கரைகடக்கும் புயல்: ஒரு நினைவு

 

இன்றிரவு நிவர் புயல் கரையைக் கடக்கும் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. புயலின் இருப்பையும் சுழற்சியையும் பற்றிய குறிப்புகளைப் பற்றிய விவரணைகளில் நேற்றிலிருந்து புதுச்சேரியென்னும் பாண்டிச்சேரி உச்சரிக்கப்படுகிறது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும்போது கடலோர நகரங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகலாம். அப்படியான பெருநகரங்களில் ஒன்றாக இருக்கிறது புதுச்சேரி. அதனை அடுத்த பெருநகரம் கடலூர்.

கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுநிலை கரையை நோக்கி நகரும்போது ஏற்படுத்தும் ஒலியின் ஓசையையும் மரங்களின் சுழற்சியையும் எழுத்திலும் சொல்லிலும் உணர்த்த முடியாது. நேரடியாக அனுபவித்தால் தெரியும். அப்படியொரு அனுபவத்தைப் பாண்டிச்சேரி எனக்குத் தந்தது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பணிக்காக1989 இல் சேர்ந்தபோது பார்த்த வீடு கடலோரத்தில் தான் இருந்தது. முத்தியால் பேட்டையில் அங்காளம்மன் நகர் என அதன் முகவரி இருந்தாலும் உள்ளூர்க்காரர்கள் அதனை அங்காளங்குப்பம் என்றுதான் சொல்வார்கள். குப்பங்கள் மீனவர்களின் வெளி. வங்கக் கடலோரப் பகுதியான அந்தக் குப்பம் இத்தனைக்கும் பிரெஞ்சியர்கள் வாழும் பாண்டிச்சேரியின் வெள்ளை நகரம் போன்றதல்ல. பிரெஞ்சியர்களின் மனநிலை கொண்ட இந்தியர்கள் – குறிப்பாக மீனவர்கள், ஷொல்தாக்கள், அதிகம் வசிக்கும் பகுதி. 

வாடகை வீடுகளில் அதிக நாட்கள் குடியிருந்த வீடு என்றால் 46, அங்காளம்மன் நகர் வீடு தான். பாண்டிச்சேரி கடலோரக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முத்தியால் பேட்டையின் ஓரத்துத் தெரு ஒன்றின் மாடி வீடு. புதுச்சேரி, முத்தியால் பேட்டை, அங்காளம்மன் தெருவை நகரத்தின் பகுதி என்று சொல்ல விடாமல் தடுத்தது அங்கிருந்த தென்னந் தோப்புகளும், எருமைக் கூட்டமும், மீன் வாடையும் தான். காலையில் நடைப்பயிற்சிக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் ஐந்து தென்னந்தோப்புகள் வந்து விடும். எப்போதாவது கொஞ்சம் பாதை விலகிச் சென்றால்  மீனவர் குப்பங்களுக்குள் நுழைந்து கருவாட்டை மிதிக்காமல் செல்லப் படாதபாடு படவேண்டும். கடற்கரை மணலையும் கடல் அலைகளையும் ரசிக்கலாம் என்றால் அதுதான் அங்கே முடியாது. கடலோர குப்பத்து வாசிகள் கடற்கரை மணல் பரப்பைத் தான் தங்கள் கழிப்பிடங்களாகக் கருதிக் குந்தியிருப்பார்கள். பூட்டிய கக்கூஸில் காலைக் கடன் கழித்துப் பழகிப் போன நடுத்தர வர்க்க மனத்திற்குப் பரந்த வெளியில் மலஜலம் கழிப்பது சட்ட விரோதமாகத்தோன்றுவது ஆச்சரியமான ஒன்றல்ல. 

கீழே வீட்டுச் சொந்தக்காரரும் மாடியில் நாங்களும் இருந்தோம். வீட்டின் முன்னால் போகும் மண்சாலையைத் தாண்டினால் 100 தென்னை மரங்களும் 25 எருமை மாடுகளும் கொண்ட பள்ளம் ஒன்று உண்டு. அந்தத் தென்னந்தோப்பு மறைக்கவில்லை என்றால் கடலில் படகுகள் போவது தெரியும். அமைதியான நாட்களில் 10 மணிக்கு மேல் கடலின் இரைச்சலும் காலையில் மீனவர்கள் வந்து இறங்கும்போது படகைத் தள்ளும் ஓசையும் கேட்கும். நேரடியாக அவர்களிடமே மீன் வாங்கலாம் என்று நினைக்கும்போது காலை நடையை அங்கே திருப்பிவிடுவதும் உண்டு.
பாண்டிச்சேரிக்குப் போன இரண்டாவது ஆண்டு -1991, நவம்பரில் புயலால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக மூன்று நாட்களுக்கு முன்பே வானொலிச் செய்திகள் கதற ஆரம்பித்துவிட்டன. நாகப்பட்டினத்திற்குக் கிழக்கே புயல் மையம் தொடங்கி வடமேற்காக நகர்ந்துகொண்டிருப்பதாக அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தன. இன்று சொல்வதுபோல கடலூர், பாண்டிச்சேரி, சென்னை என கடலோர நகரங்கள் தாக்கப்படும் பட்டியலில் இருந்தன. அறிவிப்பு வரத்தொடங்கிய நாளிலிருந்தே கடலைப் பார்க்கும் ஆசையும் கூடிக்கொண்டே இருந்தது.
காலையும் மாலையுமாக நடையைக் காந்திசிலைக்கு அருகில் நடந்துவிட்டு அடுத்தநாள் அங்காளங் குப்பத்தைத் தாண்டி மீனவர்கள் குடியிருக்கும் வைத்திக் குப்பத்திற்குள் நுழைந்து கடலோர மணலில் நடக்கத் தொடங்கும்போது செருப்புகளைக் கையில் தூக்கிக் கொள்ளவில்லை. ஈரமண்ணில் கால்கள் பதியவில்லை. காற்று பலமாக வீசியது. மேகங்கருத்துத் தொங்கியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை இல்லை.
அப்போது நாடகத்துறை நகரின் மையத்தில் ரங்கப்பிள்ளை வீதியில் இருந்தது. சைக்கிளில் கிளம்பும்போதே மழை ஆரம்பித்துவிட்டது. நனைந்தபடியே போகவேண்டும். வேட்டியைக் கட்டிக்கொண்டு சைக்கிளில் போய் தலையைத் துவட்டிவிட்டுப் பையிலிருந்த உடைகளை மாற்றிக்கொண்டு மதியம் வரை இருந்தேன். மதியத்திற்குப் பிறகு துறைக்கு வரவேண்டியதில்லை எனத் துறைத்தலைவர் இந்திரா பார்த்தசாரதி சொல்லிவிட்டார். திரும்பவும் வேட்டிக்கு மாறி வீடுவந்து சேருவதற்குள் படாதபாடாகிவிட்டது. சைக்கிளை மிதிக்கவே முடியவில்லை. மழையின் வேகம் கல்லெறிபோல விழுந்தது.2 கிலோமீட்டர் தூரம். அஜந்தா தியேட்டரிலிருந்து உள்சந்து வழியாக சைக்கிளை உருட்டியபடி நனைந்து வந்து வீடு வந்து சேர்ந்தேன்.
மாடியின் பால்கனியில் உட்கார்ந்து கிழக்கே பார்த்தால் 100 தென்னை மரங்களும் நூறுவிதமாய் ஆட்டம் போட்டன. எருமை மாடுகளின் கதறல் கூடிவிட்டது. தோப்பைச் சுற்றி கம்பி வேலை இருந்ததால் அறுத்துக் கொண்ட மாடுகள் வெளியே போயிருக்காது. ஆனால் மாட்டுக்காரர் கோணிச்சாக்கைப் போட்டுக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தார்.
காற்றின் வேகம் இருட்டோடு சேர்ந்து கூடியது. இரவெல்லாம் மாடுகளின் காட்டுக்கத்தல். சாளரங்கள் மரக்கதவுகள் என்பதால் கெட்டியாக அடைத்துக் கொண்டன. என்றாலும் இடுக்குகள் வழியாக நுழைந்த காற்று விசிறியடித்து விசில் போட்டது. அரிசியை வறுத்துப் பாட்டிலில் வைத்திருந்து பிள்ளைகளுக்குத் தந்தார் மனைவி. குளிருக்கு இதமான சூட்டில் மென்று கொண்டிருந்தோம். மின்சாரம் இல்லை. மெழுகுவர்த்தியும் டார்ச் விளக்கும் மட்டுமே. அன்றிரவும் கரையைக் கடக்கவில்லை. ஆனால் பாண்டிச்சேரியைக் கடந்து வடக்கே நகர்ந்துவிட்டது. சென்னைக்கு ஆபத்து என்று செய்திகள் மாறின, என்றாலும் அடுத்தநாள் பகலும் இரவும் மழை நிற்கவில்லை.
மூன்றாவது நாள் கரையைக் கடந்தது. திசைமாறி திசைமாறி ஆந்திராவின் நெல்லூரைத் தாக்கியது. வங்கக்கடலில் 600 கிலோமீட்டருக்கு அப்பால் ஆரம்பிக்கும் பெரும்பாலான புயல்கள் தமிழ்நாட்டுக்கு மழையையும் ஆந்திராவிற்குக் காற்றையும் சூறாவளியையும் தரும் என்று பேசிக்கொண்டார்கள். அந்தச் சோதிடம் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. 2004 இல் கடலூரைத் தாக்கிய தானே புயலின் போது நான் அங்கு இல்லை. ஆனால் கடலூரைத் தாக்கிய தானே புயலுக்குப் பின்னால் அந்த நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் பயணம் செய்து பார்த்த நாட்கள் நினைவில் இருக்கின்றன.
இயற்கையின் போக்கை என்ன செய்யமுடியும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்