பிறந்த நாள் கொண்டாட்டம்.
பிப்ரவரி, 17 -இந்தத் தேதியை எனது பிறந்தநாளாக அரசாங்கப்பதிவேடு ஒன்றில் எழுதியவர் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டு எழுதிய உத்தரப்புரம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியர். வலதுகை தலையைத் தாண்டி இடதுகாதைத் தொடவேண்டும் என்ற வழக்கம்போல் சொன்னார் அவர். எளிதாகத் தொட்டது எனது வலதுகரம். ஏனென்றால் அப்போது ஐந்து வயதைத் தாண்டிப் பல மாதங்கள் ஓடியிருந்தன. ஐந்து வயது முடிந்தபோது தொடங்கிப் பள்ளிக்கூடம் போகச்சொல்லிக் கையில் கம்போடு விரட்டினார் எனது மூத்த அண்ணன். பல நாட்கள் கம்பும் கையுமாகப் பள்ளிக்கூடம் வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார். அவர் போன பின்பு நான் வெளியே வந்து பள்ளிக்குப் பின்னால் இருந்த தாழங்குளத்தில் நீச்சல் அடித்துவிட்டு ஆலமரத்தின் கிளைகளிலிருந்து தொங்கும் விழுதுகளில் உட்கார்ந்து ஆடியும் நேரம் கழித்துத் திரிந்தேன்.