அந்திமழை சிறுகதைப் போட்டி -2024

அந்திமழை மாத இதழின் இம்மாத இதழைச் சிறுகதைச் சிறப்பிதழ் என்று சொல்வதைவிட ஒரு சிறுகதைத் தொகுதி என்றே சொல்லத் தோன்றுகிறது. மொத்தம் 9 கதைகள். ஒன்பது கதைகளுமே அவ்விதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்புக்கவனம் பெற்ற கதைகள். இந்த ஒன்பதோடு அடுத்த ஆறு கதைகளும் அடுத்த இதழில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 450 -க்கும் மேலான எண்ணிக்கையில் போட்டிக்கு வந்த கதைகளிலிருந்து 15 கதைகள் தேர்வுக்குரியனவாகப் பட்டியிலிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கதைகளுக்கு முறையே ரூ. 10000/- ரூ.7500/- ரூ. 5000/- எனப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கதைகளிலிருந்து முதல் சுற்றில் 150 தேர்வாகி அடுத்த சுற்றில் 20 கதைகளைத் தேர்வு செய்து அதில் 15 எனக் குறுக்கி அறிவித்துள்ளார்கள். போட்டியின் நடுவர்களாக கவிதா முரளிதரன், பாக்கியம் சங்கர், அதிஷா ஆகியோர் இருந்தார்கள் என்பதையும் தந்துள்ளது அந்திமழை.,

அந்திமழை மாத இதழ் சிறுகதைப் போட்டியை நடத்தியுள்ள விதமும் முடிவை அறிவித்துள்ள விதமும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என நினைக்கிறேன். பெரும்பாலான போட்டிகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்படும் நிலையில் அந்திமழை தந்துள்ள நடுவர்களின் பெயர்கள், மொத்த எண்ணிக்கை, முதல் சுற்று, அடுத்த சுற்று, இறுதித்தெரிவு எனத் தனது தெரிவுமுறையை அறிவித்துள்ளதில் காணப்படும் வெளிப்படைத்தன்மை இலக்கியப்போட்டிகள் நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று.

இந்த அறிவிப்பை வாசித்துவிட்டுப் பரிசுக்குரிய மூன்று கதைகளை வாசித்த நிலையில் குறிப்பொன்றை எழுதத் தோன்றியது. 10000/-, 7500/-5000/- என முதல் மூன்று இட த்தைப் பிடித்த சிறுகதைகளை மட்டும் பரிசுக்குரியன எனக் குறிப்பிட்டுவிட்டு, மீதமுள்ள 12 கதைகளை அச்சிடத்தெரிவு பெற்ற கதைகள் என்று அறிவித்திருக்கலாம். பெரிய அளவு வேறுபாடுகள் இல்லாத கதைகளுக்குள் சிறப்புப்பரிசு (தலா 2500/-) ஊக்கப்பரிசு (தலா 2000/-) எனப் பிரித்து தொகையில் வேறுபாடு காட்டி அறிவிப்பதெல்லாம் பொருத்தமானதில்லை. அச்சாக்கத்திற்குத் தெரிவு பெற்ற கதைகள் என்று சொல்லியே அந்தப் பணத்தை அனுப்பி வைக்கலாம். ஒரு கதைக்கு 2000 ரூபாய் வழங்குவது, அச்சிடும் கதைக்கு வழங்கும் தொகையாகவே இருக்கமுடியும்.

*****

பெரிய அளவு வேறுபாடுகள் இல்லை எனச் சொல்வதற்குக் காரணம் பரிசுபெற்ற கதைகளில் உள்ள பொதுத்தன்மைகளே. அப்பொதுத்தன்மையை வாசிக்கும் அனைவரும் உணர்வார்கள் என்பதற்கில்லை. நான் உணர்ந்த பொதுத்தன்மை அக்கதைகளில் வெளிப்பட்டுள்ள‘மனிதநேயம்’ என்பதே. குறிப்பிட்ட சூழலில்/பின்னணியில் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆதரவாக வாசக மனநிலையை உருவாக்குவது மனித நேய எழுத்தின் பொதுக்குணம். உழைக்கும் வர்க்கம் அல்லது சமூகப்படிநிலை காரணமாக ஒடுக்கப்படும் கூட்டத்திலிருந்து பாத்திரங்களை உருவாக்குவது மனிதநேய எழுத்தின் முதல் நிலை. அப்படி உருவாக்கப்படும் பாத்திரங்களின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தும் எதிர்நிலைப் பாத்திரம் அல்லது கூட்டத்தை அடையாளப்படுத்துவது இரண்டாவது நிலை. இம்முரண்பாட்டின் சந்திப்பில் அல்லது உரசலில் ஆதிக்க சக்திகள் வெற்றி அடைவதாகவோ, பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெறுவதாகவோ முடிவைத் தருவது மூன்றாவது நிலை. இம்மூன்று நிலைகளிலும் எழுத்தாளரின் சார்புநிலை பாதிக்கப்படும் பாத்திரத்தின் பக்கம் வெளிப்பட்டு, அதன் கையறுநிலையின் போது இரக்கத்தை உண்டாக்குவதாக அமைப்பதும், விழிப்புணர்வு பெற்றதை நியாயப்படுத்துவதாகக் காட்டுவதும் மனிதநேய எழுத்தின் அழகியல். அதன் மு அவற்றின் நிலைக்காக இரக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பதோடு, அப்பாத்திரங்களுக்கு எதிராக இருக்கும் எதிர்நிலை மனிதர்கள் மீது ஆத்திரமும் கோபமும் தோன்றும்படி செய்வது மனித நேய எழுத்தின் இயங்குநிலையாக இருக்கும். இது ஒருவிதத்தில் கலை கலைக்காக என்ற பார்வைக்கு மாற்றாக, கலை சமூக மேம்பாட்டுக்காக என்ற பார்வையை ஆதரிக்கும் போக்கோடு தொடர்புடைய இலக்கியப் பார்வை.

அந்தி மழைக்காக நடுவர்கள் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்வு செய்து தந்துள்ள மொசக்கறி (சிவச்செல்வி செல்லமுத்து) ஆடுமேய்க்க ஆள் வேணும் (வா.மு.கோமு) இலக்கணப்பிழைகள் ( ரம்யா அருண் ராயன்) ஆகிய மூன்று கதைகளுமே மனிதநேய இலக்கியக் கோட்பாட்டைப் பின்பற்றி எழுதப்பெற்ற கதைகள். முதல் பரிசுக்குரிய கதையாகத் தெரிவு பெற்றுள்ள மொசக்கறியில் பசி, வறுமை சார்ந்து சுரண்டப்படுதலும் ஆதிக்க மனோபாவமும் விவாதிக்கப்பட்டு, மரபான வேட்டைக்காரர்கள் குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஊரின் வேட்டைக்காரர்கள் தன்னைப் பயன்படுத்திக்கொண்டு, தனக்குரிய பங்கைத் தராமல் தராமல் ஏமாற்றுவதோடு, தன்னைப் பொருட்படுத்தாமல் வீணடிப்பதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்தபின் வேட்டையாடுவதிலிருந்து விலகிப் போகிறான். தனக்கு விருப்பமான மொசக்கறியைப் பெறுவதற்கு மாற்றுவழியொன்றை- கண்ணிகட்டி முயல் பிடித்தல் வழியாகத் தனது வயது முதிர்ந்த பெற்றோருக்குச் சுவையாக வழங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான் ராசுக்குட்டி.கண்ணிகட்டி முயல்பிடிக்கும் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள விரும்பும் ராசுக்குட்டியின் விடா முயற்சியைக் கண்டு பக்கத்து ஊர்க்காரர்களுக்கு கண்ணி வலையைத் தர விரும்பாமல், மலைநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே விற்ற செங்காட்டு வலைக்காரர், தானே முன்வந்து அவனுக்கு வலையைத் தருகிறார். அதன் உதவியில் முயலைப் பிடித்து, மொசக்கறி சமைத்துத் தனது பெற்றோருக்கு வழங்கி மகிழ்ச்சிப்படுத்த நினைத்த நேரத்தில் அதையும் ஆணவத்தோடு சிதைத்துவிட்டுச் செல்கிறார்கள் வேட்டைக்காரர்கள். இப்படியான எதிர்நிலையை உருவாக்கி ராசுக்குட்டியின் இயலாமையை -கையறுநிலையைக் காட்டுவதின் மூலம், ராசுக்குட்டி பக்கம் நிற்கிறது எழுத்தாளரின் சார்பு.

இதற்கு மாறானது வா.மு.கோமுவின் கதை. அதிலும் எதிர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வெதிர்வுகள் சாதிய முரண்களைக் காட்டும் எதிர்வுநிலை. தங்கள் பண்ணைகளில் பண்ணையம் பார்க்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குக் கல்வியறிவைத் தடுக்கும் பண்ணையாரின் ஆதிக்கத்தை விவரிக்கும் கதை அது. கொங்குப்பகுதியில் பண்ணையார்களாக இருக்கும் ஆதிக்கசாதி மனிதர்களின் ஆதிக்க மனநிலையையை விரிவாகப் பேசி, அதிலிருந்து விடுபட்டுத் தனது அடுத்த தலைமுறையைக் கல்வி கற்க அனுப்பும் விழிப்புணர்வுக் கதையாக எழுதியுள்ளார் வா.மு.கோமு. நமது காலத்தில் அனைவருக்கும் கல்வியை வழங்குவதில் அரசும் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் காட்டும் பொறுப்புணர்வை நேர்மறைத் தன்மையோடு சித்திரித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர். வழக்கமாகப் பள்ளி ஆசிரியர்களை – அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் கேலியும் அங்கதமுமாகச் சித்திரித்துச் சுயநலம் மிக்கவர்கள், பொறுப்பற்றவர்கள் என்று முன்வைக்கும் பொதுப்போக்குக்கு மாறான தன்மை இது. அரசுப்பள்ளிகளில் இருக்கும் குறைவான வசதிகளைக் கொண்டு மாணவர்கள் மீது அக்கறையோடு செயல்படும் ஆசிரியர்களைக் கவனித்தவர்களின் எழுத்து இப்படித்தான் இருக்கும். குறை காண்பது மட்டுமே எழுத்தின் -எழுத்தாளர்களின் வேலை என்பதை மாற்றிக் காட்டியுள்ளார் எழுத்தாளர். வா.மு.கோமு. வின் இந்தக் கதையிலும் சிறப்பாகவே வந்துள்ளது.

சிவச்செல்வி செல்லமுத்து, வா.மு.கோமு ஆகிய இரண்டுபேரின் கதைகளில் யாருடைய கதை முதலிடத்திற்குரியது எனக் கேட்டால் வா.மு.கோமுவின் ‘ஆடு மேய்க்க ஆள் வேணும்’ என்ற கதையையே நான் முதல் கதையாகத் தெரிவு செய்வேன். ஏனென்றால் கதை சொல்லும் லாவகமும் வேகமும் விவரிப்புகளும் மொழியைக் கையாளும் தேர்ச்சியும் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கான முழுமையும் எனப் பல நிலைகளில் வா.மு. கோமு முன்னிலையில் இருக்கிறார். ஆனால் அவரது கதையையும் தாண்டிய ஒன்றாக இருக்கிறது ரம்யா அருண் ராயனின் ‘இலக்கணப்பிழைகள்’

இலக்கணப்பிழைகள் கதையும் மனிதநேயத்தையே முன்மொழிந்துள்ளது என்றாலும் முன்னிரண்டு கதைகளில் உருவாக்கப்பட்ட துபோல எதிர்வுகள் உருவாக்கப்படவில்லை. பொதுச் சமூகத்தின் மனநிலை காரணமாக உருவாகும் தாழ்வுமனப்பான்மையை வென்றுவிட நினைக்கும் இரண்டு பாத்திரங்களின் சந்திப்பையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் அற்புதக்கணங்களும் கதையின் நிகழ்வுகளாக ஆகியிருக்கின்றன. தொடர்ச்சியாக ஏற்படும் வலிப்பு நோய் மட்டுமல்லாமல், உடல் உறுப்புகளில் இருக்கும் குறைகள் காரணமாகத் தனித்தேர்வராகப் பதினோராம் வகுப்புத் தேர்வை எழுதும் சுஜாதாவும், அவள் சொல்வதை எழுதுவதற்காக அமர்த்தப்பட்ட ஜெனட் டீச்சரும் தான் கதையின் பாத்திரங்கள்.

”ஹைய்ய்ய்யோ- பொம்மை மாதிரி இருக்கீங்க டீச்சர்” என்று சுஜாதா சொன்னதில் பின்னோக்கிப் போய் தனது உடல் பொம்மையாகப் பார்க்கப்பட்ட நினைவுகளுக்குள், இயல்பான வளர்ச்சியில்லாத தனது உடலின் இருப்பை – விட்டிலிகோ என்னும் தோல் நோயின் படர்தலை உடலில் வரையப்பட்ட ‘டாட்டூ’வாக வர்ணிக்கும் சுஜாதாவின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவளின் சிந்தனையோட்டத்திற்குள் தானும் பயணித்துத் தேர்வு எழுதி முடிக்கும் அந்த மூன்று மணி நிகழ்வையும் மனங்களின் பரிமாற்றத்தையும் அற்புதமாக எழுதியிருக்கிறார் ரம்யா அருண் ராயன். இருவரும் அந்த நேரத்தில் தங்கள் இருப்பைத் தொலைத்து – தேர்வு எழுத வந்த மாணவி, சொன்னதை எழுதும் டீச்சர்- என்ற இருப்பை மறந்து வேறு உலகத்திற்குள்- நினைவுகளுக்குள் போய்த்திரும்புவதைக் கதை சிறப்பாக எழுதிக்காட்டியுள்ளது. வினாத்தாளில் இருக்கும் வினாக்களுக்கான விடையைச் சொல்கிறாரா? தனது சொந்த அனுபவத்தைச் சொல்கிறாரா? என்பதைப் புரிந்துகொள்வதில் திணறல் ஏற்பட்டுப் பின்னர் தெளிவடைந்து, அந்தப் பெண் -சுஜாதா தேர்வில் வெற்றி பெறப்போதுமான விடைகளைத் தெரிவு செய்து முடிக்கும் ஜெனட் டீச்சரும் தனது நிலையிலிருந்து – சொல்வதை எழுதும் நிலையிலிருந்து விலகி வேறொருவராக மாறித்திரும்புகிறார். கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தங்களை மறந்தும் நினைத்தும் வாழும் பாத்திரங்களைக் கதைக்குள் உருவாக்கித் தந்துள்ள ரம்யா, தனது கதை சொல்லல் வழியாக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இன்னொருவரின் அன்பும் பரிவும் தலை தடவலும் தேவைப்படுகிறது என்பதை வாசிப்பவர்களுக்குக் கடத்தியுள்ளார் முன்வைத்துள்ளார். இந்தக் காரணங்களுக்காக அந்திமழை சிறுகதைப் போட்டியில் ‘இலக்கணப்பிழைகள்’ கதையையே முதல் பரிசுக்குரிய கதையாகத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எனது வரிசை இப்படி இருக்கும் 
1. இலக்கணப்பிழைகள்
2. ஆடுமேய்க்க ஆள் வேணும்
3. மொசக்கறி

பின் குறிப்பு

அந்திமழையின் நடுவர் குழுவால் சிறப்புப்பரிசுக்குரியதாகப் பட்டியலிடப்பட்டுள்ள ஆறில் ஒன்றோ, ஊக்கப்பரிசுக்குரிய ஆறில் ஒன்றோ கூட இந்த மூன்றைவிடச் சிறந்த ஒன்றாக இருக்கலாம். 15 இல் பட்டியலிடப்படாத கதைகளில் ஒன்று கூட  சிறந்த கதையாக இருக்கக்கூடும். அப்படிச் சொல்வது சொல்பவரின் இலக்கியப்பார்வையோடு தொடர்புடையது. 
இலக்கியப் பனுவல்களில் இதுதான் முதல் என்று ஒருவர் சொல்வது அவரது இலக்கியப் பார்வையோடு தொடர்புடையது. அதில் கணிதத் தேர்வில் மதிப்பெண் வழங்குவதுபோலச் சரியான விடை இதுதான் எனச் சொல்ல முடியாது என்பதை நான் மறந்துவிடவில்லை என்பதையும் இங்கே சொல்ல வேண்டியுள்ளது. இப்போது அளித்திருக்கும் வரிசை நடுவர்கள் மூவரின் பார்வையின் அடிப்படையில் போடப்பட்ட பட்டியல். அதைத் தவறு எனச் சொல்வது எனது நோக்கமல்ல. இந்தக் கதையை வைத்துக் கொண்டு ஒரு வாசிப்புப் பார்வையை – திறனாய்வுப் பார்வையை முன்வைக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்