நிகழ்காலத்தில் பெரியார்.

திரள் மக்களின் விடுதலைக்கும் வரலாற்றுக்கும் உள்ள உறவை யாராவது ஒருவர் எளிமையாக விளக்கி விட முடியும் என்று முன்வந்தால் அவரை ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு மாறாக விடுதலைக்கும் வரலாற்றுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை எனக் கூறி வரலாற்றை விலக்கி வைக்க முன் வந்தால் அவரையும் ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. வரலாறு விளக்கவும் முடியாத - விலக்கவும் முடியாத -ஒன்றாக இருப்பது பேசுவதற்கான ஒன்றுதான்.

உலகம் தழுவிய புரட்சிகளைப் பற்றிப் பேசும் சர்வதேச இயக்கங்கள் தொடங்கி, வட்டாரம் சார்ந்த , தனிநபர்களின்/ குழுக்களின்/ சாதிகளின் அதிகாரத்திற்கு எதிராக இயங்கும் விளிம்பு நிலை மக்களின் இயக்கங்களை முன்னெடுக்கும் போராட்டங்கள் வரை ‘வரலாற்றை’ ஒரு கருவியாகவோ அல்லது கருத்தாகவோ பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. உரிமைகளைப் பற்றிப் பேசுவதன் மூலமாகவோ, வெற்றிக்கான போராட்டங்களை நடத்துவது மூலமாகவோ, தோல்விகளில் துவண்டு மீள்வதன் மூலமாகவோ திரள் மக்கள் இயக்கங்கள் வரலாற்றைப் படைக்கின்றன; வரலாறாக ஆகின்றன. அந்த வரலாற்றில் ஒரு தலைவன் புனிதனாகக் காட்டப்படுவதும், இன்னொருவன் துரோகியாகச் சித்திரிக்கப்படுவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகள். ஒரே தலைவனை வரலாற்றின் ஒரு காலகட்டம் புனிதனாகக் கொண்டாடுவதும் உண்டு; அடுத்த கால கட்டம் துரோகி எனத் தூற்றுவதும் கூட நடக்கத்தான் செய்துள்ளது. அவற்றை வரலாற்றின் பக்கங்கள் பதிவும் செய்துள்ளன. வெவ்வேறு இயக்கங்கள் , வேறு வேறு காலகட்டங்களில் ஒரு தலைவரை இப்படி மதிப்பீடு செய்வது புரிந்து கொள்ளக்கூடியது தான் . ஆனால் ஒரே இயக்கம் ஒரு காலகட்டத்தில் தலைவன் என்றும் மாபெரும் வழிகாட்டி என்றும் , சமரசமற்ற போராளி என்றும் பாராட்டிய ஒருவரை, பத்தாண்டு இடைவெளிக்குள் துரோகி என்றும் சதிகாரன் என்றும் குற்றம் சாட்டுகிறது என்றால் , அக்குற்றச் சாட்டைப் பொருட்படுத்தத் தேவையில்லை என விட்டு விட முடியுமா..? யோசிப்பது நல்லது. 

பெரியார் ஈ. வே.ராமசாமி பற்றியும் அவரின் சூத்திர விடுதலை அரசியல் பற்றியும் அதற்கு அவர் கையாண்ட தந்திரோபாயங்கள் பற்றியும் இப்போது நடக்கும் விவாதங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல் பலர் திகைத்துப் போய்த்தான் நிற்கின்றனர். அவர் தனது போராட்டங்களில் எதிரிகள் யார்? அல்லது எவை? என அடையாளப் படுத்திக் காட்டியதில் எந்தக் குழப்பமும் இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை. பிராமணர்களும், பிராமணர்களின் மேலாண்மையை உறுதி செய்யும் சாதி அடுக்கும் தான் அவர் அடையாளப் படுத்திய எதிரிகள். மனிதர்களை நான்கு வருணங்களாகப் பிரித்து, நாலாவது வர்ணத்தவர்களாகிய சூத்திரர்களை ‘ அடிமைகள்’ என்றும் ‘தேவதாசிகளின் பிள்ளைகள்’ என்றும் சொன்ன மனுஸ்மிருதியை நடைமுறை வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்ட இந்துத்துவம் என்னும் கருத்தியல் தான் அவர் முதன்மையாகக் குறி வைத்த எதிரி. 

இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்து மதம் எதிரியாகின்றபோது அதன் ஆதரவு சக்திகளான இந்து மதத்தின் கடவுள்கள், அவற்றிற்கான வழிபாடுகள், நம்பிக்கைகள், நம்பிக்கைகளைத் தோற்றுவிக்கும் சமய நூல்கள் என அனைத்துமே எதிரிகளாகத் தானே நிற்கும். பெரியார் ஈ.வெ.ராமசாமி அப்படித் தான் நிறுத்தினார். அவற்றின் கதைகளையும் உள்நோக்கங்களையும் முன்னோக்கிப் போகவிடாமல் பின்னுக்கு இழுக்கும் தந்திரங்களையும் அம்பலப்படுத்தினார். உதிர்க்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வர்க்கச் சார்புடையன என்பது போல இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் பிராமண மேலாண்மையின் கூறுகள் உள்ளன என்பது அவரது வாதங்கள். 

வர்ணாசிரமத்தின் பிடிக்குள் வந்துவிட்ட இந்திய மொழிகளும் அவற்றில் தோன்றும் கலை, இலக்கியங்களும் பண்பாட்டுக் கூறுகளும் சாதி காப்பவை என்பது பெரியாரின் கண்டுபிடிப்புக்கள். அந்தக் கண்டு பிடிப்புக்களில் முரட்டுத் தனமும், எல்லாவற்றையும் நிராகரிக்கும்- வரலாற்றின் சேகரங்கள் அனைத்தையும் நிராகரிக்கும்-மனோபாவமும் இருந்தன என்பதும் உண்மை. தனிமனிதனின் விருப்பங்களுக்கும் அழகியலுக்கும் ஆன்மீகத்திற்கும் கூட இடமில்லைதான். தாய்மொழி , சொந்தபந்தம், எனது ஊர், எனது துயரமும் களியாட்டமும் என்றெல்லாம் பேசுவது கூட அவருக்கு உவப்பானதல்ல தான். இதற்காகவெல்லாம் தான் அவரது எதிரிகள் அவரை விமரிசனம் செய்தார்கள்; செய்கிறார்கள். ஆனால் இப்போது தலித்துகள் விமரிசனம் செய்வது இவற்றுக்காக அல்ல என்பது உணரப்பட வேண்டும். 

திரள் மக்களின் விடுதலையை முன்னெடுக்கும் ஒரு போராளியின் லட்சியமெல்லாம் அம்மக்களின் அடிமைத்தனத்தை ஒழிப்பதும் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கச் செய்வதும் தான் என்று ஆகிவிட்டால் அழகியல், ஆன்மீகம், தனிமனித மனம் என்பதெல்லாம் நிராகரிக்க வேண்டியனதான். நிகழ்காலம் அப்படித்தான் பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் வரலாறு அப்படிப் பார்க்கத் தூண்டுவதில்லை. ஈ.வெ.ராமசாமி எல்லாவற்றையும் அவரது நிகழ்காலத்தில் பொருத்திப் பார்த்துப் பேசியவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நிகழ்காலப் பயன் மதிப்பீட்டின் பேரில் இயங்கிய பெரியாரை அவரது ஆதரவாளர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள்- வரலாற்றில் வைத்து மதிப்பிட வேண்டும் என்கிறார்கள் என்பது ஒரு சுவையான முரண்பாடு. 

தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பெரும் கூட்டத்தின் முன்னேற்றத்திலும் உரிமைகளிலும் பெரியாரின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்கிறார்கள்.’ நான் இன்று அதிகாரியாகியிருக்கிறேன்; அதற்குக் காரணம் பெரியாரின் போராட்டங்களும் தியாகமும் தான். அவர் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் ஒரு மலையோரக் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பேன்; அவரை விமரிசித்துக் கருத்துக் கூறும் தலித் சிந்தனையாளன், சேரியில் பன்றி மேய்த்துக் கொண்டிருந்திருப்பான்’ என்றெல்லாம் தன்னிரக்கத்தையும் ஆதங்கத்தையும் கோபத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் குரல்கள் அவரை ஒரு புனிதராகவும், அவரது பிறப்பை ஒரு தெய்வத்தின் பிறப்பாகவும் காட்டிட விரும்புகின்றன. இத்தகைய பார்வைகள் எல்லாம் ஈ.வெ.ராமசாமிக்கே உவப்பானதல்ல. திரும்பவும் நினைவில் கொள்ள வேண்டியது அவர் கடந்த காலத்தின் மீது மரியாதையையும் ஆறாக் காதலையும் கொண்டவரல்ல; நிகழ்காலம் தான் அவருக்கு முக்கியம். 

தலித் சிந்தனைகளினூடாகப் பெரியார் மீது வைக்கப்படும் விமரிசனங்கள் நிகழ்காலத்தின் மீது நின்று கொண்டு வைக்கப்படும் விமரிசனங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிகழ்காலம் அவர் மீது ஐயம் கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். பிராமணர்களை எதிரிகளாகச் சித்திரித்த அவரின் போராட்டங்களின் விளைவு பிராமணரல்லாதாரின் விடுதலை தான். பிராமணீயக் கருத்தியலிலிருந்து விடுதலை என்று பேசிய பெரியார் பெற்றுத் தந்தது விடுதலை அல்ல. கூடுதலான உரிமைகளும் சலுகைகளும் தான். இவை ஓரளவு கிடைத்திருக்கின்றன என்பதில் பலருக்கும் மகிழ்ச்சி. குறிப்பாகச் சூத்திர சாதிகள் என மனுஸ்மிருதியால் வருணிக்கப் பட்ட இடைநிலைச் சாதித் தலைவர்களுக்கும் அறிவாளிகளுக்கும் அதிக மகிழ்ச்சி.தங்கள் மகிழ்ச்சிக்குக் காரணமான பெரியாரை அவர்கள் கொண்டாடுகின்றனர். அந்தக் கொண்டாட்டங்கள் அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் தலித்துகளால் அப்படிக் கொண்டாட இயலாது என்பதும் ஏற்கவேண்டிய ஒன்று. ஏனெனில் பெரியாரால் கிடைத்தது எனச் சொல்லப்படும் உரிமைகளும் சலுகைகளும் அம்பேத்கரால் அரசியல் சட்டரீதியாகப் பெற்றுத் தந்தவை என்பது தெரிய வந்த பின்னும் பெரியாரை ஏன் அவர்கள் கொண்டாட வேண்டும்.? 

‘பிராமணர்- பிராமணர் அல்லாதார் என்று கட்டமைக்கப்பட்ட முரணில் தலித்துக்களின் இடம் எது?’ என்ற கேள்விக்கு இடைநிலைச் சாதியினரின் பதில் பிராமணர் அல்லாதார் என்ற தொகுதிக்குள் சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடக்கம் என்பதாக இருக்கிறது. அப்படி அல்ல என்பதை எடுத்துக் காட்டப்படும் பெரியாரின் மேற்கோள்களே காட்டுகின்றன. தான் சூத்திரர்களின் உரிமைகளுக்காகத் தான் பேசுகிறேன் எனப் பெரியாரின் கூற்றுக்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகின்ற போது மற்றவர்கள் எப்படி மறுக்க முடியும்?. அதேபோல் பெரியாரின் காலத்திலேயே அயோத்திதாசர் போன்ற தமிழகச் சிந்தனையாளர்களும், இரட்டைமலை சீனிவாசன், பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற தேசியத்தலைவர்களும் தலித்துக்களின் விடுதலைக்கான போராட்டங்களையும், கருத்தியல்களையும் முன்னெடுத் திருக்கிறார்கள் என்ற வரலாறு அறியப்படும்போது பெரியாரின் இடம் கேள்விக்குள்ளாக்கப்படுவது எப்படித் தவறாக இருக்க முடியும்.? இப்படிக் கேள்விக்குள்ளாக்கி பெரியாரின் வரலாற்றுப் பாத்திரத்தைத் தலித்துக்கள் நிராகரிப்பதே பிராமணர்களுக்கு ஆதரவாகப் போய்விடும் என்று இடை நிலைச் சாதிகளின் தலைவர்களும் அறிவாளிகளும் கருதினார்கள். அவர்கள் நினைத்தது ஓரளவு உண்மை எனக் கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள விவாதங்கள் உறுதி செய்துள்ளன, 

பெரியார் சொன்ன சூத்திர சாதித் திரளுக்குள் தலித்துகளும் அடக்கம் என்பதை இப்போது கூட நிரூபிக்கலாம். அதற்கு ஒரே நிபந்தனை தங்களுக்குப் பிராமணீயக் கருத்தியல் வழங்கியுள்ள மேலாண்மையை இழக்கத் துணிவது தான் ஒரே வழி. அதற்கு முதலில் எல்லாவற்றையும் வரலாற்றில் வைத்துப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட்டாக வேண்டும். இப்போது நடக்கும் விவாதங்களை நிகழ்காலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. நிகழ்கால வாழ்க்கை ஜனநாயகம் சார்ந்தது என்பதை இடைநிலைச் சாதிகள் உணர வேண்டும். பெரியாரின் கருத்துக்களையும் அரசியலையும் பின்பற்றுவதாக நம்புபவர்கள் அதை உணர்த்த வேண்டும். அந்தப் பணிகளில் இறங்காமல் பெரியாரின் தேவை இன்றும் இருக்கிறது; இன்னொரு பெரியார் திரும்பவும் பிறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகையதொரு முயற்சியில் விடுதலை நிச்சயம் கிடைக்கும் என உறுதியாகச் சொல்லலாம். அதேபோல் இடைநிலைச் சாதிகள் வழங்காத இடத்தை - உரிமைகளை- பிராமணர்களும் பிராமணியக் கருத்தியலான சநாதனமும் வழங்கும் என்ற நம்பிக்கையைத் தலித்துகளும் கைவிட்டாக வேண்டும். 

பிராமணியத்தின் கடந்த காலம் எப்போதும் நம்பும்படியாக இருந்ததில்லை. பிராமணியம் எல்லா நேரமும் பிராமணர்களின் நலனை மட்டுமே முதன்மையாகக் கருதியிருக்கிறது. அவர்களை உடல் உழைப்பில் ஈடுபடாதவர்களாக - கருத்தியல் தலைமைக்குரியவர்களாக - அதிகாரத்தின் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கப் பிறந்தவர்களாக நிலை நிறுத்த மட்டுமே வேலை செய்துகொண்டிருக்கிறது. பிராமணியத்தின் தூண்டில்கள் பல வண்ணங்களால் ஆனது. எச்சரிக்கையோடு இல்லையென்றால் உள்வாங்கிச் செரித்துவிடும் 

இந்தக் கவனத்தோடு விடுதலையை முன்மொழியும் விடுதலை தலித் இயக்கங்களிடமிருந்து பெரியாருக்குக் கிடைக்கும் விடுதலையாக இருக்கலாம். அல்லது பெரியாரிடமிருந்து தலித்துக்களுக்குக் கிடைக்கும் விடுதலையாகவும் இருக்கலாம். இரண்டுமில்லையென்றால் வரலாற்றுக்குப் பெரியாரிடமிருந்தோ, பெரியாரிடமிருந்து வரலாற்றுக்கோ கூட விடுதலை கிடைக்கலாம். மொத்தத்தில் விடுதலை நிச்சயம் உண்டு. 

‘வரலாறு என்னை விடுதலை செய்யும் ‘ எனத் தோழர் ஃபிடல் கேஸ்றோ சொன்னது அர்த்தமில்லாமல் போய்விடுமா..? என்ன? அல்லது போகத்தான் விடலாமா.?

======================================================== 

புதியகோடாங்கி, ஜனவரி 2005 இல் வந்த கட்டுரையின் இற்றைப்படுத்திய வடிவம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்