சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்கட்டமைப்பும் நுட்பங்களும்


சங்க்ரதாஸ் சுவாமிகளின் 50 நாடகங்களில் 14 நாடகங்கள் அச்சில் கிடைக்கின்றன. கிடைக்கின்ற 14 நாடகங்களையும் வாசித்து முடிக்கின்ற ஒருவருக்கு அவரது நாடகக் கட்டமைப்பு எது எனச் சுலபமாகப் புரிந்துவிடும். “நற்திறக் கட்டமைப்பு“ என்ற எளிமையான வடிவத்தையே சுவாமிகள் தனது நாடக வடிவமாகக் கொண்டுள்ளார். நற்திறக் கட்டமைப்பு அனைத்து நாடகங்களிலும் அமைந்துள்ள விதத்தை விரிவாகப் பார்ப்பதற்குப் பதிலாக அவரது “பிரஹலாதா என்ற நாடகம் எவ்வாறு நாற்திற வடிவக் கட்டமைப்புடன் உள்ளது என்பதைக் காணலாம். இது ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘ என்பது போலப் பின்னா் அனைத்து நாடகக் கதைகளோடும் பொருத்திப் பாரத்துக்கொள்ள ஏதுவாக அமையும்.
நாடகக் கட்டமைப்பு

பொதுவாக நாடகக் கட்டமைப்பு பற்றிப் பேசுபவர்கள் ஐரோப்பிய நாடகக் கட்டமைப்பு இலக்கணமான>

ஆரம்பம்

பின்னல்

உச்சம்

வீழ்ச்சி

முடிவு

என்ற ஐந்திற அமைப்பைச் சிறப்பாகப் பேசுவர். இல்லையென்றால் >பாரத முனிவரின் ‘நாட்டிய சாஸ்திரம்’ கூறும்

முகம்

பிரதிமுகம்

கருப்பம்

விளைவு

துய்த்தல்

என்ற ஐந்து சந்திகளை எடுத்துக்காட்டி பேசுவர். ஆனால் இவை எதையும் சங்கரதாஸ் சுவாமிகள் பின்பற்றி நாடகங்கள் எழுதியவராகத் தெரியவில்லை.

அவரது நாடகங்கள் அறிமுக நிலை, முரண்படு நிலை, உச்ச நிலை, முடிவு நிலை என்ற நான்கு நிலைகள் கொண்டதான அடிப்படையில் வடிவங் கொண்டுள்ளன. இந்நாற்கிறநிலையே கிராமத்துப் பாமர மக்களுக்கு ஏற்ற வடிவம் என்று சுவாமிகள் கருதியிருக்கக்கூடும். இந்த நான்கு நிலைகளையும் நான்கு களங்களாகப் பிரித்து அவற்றின் உட்பிரிவு நிகழ்வுகளுக்குக் காட்சிகளைப் பிரித்துக்கொண்டுள்ளார் சுவாமிகள்.இனிப் பிரஹலாதா நாடகத்திற்குள் புகுவோம்.

பிரஹலாதா அல்லது இரணியன் நாடகம்

பிரஹலாதா அல்லது இரணியன் நாடகத்தின் கதை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் அறிந்துள்ள ஒரு கதை. விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றான நரசிம்ம அவதாரத்தின் தேவையை விளக்கும் கதை. தேவர்களைத் தொந்தரவு செய்யும் இரணியன், அவன் தம்பி இரண்யாட்சன் என்ற இருவரையும் வதம் செய்வதற்கு நரசிம்ஹமாக வரும் புராணக் கதையில் மிக முக்கியமான பாத்திரம் பிரஹலாதன். இவன் அரக்கன் இரணியன் சொந்த மகன். ஆனால் விஷ்ணுவை நாராயண நாமத்தை வழிபடும் பக்தன் என்பது சுவாரசியமான ஒன்று. இந்தக் கதையைச் சுவாமிகள் நான்கு களங்களில் 23 காட்சிகளாக அமைந்துள்ளார்.

களம் 1 காட்சிகள் 5

களம் 2 காட்சிகள் 6

களம் 3 காட்சிகள் 6

களம் 4 காட்சிகள் 6

நாடகத்தின் முதல் களத்தில் எதிரெதிர் கதாபாத்திரங்கள் அல்லது கருத்து நிலைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

களம் 1 காட்சி 1

காலம் : பிற்பகல்

இடம் : இரணியன் தர்பார்

பாத்திரங்கள் : இரணியன், அமைச்சர்கள், பிரதானிகள்,

காவலர்கள்

(நாரணனோடு போருக்குச் சென்ற தன் சகோதரன் இரண்யாட்சனின் வெற்றிச் செய்தியை இரணியன் எதிர் பார்த்துக் காத்திருக்கிறான்)

நிகழ்வு : இரண்யாட்சனின் தோல்வியும் இறப்பும் தெரிவ்க்கப்படுகிறது. இரணியன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தவஞ் செய்வோர்களுக்கும் எதிரானவன் என்பது அறிமுகமாகிறது.

காட்சி 2



காலம் : மாலை

இடம் : லீலாவதி அந்தப்புரம்

பாத்திரங்கள் : இரணியன், லீலாவதி, சேவகர்கள்.

(லீலாவதி ஆசனத்திலிருக்க, இரணியன் துயரத்தோடு வருகிறான்)

நிகழ்வு : லீலாவதி, தன் கணவனின் துயரத்தில் பங்குகொள்கிறாள், தேவர்களை வெல்லத் தவஞ்செய்யச் செல்வதாகக் கூற, தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறுகிறாள். இரணியன் சமாதானம் சொல்லிப் பிரிந்து போகிறான்.

காட்சி 3



காலம் : பகல்

இடம் : தேவலோகம், இந்திரன் தர்பார்

பாத்திரங்கள் : தேவேந்திரன், தேவர்கள், அஷ்டதிக்குப்

பாலகர்கள், முனிவர்கள், ரம்பை,

திலோத்தமை, ஊர்வசி, மேனகை.

(தேவேந்திரன் சுதர்மையெனும் அந்தாணி மண்டபத்திலே சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, தேவர்களும் அஷ்டதிக்குப் பாலகர்களும் முனிவர்களும் அரம்பாஸ்தீரிகளும் புடைசூழவிருக்கிறார்கள்)

நிகழ்வு : சுமுகமான இந்திரலோகம், லீலாவதியின் கர்ப்பத்தைக் கலைக்க இந்திரன் கிளம்புதல், இந்திரன ஓ; இரணியன் எதிரெதிர் நிலையினர் என்ற அறிமுக நிலை

காட்சி 4



காலம் : முற்பகல்

இடம் : லீலாவதி அந்தப்புரம்

பாத்திரங்கள் : லீலாவதி, தேவேந்திரன்

(லீலாவதி ஆசனத்தில் அமர்ந்திருக்க, தேவேந்திரன், லீலாவதிக்குத் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் தோன்றுகிறான்)

நிகழ்வு : லீலாவதி - இந்திரன் சந்திப்பு. லீலாவதியின் கருவை அழிக்க நினைத்தல். இந்திரன் - லீலாவதி மோதல், லீலாவதியைக் கூந்தல் தொட்டு இழுத்துச் செல்லுதல்.

காட்சி 3



காலம் : முற்பகல்

இடம் : காட்டுப்பாதை

பாத்திரங்கள் : தேவேந்திரன், லீலாவதி, நாரதர்

(லீலாவதி கூந்தலைப் பற்றித் தேவேந்திரன் இழுத்து வருகிறான்)

நிகழ்வு : இந்திரன் - லீலாவதி வாதம் தொடர்தல், நாரதர்தோன்றி, கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் மகத்துவம் கூறி, விஷ்ணுவின் பக்தன் பிறப்பான் என உணர்த்துகிறார். லீலாவதியை நாரதர் ஆசிரம்த்தில் தங்கச் செய்தல்.

களம் ஒன்று : ஐந்து காட்சிகளுடன் முடியும்பொழுது, நாடகத்தின் முக்கியமான கதாபாத்திரங்களும் எதிரெதிர் கதாபாத்திரங்களும் அறிமுகமாகி விடுகின்றனர். இரணியன் அரக்கர்களின் தலைவனாக நிற்க, தேவேந்திரன் அவனைக் கொல்ல விரும்பும் தேவர்களின் பிரதிநிதியாக அறிமுகமாகிறான். இந்த எதிர்நிலையில் இடைப்பட்ட கதாபாத்திரமாக இரணியனின் மனைவி லீலாவதியும், அவள் வயிற்றில் வளரும் சிசுவும் இருக்கப் போகிறவர்கள் என்பதும் களம் ஒன்றிலேயே அறிமுகமாகி விடுகின்றது.

களம் இரண்டு : மொத்தம் ஆறு காட்சிகளாகப் பகுக்கப்பட்டு முரண்நிலை வெளிப்படும் நிகழ்வுகளைக் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

களம் 2 காட்சி 1

காலம் : மாலை

இடம் : யாகசாலை

பாத்திரங்கள் : இரணியன், பிரமன்;

(ஹோமம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஹோமத்திற்கு முன்னால் இரணியன் தவஞ் செய்துகொண்டிருக்கிறான்)

நிகழ்வு : பிரமன் அவரத்வ வரம் தருகிறார். உடன் அதைச் சோதித்துப் பார்க்க அவரிடமே போருக்குத் தயாராகிறான். இரணியன், பிரமன், அவனிடம் தோல்வியடைந்ததாக ஒப்புக்கொண்டு தப்புகிறார்.

காட்சி 2

காலம் : மாலை

இடம் : லீலாவதியின் அந்தப்புரம்

பாத்திரங்கள் : இரணியன், காவலர்கள்.

(தவஞ்செய்துவிட்டுத் திரும்பிய இரணியன் தனது மனைவியின் அந்தப்புரத்திற்கு வருகிறான். அங்கு லீலாவதியைக் காணாமல் ஆச்சரியப்பட்டு அந்தப்புரமெங்கும் தேடிப் பார்த்தும் லீலாவதியைக் காணவில்லை)

நிசழ்வு : காவலர்கள், இந்திரன் வந்து இழுத்துச் சென்றதைச் சொல்ல, கோபத்துடன் இந்திரலோகம் கிளம்புகிறான்.

காட்சி 3

காலம் : அதிகாலை

இடம் : நாரதர், ஆசிரமம்

பாத்திரங்கள் : நாரதர், லீலாவதி, இரணியன்.

(லீலாவதி நிதத்திரையிலிருக்கிறாள், நாரதர் அவள் வயிற்றிலிருக்கும் சிசுவிற்கு ஞானாபதேசம் செய்கிறார்)

நிகழ்வு : இரணியன் நாரதர் மேல் கோபம்கொள்ள, லீலாவதி உண்மையைக் கூறுகிறாள், கோபம் மாறாமல் இந்திரலோகம் செல்லத் தயாராகிறான் இரணியன்.

காட்சி 4

காலம் : பகல்

இடம் : தேவலோகம், இந்திரன் தர்பார்

பாத்திரங்கள் : நாரதர், லீலாவதி, இரணியன்.

(தேவேந்திரன் அஷ்டதிக்குப் பாலகர்களிடம் இரணியனால் தேவர்களுக்கு ஏற்படப் போகும் அபாயத்தைக் குறித்து ஆலோசித்தல்)

நிகழ்வு : தேவர்களை இரணியன் அடக்கிக் கட்டுதல், தனக்குச் சேவகர்களாக ஆக்குதல்.



காட்சி 5

காலம் : காலை

இடம் : திருப்பாற்கடல்

பாத்திரங்கள் : மகாவிஷ்ணு, சீதேவி, பூதேவி, பிரம்மா,

தேவேந்திரன், தேவர்கள்

(மகாவிஷ்ணு சே~சயனத்தில் சயனித்திருக்க சீதேவி, பூதேவி அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள், பிரம்மா, தேவேந்திரன், தேவர்கள் முனிவர்கள் , அவரை வணங்குகிறார்கள்)

நிகழ்வு : விஷ்ணு பிரமன் செய்த தவறை – வரம் தந்ததைச் சுட்டிக்காட்டிவிட்டு, பிறக்கப்போகும் இரணியனின் குழந்தையாலேயே அவன் கொல்லப்படுவான் எனக் கூறி அனுப்புகிறார்.

காட்சி 6

காலம் : முற்பகல்

இடம் : இரணியன் தர்பார்

பாத்திரங்கள் : இரணியன், சுக்கிராச்சாரியார்,

அமைச்சர்கள், சேனாதிபதி, பிரதானி,

காவலர்கள்.

(இரணியன் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறாள், அமைச்சர்கள் தங்கள் இருக்கையில் இருக்கிறார்கள்)

நிகழ்வு : இரணியன் தன்னைக் கடவுளாகப் பிரகடனம் செய்தல் அனைவரும் இரணிய நாமத்தைச் சொல்லும்படி ஆணையிடப்படுகிறார்கள். சுக்கிராச்சாரியார் இரணியனின் மகன் பிரஹலாதனுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார். பிரஹலாதன் அவருடன் அனுப்பப்படுகிறான்.

ஆறு காட்சிகளில் இரண்டாவது களம் முடியும்பொழுது இரணியனுக்கு எதிராக முரண் நிலை உருவாக்கப்பட்டுவிடுகிறது. தேவர்களோ மகாவிஷ்ணுவோ அவனுக்குரிய முரண் பாத்திரமல்ல, அவனது மகன் பிரஹலாதனே முரண்பாத்திரம் என்ற நிலையில் களம் 2 முடிகிறது.

களம் 3 உம் ஆறு காட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாடகத்தின் முடிவை நோக்கி ஒவ்வொரு காட்சியிலும் நிகழ்வுகளை நகர்த்திச் செல்கிறார் சுவாமிகள்.

களம் 3 காட்சி 1

காலம் : காலை

இடம் : வித்தியாசாலை

பாத்திரங்கள : சுக்கிராச்சாரியார், பிரஹலாதன்,

மாணவர்கள்.

(சுக்கிராச்சாரியார், பிரஹலாதனுக்கும் இதர மாணவர்களுக்கும் கல்வி பயிற்றுவிக்கிறார்)

நிகழ்வு : சுக்கிராச்சாரியார் ஓம் இரண்யாயநமஹ எனச் சொல்லித்தந்த பாடத்திற்குப் பதில் “ஹரி ஓம் நாராயணாய நமஹ”! என்று படிக்கிறான் பிரஹலாதன். அவன் மற்ற மாணவர்களுக்கும் விஷ்ணுவின் மேன்மைகளை எடுத்துக் கூறுகிறான். சுக்கிராச்சாரியார் அவன் மீது கோபம் கொள்கிறார்.

களம் 2

காலம் : பகல்

இடம் : இரணியன் தர்பார்

பாத்திரங்கள் : இரணியன், பிரஹலாதன், அமைச்சர்கள்,

பிரதானிகள், காவலர்கள்.

(இரணியன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான். மற்றவர்கள் அவரவர் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்)

நிகழ்வு : இரணியன் தன்மகள் பிரஹலாதன் கல்வி அறிவைச் சோதிக்கிறான். ஆழமான கல்வி அறிவு பெற்றதைக் கண்டு மகிழ்கிறான். ஆனால் எல்லாம் தானே கற்றது என்றும் அந்தக் கடவுள் ஹரி ஓம் நாராயண நாமத்தின் மீது கொண்ட பக்தியால் விளைந்த பயன் என்றும் பிரஹலாதன் கூற, இரணியன் கோபம் கொண்டு தண்டனை தர முடிவு செய்து, தனது மகனை வெட்டிக் கண்டதுண்டமாக்கிப் பறவைகளுக்குப் போடப் பணிக்கிறான். தூயின் சோகத்தைப் போக்கி, தண்டனையை ஏற்கத் தயாராகிறான் பிரஹலாதன்.



களம் 3

காலம் : நடுப்பகல்

இடம் : கொலைக்களம்

பாத்திரங்கள் : பிரஹலாதன், கொலைஞர்கள்.

(இரணியன் உத்தரவுப்படி பிரஹலாதனைக் கொலை செய்யக் கூட்டிவந்த கொலைஞர்கள், பிரஹலாதனைக் கொலை செய்ய மனம் வராமல் தயங்கி நிற்கிறார்கள்)

களம் 4

காலம் : பிற்பகல்

இடம் : இரணியன் தர்பார்

பாத்திரங் : இரணியன், அமைச்சர்கள், பிரதானிகள்,

காவலர்கள், பிரஹலாதன், கொலைஞர்கள்.

(இரணியன் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்க, கொலைஞர்கள் ஓடிவருகிறார்கள்)

நிகழ்வு : பிரஹலாதன் அக்கினியில் தள்ளப்பட அக்கினி பகவான் தாங்கிப் பிடித்து வெளியில் அனுப்புகிறார்.

காட்சி 4

காலம் : நடுப்பகல்

இடம் : இரணியன் தர்பார்

பாத்திரங்கள் : இரணியன், அமைச்சர்கள், பிரதானிகள்,

தூதுவர்கள்எ பிரஹலாதன், காவலர்கள்.

(இரணியன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, தூதுவர்கள் வருகிறார்கள்)

நிகழ்வு : தூதுவர்கள் தீயில் தள்ளிவிட்டதாகச் சொன்ன பிரஹலாதன் உயிருடன் வந்து நிற்கிறான். தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் மனம் மாறும்படி வேண்டுகின்றனர். முடிவில் கோபம்கொண்ட இரணியன், பாம்பின் வி~த்தைக் கொடுத்துக் கொல்லும்படி ஆணையிடுகிறான்.

காட்சி 5

காலம் : பிற்பகல்

இடம் : அந்தப்பரம்

பாத்திரங்கள் : லீலாவதி, இரணியன், பிரஹலாதன்,

தூதுவர்

(லீலாவதி மஞ்சத்தில் உட்கார்ந்திருக்க, இரணியன் கையில் பாம்பு வி~;த்துடன் வருகிறான்)

நிகழ்வு : லீலாவதி, மகனை மன்னிக்கும்படி வேண்ட இரணியன் மறுத்து, உன் மகனுக்கு நீயே விஷம் தர வேண்டுமென ஆணையிடுகிறான். புரிதவிக்கும் அன்னையிடமிருந்து விஷ்த்தைப் பெற்று உயிர்விடத் தயாராகிறான் பிரஹலாதன், அன்னை லீலாவதி மூர்ச்சையாக, பிரஹலாதன் விஷ்த்தை பானஞ் செய்கிறான். நாராயணன் காப்பான் எனத் தாய்க்கு ஆறுதலும் கூறுகிறான்.

காட்சி 6

காலம் : மாலை

இடம் : இரணியன் தர்பார்

பாத்திரங்கள் : இரணியன், அமைச்சர்கள், பிரதானிகள்,

தூதுவர்கள், பிரஹலாதன்,

நரசிம்மவதாரம், மகாலட்சுமி, தேவர்கள்.

(இரணியன் சிம்மாசனத்தல் அமர்ந்திருக்க, பிரஹலாதன் வருகிறான்)

நிகழ்வு : பிரஹலாதன் உயிருடன் வர, இரணியன் கோபங் கொண்டு உனது அரி எங்கே இருக்கிறான் எனக் கேட்க, அரி எங்கேயும் இருப்பான் எனப் பதிலுரைக்கிறான் பிரஹலாதன். அப்படியானால் இந்தத் தூணிலிருப்பானா எனக் கேட்க, இருப்பான் என பிரஹலாதன் கூற, தூணை உடைக்கிறான் இரணியன். தூணிலிருந்து நரமிருகமாக விஷ்ணு தோன்றிட, இரணியன் அதைக் கொல்லத் தயாராகிறான். பிரஹலாதனுக்குச் செய்த துன்பங்களுக்காக உன்னைத் தண்டிக்கிறேன் எனக்கூறி இரணியனுடன் யுத்தம் செய்கிறது நரமிருகமாகிய நரசிம்ம அவதாரம். இரணியன் வயிற்றைக் கிழித்து ரத்தம் குடித்த நரசிம்மத்தை லட்சுமி சமாதானப்படுத்துகிறாள். தேவர்கள் தங்கள் பயத்தைக் கைவிடுகின்றனர். பிரஹலாதனுக்கு வேண்டிய வரம் தந்து மறைகின்றனர். பிரஹலாதன் முடி சூட்டிக்கொள்ள நாடகம் நிறைவு பெறுகிறது.

களம் நான்கில் ஒவ்வொரு காட்சியுமே நாடக முடிவான இரணியன் வீழ்ச்சியை நோக்கிய நகர்கின்றன. இரணியன் விதிக்கும் ஒவ்வொரு தண்டைனையும் பிரகலாதனிடம் செல்லுபடியாகாத நிலை. தோல்வி அடுத்தடுத்து நிகழ்வதாகக் காட்ட காட்சிகளம் சுருக்கமாக அமைக்கப்பட்டு மாறிக்கொண்டே வந்து இறுதிக் காட்சி பெரிதாக அமைக்கப்பொற்று நாடகம் நிறைவுபெறுகிறது. பிரஹலாதா நாடகம் குறித்த இந்த விரிவான விளக்கங்கள் சுவாமிகளின் நாடகக் கட்டமைப்பின் பொதுத் தன்மையைப் புரிந்துகொண்டே அவரது பிற நாடகங்களின் கட்டமைப்பையும் காட்சி நகர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்.






நாடகங்களின் சிறப்புயல்புகள்

பிரஹலாதன் நாடகத்தை விரிவாகவும் பிற நாடகங்களைச் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்தியதன் மூலம் சுவாமிகளை ஒரு சிறந்த நாடக ஆசிரியர் எனக் காட்டிவிட முடியாது. ஏனெனில் அவர் நாடகமாக்கிய கதைகள் அனைத்துமே ஏற்கனவே வழக்கில் - காப்பியத்தில் அல்லது புராணத்தில் இருந்த கதைகள். அவற்றை என்ன நோக்கிற்காக நாடகமாக்கினார் என்பதிலும், புராண, இதிகாச, காப்பிய, நாட்டார் கதைகளின் எந்தப் பகுதியை நாடகக் கட்டமைப்பிற்குப் பயன்படுத்தினார் என்பதிலுமே அவரது சிறப்புகள் உள்ளன.

சுவாமிகளின் நோக்கம் இராமாயணம், மகாபாரதம் அல்லது புராணங்கள் அல்லது காப்பியங்கள் தரும் பக்தியைப் பரப்பிடும் நோக்கம் கொண்டதல்ல, பாமர மக்களுக்குப் புரியும் வகையில் நாடக வடிவை அமைத்து, கருத்துகளைத் தரும் நோக்கமே அவருடைய முக்கிய நோக்கம் அதற்கேற்பவே எழுத்திலக்கிய கதைகளின் கூறுகளை எடுத்துக்கொண்டுள்ளார்.

எந்தவொரு காப்பியத்திலும் மையக் கதாபாத்திரத்தை மட்டுமே தலைமைக் கதாபாத்திரமாக ஆக்கவேண்டும் என்று நினைக்காமல், கிளைக்கதைகளில் காணப்படும் முரண் நிலைகளையே அவர் நாடியுள்ளார். இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களில் இராமன் எந்த நாடகத்திலும் மையக் கதாபாத்திரமாக இல்லை. அதற்கு மாறாக லவகுச, மயில், ராவணன், வாலி, அநுமன், பாதுகை, இறுதிப்போர் போன்றன மையக் கதாபாத்திரங்களாக ஆகியுள்ளன. இராமனை அவதார புருஷனாகக் காட்டும் நோக்கம் சுவாமிகளுக்கு முக்கியமாகப் படவில்லை என்பதை இதன் மூலம் உணரலாம்.

இதேபோல் மகாபாரத்திலிருந்து அவர் எடுதத கதைகளும் கூடக் கிளைக்கதைகள் தாம். வியாசர் எழுதிய பாரதக் கதையில் ஒரு சிறு குறிப்புகளாக மட்டுமே அல்லி, பவளக் கொடி, அபிமன்யூ போன்ற கதாபாததிரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவையெல்லாம் வாய்மொழி மரபில் தனித்த கதைகளாக மக்களிடம் பரவி, ஒவ்வொரு பிரதேசத்தோடும். இதிகாசக் கதையைத் தொடர்புபடுத்தும் இயல்புடையன. நாடக ஆசிரியரான சய்கரதாஸுக்கு இத்தகைய வாய்மொழி மரபுக் கதைகளே முக்கயமாகத் தோன்றியுள்ளன. நாடகக் கலை தரும் தர்க்கம் சார்;ந்த சுவையைப் பார்வையாளனுக்கு உண்டாக்க இவையெல்லாம் ஏற்ற கதைகள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சிலப்பதிகாரக் கதையை நாடகமாக்கும் போது கூடக் கண்ணகியின் பத்தினித் தன்மையைப் பேசவேண்டும் என்று அவர் நினைத்தவரல்ல, ஒரு பணக்காரவீட்டு வாலிபன் தனது பெண்ணாசையால் எப்படிச் செல்வங்களை இழந்தான் என்பதையே நாடகப் பொருளாக்கியுள்ளதைக் காணலாம். அதற்கு அவர் வைத்த பெயர்கூடக் ‘கோவலன் சரித்திரம் என்னும் கோவலன் செட்டி கதை’ என்பதே ஆகும்.

வட்டாரம், வாழ்க்கை நியதிகள் சார்ந்த, ஒழுக்கம் உணர்த்தும் கதைகளைப் புராணங்களிலிருந்து வாய்மொழி மரபுகளிலிருந்தும் எடுத்துக்கொண்ட சுவாமிகளின் கவனத்தைக் கவர்ந்தவர்களில் பெண் பாத்திரங்களே அதிகம் எனலாம்.

கிடைத்துள்ள நாடகங்களில் பெண்ணின் மேன்மையை அல்லது பெண்களை மையப்படுத்திய நாடகங்களே அதிகம் எனலாம். பெண்கள் படும் துயரங்கள், பாமர மக்களின் நாடக ஆர்வத்தைத் தூண்டும் சக்தி படைத்தவை என்பதை; சுவாமிகள் நன்கு அறிந்தவர் என்று கூறலாம். அவரது நாடகங்களில் சந்திரமதி, நர்மதா, அனுசுயா, ஞானசௌந்திரி, நல்லதங்காள், கண்ணகி, சீதை எனத் துயருள் வாடும் பல பெண் கதாபாத்திரங்களின் சோக உணர்வுகள் அதிகம் காணப்படுகின்றன. துன்பியல் நிகழ்வுகளே நாடகக் கட்டமைப்பிற்கு ஏற்றவை என்ற பொது விதி உலகம் முழுவதும் காணப்படும் ஒன்று என்பதை இங்கே நாம் நினைவுகூரலாம். அதேபோல், சுவாமிகளின் நாடகங்களில் திருமணம் சார்ந்த எதிர்நிலைகள் முக்கிய இடம்பெற்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆண்களை வெறுக்கும் பெண்கள், திருமணமே வேண்டாம் என்று நினைக்கும் பெண்கள், பெண் வாடையே ஆகாது என நினைக்கும் ஆண், வசப்படாத பெண்களைத் தன் வலைக்குள் வீழ்த்தும் ஆண் எனத் திருமணம் சார்ந்த எதிர்நிலைகள், ‘அல்லிராணி கதை’, ‘பவளக்கொடி’ஈ ‘சீமந்தனி’, ‘சித்தராங்கி விலாசம்’, ‘வள்ளித் திருமணம்’, ‘சுலோசனா சதி’ போன்ற நாடகங்களில் காணக் கிடைக்கின்றன. துன்பியலுக்கு அடிப்படையான சோகத்தைப் போலவே இன்பியலுக்கு அடிப்படையாக இந்தக் காதல் - காமம் - திருமணம் என்ற அம்சங்கள் உள்ளன எனலாம். சுவாமிகளின் நாடகங்கள் உலக நாடகக் கருப்பொருள்களான இன்பம், துன்பம் , நல்லொழுக்கம் கூறல், வாழ்க்கை நெறிமுறைகளை உணர்த்துதல் என்ற கருத்துகளைத் தாங்கி உலா வந்துள்ளன.

நாடக நுட்பங்கள்

ஒரு நாடக நிகழ்வு என்பது தரப்பட்ட மேடைப்பரப்பில் புனைவுவெளி, புனைவுக்காலம், புனைவுக் கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்கள் நம்பும்படியான கதையை நிகழ்த்துவதில் நிறைவு பெறுகிறது என்பர். இது நாடக நிகழ்வின் அடிப்படை அம்சமும் கூட, இந்த அடிப்படை அம்சத்தை முழுவதும் அறிந்தர் சுவாமிகள் என்பதற்கு அவரது நாடகப் பிரதிகள் சாட்சிகளாக உள்ளன. ஒவ்வொரு நாடகமும் களம் (Act) , காட்சி, (Scene) எனப் பிரிக்கப்பட்டு காலம், இடம், கதாபாத்திரங்கள் குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன. நான்கு களங்களைக் கொண்ட பிரஹலாதாவில் இவை எவ்வாறு இடம்பெற்றுளளன என்பது முன்னரே விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. இத்துடன் ஒவ்வொரு காட்சியின் தொடக்கமும் எவ்வாறு தொடங்கப்பட வேண்டும் என்ற குறிப்பும் தரப்பட்டுள்ளது. இந்தத் தொடக்க நிகழ்வு, அக்காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்களால் அடையும் மாற்றமே அடுத்த காட்சிக்கான நிகழ்வு என்பதும் நாடகாசிரியன் அறிந்திருக்க வேண்டிய இன்னொரு ஆதார விதியாகும்.

சுவாமிகளின் ஒவ்வொரு நாடகமும் பல்வேறு காட்சிகளாக விரிந்து, கதை நிகழ்வை முடிவுக்குக் கொண்டுவருகின்றன. “வெறும் கதை நிகழ்வுதான் நாடகம்” என்பது சுவாமிகளின் நம்பிக்கையா என்றால் அதையும் மீறி, அதில் வெளிப்படும் கருப்பொருளின் வெளிப்பாடே முக்கயம் என்று சுவாமிகள் கருதியதாகக் கூறலாம். இக்கூற்றிற்கு அரண் செய்வதாக அமைவன அவரது நாடகங்களில் அமைகின்ற முக்கியமான தர்க்க விவாத நிகழ்வுகளாகும். இத்தர்க்கங்கள் அல்லது விவாதங்கள் மூலம்தான், பொதுமக்களுக்கு – பார்வையாளர்களுக்குச் சொல்ல வேண்டிய – உணர்த்த விரும்பிய வாழ்க்கைப் பாடங்களைத் தருகிறார் சுவாமிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்