பேரங்காடிகளும் சிற்றங்காடிகளும்


இந்திய நகரங்கள் பலவற்றில் இன்றும் கூட வீட்டுக்குப் பக்கமாக வரும் தள்ளுவண்டிகளையும்  பழவண்டிகளையும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் தான் அதிகம். கோவை மாநகரத்தில் நான்கு தளக்கட்டடத்தில் குடியிருக்கும் எங்களுக்குத் தேவையான கீரை வகைகளையும் காய்கறிகளையும் வாரம் ஒருமுறை கொண்டுவரும் காய்கறி வண்டி ஒருமணி நேரம் நின்று விற்பனை செய்துவிட்டுத்தான் போகும்.   எனது பாண்டிச்சேரி வாழ்க்கையிலும் நெல்லை, மதுரை வாழ்க்கையிலும் பலசரக்குச் சாமான்களுக்கு மட்டுமே அங்காடிகள் செல்லும் வழக்கம் இருந்தது.  வீடுதேடி வரும் மீன்காரர்களிடம் வாங்கும் மீன்கள் பழைய மீன்களாக இருக்குமோ என்று அச்சமில்லாமல் வாங்கலாம். மீன் சந்தையில் விற்கும் மீன்கள் குளிர்சாதனப் பெட்டிகள் வைத்து எடுக்கும் வசதிகளோடு இருக்கும். ஆனால் மிதிவண்டியிலும் இருசக்கர வாகனத்திலும் வருபவர்கள் அன்றாடம் வாங்கி விற்பனை செய்பவர்கள்.  மேற்கு நாடுகளில் வீடு தேடிவரும் அங்காடிகள் என்ற எண்ணமே இல்லை, ஒவ்வொன்றுக்கும் தரம், பாதுகாப்பு ரசீதுபோடுதல் என்பது முக்கியம் என்பதால் அங்காடிகளுக்குப் போய் பொருட்கள் வாங்குவதே நடக்கிறது 

அமெரிக்காவிலும் கனடாவிலும் அரிசிக்குத் தட்டுப்பாடு என்று கேள்விப்பட்டு அங்கிருக்கும் இந்தியக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால் அரிசிக்குப் பெரிதாகத் தட்டுப்பாடில்லை. சோனாகஞ்ச் எனப் பொதுவாகச் சொல்லப்படும் இந்தியப் புழுங்கல் அரிசியும், இட்டிலி மாவு அரைக்கப் பயன்படும் மோட்டாரக அரிசியும் அன்றே தீர்ந்துவிட்டன. ஆனால் இந்தியப் பாசுமதி அரிசி எல்லாக்கடைகளிலும் இருக்கின்றன. இதுவல்லாமல் பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து வரும் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை. ரகங்கள் வரவில்லை.

உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் காஸ்ட்கோ, குரோகர், வால்மார்ட், கனடியன் லிவ்விங் மார்ட்  போன்ற கடைகளில் தானியங்கள், பருப்பு வகைகளைவிடப் பதப்படுத்தப்பெற்ற உணவுப்பண்டங்களே அதிகமும் வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன. சமைப்பதற்கு முந்திய நிலையில் வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தைவிட பாதி வெந்த நிலையில் இருக்கும் பண்டங்களை அதிகம் வாங்கிப்போகிறார்கள். ரொட்டிகள், பீட்சா, கேக் போன்றவற்றையும் முட்டை, இறைச்சி போன்றனவும் அதிகம் வாங்கும் பொருட்களாக இருக்கின்றன. அங்காடிகளிலிருந்து வாங்கிவந்து குளிர்மைப்பெட்டிகளில் திரும்பவும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு வாரக்கணக்கில் பயன்படுத்துகிறார்கள்.

பாதி வெந்த நிலையிலிருக்கும் இறைச்சிகளும் முழுமையாகத் துண்டுபோடப்பட்ட இறைச்சிகளும் நேரடியாக சமைக்கும் நிலையில் கிடைக்கின்றன. மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, வாத்து இறைச்சி போன்றன எலும்பு நீக்கப்பட்டும், எலும்போடும் கிடைக்கின்றது, மீன்கறியும் முள் நீக்கப்பட்டே விற்பனையாகின்றன,
 திரவ உணவுப்பொருட்களில் பால், தயிர், பழரசங்கள்,  மதுபானங்கள் ஆகியனவற்றோடு தண்ணீரும் வாங்கும் பொருட்களின் பட்டியலில் இருக்கிறது.
******
கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்தபோது பெரும்பாலான உணவுப் பொருட்களை காஸ்கோ,  குரோகர் போன்ற பேரங்காடிகளில் தான் மருமகனும் மகளும் வாங்கினார்கள். ஆனால் இந்தியக் காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றோடு சாப்பாட்டு அரிசியும் இட்லி அரிசியும் வாங்குவதற்கு ’இந்தியக் கடை’ என அழைக்கப்படும் கடையையைத் தேடியே போனார்கள். 
டல்லாஸ் நகரில் இந்தியர்கள் அதிகம் இருக்கும் கோப்பல் என்னும் பகுதியில் இருக்கும்  அந்தக் கடை, கோவையில் இருக்கும் பழமுதிர்ச்சோலை என்னும் பேரங்காடியைப் போல ஒரு பேரங்காடியாகவே இருந்தது. அதன் உரிமையாளர் குஜராத்தி. அமெரிக்க நகரங்கள் பலவற்றிலும் குஜராத்திப் படேல்களே இந்தியப் பேரங்காடிகளையும் சிற்றங்காடிகளையும் நடத்துகிறார்கள். கூட்டம் அலைமோதுவதை அறிந்து உடனே கைவசம் இருக்கும் அரிசியைப் பதுக்கிவிட்டார்கள் என்றும் ஐந்து கிலோ அரிசிப் பொதியின் மீது 10 டாலர் விலை அதிகமாக்கி விற்கின்றார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள்.

கனடாவிற்கு நாங்கள் போனதால் தட்டுப்பாடு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் மகன் அரிசிப்பொதியை வாங்கி வந்திருந்தார். இப்போதைக்குப் பிரச்சினை இல்லை என்று சொன்னார். என்றாலும் கனடாவில் இருக்கும் அந்தக் கடை குஜராத்திகள் நடத்தவில்ல; இலங்கைத் தமிழர்கள் நடத்துகிறார்கள் என்றார். அதனால் போய்ப் பார்க்கலாம் என்று  போனேன். அங்கிருக்கும் எல்லாப் பொருட்களிலும் தமிழிலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. இலங்கையின் வன்னி அரிசி செம்மை வண்ணத்தில் இருந்தது. பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கத்தரிக்காய் எனத் தமிழ்நாட்டு காய்கறிகளும் அப்பளம், வடாம், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என எல்லாம் அடுக்கப்பட்டிருந்தன,

அடையார் ஆனந்தபவன் இனிப்புகளும் காரங்களும் கூட இருந்தன. இந்தியப்பெருங்கடலிலும் அரபிக்கடலிலும் பிடிக்கப்பட்ட மீன்கள் பனிக்கட்டிக்குள் பத்திரமாக இருந்தன. அங்கும் இந்தியாவிலிருந்து வரும் பொன்னிரக அரிசியும் இட்லி அரிசியும் இருப்பில் இல்லை என்றே சொன்னார். அங்கிருந்த இளைஞரிடம் கேட்டபோது யாழ்ப்பாணத்து நல்லூர் சொந்த ஊர் என்றார். நான் நல்லூருக்கு வந்திருக்கிறேன் என்றேன். அவரோ, எனக்குப் பெயர் மட்டும்தான் தெரியும் அங்கு போனதே இல்லை என்றார். கனடாவில் இருக்கும் இந்தியத்தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உணவுப்பண்டங்களை வழங்கும் அங்காடிகளுக்குப் பெயர் இந்தியக் கடைகள் அல்ல.. இலங்கை, இந்தியா, தென்னாசியக் காரர்களுக்கு மட்டுமல்லாமல் கனடியர்களுக்கும் காரம் மசாலா, காய்கறிகள் தரும் கடை என்று பெயர். கனடாவின் பல நகரங்களிலும் இந்தக் கடைகள் இருக்கின்றன. அங்காங்கே இருக்கும் பரோட்டாக்கடைகள் கொத்துரொட்டிக்கடைகள் என்று பெயரிட்டுக்கொண்டுள்ளன.



சிற்றங்காடி வளாகங்கள்-

கனடாவில் ஒருமாதம் இருந்துவிட்டுத் திரும்பியபின் அந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிகின்றது. அமெரிக்காவை அப்படியே பின்பற்றும் நாடாக இல்லை கனடா. பல்லடுக்குப் பேரங்காடிகள் கனடாவின் பெருநகரங்களான ஒட்டாவா, டொரண்டோ, மாண்ட்ரியால் போன்றவற்றில் இருக்கின்றன. அதே நேரம் கனடாவின் சிறுநகர்களில் அவை இல்லை. அதற்குப் பதிலாக ஒரே தளத்தைக் கொண்ட சிற்றங்காடி வளாகங்களே இருக்கின்றன. சிறுநகரங்களைப் போலவே பெருநகரின் புறநகர்ப் பகுதிகளிலும் சிற்றங்காடி வளாகங்கள் தவறாமல் இருக்கின்றன.

பெரும்பாலும் தரத்தளக்கடைகளாக இருக்கும் சிற்றங்காடி வளாகங்கள் ‘ப’ எழுத்து வடிவத்தில் மூன்று பக்கங்களைக் கொண்டனவாக இருக்கின்றன. அல்லது ‘ட’ எழுத்தைப்போல இரண்டு பக்கங்களில் வரிசையாக நிற்கின்றன. 300 சதுர அடி முதல் 500 சதுர அடி வரை இருக்கும் கடைகளின் தொகுதியாக இருக்கின்றன. 10 முதல் 20 கடைகள் கொண்ட வளாகங்களுக்குள் வாகனங்கள் உள்ளே நுழைந்து வெளியேறும் விதமான கட்டமைப்புகள் கட்டாயம்.

இவ்வகைச் சிற்றங்காடிகளில் அடிப்படைத் தேவைகளான உணவுக்கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து உண்ணும் வசதிகள் குறைவு. பெரும்பாலும் முன்பதிவு செய்தோ, வாசலில் இருக்கும் பதிவு எந்திரத்திலோ பதிவு செய்து வந்து வாங்கிச் செல்கிறார்கள். அதேபோல் மருந்துக்கடைகள் தவறாமல் இருக்கின்றன. ஏதாவது ஒரு மருத்துவரின் பார்வைக்கூடமும் ஆலோசனை நிலையமும் இருக்கின்றன. ஒவ்வொரு உடல் அலங்காரக் கூடங்கள் - குறிப்பாகச் சிகை அலங்காரமும் நகப்பூச்சு அலங்காரம் போன்றன தனித்தனியாக இருக்கின்றன. அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அளிக்கவேண்டிய ரசீதுகள், பணங்கட்டுதல், வரிகட்டுதல் போன்றவற்றைச் செய்து தரும் சேவை அலுவலகங்களும் இருக்கின்றன. சிறார்களும் இளையோரும் விளையாடும் காட்சிக்கூட விளையாட்டுகளான வீடியோ விளையாட்டுகளைத் தரும் கூடங்களும் சிற்றங்காடிகளில் இடம்பெற்றுள்ளன. தவறாமல் ஒரு பேக்கரியும் சமையல் கூடச் சரக்குகளான மசாலா, காய்கறிகள், மீன்கள், இறைச்சிக்கூடங்கள் எனச் சில்லறை விற்பனையகங்களும் சிற்றங்காடி வளாகங்களில் இருக்கின்றன. ஒரு கூடத்தில் மதுவகைகள் விற்கப்படுவதுண்டு. வாகனங்களுக்கு எரிபொருள் நிரம்பும் சிறிய கடைகளும் உள்ளன.

மாணவர்களுக்குரிய தாள்கள், பேனாக்கள், பள்ளிப்பொருட்கள் வழங்கும் கடைகளில் நகலெடுத்தல் அச்சிடுதல் போன்ற வசதிகள் இருக்கின்றன. ஏறத்தாழ நம்மூரில் இருக்கும் ‘ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்’கள் அவை. ஆனால் சாலையின் ஓரத்தில் வரிசையாக இல்லாமல் தனி வளாகமாக ஒதுங்கியிருக்கின்றன. வாகன நிறுத்தம், கழிப்பறை வசதி போன்றன இல்லாமல் இவ்வகை வளாகங்கள் இருப்பதில்லை. இவ்வகை வளாகங்கள் அமைப்பதற்கான இடத்தை நகர நிர்வாகம் ஒதுக்கித் தந்துள்ளது. அதுவே கட்டி வாடகைக்கும் விட்டுள்ளது. இவ்வகைச் சிற்றங்காடி வளாகங்களைப் போலந்திலும் பார்த்துள்ளேன். போலந்தில் மட்டுமல்லாமல் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் இவ்வகைச் சிற்றங்காடிகள் இன்னும் இருக்கின்றன.

டொரண்டோவில் இவ்வகைச் சிற்றங்காடிகளை உருவாக்கியுள்ள ஈழத்தமிழர்கள் முதலாளிகளாகவும் பணியாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அதிகம் இருக்கும் ஸ்கார்புரோவில் உள்ள சிற்றங்காடி வளாகங்கள் பலவற்றிலும் பல்லின, பல்தேச அடையாளங்களோடு பணியாளர்களும் கடைகளும் உள்ளன. அங்கிருந்த ஒரு வளாகத்தில் ”எல்லாம் ஒரே இடத்தில்” என்பதுபோல ஒரு உணவு வளாகத்தைப் பார்த்தேன். அங்கிருக்கும் சமையல் கூடங்களில் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க வாசனைகள் கொண்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கண்டங்களுக்குள்ளும் தனிச்சுவைகொண்ட இட்டாலியன், அரேபியன், பிரெஞ்சியன், ஜெர்மானியன், சைனிஷ், கொரியன், மெக்ஸிகன், இந்தியன், இலங்கைக்குள் கொழும்புச் சுவை, யாழ்ப்பாணச்சுவை என எல்லாம் கிடைக்கின்றன. கனடாவின் வணிகப்பண்பாட்டில் சிற்றங்காடிப் பண்பாடும் விவசாயப் பொருட்களை நேரடியாகக் கொண்டுவந்து விற்கும் அங்காடிகளும் முக்கிய அடையாளமாக இருக்கின்றன.

இப்படியான சிற்றங்காடி வளாகங்கள் அமெரிக்கப் பெருநகரங்களின் புறநகர்களில் இல்லை. அமெரிக்காவில் சிறுநகரங்களே குறைவாக இருக்கின்றன. அங்கிருக்கும் நகரங்கள் ஒவ்வொன்றும் பெருநகரங்கள் தான். பெருநகரங்களின் வணிக வளாகங்கள் ஒவ்வொன்றும் ஆகப்பெரும் வளாகங்களாகவே இருக்கின்றன. சில ஆயிரம் சதுர அடி கொண்ட கடைகளின் தொகுதியான ‘ மால்’ களே அமெரிக்கர்களின் விருப்பமாக இருக்கின்றன. அதன் வணிகப்பண்பாட்டைப் பெரும்பேரங்காடிப் பண்பாடாகவே சொல்லலாம். சில ஆயிரம் கார்கள் நிறுத்தக்கூடிய பல்லடுக்குக் கார் நிறுத்தவளாகத்தோடு விரிகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்