இமிழ் சிறுகதைகள்: உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள்


ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) என்னும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களின் அடையாளத்தை மீட்கவும் தங்களுக்கென ஒரு தேசம் இல்லையென்றும் பேசிய அந்தப் பின்னணியைக் குறிக்கும் சொல்லாக டையோஸ்போரா என்னும் சொல் இலக்கிய விவாதங்களில் இடம் பெற்றுள்ளது. சிதறடித்தல், தேச அடையாளம் வேண்டல் என்ற அந்த மனநிலை ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஏறத்தாழப் பொருந்திப் போகும் என்ற அளவில் புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லை ஆங்கில டையோஸ்போராவின் மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.
புலம்பெயர் இலக்கியம் என்பதைப் புலம் பெயர்ந்தோரின் இலக்கியம் எனக் குறுக்கிப் பார்க்கும் நிலை இருக்கிறது. அதன் தொடர்ச்சியில் புலம்பெயர்வினால் ஏற்பட்டுள்ள பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களையும், அடையாளமிழப்பையும் பேசும் நிலைக்குப் பல விவாதங்கள் சென்றுள்ளன. அதற்குப் பதிலாகப் புலம் பெயர்வதற்கான காரணம் என்ற மூலத்திலிருந்து தொடங்கினால், ஒட்டு மொத்தப் போராட்ட வரலாற்றையும் பேச வேண்டிய தேவை அதில் உள்ளது என்பது புரியவரும். அவ்வாறு பேச வில்லையென்றால் சொந்த ஊரையும் நாட்டையும் நினைத்து ஏங்கும் இழப்பின் துயரப் பதிவுகளாக(Nostalgia) மட்டும் புலம்பெயர் இலக்கியம் நின்று போகும் வாய்ப்புண்டு.

இந்திய மொழிகளில் இடம்பெற்றுள்ள புலம்பெயர் எழுத்துகளுக்கு மாறாகத் தமிழின் -குறிப்பாக ஈழத்தமிழின் புலப்பெயர்வு அமைந்துள்ளது. உற்றாரையும் ஊரையும் நாட்டையும் இழந்து ஏதுமில்லாத – ஏதிலிகளாகப் பல நாடுகளுக்கும் செல்ல நேர்ந்தது பெரும் துயரம். அந்த் துயரம் – அனுபவம் - இந்தியத்துணைக் கண்டத்தில் வாழும் பிற தேசிய இனங்களுக்குக் கிடைக்காத அனுபவம். அந்த அனுபவங்களைத் தனது மொழியின் வளமான இலக்கியங்களாக மாற்றிக்கொண்டதின் மூலம் இலக்கியச்செல்வமாக மாற்றியிருக்கிறது. இழப்பில் கிடைத்த பெறுமதி. அதனால் அதனைத் துயரத்தின் பகுதியாகப் பார்ப்பதிலிருந்து விலகி, நேர்மறைப் பலனாகப் பார்க்கப் பழகிக் கொள்ளலாம். அப்படிப் பார்க்கத்தூண்டும் பல்வேறு புலம்பெயர் தொகை நூல்களைக் கடந்த காலங்களில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தந்திருக்கிறார்கள். அவற்றுள் அண்மையில் வந்துள்ள இமிழ்- வேறுபட்டதும், ஒரு மைல்கல் என்ற நிலையில் வைத்துப் பேசவேண்டிய ஒன்று எனக் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு முன் வெளி வந்த தொகைநூல்கள் இலக்கியப்பனுவல்கள் என்ற வகைப்பாட்டைத் தாண்டிப் பலவற்றையும் தொகை நூல்களாக வந்துள்ளன. இது மட்டுமே ஒற்றை இலக்கியவடிவத்தை – சிறுகதை என்ற வடிவத்தில் நடந்துள்ள சாதனைகளையும் போக்குகளையும் தொகுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்பட்ட தொகை நூலாக வந்துள்ளது.

***********************

இலங்கைத் தமிழர்களின் கால்நூற்றாண்டுக் (1983-2009) காலப் போராட்டத்தை, வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு எழுதுவீர்கள்? என ஒரு வரலாற்று ஆசிரியரிடம் இப்போது கேட்டால், ‘அது தோல்வியின் வரலாறு’ எனச் சொல்லக்கூடும். ஆனால் மே.18, 2009 க்கு முன்னால் கேட்டிருந்தால் உடனடியாக எந்தப் பதிலையும் அவர் சொல்லியிருக்க மாட்டார். காரணம் ஈழத்தமிழர்களின் கனவான ஈழத்தனிநாடு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற முடிவு தெரியாமல் வரலாற்றை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைத்திருக்காது. எந்த ஒரு நிகழ்வையும் வெற்றி- தோல்வியைக் கொண்டே முடிவு செய்யும் அடிப்படைப் பார்வை கொண்டது வரலாறு. அதனால் அது நிகழ்காலத்தைப் பற்றிய கருத்துரைப்பை எப்போதும் தள்ளிப் போடவே செய்யும். ஆனால் இந்தக் கேள்விக்கு இலக்கிய ஆசிரியர் கூடத் தேவை இல்லை. இலக்கிய மாணவனே உடனடியாகப் பதில் சொல்லத் தொடங்கி விடுவான். ஏனென்றால் இலக்கியம் முடிவுகளுக்காகக் காத்திருப்பதில்லை. எல்லா நிகழ்வுகளையும் நடந்து கொண்டிருக்கும் போதே பதிவு செய்வதும், அவை பற்றிக் கருத்துரைப்பதும், விமரிசிப்பதும் தன்னுடைய வேலை என்று கருதுகிறது இலக்கியம்.

ஒவ்வொரு நிகழ்வையும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சொல்லி வைத்துக் கட்டியங்கூறும் வேலையை இலக்கியம் தன்னுடைய குணமாகக் கொண்டிருக்கிறது. கூறும் கட்டியம் நடக்காமல் போய்விடுமோ? என்ற தயக்கம் எல்லாம் இலக்கியத்திற்குக் கிடையாது. ஒரு நிகழ்வின் தொடக்க அசைவையே கண்டறிந்து கருக்கொள்ளும் நிலையில் முன்னறிவித்து விடுவது இலக்கியவாதிகளின் வேலை. காத்திரமான நிகழ்வுகள் பலவற்றிற்கு முன்னறிவிப்பாக இலக்கியம் விளங்கியதற்கு உலக இலக்கியங்களில் பல உதாரணங்கள் உண்டு என்றாலும் பாரதியின் வரிகளை ஆகச் சிறந்த உதாரணம் எனச் சொல்லலாம். இந்தியா விடுதலை அடைந்த ஆண்டு 1947. ஆனால் பாரதி’’ஆடுவோமே..பள்ளுப் பாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைத்து விட்டோமென்று ‘என்று எழுதிய காலம் 1920-க்கும் முன் என்பதை நாம் அறிவோம்.

***************

‘இன்றைய ஈழ- புலம்பெயர் சிறுகதைகள்’ என்ற துணைத்தலைப்போடு வந்துள்ள இமிழ் என்னும் தொகைநூலில் 10 நாடுகளில் வாழுகின்ற- தமிழில் எழுதுகின்ற 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பொதுவாக ஒரு எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பைப் பகுப்பாய்வு செய்து எழுத்தாளரின் இலக்கியவியல் நோக்கங்களைப் பேசமுடியும். அதே அடிப்படைகளைக் கொண்டு வெவ்வேறு எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுதியை மதிப்பிடவோ, பகுப்பாய்வு செய்யவோ முடியாது; கூடாது. அதற்கு மாறாகத் தொகுப்பாசிரியர்களின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுதல் அல்லது பகுப்பாய்வு செய்தல் சரியாக இருக்கும்.

இந்தத் தொகைநூலில் இடம்பெற்றுள்ள கதாசிரியர்களிடம் குறிப்பிட்ட நோக்கம் எதனையும் விவரித்து அல்லது விளக்கிக் கதைகள் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. தொகுப்புரை போல எழுதப்பட்டுள்ள ‘கண்ணாடி விரிசல் கதைகள்’ என்ற குறிப்புரையில் தகவல் எதுவுமில்லை. அதற்கு மாறாக, “இன்றைய ஈழ-புலம்பெயர் இலக்கியத்தில் பன்முகத்தன்மையோடு வெளிப்படும் நிலமும் பண்பாடும் பழங்குடித் தொன்மங்களும் வீறானவை. அதுவே ஈழ -புலம்பெயர் இலக்கியம் சமகாலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் தனித்துவமான பங்களிப்பு. இதன் குறுக்குவெட்டு முகம் இத்தொகுப்பு” என்ற குறிப்பு அதில் உள்ளது. இந்தக் குறிப்பை உள்வாங்கிக் கொண்டு இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் பன்முகத்தன்மையையும்,கதைகளின் புனைவு வெளிசார்ந்த நிலமும் பண்பாடும் பழங்குடித்தொன்மங்களின் இயல்பையும் அறிமுகம் செய்யலாம். அத்தோடு அதன் குறுக்குவெட்டு முகத்தில் ஈழத்துப் போர்க்கால நினைவுகளும் புலம்பெயர் அலைவுகளும் எவ்வாறு பதிவாகியிருக்கின்றன என்பதையும் விவாதிக்கலாம்.

வாசிக்கும் கதைகளில் இடம்பெறும் பாத்திரங்களைக் கதாசிரியர் உருவாக்கும் புனைவுக் காலத்திலும், புனைவு வெளியிலும் நிறுத்திப் பேசுவதாகவும், அப்படிப் பேசுவதற்குக் கதாசிரியர் தெரிவுசெய்யும் சொல்முறையின் பொருத்தத்தையும் போதாமையையும் சுட்டிக்காட்டுவதாக எனது வாசிப்புமுறையைக் கொண்டிருக்கிறேன். இது ஒருவிதத்தில் கல்விப்புல வாசிப்பு. அதனையே இங்கும் கைக்கொண்டு இமிழ் கதைகளைப் பகுப்பாய்வு செய்துள்ளேன். ஈழம் -புலப்பெயர்வுக்கதைகளில் நடந்த முடிந்த போர்க்காலமும் புலம்பெயர் அலைவுகளும் முதன்மையான உரிப்பொருள்களாக -விவாதப்பொருளாக உள்ளன. பெரும்பாலான கதைகளின் புனைவுக்காலம், சமகாலத்தில் தொடங்கிப் பின்னோக்கிச் செல்லும் நினைவுகளின் வழியாகப் போர்க்காலத்து ஈழநிலப்பரப்பையும், புலம்பெயர் நாடுகளின் பண்பாட்டு வெளியையும் தனதாக்கிக் கொண்டிருக்கின்றன.

தொகுக்கப்பட்டுள்ள 25 கதைகளில் இடம்பெறும் வெளிகளின் வழியாக இரண்டு முதன்மை வெளிகளை அடையாளப்படுத்த முடிகிறது. முழுமையும் புலம்பெயர் நாடுகளைக் கதை வெளியாகக்கொண்ட கதைகள் முதலாவது. இரண்டாவது இலங்கையின் பரப்பினைக் கதைவெளியாக்கிய கதைகள். இவ்விரண்டாவது பிரிவுக்குள் இன்னொரு பிரிவாக ஈழயுத்தம் நடந்த ஈழப்பரப்பை நிகழ்வெளிகளாகக் கொண்ட கதைகள் எனவும், ஈழப்பரப்பைக் கதைக்கான வெளிகளாகக் கொள்ளாத கதைகள் எனவும் பகுத்துப் பார்க்கும் வாய்ப்பினைக் கதைகள் தருகின்றன.

25 கதைகளில் அ.முத்துலிங்கத்தின் சைபர் தாக்குதல், சாதனா சகாதேவனின் கரீத் தெமலோ, நோயல் நடேசனின் இமாலயத்தவறு. பா. அ.ஜெயகரனின் தடம், ஷோபாசக்தியின் மரச்சிற்பம் முதலான 4 கதைகளும் புலம்பெயர் வெளிகளில் பாத்திரங்களை நிறுத்தி விவாதிக்கும் கதைகளாக உள்ளன.இந்நான்கு கதைகளிலும் இடம்பெறும் கதைசொல்லிகள் ஈழப்போரின் நினைவுகளைக் கொண்ட பாத்திரங்கள் என்பதை அக்கதைகள் காட்டவே செய்கின்றன. மீதமுள்ள கதைகளின் பாத்திரங்கள் இலங்கையின் பரப்பில் இருக்கும் பாத்திரங்களே. அக்கதைகளை எழுதியவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறவர்களாக இருந்தபோதிலும் கதைக்குள் இடம்பெறும் பாத்திரங்கள் இலங்கை/ ஈழத்து வெளிகளிலேயே அதிகமும் இருக்கின்றன. இக்கதைகளில் போர்க்கால நிகழ்வுகளை நினைவில் கொண்டுவருவதின் மூலம் கதையின் நேரடி வெளியாக ஈழத்துப் போர்க்கள வெளிக்குரிய கதைகளாக அகரனின் தாய், உமா வரதராஜனின் அந்நியமரம், கருணாகரனின் வெண்சுடர், செந்தூரன் ஈஸ்வரநாதனின் கோதுமை முகங்கள், டானியல் ஜெயந்தனின் சிவப்புநிற உதட்டுச் சாயம், தமயந்தியின் எட்டுக்கிழவர்கள், தர்மு பிரசாத்தின் செவ்வரத்தை, தேவகாந்தனின் காத்திருப்பின் புதிர்வட்டம், தொ.பத்திநாதனின் வடக்கத்தியான், நெற்கொழுதாசனின் இராமன் வில், யதார்த்தனின் தெய்யோ முதலான கதைகள் ஈழப்போர்களின் பின்னணியில் ஈழப்பரப்பைக் கதைக்களன்களாக்கியுள்ளன. ஈழப்பரப்பை புனைவு வெளியாக க்காட்டாமல், இலங்கையின் பிற பகுதிகளைக் களன்களாகக்கொண்ட கதைகளாக ஒட்டமாவடி அராபத்தின் மஹர், சப்னாஸ் ஹாசீமின் கன்னிரத்தம், திருக்கோவில் கவியுகனின் கௌரவம்,நஸிகா முகைதீனின் அக்கிமரத்தின் மீது சத்தியமாக, றஷ்மியின் சாயா ஆகிய கதைகள் உள்ளன. இவ்வைந்தும் இலங்கையின் இசுலாமியக்குடும்பங்களைக் கதைவெளியாக்கியுள்ளன. இசுலாமிய எழுத்தாளர்களின் இவ்வைந்து கதைகளும் போர்க்காலத்தையும் போரின் வெளிகளையும் தவிர்த்துள்ள கதைகளாக இருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இவையல்லாமல் கதைக்கான வெளி, காலம் என்பதில் குறிப்பான தன்மையில்லாமலேயே போர்க்காலத்தையும் போரின் நினைவுகளையும் விவாதிக்கும் கதைகளாகச் சில கதைகளைக் குறிப்பிடத்தோன்றுகின்றது. குறியீடுகளாகவும் நினைவோட்டங்களாகவும் எழுதப்பெற்ற இக்கதைகளுக்குக் காலம், வெளி போன்றன முதன்மையான தேவைகளாக இருக்க வேண்டியதில்லை. இத்தன்மையில் அமைந்த கதைகளாகத் தாட்சாயணியின் கொலைத் தருணம், சித்தாந்தனின் சஹரானின் பூனைகள் என்ற இரண்டையும் குறிப்பிடலாம். அத்தோடு ஸர்மிளா ஸெய்யித்தின் ஃபெர்ன் கதையையும் கூட இத்தன்மையில் அமைந்த கதை என்றே சொல்ல முடியும்.

தமிழின் தொகைநூல் மரபு

ஒற்றை நோக்கமும் முன்வைப்பும் இல்லாமல் பன்மைத்துவ நோக்கில் தொகுக்கப்படும் தொகை நூல்களின் வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் புதியதல்ல. செவ்வியல் கவிதைகளை அகம், புறம் என முதன்மையான பிரிவுகளாக்கித் தொகைநூல் செய்திருக்கிறார்கள். அதற்குள் வெளிப்படையாகத் தெரியும் பாடல்களின் அளவைக்கொண்டு குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை கலித்தொகை எனப் பிரித்துக் காட்டும் தன்மை வெளிப்பட்டிருக்கிறது. அதற்கும் மேலாக அவற்றுக்குள் வெளிப்பட்ட திணைப்பொருளை முதன்மையாக்கி – உரிப்பொருள் அடிப்படையில் – குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என்ற பாகுபாடுகளையும் தந்திருக்கிறார்கள். இப்பாகுபாடுகளும் அவற்றுக்குத் தரப்பட்ட துறைக்குறிப்புகளுமே அவற்றை விளக்கவும் விவாதிக்கவும் துணைசெய்கின்றன. இந்த உரிப்பொருளில் பாடப்பட்ட இத்தனை பாடல்கள் என்ற இந்த மரபு பின்னர் வந்த தொகை நூல்களும் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் அப்படியொரு மரபை நவீன இலக்கிய வகைப்பாட்டைச் செய்த தொகை நூல்களில் காணமுடியவில்லை. தமிழ்நாட்டில் தொகுக்கப்பட்ட கவிதை சார்ந்த தொகைநூல்களும் சிறுகதை சார்ந்த தொகைநூல்களிலும் எந்தவித மரபையும் பின்பற்றாமல் தொகுப்பாசிரியர்களின் மனச்சாயலின் அடிப்படையிலேயே தொகைநூல்கள் செய்யப்பட்டுள்ளன. இமிழும் கூட அப்படியானதொரு தொகைநூலே. ஆனால் இத்தொகை நூலை விவாதிக்கப் பின்வரும் முறையொன்றைப் பின்பற்றி விவாதிக்கலாம் என நினைக்கிறேன்.

நவீன இலக்கியங்களின் உரிப்பொருள்

மரபிலக்கியத்தடத்திலிருந்து விலகி நவீனத்துவத்திற்குள் நுழைந்த தமிழ் இலக்கியத்தின் தோற்றம் பாரதி என்பதை ஏற்றுக்கொண்டால் நவீனத்தமிழ் இலக்கியத்தின் வரலாறு   150 ஆண்டுக்கும் குறைவான காலத்தையே கொண்டது.  அதனை உலக மொழிகளுக்கு நகர்த்திய காலத்தைத் தேடினால் கால் நூற்றாண்டைத் தாண்டிய வரலாறு இருக்குமெனச் சொல்லமுடியும். இந்தக் கால் நூற்றாண்டு வரலாற்றில் கவிதை, நாடகம், புனைகதைகள் என எழுதிக்குவித்துள்ள நவீனத்துவ எழுத்தாளர்களின் பேசுபொருளை அல்லது உரிப்பொருளைப் பின்வரும் வகையில் அடையாளப்படுத்தலாம். அவ்வுரிப்பொருள்கள், மனிதர்கள் என்னவாக இருக்கிறார்கள்; என்னவாக ஆகவேண்டும் என்ற கேள்விக்கான பதில்களைப் பேசுவனவாக இருக்கின்றன.

1. மனிதர்களை இயக்குவது உலக வாழ்க்கையில் இருக்கும் சில அடிப்படையான நியதிகளே என்பதை முன்வைத்துப் பேசும் சமயவியல்களே முதன்மையான உரிப்பொருட்களை தந்துள்ளன. நியதிகளை விட்டுவிலகக் கூடாது என வலியுறுத்திப் பேசும் இவ்வகை எழுத்துகள் மனிதர்களின் மரணத்திற்குப் பின்னான நிலைக்கு அவர்கள் வாழும் காலத்துச் செயல்களும் நடவடிக்கைகளும் காரணங்களாக இருக்கின்றன என்ற அடிப்படையில் இவ்வகைக் கருத்தியலை உருவாக்குகின்றன. அவற்றை அழகியல் - அறவியல் எனப் பகுத்துப்பேசுகின்றனர் திறனாய்வாளர்கள்.   அறவியல் சார்ந்த சொல்லாடல்களுக்குள் நுழையும் இவ்வகை எழுத்துகள் மனிதர்களின் மரணம், கொலை, போர், தற்கொலை, அமைப்புகளின் இருப்பு, அவற்றின் சார்புநிலைகள், அமைப்புகளின் விதிகள், விதிகளை மீறும் தனிமனிதர்களும் குழுக்களும், அமைப்புகளுக்குள் அடங்க மறுக்கும் போக்கு என அறவியல் பல தள தளங்களில் இலக்கியப்பனுவல்களை உருவாக்கியுள்ளன.

2. மனிதர்களை இயக்குவது எதிர்பாலின உடலின் மீதான ஈர்ப்பும் ஆதிக்கமனமும் இச்சையுமே காரணங்களாக இருக்கின்றன என்ற நம்பிக்கையில் பாலியல் உறவுகளையும், அவற்றை ஒழுங்குபடுத்துதலையும், மீறல்களையும் எழுத்தாக்கிக் காட்டுவது இன்னொரு உரிப்பொருள். இதன் பின்னணியில் பிராய்டின் உளவியல் மருத்துவக்கண்டுபிடிப்புகள் இருக்கின்றன என்றாலும், மனிதர்களின் காம மும் அதுசார்ந்த நிகழ்வுகளும் அதற்கென உருவாக்கப்பட்ட அறங்களும் அறமீறல்களும் நவீனத்துவ காலத்திற்கு மட்டும் உரியன அல்ல. ஆனால் நவீனத்துவ எழுத்து, காமத்தை அறிவுத்தளப்பார்வையுடன் எழுத நினைத்தது என்பதே புதுமை.

3. மூன்றாவதான கருத்தியலாக இருப்பது மனிதர்களின் வயிற்றுப்பசியும் அதன் தொடர்ச்சியான பொருளியல் தேவைகளும் பற்றியது. மனித உடலையும் உழைப்பையும் விளக்கிப் பொருளியல் முரண்பாடுகளைப் பேசிய கார்ல் மார்க்சின் கண்டுபிடிப்புகளோடு இவ்வகை எழுத்துகளின் தேவை வலியுறுத்தப்பட்டன. வர்க்க இலக்கியங்களாக அறியப்பட்ட எழுத்துகளுக்கு உலக இலக்கியத்திலும், தமிழிலும் தொடக்கமும் தொடர்ச்சியும் உள்ளன.

4. வர்க்க இலக்கியத்தின் தொடர்ச்சியில் விவாதிக்கப்படும் அடையாள அரசியலும் அடையாளத்தைத் தேடும் எண்ணங்களும் ஏற்கெனவே விவரிக்கப்பட்ட மூன்றிற்குள்ளும் ஊடும்பாவுமாகக்கிளைகளைக் கொண்டிருக்கின்றன.

5. இவற்றைத் தாண்டிய எழுத்துப் போக்குகளாக மொழியின் சாத்தியங்கள், மொழி உருவாக்கும் உலகம், மொழியால் வாழ்வதாக நம்பும் மனிதத் தன்னிலைகள், வாழும் நிலவியல் உருவாக்கும் நெருக்கடிகள், நிலவியலும் பண்பாடும் தற்காலிகத் தன்மையோடு இருப்பதும் ஆழ்மனதிற்குள் அவை அழிக்கமுடியாத நினைவுகளாகப் பதிந்து கிடப்பதும் நவீனத்துவ எழுத்துகளின் சாராம்சக் கீற்றுகளாக இருக்கின்றன.

நவீனத்துவ இலக்கியத்திற்குள் உரிப்பொருட்களாக – விவாதப்பொருட்களாக இருக்கும் இவற்றை உள்வாங்கிக்கொண்டு இமிழ் தொகுப்பின் 25 கதைகளையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும்போது இக்கதைகளைக் கூடுதலாக விளங்கிக் கொள்ளவும் விவாதிக்கவும் முடிகிறது. அந்த விவாதங்கள் இக்கதைகள் எப்படி நவீனத்துவக் கதைகளாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, உலக இலக்கியப்பரப்பிற்குரியதாக மாறுகிறது என்பதையும் சொல்லமுடியும். இமிழ் தொகுப்பை அறிமுகம் செய்த இக்கட்டுரையில் அதனைச் செய்யவில்லை. அதனைத் தனியாக – ஒவ்வொரு கதையையும் விரிவாக விவாதித்துச் செய்ய வேண்டும். அதே நேரம் இத்தொகை நூலில் உள்ள இரண்டு தனித்த கூறுகளை மட்டும் சுட்டிக்காட்டி அறிமுகத்தை முடிக்கலாம் என நினைக்கிறேன்.

தமிழ்த்தேசியம், அதற்கான போராட்டங்கள், தனியீழத்துக்கான போர், அதன் காரணமாகப் புலப்பெயர்வு என்பதின் விளைவாக எழுதப்பட்டுள்ள இத்தொகுப்பில் உடலுழைப்பு, கூலி, வர்க்க வேறுபாடு, அதன் காரணமான முரண் எனப் பேசும் கதைகள் ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது சொல்ல வேண்டிய -சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு சுட்டல். இன்னொரு தனித்த கூறாக இருப்பது இசுலாமிய எழுத்தாளர்களின் கதைகளின்

 விவாதப்பொருண்மைகள். அக்கதைகள் அனைத்திலும் இசுலாமிய சமயத்தின் மீதான விமரிசனம் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக இசுலாமிய சமயச் சடங்குகளும் நம்பிக்கைகளும் பெண்கள் மீது கடும் வன்முறையைக் கருத்தியல் ரீதியாகவும் நேரடித்தாக்குதலாகவும் நிகழ்த்துகின்றன எனப் பேசுகின்றார்கள் அக்கதைகளை எழுதிய ஆசிரியர்கள். அந்த ஆசிரியர்கள் எவரும் பெண்கள் இல்லை என்பதும், ஆண் எழுத்தாளர்களே இவ்வகை விமரிசனங்களை எழுப்புவதின் மூலம் தங்களின் சமயத்தை நவீன காலத்திற்குரியதாக மாற்றும் முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையும் கவனப்படுத்தும் விதமாகச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

--------------------------------------------

இமிழ், 51 வது இலக்கியச் சந்திப்பு கதைமலர், வெளியீடு: கருப்புப்பிரதிகள், 55, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

அந்திமழை சிறுகதைப் போட்டி -2024