இளையராஜா: அவமரியாதையும் முதல் மரியாதையும்

சாதிமத பேதமின்றி- ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி, ஆண் -பெண் பாகுபாடின்றி அவரது இசையை அள்ளிக்கொள்ளும் மனங்கள் நிரம்பியது தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் ஒரு பிம்பம் இளையராஜா. அவரது திரையிசைக்காகவும் பக்திப்பாடல்களுக்காகவும் தனி ஆல்பங்களுக்காகவும் எனக் கொண்டாடும் மனிதர்கள் அவரது மேடைப்பேச்சு, பொதுவெளிக் கருத்துகள், கருத்தியல் சார்புகள் எனப் பலவற்றிற்காக  எதிர்நிலையாகவும் நினைக்கின்றார்கள்.  

அதிர்ச்சியளித்த மார்கழி முதல் நாள்.

நேற்றிலிருந்து வணிகரீதியான வானொலிகள் நாளை மார்கழி பிறக்கிறது; பாவைப்பாடல்கள் ஒலிக்கும். மாலே மணிவண்ணா என்ற சொற்களோடு மென்மையின் ராகங்கள் கேட்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று காலையிலும் எனது காதுகளில் "சாமியோவ் .. ஐயப்பா" என்ற பெருங்குரல் பாடல்கள் தான் காதில் விழுந்தன.

 அந்தப் பாடல் போடப்படும் இடம் ஐயப்பன் ஆலயம் அல்ல; அது ஒரு அம்மன் கோயில். அங்கிருந்து 500 மீட்டர் தாண்டி இருக்கும் மசூதியிலிருந்து 'பாங்கோசை' கேட்கும் எப்போதும் மாறாது. அதேபோல் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தேவாலயத்தின் கடிகாரம் அதிகாலை ஐந்துமணி என்பதை அடித்துச் சொல்லிவிட்டுப் பைபிள் வாசகம் ஒன்றைப் படித்துக்காட்டிவிட்டு நேற்றிரவு நல்ல தூக்கத்தைத் தந்த பெருமானுக்கு நன்றி எனச் சொல்லித் தொடங்குகிறது. நான் இருக்கும் வெளி அப்படி. வீடு இருக்கும் இடம் அசோக்நகர்; அசோக்நகர் இருப்பது முகம்மதுஷாபுரத்தில். முகம்மதுஷாபுரத்தின் இருப்பு திருமங்கலம். இந்த இணைவுதான் இந்திய வாழ்க்கையில் சமயங்களின் இருப்பும் இசைவும் இணைவும்.

நேற்று எங்கள் கிராமத்தில் நடந்த முனீஸ்வரனுக்கு ஆடறுத்துக் கறிச்சோறு போட்ட கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு திரும்பினேன். முனீஸ்வரன் பட்டியலினம் எனச் சொல்லப்படும் சாதியொன்றின் குழுவிற்குக் குலசாமியாக இருக்கிறது. குடும்பத்தலைவரை நோய்க்கோ, விபத்துக்கோ பறிகொடுத்த பெண்ணுக்கு ஆறுதல் அளிக்கிறது. தோட்டக்காட்டுக் காவலுக்கும் மலையில் வேட்டைக்கும் போகிறவர்கள் வணங்கிச் செல்லும் காவல் தெய்வமாக இருக்கிறது. போகும்போது 'காப்பாற்று' என்று சொல்லி விட்டுப் போகிறவர்கள், வரும்போது 'ரத்தம்' காட்டி நன்றி செலுத்துகிறார்கள்.

இந்த இசைவையும் இருப்பையும் இணைவையும் எப்போதும் கேள்விக்குள்ளாக்குகின்றன பெருங்கோயில்களின் சடங்குகளும் நடைமுறைகளும். இந்த இடம் வரை நுழையலாம்; இந்த இடத்திற்குப் பின் இவர் வரக்கூடாது; இந்தச் சின்னங்களை உடலில் பூசலாம் எனத் தடைகளால் தனது வெளியை நிரப்பி வைத்திருக்கின்றன. அதிர்ச்சியூட்டும் தகவலாக அந்தச் செய்தி பெருங்கோயில்கள் மீது கோபமூட்டுகின்றன.

இன்று (22-12-24) காலை தொலைக்காட்சியின் செய்தி அலைவரிசைகளுக்குள் நுழையும்போதே அந்தச் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. மார்கழிப் பாவைப்பாடல்களோடு தொடர்புடைய திருவில்லிபுத்தூர்க் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் இளையராஜா நுழைய அனுமதி இல்லை. அவரை அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி மரியாதை செய்யப்பட்டுள்ளது. அவரும் அந்த மரியாதையை ஏற்றுள்ளார். தடுப்பதும் மறுப்பதும் தனியொரு கோயிலின் - தனியொரு நபரின் பிரச்சினை அல்ல. அரசியல் பிரச்சினை; இந்தியாவில் இருப்பதாகச் சொல்லப்படும் மக்களாட்சி அரசின் பிரச்சினை. கண்டிக்கப்படவேண்டிய நிகழ்வு.

முதல் மரியாதை

இந்த அரசு அவருக்கு எல்லா விருதுகளும் அளித்துக் கௌரவம் செய்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் உறுப்பினர் என்ற அங்கீகாரம் இருக்கிறது. ஆனால் ஒரு கோயில் தனது அர்த்தமண்டலத்திற்குள் நுழைய அனுமதி மறுத்துக் கௌரவத்தைக் குலைக்கிறது; அங்கீகாரம் இல்லை என்கிறது. உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சமூகத்தின் செவிகளுக்கு விருந்தளித்த இசை அமைப்பாளர் இளையராஜா இந்திய அரசின் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகப் பொறுப்பேற்க உள்ளார். வாழ்த்துகள். மகிழ்ச்சி.
 
இன்று காலை நடையின்போது -ஸ்பாட்டிபையைத் தட்டிவிட்டு நடக்கத்தொடங்கும்போது கூடவே அவரது இசையும் சாரலாக நனைத்துக்கொண்டே வந்தது. அவரது இசை கேட்காத நாட்கள் இல்லை என்னுமளவுக்கு உடன் இருப்பவர். கணினியில் தட்டச்சுச் செய்யும்போது கூடவே ஓடிக் கொண்டிருக்கின்றன அவரது இசைதழுவிய கவிதை வரிகள். வாசிக்கும் கதையில் சிறுதடங்களின் போது இசையின் உலகத்திற்குள் இழுத்துப்போய்விடுவார் ராஜா..
 
அவர் இசையமைத்த பாடல்களைக் கேட்டு வளர்ந்தது எனது இளமைப்பருவம். பள்ளிப்பருவம் தொடங்கிக் கிராமத்தை விட்டு- குடும்பத்தினரை விட்டுத் தூரமாக இருக்க நேர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அவரது இசையோடு கூடிய பாடல் வரிகள் கிராமத்தைப் பதிலீடு செய்துகொண்டே இருந்தன. சாகச நாயகர்களுக்குப் பின்னணி இசைக்கோர்வைகளை உருவாக்கித் தந்து தமிழ் வெகுமக்களின் - இளைஞர்களின் இயலாமைகளுக்கு வடிகால்களை உருவாக்கித் தந்தது அவரது இசைதான். பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களின் இயக்கத்தில் உருவான வெளிசார் அடையாளங்களுக்குக் கூடுதல் வண்ணங்களைத் தனது இசைக் கோலங்களால் அடிக்கோடிட்டுக் காட்டியவர் அவர். 

எண்பதுகளின் திருவிழாக்களில் ஒலிபெருக்குக் குழல்களின் வழியாகக் கேட்கத் தொடங்கிக் கையடக்க வானொலி, வானொலியும் ஒலிப்பதிவு நாடாக்களின் இசைப்புமென மாறிய 1990 களில் அலமாரியில் புத்தக அடுக்குகளில் ஓரடுக்கு இசைப்பதிவு நாடாக்களின் அடுக்காக இருந்தன. அவற்றில் முக்கால் பங்கு இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள். படங்களுக்காக இல்லாமல் ‘ எப்படிப் பெயர் வைக்கலாம்? காற்றைத்தவிர வேறில்லை....மேற்கத்திய சிம்பொனிக் கோலங்கள்’ என வந்தபோது அவைகளும் அடுக்கில் இடம்பிடித்துக்கொண்டன.

சொந்தவீடு கட்டியபோது, நாலு மூலையிலும் இசைபெருக்கும் ஒலிப்பெட்டிகளைக் கொண்டு முன்னறையை இளையராஜாவின் இசையால் நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கினார்கள் மகனும் மகளும். என்னைவிடக் கூடுதலாகத் தென்பாண்டிச் சீமையிலேயையும் தென்றல்வந்து தீண்டும்போது பாடலையும் கேட்பவர்கள். பேரன்களுக்கும் பேத்திக்கும் தாலாட்டும் இசையே அவரது மெல்லிசைக்கோலங்கள் தான். துல்லியத்தன்மைகொண்ட ஒலிக்கலவைக் கருவிகள் தொடங்கி விதம்விதமான இசை பெருக்குக் கருவிகள் வழியாகக் கேட்டுக்கேட்டு உள் நுழைந்த இசைக் கோலங்கள் ராஜாவின் இசைப் படைப்பாக்கங்கள்.
கலையின் வேலைகள் எனப் பட்டியலிடப்படுவதில் பதிலீடு செய்தல், நினைவுகளுக்குள் ஆழ்த்துதல், இன்னொரு உணர்வுக்குள் அமிழ்த்துக் கரைத்தல், கழிவிரக்கத்திலிருந்து உற்சாகத்திற்கு நகர்த்துதல், நம்மையொத்த பாத்திரங்களின் உணர்வுகளை நமதாக்குதல், பல நேரங்களில் எல்லாவற்றிலிருந்தும் விலக்கிவிட்டுத் தனித்தலையும் உயிரியாக்கிக் காட்டுதல் எனப்பலவும் சொல்லப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் இளையராஜாவின் இசை எனக்குத் தந்திருக்கிறது. அவருக்குத் தரவேண்டிய கடன்கள் ஏராளம். நான் பட்ட கடனை என் சார்பில் எனது அரசாங்கம் அவருக்கு அளிக்கும் மரியாதைகள் மூலமாக - விருதுகள் மூலமாக - தகுதியளிப்புகள் மூலமாகத் தரும் என்றால் மகிழ்ச்சியே
.
மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தனக்கான பலனை எதிர்பார்த்தே இந்தியாவின் அரசுகள் இருந்துள்ளன. புரவலர் மனநிலையில் தான் மக்களாட்சிக்காலத்திலும் அரசுகளின் இயக்கம் இருக்கிறது.
 
***********
இந்தியாவிற்கான அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் கலை,இலக்கியம், விளையாட்டு, சமூகநலன், பொருளியல், அறிவியல் போன்ற துறைசார் வல்லுநர்களின் நேரடி ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் விவாதிக்கும் களமாக உருவாக்கப்பட்டது ஒன்றிய அரசின் ராஜ்யசபா. அதில் இடம்பெறுபவர்கள் மக்களால் வாக்களித்துத் தேர்வு செய்யப்படாமல், நியமன வழியில் பதவி பெறுபவர்களாக இருக்கிறார்கள். மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்பக். கட்சிகளின் நியமனங்களால் செல்பவர்கள் கட்சி அடையாளங்கொண்ட உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். கட்சி அடிப்படை இல்லாது நேரடியாகக் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யும் துறைசார் வல்லுநர்கள் கட்சி அடையாளம் இல்லா உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். இளையராஜா அப்படியொரு உறுப்பினராகத் தனது காலத்தை நீட்டிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
நம்பிக்கை பொய்த்துப்போனாலும் வருத்தப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் அவருக்குத் தரவேண்டிய பட்டங்களும் விருதுகளும் தரப்படவேண்டிய காலத்தில் தரப்படவில்லை. அவர் செயல்பட்ட இசைத்துறைக்கான விருதுகளையும் பட்டங்களையும் பரிந்துரைக்க வேண்டிய சங்கீத் நாடக் அகாடெமி எப்போதும் சனாதனப் பார்வையோடு இயங்கிய ஓர் அமைப்பாகவே இருந்துள்ளது. சாகித்திய அகாதெமியைப் பற்றிய விமரிசனங்களை எப்போதும் எழுப்பும் அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் சங்கீத் நாடக் அகாடெமி பற்றிக் கவனம் செலுத்தியதே இல்லை. அதன் தொடக்கம் முதல் இன்றுவரை சங்கீத் நாடக் அகாதெமி பரிந்துரை செய்து பெற்றுத்தந்த பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரதரத்னா, பெல்லோஷிப் போன்ற விருதுகளின் பட்டியலில் எத்தனை பேர் எந்தெந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பிரித்துப் பார்த்தாலே தெரியும்.
 
நடிப்புக்கென ஒரே குடும்பத்தில் நான்குபேர் பட்டங்களும் விருதுகளும் வாங்கியபோது இங்கே சிவாஜிகணேசனும் இளையராஜாவும் விருதுகளின் வாசனை இல்லாமல்தான் இருந்தார்கள் என்பதை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது.
 
சிறப்புத்துறைகளில் சாதனை செய்தவர்களின் ஓய்வுக்காலப் பதவியாக ராஜ்யசபா உறுப்பினர் பதவி கருதப்படுகிறது. ஆனால் இசையோடு தனது வாழ்வைப் பிணைத்துக்கொண்ட இளையராஜாவின் இசைக் கோலங்களின் ஆக்கங்களுக்கு ஓய்வு வயது இருக்க வாய்ப்பில்லை. அவரது சங்கதிகளைக் கேட்கும் காதுகள் இருக்கும் வரை அவரது இசையாக்கமும் உருவாக்கித் தந்த இசைக்கோலங்களும் இருக்கப் போகின்றன.
 
மேற்குத்தொடர்ச்சி மலையின் பருவக்காற்றோடு ஈரமான ரோஜாவின் இதமான வருடல் தழுவிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை எந்தத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் ராஜாவே..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்