தேடித்தந்துள்ளார். திரட்டிய தகவல்களோடு தனது பயணத்தையும் இணைத்துத் தரும் அனுபவத்தையும் தருவதால் நம்மைச் சுற்றிக் காட்டுப்பறவைகளும் விலங்கினங்களும் நடந்தும் பறந்தும் அமர்ந்தும் திரியும் உணர்வு உண்டாகின்றது. புனைவல்லாத எழுத்துகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இவ்விரு நூல்களையும் பரிந்துரை செய்கிறேன்.

வரலாறு சார்ந்து இரண்டு நூல்கள்

நாயக்கர் கால இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்த எனக்கு அதிகம் பயன்பட்ட வரலாற்று நூல்கள் ஆர். சத்தியநாதய்யரின் நூல்கள். மதுரை நாயக்கர்கள் பற்றியும் அப்போதிருந்த பாளையக்கார முறை பற்றியும் அவர் எழுதிய ஆங்கில நூல்களை வாசிக்கத் திணறிய காலம் அது. அவையெல்லாம் இப்போது தமிழில் வந்துவிட்டன. மதுரையைக் களமாகக் கொண்டு நாவல்கள் எழுதிய எஸ்.அர்ஷியா மொழிபெயர்ப்பு செய்துள்ளார். கருத்துப்பட்டறை வெளியிட்ட அந்நூலை வெளியிட்டுப் பேசியவர்களில் ஒருவனாக இருந்துள்ளேன்.
சத்தியநாதய்யரின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் பேராசிரியர் ஒய்.சுப்பராயலு. ஜப்பான் பேராசிரியர் நொபுரு கரஷிமாவுடன் இணைந்து சோழர்காலக் கல்வெட்டுகளை ஆய்வுசெய்து தமிழக வரலாற்றுக்குப் பங்களிப்பு செய்தவர். அப்போது அவர் மதுரைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் விரிவுரையாளராக இருந்தார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக இருந்தவர். அவரோடு நேரடிப் பழக்கமும் உரையாடலும் உண்டு. அந்த நேரத்தில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்தவர் பேரா.கு.ராஜய்யன். வரலாற்றை அரசியல் வரலாறாக மட்டும் படிக்க நினைக்கும் வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு கு.ராஜய்யனின் நூல்கள் அதிகம் பயன்படும்.
கு.ராஜய்யன் எழுதிய மதுரை வரலாறு என்ற நூல் பின்னிடைக் காலத்து வரலாறு - நிலவுடைமையின் வீழ்ச்சியைத் தொடங்கிவைத்த காலனிய காலகட்டத்தைப் பற்றிய நூல். ஒருவிதத்தில் சத்தியநாதய்யரின் மதுரை நாயக்கர் வரலாற்றின் தொடர்ச்சி. இப்போது தமிழில் வந்துள்ளது. மொழிபெயர்ப்புக்காகச் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற சா.தேவதாஸ் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலையும் கருத்துப்பட்டறையே வெளியிட்டுள்ளது.
கருத்துப்பட்டறை வெளியிட்டுள்ள இன்னொரு முக்கியமான நூல் ‘தமிழக நகரங்கள் நகரமயமாக்கல்- வரலாற்றியலும் தொல்லியலும்’ . இந்நூல் ஒரு தொகுப்பு நூல். 16 ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பினை மேற்கொண்ட பெ.க.பெரியசாமி ராஜாவும் ந.இரத்தினக்குமாரும் தொகுப்பின் முதல், கடைசிக்கட்டுரையை எழுதியிருக்கிறார்கள். மற்ற கட்டுரைகளை எழுதியவர்கள் இரா.அறவேந்தன், பழ.அதியமான், ஆர்.பாலகிருஷ்ணன், மயிலை.சீனி. வேங்கடசாமி, பெ.ஜெயசங்கர், கோ.சசிகலா, ஜெயஸ்ரீ வெங்கடதுரை, வீ.செல்வகுமார், கே.வி.இராமன், ர.பூங்குன்றன், ப.மோகன் குமாரமங்கலம், சு.கண்ணன், வி.எம்.எஸ். சுபகுணராஜன், பக்தவச்சல பாரதி.
தொழில் வளர்ச்சிக்குப் பின் உருவான கலைச்சொல் நகர்மயமாக்கல். அதனை உள்வாங்கி எழுதப்பெற்ற கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்குமென்ற எனது எதிர்பார்ப்பை நூல் நிறைவேற்றவில்லை. ஆனால் தமிழக வரலாற்றை வெளிசார்ந்த ஒன்றாகப் பார்க்கும் பார்வையோடு கூடிய கட்டுரைகளைக் கொண்டதாக இருந்தது என்பதால் எனது ஆர்வத்தைத் திசைமாற்றிக் கொண்டு வாசித்தேன். அந்த நோக்கில் இந்நூலின் கட்டுரைகள் முக்கியமானவை. இந்நூலின் பதிப்பாசிரியர்கள் கட்டுரையாளர்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைக் கொடுத்திருந்தால் ஆர்வமுள்ளவர்கள் கட்டுரையாளர்களின் மற்ற நூல்களைத் தேடி வாசிக்க உதவியாக இருந்திருக்கும். நகர்மயமாதல், தொழில் மயமாதல் நோக்கில் தமிழ்நாட்டுப் பெருநகரங்களான சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, திருச்சி, சேலம் பற்றி நூல்கள் எழுதப்பட வேண்டும். புனைகதை ஆசிரியர்கள் நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அதனைச் செய்ய வேண்டியவர்கள் பொருளாதாரத்துறையினர். தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகப் பொருளாதாரத்துறையினர் இதுபோன்ற பொருண்மைகளில் கவனம் செலுத்துவது குறைவு. கவனம் செலுத்தினாலும் தமிழில் எழுத மாட்டார்கள். சென்னை வளர்ச்சி மையம் போன்ற ஒன்றிரண்டு ஆய்வகங்களில் செய்யப்படும் ஆய்வுகள் வாசிக்கக் கிடைக்கின்றன என்றாலும் ஆங்கிலமே வெளிப்பாட்டு மொழியாக இருக்கிறது.
மதுரை கருத்துப்பட்டறை வெளியிட்ட இவ்விரு நூல்களையும் மதுரை புத்தகக்கண்காட்சியில் வாங்கினேன். சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். துறைசார்ந்த - அறிவுப்புல நோக்கம் கொண்ட வாசகர்கள் இவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்கும் பயன்படும்.

ஒரு திறனாய்வாளரின் நூல்கள்


இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு ஆசிரியனாக ஆனவன் நான். சிற்றிதழ் வாசிப்பில் அறிமுகமான க.நா.சு.வும், வெ.சாமிநாதனும் காரணங்களைச் சொல்லாமல் பெயர்களை முன்வைக்கிறார்கள் என்பதை உணர்த்தியவர் சி.சு.செல்லப்பா. அவரது விமரிசனப்பார்வையில் பனுவலுக்குள் நின்று பேசும் ஓர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்கைத்தாண்டிப் பனுவல்களைச் சூழலில் வைத்து வாசிக்கவேண்டும்; பனுவல்களுக்குள் இருக்கும் தரவுகளையும் நிகழ்வுகளையும் காலப்பின்னணியில் காரணகாரியங்களோடும், தர்க்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு கருதுகோளை நிறுவிக்காட்ட முடியும் என்ற திறனாய்வு முறையியலைக் கற்பித்த முன்னோடிகள் இலங்கையின் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும். அவர்களின் பாதையில் முதன்மையாகக் கல்விப்புலங்களுக்குள் அறிமுகமான தமிழக முன்னோடித் திறனாய்வாளர் கோ.கேசவன். அவரது பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, மண்ணும் மனிதர்களும் என்ற இரண்டு நூல்களும் வாசிப்புத்திளைப்பை உருவாக்கிய திறனாய்வு நூல்கள்.
2022 இல் கோ.கேசவனின் அனைத்து நூல்களும்
1.தமிழ்ச் சமூகவரலாறு - இலக்கியம்
2.தலித்தியம்
3.மார்க்சியம்
4. இயக்கங்கள்
5.பொதுக்கட்டுரைகள்
என ஐந்து தொகுப்புகளாக கோ.கேசவன் அறக்கட்டளை மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. ஆய்விலும் திறனாய்விலும் ஆர்வமுள்ளவர்கள் தேடி வாங்கிவிடுங்கள்.


செ. ரவீந்திரன்: அரங்கியல் நூல்கள் இரண்டு

 
கால் நூற்றாண்டுக்காலம் நவீன நாடகங்களோடு தனது ஒளியமைப்புப் பணிமூலம் இணைத்துக்கொண்டவர். அவர் ஒளியமைத்த 20 -க்கும் மேற்பட்ட நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் கூத்துப்பட்டறை, சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளி, பேரா. சே.ராமானுஜம் இயக்கிய நாடகங்கள் எனப் பலவற்றைத் தனது ஒளியமைப்பின் மூலம் அழகூட்டி அர்த்தப்படுத்தியவர் பேரா.செ.ரவீந்திரன். நாடக நிகழ்வுகளுக்கு ஒளியமைப்புச் செய்யத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது நாடகவியல் தொடர்பை எழுத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தியவர். எனது மாணவப்பருவத்திலேயே அவரது கட்டுரைகளை யாத்ரா(1981) வில் வாசித்தவன். இப்போது அவர் தமிழில் எழுதிய நிகழ்த்துக்கலை சார்ந்த கட்டுரைகள் ஒரு தொகுப்பாகவும், ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இன்னொரு தொகுப்பாகவும் போதிவனம் பதிப்பகம் மூலம் இந்த ஆண்டு அச்சில் வந்துள்ளன. தமிழின் நிகழ்த்துக்கலை மரபை அறியும் ஆர்வமும் ஆய்வு நோக்கில் அவற்றைப் புரிந்துகொள்ளும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த இரண்டு நூல்களையும் தவறாது வாங்கிவிடுங்கள்.
1.தமிழக நிகழ்த்துக்கலை - மரபின் வேர்களைத் தேடி
2. Performing Arts in Ancient Tamil society


முகநூலில் எழுதிய இந்தக் குறிப்புகள் புத்தகம் வாங்கிப் படிக்க நினைப்பவர்களுக்கு உதவும். தேடும்போது பெயர்கள் நினைவில் வரும் அல்லவா?

கவிதைகள்

முன்பு இதழ்களில் வரும் கவிதைகளை வாசித்து வாசித்து கவிகள் பற்றிய மதிப்பீடு உருவாகிவரும். அம்மதிப்பீட்டை ஒட்டிப் பின்னர் தொகுதிகள் வரும்போது வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வேன். இப்போது அந்த இடத்தை முகநூலின் பங்கும் முடிவு செய்கிறது. இதழ்களில் வரும் கவிதைகளைத் தாண்டி முகநூல் கவிதைகளும் வாங்கிப் படிக்கவேண்டிய கவிகளின் பட்டியலை உருவாக்குகின்றன
இந்தப் புத்தகக் காட்சியில் ஏற்கெனவே பெருங்கவிகளாக வலம்வரும் கவிகளின் பெருந்தொகுதிகளும் புதிய தொகுதிகளும் வருவதாக விளம்பரங்கள் காட்டுகின்றன. கவிதை வாசிப்பில் ஆர்வமும் விருப்பமும் இருப்பவர்கள் பின்வரும் பெருங்கவிகளின் தொகுப்புகளையும் புதிய தொகுப்புகளையும் வாங்கலாம்
1. யவனிகா ஸ்ரீராம்
2. ரியாஸ் குரானா/இலங்கை
3.சுகுமாரன்
4.மனுஷ்யபுத்திரன்
5.கருணாகரன்/ இலங்கை
6. சுகிர்தராணி
7.இளங்கோ கிருஷ்ணன்
இவர்கள் அல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாசித்துப் பிடித்துப் போன கவிகளென ஒரு பட்டியல் உண்டு. சிலரது கவிதைகள் குறித்து எனது வலைப்பூவில் கட்டுரைகள் உள்ளன.
1.மின்ஹா - நாங்கூழ், கடல், காற்று, கங்குல் - இலங்கை
2. மா.காளிதாஸ் - பெருஞ்சொல்லின் குடல்,
3 ஸ்டாலின் சரவணன் - ரொட்டிகளை விளைவிப்பவன்
4. அ.ரோஸ்லின் - வாழைக்குலைக்கும் பிரபஞ்சம்
5. பெரு .விஷ்ணுகுமார் - ழ என்ற பாதையில் நடப்பவன்
6. அம்பிகா குமரன் - காலம்
7. ஜிதேந்திரன் - கல்சூடாக இருக்கிறது
8. ரூபன் சிவராஜா- எழுதிக் கடக்கின்ற தூரம் (புலம்பெயர்)
9. சுகன்யா ஞானசூரியின் நாடிலி (அகதி/ இந்தியா)
10 தில்லை- விடாய்/இலங்கை
11.தேவசீமா- வைன் என்பது குறியீடல்ல:
12. கண்ணம்மா -சன்னத்தூறல்
13 கவிதா லட்சுமி- சிகண்டி/ நார்வே
14 லறீனா- ஷேக்ஸ்பியரின் காதலி/ இலங்கை
15. இன்பா -கீச்சொலிகள்-சிங்கப்பூர்
16. ஸ்ரீவள்ளி -பொல்லாத மைனாக்கள்
17அம்பிகா வர்ஷினி -இந்த இரவு ஒரு சிறிய நூலகம்
18 ஆ.திராவிடமணி-கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்
19 ரியாலாஸ் -யசோதரையின் வீடு / இலங்கை
20.மைக்கல் கொலின்-இவனைச் சிலுவையில் அறையுங்கள் -இலங்கை
நாவல் இலக்கியம்

தமிழ் இலக்கியம் உலகத் தமிழ் இலக்கியமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதைப் பேசும் நோக்கத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் வாசித்த இந்த நாவல்களில் பலவும் புலம்பெயர்ந்த / ஈழத்தமிழ் நாவல்கள். நீங்களும் வாசிக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன். சிலவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

1.தாமரைச் செல்வி - உயிர்வாசம் (அவுஸ்திரேலியப் பின்னணி)
2. ஈழவாணி -கொச்சிக்கடா ( இந்தியப்பின்னணி)
3.ஏதிலி - அ.சி.விஜிதரன்(இந்தியப்பின்னணி
4. குமிழி - ரவி (இந்தியப்பின்னணி
5. சயந்தன் - அஷோரா
6..ஷோபா சக்தி - இக்சா (போர்க்காலம்)
7. கோ.புண்ணியவான் - கையறு ( மலேசியா/ இரண்டாம் உலகப்போர் பின்னணி)
8.ஆசி.கந்தராசா - ஒரு அகதியின் பேர்ளின் வாசல் (ஜெர்மனி/ போருக்கு முன்னும் போர்க்காலத்திலும்)
9.நாகரத்தினம் கிருஷ்ணா -சைகோன் புதுச்சேரி -( வியட்நாம்)
*************
இவை தவிர வாசித்த தமிழ்நாட்டு நாவல்கள்:
1.எஸ்.ராமகிருஷ்ணன் - சஞ்சாரம்
2.இமையம் - இன்னும் உயிரோடிருக்கிறேன், வாழ்க! வாழ்க!!
3.சரவணன் சந்திரன் - அத்தாரோ
4.அல்லி பாத்திமா - பாண்டிச்சி
5. சோ.தர்மன் -பதிமூனாவது மையவாடி
6.சுகுமாரன் - பெருவலி

சிறுகதைகள்
இதழ்களில் வரும்போது வாசிப்பதின் வழியாகவே எனக்குள் சிறுகதைக்காரர்களின் அடையாளம் உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் போட்டிகளின் நடுவர்களில் ஒருவர் என்பதின் வழியாகவும் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதை ஆசிரியர்கள் எனப்பரிந்துரைகள் செய்வதுண்டு. கடந்த மூன்று ஆண்டுகளில் அச்சிதழ்களைத் தாண்டி இணைய இதழ்கள் வழியாகப் புதிய எழுத்தாளர்களின் கதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. வாசித்த பலரது கதைகள் குறித்து அவ்வப்போது முகநூலிலும் வலைப்பூவிலும் எழுதியதுண்டு. அவர்களில் எத்தனைபேரின் தொகுதிகள் இந்தக் கண்காட்சியில் வந்துள்ளன என்று தெரியவில்லை. அதனால் எழுத்தாளர்களின் பெயர்களையே இங்கே தருகிறேன். அவர்களின் தொகுதிகள் வந்திருந்தால் வாங்கிப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

1. சரவண கார்த்திகேயன் - 10 -க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்துக் குறிப்புகள் வைத்துள்ளேன்
2. திருச்செந்தாழை -பெரும்பாலான இணைய இதழ்களில் இவரது கதைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. வாசித்துள்ளேன்
3.சித்துராஜ் பொன்ராஜ் வித்தியாசமான பின்னணிகளில் ஆண்களையும் பெண்களையும் நிறுத்தி மனவுணர்களை எழுதிக்காட்டும் சிங்கப்பூர் எழுத்தாளர். 10 கதைகளுக்கும் மேல் வாசித்துள்ளேன்.
4.பிரமிளா பிரதீபன் - இவரது கதைகளுக்கு விரிவான முன்னுரை எழுதியுள்ளேன். பெண்களின் உணர்வுகள் இவரது கதைகளில் வெளிப்படும் விதம் அலாதியானது
5. பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் - முன்பே தொகுப்பு வந்துள்ளது.
6 ஹேமா- சிங்கப்பூர் எழுத்தாளர்களில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்
7.நவீன்.ம. - வல்லினம் இதழை நடத்துபவர். அண்மைக்காலச் சிறுகதைகள் முன்பிருந்த போக்கிலிருந்து மாறுபட்டு வெளிப்படுகிறார்
8.விஜயராவணன் - தொகுப்பு வந்துள்ளது. நடுவில் இவரது எழுத்துகளை வாசித்திருக்கிறேன் அகழில் வந்த கதை கவனிக்கப்பட்ட கதை
9. தமிழ்க்கவி -போர்க்கால நினைவுகளை எழுதும் இலங்கத் தமிழ் எழுத்தாளர்
10 தாட்சாயினி - போருக்குப் பின்னான இலங்கைவாழ்க்கையைப் பதிவுசெய்கிறார்
11.ஜெகன்னாதன் - கவனம்பெற்ற கதைகளை எழுதியிருக்கிறார். தொகுப்பு வந்துள்ளது
12.அனோஜன் பாலகிருஷ்ணன் -புலம்பெயர்
13தெய்வீகன் - புலம்பெயர்
14கலாமோகன் - புலம்பெயர்

புலம்பெயர் எழுத்தாளர்களில் கலாமோகனின் அனுபவங்கள் ஐரோப்பிய வாழ்க்கையின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை அகதியின் பார்வையில் தருவது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் தெய்வீகன் சிறுகதை வடிவத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறார். போர்க்கால நினைவுகளிலிருந்து விலகவில்ல்லை. அனோஜனின் கதைகள் புலம்பெயர் இருப்பில் உருவாகும் தவிப்புகளைக் குறிப்பாக காமஞ்சார்ந்த தவிப்புகளை எழுதிக்காட்டியவராக அடையாளப்படுத்தியுள்ளன.

15. மயிலன் சின்னப்பன் -புதிதாக எழுதுகிறார். சமூக முரண்பாடுகளுக்குள் இருக்கும் மனிதர்கள் இவர்களது பாத்திரங்கள்
16. எம்.கே.மணி
17. சுஷில்குமார்
இவ்விருவரது கதைகள் அதிக எண்ணிக்கையில் வாசிக்கவில்லை. ஆனால் வாசிக்கவேண்டிய எழுத்தாளர்கள்
18 லாவண்யா சுந்தரராஜன்
19 அகிலா
20 கிருத்திகா
நிறையக் கதைகளை வாசித்திருக்கிறேன். வெவ்வேறு பொருண்மைகளில் எழுதுகிறார்கள். தனித்த அடையாளமாகச் சொல்லும்படியாக ஒன்றும் தோன்றவில்லை
21 அம்பிகா வர்ஷினி -மதுரையின் அடையாளம் கொண்ட எழுத்துக்காரர். ஒரு அணிந்துரை கொடுத்துள்ளே


சிறுகதைகள்
அறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கு இணையாகப் புதிய எழுத்தாளர்களின் கதைகளை வாசித்த ஆண்டுகளாகக் கடந்த மூன்றாண்டுகளைச் சொல்லலாம். குறிப்பாகக் கோவிட் தொற்றுக்காலம் இணையத்தில் வாசிப்பை அதிகப்படுத்தியிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்லலாம்.

2022 -இல் கடையாக வாசித்த கதைத் தொகுதி ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. அதேபோல் தொகுதியின் எல்லாக்கதைகளையும் வாசித்து முன்னுரை எழுதிய தொகுப்புகள்: பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையும் ஒரு காடு, அம்பிகா வர்ஷினியின் சிதைமுகம், எல்லாஅக்கதைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இமையத்தின் தாலிமேல சத்தியம் தொகுப்பின் கதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். சுஜித் லெனின் தொகுப்பு வந்திருக்கிறது. அவரது பெரும்பாலான கதைகள் வாசிக்கப்பட்ட கதைகள். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள தொகைநூலையும் வாங்கி வைத்துள்ளேன். அதில் உள்ள கதைகள் பாதிக்கு மேல் முன்பே வாசித்தவை.
இவர்கள் அல்லாமல் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள் ---& பிறகதைகள் என்ற வகைமைத் தொகுப்புகளாக 2022 இல் வந்த தொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டுக்கும் அந்த வகைமைத் தொகுப்புகள் பலவற்றை வெளியிட்டுள்ளது யாவரும். அத்தொகுப்புகளில் இருக்கும் ஒன்றிரண்டு கதைகளாவது நான் வாசித்த கதைகளாகவே இருக்கும். இவ்வகைத் தொகுப்புகளின் ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்குள் எழுத வந்தவர்கள். அவர்கள் புதுவகைச் சொல்முறையிலும் புதிய வெளிகளிலும் உலகமயச் சூழலைச் சந்திக்கும் தமிழ் மனிதர்களை எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சமகாலச் சிறுகதைகளைத் தேடுபவர்கள் நேராகச் செல்லவேண்டிய பதிப்பகம் யாவரும். காலச்சுவடுவில் குமாரநந்தனின் தொகுப்பும் எம். குலசேகரனின் தொகுப்பும் வந்துள்ளதாக அறிகிறேன். அவர்களின் கதைகளில் பெரும்பாலானவற்றை வாசித்திருக்கிறேன்.
இவர்களோடு அறியப்பட்ட எழுத்தாளர்களான பாவண்ணன், யுவன் சந்திரசேகர்,வண்ணதாசன், தேவிபாரதி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, உமா மகேஸ்வரி, அம்பை, போகன் சங்கர், வண்ணநிலவன், தமயந்தி,சுரேஷ் பிரதீப், சரவணன் சந்திரன், சுனில் கிருஷ்ணன், முதலானவர்களின் கதைகள் அச்சிதழ்கள், இணைய இதழ்களில் வரும்போது வாசித்துவிடுகிறேன். அவர்களின் தொகுதிகளை வாங்கி வாசிக்கவில்லை. அதனால் தொகுதிகளைப் பரிந்துரைக்க இயலவில்லை. இந்த வகைப்பாட்டிற்குள் புலம்பெயர் எழுத்தாளர்களின் பெயர்களையும் சேர்க்கவேண்டும். இருவகை இதழ்களிலும் கண்ணில் தட்டுப்பட்டால் வாசிக்கும் சிறுகதைக்காரர்களாக ஷோபாசக்தி, கலாமோகன், இளங்கோ, தெய்வீகன், நோயல் நடேசன், தமிழ்நதி, அகரமுதல்வன், கருணாகரமூர்த்தி, ஆ.சி.கந்தையா, அனோஜன், மாஜிதா, கறுப்பு சுமதி முதலானோர் இருக்கிறார்கள். மலேசிய எழுத்தாளர்களான வல்லினம் நவீன், பாலமுருகன், சிங்கப்பூரிலிருந்து சிறுகதைகள் எழுதும் சித்துராஜ் பொன்ராஜ், ஜெயந்திசங்கர், ஹேமா, சுஜா செல்லப்பன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கடந்த ஆண்டோ, இந்த ஆண்டோ தொகுதிகள் வந்திருக்கலாம். நான் பார்க்கவில்லை. வந்திருந்தால் வாங்கிப் படிக்கலாம். ஏமாற்றம் தராத கதைசொல்லிகள்

கவிதைகள்

2022 -இல் கடையாக வாசித்த கவிதைத் தொகுதி தேன்மொழிதாஸின் முருகியம். அதுபற்றி விரிவாகப் பேசவேண்டும். இந்த ஆண்டு வாசித்த தொகுதிகளில் பிடித்த கவிதைகள் கொண்ட தொகுதிகள். இவற்றை வாசிக்கவேண்டிய கவிதைத் தொகுதிகளாகப் பரிந்துரைக்கின்றேன். இந்த ஆண்டு வாசித்த கவிதைத் தொகுதிகள். இவை பற்றி எனது வலைப்பூவில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்
இளங்கோ கிருஷ்ணன் - வியனுலகு வதியும் பெருமலர்
எம்.டி.முத்துக்குமாரசாமி - ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்
கருணாகரன் - நினைவின் இறுதி நாட்கள்
இன்பா -லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்
தில்லை- விடாய்
அ.ரோஸ்லின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம்
மின்ஹா-நாங்கூழ்
பெரு விஷ்ணுகுமார் -ழ என்ற பாதையில் நடப்பவன்
ரூபன் சிவராஜா-எழுதிக் கடக்கின்ற தூரம்.
சுகன்யா ஞானசூரி- நாடிலி.
தேவசீமா- வைன் குறியீடல்ல
அன்புத்தோழி ஜெயஸ்ரீ- தழும்பின்_மீதான_வருடல்கவிதைகளை வாசிக்க இரண்டு நூல்கள்

நவீனத்துவத்திற்குப் பின்னான தமிழ் எழுத்துகளை வாசிப்பதற்கு மேற்கத்திய வாசிப்புப் பார்வைகளே உதவும் என்ற நிலை இப்போதும் இருக்கிறது. ஆனால் நவீனத்துவ இலக்கியங்களோடு வளர்ந்த கல்விப்புலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் தொடர்ந்து அவற்றை வாசிக்கத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் இலக்கியக் கொள்கைகள் உதவும் என வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதிக் கொண்டே இருக்கிறோம். அதே நேரம் எல்லாம் தொல்காப்பியத்தின் இலக்கணங்களே போதும் என்ற பார்வையை முன்வைப்பதும் இல்லை. மேற்கத்தியப் பார்வையையும் தொல்காப்பியப் பார்வையையும் இணைத்துக் கொள்ளும் நிலையில் கூடுதல் புரிதல்கள் கிடைக்கும் என்பது அதன் பின்னுள்ள நிலைபாடு.
இந்த நோக்கத்தில் கவிதைகளை வாசித்துக் காட்டிக் கட்டுரைகள் எழுதிய முன்னோடிப்பேராசிரியர் சி.க. என அழைக்கப்பட்ட சி.கனகசபாபதி.மரபுக்கவிதையை மறுதலித்துப் புதுக்கவிதையாகத் தங்கள் வசன கவிதையை முன்வைத்த கட்டுரைகளை அதிகம் வெளியிட்ட எழுத்து இதழிலேயே எழுதினார். அதேபோல் அமைப்பியலைத் தமிழுக்கு அறிமுகம் செய்த தமிழவனும் நவீனத் தமிழ்க்கவிதைகளை வாசிப்பதில் தொல்காப்பியத்தின் செய்யுளியல் பயன்படும் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்;வாசித்துக் காட்டியிருக்கிறார். இந்தப் பாதையில் கவிதையியலைக் குறித்து தொடர்ந்து எழுதும் பேராசிரியர் க.பூரணச்சந்திரன். அவர் கவிதையியல் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள நூல் பொருள்கோள். முன்னர் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டதின் இப்போதைய வடிவத்தை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நானும் எழுதியிருக்கிறேன் என்றாலும் நூலாக ஆக்கவில்லை. விரைவில் ஆக்கவேண்டும். வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

மரபுக்கவிதைகளின் தேக்க நிலையை உணர்ந்து வசனகவிதையைப் புதுக்கவிதையாக முன்மொழிந்து வளர்த்த இதழ்களில் செல்லப்ப்பாவின் எழுத்து முன்னோடி இதழ். அதில் சி.க.போன்றவர்கள் தொல்காப்பியக் கவிதையியலை முன்வைத்த போதிலும் அது முழுமையான அங்கீகாரம் பெறவில்லை. மேற்கத்தியப்பார்வையோடு சம்ஸ்க்ருதத்தின் கவிதையியலை உள்வாங்கிய பார்வையே முதன்மை பெற்றது. அந்தப் பார்வையில் நவீனக் கவிதைகளை வாசித்துக் காட்டியவர்களின் பட்டியல் நீளமானது. தங்களைச் சிற்றிதழ் மரபினராகக் கருதிக்கொள்ளும் அவர்களில் பெரும்பாலோர் புதுக்கவிதைகள் எழுதும் கவிதைக்காரர்களும்கூட. கவிகளாகவும் கவிதை வாசிப்பாளர்/ விமரிசகர்களாக நினைத்துக் கொள்பவர்கள். அந்தப் பட்டியலில் கவிதையின் அந்தரங்கம் என்ற நூலின் மூலம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் க.வை. பழனிசாமி. எழுத்துப் பாரம்பரியத்தைப் பல நிலைகளில் தொடரும் காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. வாங்கிப் படிக்கவேண்டிய நூல்களில் ஒன்று.

தன்னுணர்வான சிந்தனை வெளிப்பாடு.

இந்தப் புத்தகத்தை அதன் ஆசிரியர் என்னிடம் ஒரு இலக்கிய நிகழ்வில் தந்தார். அவர் தந்தபோது வாங்குவதற்கு யோசித்தேன். அவரது பெயரோ, எழுத்தோ எனக்கு முன்னறிமுகம் இல்லாத ஒன்று என்பது ஒரு காரணம். முகநூலில் வாசித்த நூல்கள் பற்றி அவ்வப்போது ஒருசில வரிகள் எழுதுகிறேன் என்பதை வைத்து முகநூலில் நண்பர்களாக இருப்பவர்களும் பின் தொடர்பவர்களும் தரும் நூல்களை வாங்கிவிட்டு அது குறித்து எழுதவில்லை என்றால் தொடர்ந்து விசாரிப்பார்கள்; வருத்தப்படுவார்கள். கோபப்பட்டவர்களும் உண்டு. என்னிடம் தரப்படும் நூல்களை வாசிக்கத் தொடங்கிய பின் தொடர்ந்து வாசிக்கலாம் என்பதை நூல்களே தீர்மானிக்கின்றன. எழுதலாம் என்பதை அதன் வெளிப்பாடுகளே முடிவு செய்கின்றன.

முன்னறிமுகம் இல்லாத அவர் எனது தயக்கத்தைப் பார்த்து வலியுறுத்தியே தந்தார். எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை; ஆனால் வாசித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டுத் தந்தார். மறுக்காமல் வாங்கிக் கொண்டேன். எல்லாமே இலவசம் என்ற தலைப்போடு ‘ இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி என்ற துணைத் தலைப்பும்’ கிராமியப் பொருளாதாரம் குறித்த நூல் என்ற நினைப்புதான் வாசிக்கத்தூண்டியது. நான் நினைத்ததுபோலவே கிராமியத்தன்னிறைவுப் பொருளாதாரம் குறைத்தே அந்நூல் விளக்கிக் கொண்டே போனது. ஒவ்வொரு பக்கங்களிலும் அவர் விளக்கும் முறை வெளியிலிருந்து பார்த்து, ஆய்வு நோக்கில் விசாரித்து எழுதியனவாக இல்லாமல் ஒவ்வொன்றையும் உள்ளாளாக இருந்து உணர்ந்து புரிந்துகொண்டு எழுதியனவாக இருந்தன.

இந்திய விவசாயத்தின் அனைத்து மூலப்பொருட்கள் குறித்தும் நிலம், நீர், விதை, விளைச்சல், பங்கீடு, விற்பனை என விரிவாகப் பேசும் நூல் அதன் வழியாக இந்தியக் கிராமங்களில் என்னென்ன மாற்றங்களை முன்னெடுக்க முடியும் என்பதைக் காந்தி சொன்ன குறிப்புகளை விவாதித்துள்ளது. காந்தியச் சிந்தனை, காந்திய வழிமுறை, அவர் முன்வைத்த வாழ்வியல் ஆகியன குறித்து மறுபார்வைகளை இலக்கியவாதிகள் முன்மொழியும் இந்த நேரத்தில் தனது அனுபவம் சார்ந்து கிராமியப்பொருளாதார மறுசீரமைப்பைப் பேசும் இந்நூல் பாரதி சின்னச்சாமியின் இந்நூலும் வாசிக்கவேண்டிய ஒரு நூல்; அதன் வழிமுறைகள் செயல்பாட்டுக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. கோயம்புத்தூர், எழில்மதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்