படங்கள் வழி மதுரை நினைவுகள்
மதுரை என்னுடைய நகரமென்று இப்போதும் சொல்கிறேன். அந்நகரில் இருந்த ஆண்டுகள் குறைவுதான். மாணவனாக விடுதிகளில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் வாலஸ் விடுதியிலும் வாஸ்பன் விடுதியிலும் 4 ஆண்டுகள்.
என்னிடம் இருக்கும் புகைப்படங்களிலேயே பழைய படம் இது-1980. அமெரிக்கன் கல்லூரி விழாவில் பரிசு வாங்கும்போது எடுத்த படம். பரிசு தருபவர் ஒரு நீதிபதி. பெயர் நினைவில் இல்லை. எண்பதுகளின் பெல்பாட்டம் பேண்ட். இரண்டு காதுகளையும் மறைக்கும்படியாக முடிவளர்த்து, அகலமான அடிப்பாகம் கொண்ட கால்சட்டைகள் தரையைக் கூட்டிப்பெருக்க நடந்த காலம்.
எனது கிராமத்திலிருந்து நான் வாழ்ந்த பல நகரங்களுக்கும் போக மதுரைதான் வழி. எனது கிராமம் இப்போதும் மதுரை மாவட்டத்திற்குள் தான் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு கிளையான வாசிமலையான் கோவில் மலைக்குத் தெற்கே இருக்கும் தச்சபட்டி என்ற அந்தக் கிராமம் அப்போதும் 70 தலைக்கட்டுதான்; இப்போதும் அதே 70 தலைக்கட்டுதான். வளர்ச்சியே இல்லாத கிராமம். அவ்வப்போது ஏற்பட்ட வறட்சி, பஞ்சம் போன்ற தாக்கங்களின் போது மூணாறு, சென்னை, சிவகாசி, கோவை, திருப்பூர், என இடம்பெயர்ந்த குடும்பங்களின் கதைகளைக் கொண்ட கிராமம். இப்போது அதிகம் இருப்பது திருப்பூர் பனியன் கம்பனிகளின் தொழிலோடு. இங்குமங்குமாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்
இங்கிருந்து மதுரைக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகச் சென்று வந்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரி விடுதி வாழ்க்கைக்குப் பின் பல்கலைக்கழக விடுதியில் இரண்டு ஆண்டுகள். தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கான குடியிருப்பில் 5 ஆண்டுகள். அதன்பிறகு கே கே நகரில் ஒரு ஒண்டுக் குடித்தனமாக ஓராண்டு. மொத்தம் 12 ஆண்டுகள். இப்போது திரும்பவும் ஓய்வுக்காலத்தில் மதுரை திருமங்கலத்தில். 2020 இல் வந்தேன் என்றாலும் இடையில் இரண்டு ஆண்டுகள் கோவைக்கும் திருமங்கலத்திற்குமாக நகர்ந்து கொண்டிருந்தேன். 2023 டிசம்பர் தொடங்கி இனி எங்கும் 'சட்டிமுட்டி' தூக்குவதில்லை என்று முடிவாகிவிட்டது.
ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு
மதுரையில் ஒருவாரம் நடந்தது(1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.

ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவிற்கு மாபெரும் பொருட்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்தில் மாநாட்டிற்காகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முக்கிய பொறுப்பில் துறையின் பேராசிரியர் முனைவர் கோ.விஜயவேணுகோபால் இருந்தார். இலக்கணம், மொழியியல் துறைகளில் வல்லவரான கோ.வி. கட்டடக்கலை, கல்வெட்டுத் துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். அவர் வடிவமைத்த மாதிரிதான் இப்போது மதுரைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலாக உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் கண்காட்சிகள் அமைத்தன. தமிழியல் துறை, தமிழர்களின் கலை, வரலாறு, பண்பாடு சார்ந்த பொருட்களைக் காட்சிப்படுத்தியது.
============================
பழைய படங்களைப் பதிவேற்றும் இந்தப்போக்கு மதுரை நினைவுகளைக் கிளறிவிட்டது. கைவசமிருக்கும்/ கணினித் தொகுப்பில் இருக்கும் படங்களைப் பார்த்துக்கொண்டே வரும்போது இந்தப் படத்தைப் பகிரவேண்டும் என்று தோன்றுகிறது. என்னிடம் அடிவாங்குவதுபோலப் பாவனை செய்யும் சுந்தரன் (பேரா.சுந்தர் காளி) எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மதுரையின் கலை இலக்கியத் தொடர்பாளராக அறியப்பட்ட ஆளுமை. மதுரைக்கு வெளியே இருக்கும்-பிறநாடுகளில் இருப்பவர்களும் மதுரைக்கு வரும்போது தொடர்புகொள்ளும் நபராக இருந்தான். மதுரை நண்பர்கள் என்றொரு குழுவாக்கத்தை உருவாக்கிக் கொண்டாட்ட மனநிலையைத் தந்த முன்னோடி மதுரைக்காரன்.

இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன். ஆனால் முகம் காட்டவில்லை. அப்போது அமெரிக்கன் கல்லூரியின் இளம் ஆசிரியர். உடன் இருக்கும் நண்பர்கள் ஏ.ஆ.குமார்.அரவிந்தன், கண்ணன்(அவர் மட்டும் இப்போது இல்லை)
கருத்துகள்