குறிப்பான வகை மாதிரி (Case study)ஆய்வுகளின் சிக்கல்கள்

 
ராஜன்குறை உள்ளிட்டவர்கள் மேற்கொண்டதாக ஜெயமோகன் மேற்கோள் காட்டும் அந்த ஆய்வு குறிப்பான வகை மாதிரி ஆய்வு. இவ்வகை ஆய்வுகள் எப்போதும் ஒற்றைப்பரப்பை அல்லது குழுவை அல்லது நிகழ்வை ஆய்வுப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அனைத்துத் தரவுகளையும் திரட்டி அந்த எல்லைக்குள்ளேயே நின்று முடிவுகளைத் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளக் கூடியன. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து இந்தியாவிலும்/ தமிழகத்திலும் ஏதாவதொரு கிராமத்தில் தங்கி ஆய்வுசெய்த அனைவரும் இவ்வகை ஆய்வுகளையே செய்து வழிகாட்டினர். அப்படிச் செய்யப்பட்ட ஆய்வுகள் இங்கே கொண்டாடப்பட்டன என்பதைக் கல்வியுலகம் அறியும். ஆனால் அவ்வகை ஆய்வுகளின் முடிவுகள் இந்தியப் பரப்பு முழுவதற்கும் - ஏன் தமிழகப்பரப்பு முழுவதற்கும்கூடப் பொருத்தமானவை அல்ல என்பதுதான் உண்மை. அமெரிக்கப் பல்கலைக்கழகச் சமூகவியல் துறையினரால் வடிவமைக்கப்பட்ட இந்த முறையியல் அதன் தொடக்க காலத்திலிருந்தே விமரிசனத்தைச் சந்தித்து வரும் ஒன்றாகும். மார்க்சியச் சமூகவியல் பார்வையை மறுக்கும் விதமாக முன்வைக்கப்பட்ட உதிரித்தனமான முறையியல் என்ற விமரிசனமும் அதன் மேல் உண்டு. ஆனால் இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் மார்க்சிய முறையியலை ஏற்காத கல்வியாளர்களே அதிகம் என்பதால் அமெரிக்கக் கல்வியுலகம் பின்பற்றிய இவ்வகை முறையியலே இங்கு செல்வாக்குப் பெற்றதாக இருந்தது; இருக்கிறது.

தமிழ்நாட்டில் செய்யப்பட்ட ரிச்சர்ட் ப்ராஸ்காவின் தெருக்கூத்து பற்றிய ஆய்வு அந்த ஊரைத் தாண்டி இன்னொரு ஊரின் தெருக்கூத்தைக் கவனத்தில் கொண்டதல்ல. வடமாவட்டங்களில் ஆடப்படும் கூத்துகளில் பல்வேறு வகைகளும் வேறுபாடுகளும் உள்ளன என்பதைக் கவனிக்காது செய்யப்பட்ட ஆய்வு அது. அவரைப்போலவே நாலைந்துபேர் தமிழ்நாட்டிற்கு வந்து வெவ்வேறு ஊர்களில் தங்கித் தெருக்கூத்தைப் பற்றி ஆய்வுசெய்து வெவ்வேறு பயன்பாட்டு முடிவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். தெருக்கூத்தைப் பற்றி மட்டுமல்ல; அண்ணன்மார்சுவாமிகள் கதை, மாரியம்மன், காளியம்மன், திரௌபதையம்மன், வில்லுப்பாட்டு, புரவி எடுப்பு போன்ற பல பொருண்மைகள் மேற்கத்திய ஆய்வாளர்களால் நேரடியாக ஆய்வுப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளன. அதேபோல் அவர்களின் நிதியுதவியோடும் பல நிகழ்கலைகள் குறித்தும், கிராமங்களில் நடக்கும் பண்பாட்டு நடவடிக்கைகள் பற்றியும் பொருளியல் மாற்றங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட வெளியைப் பரப்பாகத் தேர்வுசெய்து கொண்டு அதன் எல்லைக்குள்ளேயே முடிவுகளைத் தரும் தன்மையுடையன. ஒற்றைப்பரப்பிற்குப் பதிலாகப் பல்வேறு வெளிகளை ஆய்வுக்களன்களாகத் தெரிவுசெய்து ஒப்பீட்டு முறையில் விவாதித்தால் இந்த முடிவு மாறிவிடும். அத்தோடு ஒரு வெளியில் கிடைக்கும் முரண்பாட்டின் வெளிப்பாட்டைப் பற்றிய ஆய்வு முடிவுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றுக் காரணிகளைப் பற்றி அக்கறைப்படாமல் நிகழ்காலத்தை மட்டுமே பேசும்படி இந்தக் குறிப்பான வகைமாதிரி ஆய்வுகள் வடிவம் பெற்றுள்ளன. அதனைக் கேள்விக்குட்படுத்தாமல் செய்யப்படும் ஆய்வுகள் இந்திய சமூகமாற்றத்தில் எதிர்மறைச் சொல்லாடல்களையே முன்வைக்கும். Work, Caste and Competing Masculinities: Notes from a Tamil Village என்ற கட்டுரையும் அப்படித்தான் ஒரு சொல்லாடலை உருவாக்கித்தந்துள்ளது. https://www.jeyamohan.in/133952/
************ 
இக்கட்டுரையில் நேரடியாகப் பங்கெடுக்காது வழிகாட்டியவராகக் குறிப்பிடப்படும் பேரா. எம் எஸ் எஸ் பாண்டியன் அறியப்பட்ட திராவிட இயக்க ஆய்வாளர் என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் இருந்தபோது அம்பேத்கர் கேலிச்சித்திரம் பற்றிய - பாடத்திட்டத்தில் இடம்பெறுவதுபற்றிய கூட்டத்தில் பங்கெடுக்காமல் தவிர்த்தார் என்பதின் பேரில் அப்போதே விமரிசனங்கள் வைக்கப்பட்டன. ரவிக்குமார் அது குறித்து எழுதினார். நானும் கூட அதனைச் சுட்டிக்காட்டி அப்போதே எழுதினேன்.ஆம். அவர் எப்போதும் கறாரான திராவிட இயக்க ஆய்வாளராகவே இருந்தார். அந்தக் கட்டுரையின் பகுதி [https://ramasamywritings.blogspot.com/2012/08/blog-post_4.html?fbclid=IwAR3BhIdCDe6Cv1Nv-c8hq_Z7xyFTbyCGF66DvyMjNYKU7n-2C-vT-RTZBaM]
 ******** 

ஒரு பல்கலைக்கழக அளவில் கண்டனத்தை எழுப்பிய பாடத்திட்டத்தை மையப்படுத்திப் பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழுக்களின் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பொன்றைத் தவறவிட்ட பேராசிரியர் ஒருவரின் செயல்பாடு ஏற்புடையதுதானா என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம். இந்திய அளவிலான பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு கேலிச் சித்திரங்கள் கண்டனத்திற் குள்ளாக்கப்பட்டன என்பதை முதல் வரியாகக் குறிப்பிட்டே இக்கட்டுரை தொடங்கப்பட்டது. எதிர்ப்புகள் தமிழ் நாட்டிலிருந்தே எழுப்பப்பட்டன என்பதால் தமிழர்கள் நிச்சயம் அறிவார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அறிஞர் பி.ஆர். அம்பேத்கரை மையப்படுத்திய கேலிச் சித்திரம் சார்ந்த எதிர்ப்பை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராளுமன்றத்திலேயே எழுப்பினார்.
அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ள அம்பேத்கர் ஆமையின் மீது அமர்ந்து பயணம் செய்வதாகவும், அதன் வேகம் அவ்வளவு தான் என்று தெரியாமல் அதைச் சாட்டையால் அடித்துக் கொண்டிருப்பதாகவும் வரையப்பட்ட படத்தில், அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு இன்னொரு சாட்டையை வீசுகிறார் என்பதாகவும் வரையப்பட்டிருந்தது. அந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் அவர்காலத்தில் நிகழ்ந்த ஒன்றின் மீதான விமரிசனமாக அந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்துள்ளார். அதை அம்பேத்கரும் பார்த்திருக்கலாம்; நேருவும் கவனித்திருக்கலாம். இருவருமே அதை ஒரு கேலிச்சித்திரக்காரரின் விமரிசனம் என்ற அளவில் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒதுங்கியிருக்கலாம். ஆனால் இப்போது அக்கேலிச் சித்திரங்கள் பாடத் திட்டத்திற்குள் இடம்பெறும்போது அப்போது தந்த அர்த்தத்தையே தரும் எனச் சொல்ல முடியாது.  அதேபோல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கேலிச் சித்திரமும் அது வரையப்பெற்ற காலத்தின் அர்த்தத்தையே இப்போதும் தரும் எனக் கருத முடியாது. ஏனெனில், அரசியல் நிகழ்வுகள் சார்ந்த கேலிச்சித்திரங்களின் இடம் காலமுறை அடிப்படையில் வெளியாகும் பத்திரிகைகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பத்திரிகைகளில் அவை இடம்பெறும்போது உருவாகும் அர்த்தங்களும் விளைவுகளும் ஒருவிதமானவை. அதே அர்த்தங்களையும் விளைவுகளையுமே பாடப்புத்தகத்தின் பகுதியாக ஆகும்போதும் உருவாக்கும் எனச் சொல்ல முடியாது. நிகழ்காலத்தை மையப்படுத்திய கேலிச் சித்திரங்கள் சில பத்தாண்டுகளுக்குப் பின் – சில பல வரலாற்று நிகழ்வுகளைத் தாண்டிய பின் நேர்மறை விளைவுகளை உருவாக்குவதைப் போலவே எதிர்மறைவிளைவுகளையும் நிச்சயம் உருவாக்கவே செய்யும். அதைப் புரிந்து கொண்ட பின்பே பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்வதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். கேலிச் சித்திரங்களின் வழி விமரிசனப் பார்வையை உருவாக்க வேண்டும் என நினைத்த பாடத்திட்டக் குழுவினர் அப்படியெல்லாம் யோசித்தார்களா? என்ற ஐயத்தையே எழுந்துள்ள கண்டனங்களும் எதிர்ப்புகளும் உறுதி செய்கின்றன.

தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யாத பாடத்திட்டக் குழுவின் பொறுப்பின்மையைச் சீர் செய்ய வல்லுநர்குழுக்களை அமைப்பது நடைமுறைச் செயல்பாடு. (அதற்கு முன்னால் பாடத்திட்டக் குழுவில் இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கியம்) வல்லுநர் குழுக்கள் அமைக்கும் போது அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படும். அமைக்கப்பட்ட வல்லுநர் குழு என்னென்ன பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற வரையறைகளை உருவாக்கிக் கையளிப்பார்கள். கேலிச் சித்திரங்கள் சார்ந்த கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்த மைய அரசு கல்வியாளர் சுக்தேவ் தோரட் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவொன்றை அமைத்தது. அதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியனும் ஒரு உறுப்பினராக இருந்தார்.
தோரட் தலைமையிலான அந்த வல்லுநர் குழு இந்த இரண்டு கேலிச் சித்திரங்களை மட்டுமல்லாம் இன்னும் இருபது கேலிச்சித்திரங்களையும் நீக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்து அறிக்கையை அளித்துள்ளது. ஆனால் அக்குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் குழுவின் அறிக்கையோடு ஒத்துப் போகவில்லை என்று தனது விலகலைத் தெரிவித்துள்ளார். மாணாக்கர்களுக்கு விமரிசனப் பார்வையை உண்டாக்குவதற்கு இத்தகைய கேலிச் சித்திரங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறுவது பொருத்தமானது என நம்பும் பாண்டியன்,”கல்வியாளர்களின் பார்வைக்கே முக்கியத்துவம் தர வேண்டுமே ஒழிய கல்வித்துறைக்கு வெளியே இருக்கும் அரசியல்வாதிகள், தன்னார்வப் பணியாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என நான் கருதவில்லை எனக் காரணத்தைச் சொல்லியுள்ளார்.   அவரது விலகல் மனப்பாங்கின் பின்னணியில் கல்வியாளர்களின் சுதந்திரமும், கல்வித்துறையின் தனித் தன்மையும் காக்கப் பட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. பல்கலைக் கழகப் பேராசிரியன் என்ற நிலையில் நானும் கூட அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது.

இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் அரை நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பு போடப்பட்ட பாதையிலிருந்து கொஞ்சமும் விலகி விடாமல் பயணம் செய்யும் நிறுவனங்களாகப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன என்பதை அவை உருவாக்கும் பாடத்திட்டங்களே காட்டுகின்றன.  சுதந்திரத்துக்குப் பிந்திய மைய, மாநில அரசுகள் அவ்வப்போது உருவாக்கும் கல்விக்கான நிபுணர்கள் குழுக்கள் முன் வைக்கும் புதிய கல்விக் கொள்கைகள் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகப் பாவனை செய்யப்படுகின்றனவே ஒழிய முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அப்பாவனைகளும் கூட உள்ளடக்க மாற்றங்களாக இல்லாமல் பருவமுறைத் தேர்வு, உள்மதிப்பீட்டுத் தேர்வு, தெரிவுமுறைப் பாடமுறை, மதிப்பெண்களுக்குப் பதிலாக தகுதிநிலைக் குறியீட்டை வழங்குதல் போன்ற வடிவமாற்றங்களாகவே இருக்கின்றன. நிகழ்காலத்தேவைக்கான உள்ளடக்க மாற்றங்கள் எப்போதும் கவனப்படுத்தப்பட்டதே இல்லை.  அப்படிப் பின்பற்றப்பட்டிருந்தால் உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாகப் பல்கலைக்கழகக் கல்வி –குறிப்பாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களின் கல்வி - பின்னோக்கிய பயணத்திலேயே இருக்கின்றன.
அவற்றைப் புரிந்து கொண்ட மைய அரசு அவற்றைக் கைகழுவி விட்டு மையப் பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதையும், சிறப்புநிலை நிறுவனங்களை உருவாக்கித் தேவையான தகுதியாளர்களை உருவாக்குவதிலும் அக்கறை கொள்கிறது. அதன் வழி பெரும் பான்மையான மாணவர்களுக்குத் தரமற்ற கல்வியை வழங்கி விட்டுக் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தரமான கல்வியை வழங்கும் பழைய முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பெரும்பான்மை மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தப் போக்கை வரப்போகும் அந்நியப் பல்கலைக் கழகங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேகப்படுத்தப்போகின்றன. உயர்கல்வியில் நடக்கும் இத்தகைய போக்குக்குப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் மட்டுமே காரணம் எனச் சொல்ல முடியாது. ஆசிரியர்கள், அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஆட்சிமன்றக்குழுக்கள், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் சங்கங்கள் எனப் பலவும் காரணங்களாக இருக்கின்றன. அதைவிடவும் முக்கியக் காரணமாக இருப்பவர்கள் தங்களுக்கு எத்தகைய கல்வி வேண்டும் எனக் கேட்டுப் போராடாமல் இருக்கும் மாணவர்களே.
உயர்கல்வியை வியாபாரமாகக் கருதினால் கூட அதன் நுகர்வோர்களான மாணாக்கர்களுக்குத் தரமான பொருளை – பாடங்களை- பாடத்திட்டங் களைத் தர வேண்டும் என நினைத்திருப்போம். மாணாக்கர்களை மையப் படுத்தியதாக அமையாமல், ஆசிரியர்களை மையமிட்டே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் பாடஞ்சொல்வதற்குத் தோதான பாடங்களையே பாடத்திட்டக்குழுக்கள் பரிந்துரை செய்கின்றன. அப்படிப் பரிந்துரை செய்யும் விதமாகவே பாடத்திட்டக்குழுக்கள் உருவாக்கப் படுகின்றன. ”பணி மூப்பு அடிப்படை”யில் பாடத்திட்டக்குழுக்களில் இடம் பெற்று விடும் மூத்த பேராசிரியர்கள் எப்போதும் மாற்றங்களின் மீது ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியராக வந்த போது தாங்கள் தயாரித்த பாடங்களை ஓய்வு பெறும்வரை நடத்துவதன் மூலம் திருப்தியான மன நிறைவையும் பணிநிறைவையும் அடைவதாக நம்புகின்றனர்.  விதி விலக்குகள் எங்காவது இருக்கலாம். திரும்பவும் தோரட் குழுவுக்கு வருவோம்.
தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவின் கூட்டம் ஜூன் 11 முதல் 15 வரை நடந்துள்ளது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் அறிவுஜீவிகளும் பாடத்திட்ட வல்லுநர்களும் கொடுத்திருந்த பரிந்துரைகளைப் படித்து விட்டுக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐந்து நாட்கள் நடந்த குழுவின் கூட்டத்திற்குப் பின் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் மூன்றுபேர் தான் கையொப்பம் இட்டுள்ளனர். இரண்டுபேர் தொலை பேசியில் தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளனர். ஒருநாள் கூடக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அறிக்கையின் சாராம்சத்திலிருந்து நான் விலகி நிற்கிறேன் எனச் சுட்டிக்காட்டிக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.  இப்படிச் செய்வது கல்வியாளரின் பொறுப்பான செயல்தானா? என்ற கேள்வி எனக்கு எழுந்ததைப் போலவே பலருக்கும் எழும் என நினைக்கிறேன். .

மறு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள், குறிப்புகள், பாடங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுக் குழு எழுதும் அறிக்கையோடு உடன்படுகிறோம் எனச் சொல்ல முடியும் என்றால், எனக்கு இந்த அறிக்கையோடு உடன்பாடு இல்லையெனச் சொல்லவும் ஒருவருக்கு முடியும் என்ற வாதத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் ஜனநாயக அமைப்பில் உடன்படுகிற வர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வை விட எதிர்ப்பவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வு கூடுதலானது. எல்லாத் தரவுகளையும் வாசித்து விட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது நிலைபாட்டை எடுத்து வைத்திருக்க வேண்டும். தனது பொறுப்பான வாதத்தால் குழுவின் உறுப்பினர்களைத் தன்பக்கம் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ’மற்றவர்களைப் பற்றிக் கவலை இல்லை; எனது கருத்து இது’ எனச் சொல்வது ஜனநாயக நடைமுறையாக அமையாது. அப்படியான கருத்துக் கொண்டவர்கள் ஜனநாயகப் பாதையைக் கைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப்பாசிசத்தை நோக்கி நகரும் ஆபத்தில் பயணிப்பவர்களாக மாறி விடுவார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன 
*******************
இவ்வகை ஆய்வுகளுக்கு மட்டுமல்ல. இதுபோலவே கல்விப்புல ஆய்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஓர் அரசியல் நிகழ்தகவு உண்டு. அரசியல் சொல்லாடல்கள் எதுவும் இல்லாமல் மந்தைத் தனமாகத் துறைத்தலைவர்கள் வழங்கும் ஆய்வுத்தலைப்புகளை ஏற்றுச் செய்யப்படும் ஆய்வுகளே கூட அரசியல் நிகழ்தகவுகள் கொண்டவைதான். அவை ற்படுத்திய பாதிப்புகள் பற்றிப் பல விமரிசனங்கள் உண்டு. மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் ஒரு கிளையாக நாட்டுப்புறவியல் உருவெடுத்தபோது ஆய்வாளர்கள் சார்ந்த சாதிகளின் திருமணச் சடங்குகளும் வழிபாட்டுச் சடங்குகளும் தொகுத்தளிக்கப்படுவதையே தலைப்பாக்கி ஆய்வுசெய்யும்படி வலியுறுத்தப்பட்டனர். அதில் உடன்பாடில்லாத ஒன்றிரண்டு பேர்களும் அவர்களின் சாதிகள் அல்லாத வேறொரு குழுவின் இனவரைவியல் தரவுகளையே தொகுத்துத் தந்து எம்.பில் பட்டங்களைப் பெற்றார்கள். இவ்வகை ஆய்வுகளில் பெரும்பாலும் குறிப்புவகை ஆய்வு ( Case Studies) களின் தரவு சேகரிப்பு முறைகளும் அணுகுமுறைகளும் தான் பயன்படுத்தப்படும். சொந்தசாதிகளை ஆய்வுப்பொருளாக்கும் மனிதர்கள் அவற்றிற்கெதிராகப் பேசுவார்கள் என்பது மிகக்குறைவு. சாதி, வர்க்கம், இனம் போன்றவற்றின் அரசியல் நிகழ்தகவுகளைச் சரியாக விளங்கிக் கொள்ளாத பெரும்பாலான ஆய்வாளர்கள் அவரவர் சாதிகளின் பெருமைகளையே தொகுத்தளித்தார்கள். *************** 
இவையெல்லாம் கடந்த காலங்கள். நிகழ்காலத்தில் ஒருவர் என்னவாக இருக்கிறார். எவ்வகை ஆய்வுகளை மேற்கொள்கிறார். எதன் மீது எதிர்நிலைப்பாடு எடுக்கிறார்; எவ்வகைக் கருத்தியலை ஆதரிக்கிறார்; எவ்வகைச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறார் என்பதையே கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்