மத்தகம்: தொழில்முறைத் திறன்களின் வெளிப்பாடு


காண்பிய வரிசைத்தொடராக (டெலி சீரியல்) ஹாட்ஸ்டாரில் வந்துள்ள மத்தகம் முதல் பாதியை இரண்டு தவணைகளில் பார்த்து முடித்தேன். மூன்றுமணி நேரம் ஓடும் சினிமாவில் இடைவேளை முடிந்தவுடன் திரும்பவும் அரங்கத்தில் நமக்கான இருக்கையில் அமரவேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் நேற்றும் இன்றுமாகப் பார்க்கமுடிந்தது. ஐந்து பகுதிகள் பார்த்து முடித்தபின்னும் பாதிதான் முடிந்துள்ளது என்பதுபோல நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு பாதி சில காலம் கழித்து வரக்கூடும்.
40 நிமிடங்கள் ஓடும் தொகுப்புகளாக எடுப்பதற்கான திரைக்கதை ஆக்க முறைமை ஒன்றை இவ்வகைப் படங்களின் இயக்குநர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு முன்னோட்டம், பிறகு எழுத்துவரிசை தொடர்ந்து காட்சிகளின் அடுக்குகளின் நகர்வு என்பதாக அமையும் முறைமை அது. திட்டவட்டமாக எழுதிக்கொண்டு படப்பிடிப்பை நடத்துகிற தொழில் முறைத் தன்மை இதற்குத் தேவை. மத்தகம் அப்படியொரு தொழில்முறைத் தன்மையின் தேர்ச்சியோடு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் திரைக்கதை வடிவத்தில் தேர்ச்சியுள்ள ஒருவரின் கைவண்ணம் ஆறு பகுதிகளிலும் வெளிப்பட்டுள்ளது. எழுதப்பட்ட திரைக்கதையின் ஆற்றுகைப்பிரதியில் (டைரக்டோரியல் ஸ்கிரிப்ட்) வரைகலைப் படங்களை உருவாக்கிக் கொண்டு படம் பிடித்திருப்பார்கள் என்று தோன்றுமளவுக்கு இயக்குநரின் திறன் கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது. காட்சிகளின் கோணமும், நடிகர்களின் முகபாவத்தைக் கொண்டுவருவதற்கான அண்மைக்காட்சிகளும் தூரக் காட்சிகளும் என திரைப்பட மொழியின் வெளிப்பாடும் பார்வையாளர்களிடம் விலகலை ஏற்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளன.

காட்சிகளின் அளவு, அதற்குள் வெட்டப்பட்ட துணுக்கு, துணுக்குகளின் அடுக்குவரிசை, எதிரெதிராக நிறுத்திக் காட்டி நகர்த்துதல் என படத்தொகுப்பும், அதற்கேற்ற பின்னணி இசை என ஒவ்வொன்றிலும் சிறப்பான படமாக்கம் வெளிப்பட்டுள்ளது. அதிகமான எண்ணிக்கையில் பாத்திரங்கள் இருப்பதால், ஒவ்வொரு தொகுப்பிலும் ஒருவகைக் குற்றப்பாத்திரத்தைப் பின்னணிக்குரலால் விவரித்து அவர்களை விரட்டித் தேடும் காவல் துறையின் நகர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தரும்போது குழப்பம் உண்டாகாது என்று நினைத்திருக்கிறார்கள். அது ஓரளவு தான் பலனித்துள்ளது. அத்தோடு வெவ்வேறு வகையான குற்றச்செயல் மனிதர்கள் என்ற தகவலே படத்தைப் பார்ப்பதற்குப் போதும் என்பதால் அவர்களின் பின்னணிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் தேவையும் ஏற்படுவதில்லை

பெரிய அளவிலான பொருளாதாரக்குற்றச்செயல்களுக்குப் பின்னால் எல்லாவகையான குற்றச்செயல் பின்னணி கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளது படம். சாதியப்பின்னணி கொண்ட அரசியல்வாதியின் அதிகார ஊடுருவலை நினைவூட்டியுள்ளது, சென்னை போன்ற பெருநகரங்களில் நுழையும் பெருமுதலாளிகள் தொழில் வளர்ச்சிக்குக் குற்றப்பின்னணிச் செயல் ஏற்படுத்தும் நெருக்கடி பேசப்பட்டுள்ளது. ஒரு பிறந்த நாள் கொண்டாட்டக்கூடுகை என்னும் மையத்தில் இணையும் குற்றவாளிகளின் வலைப்பின்னலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்போகும் காவல் துறையின் நகர்வுகளே மொத்தத் தொடரின் தொகுதிகள். 

குற்றச்செயலின் வெளியாக சென்னை மாநகரமும் அவர்களை விரட்டிப் பிடிக்கத் தயாராகும் பொறுப்பான இளம் காவல் துறை அதிகாரி நேரடியாக சென்னை நகர காவல் துறை ஆணையரிடம் உத்தரவு பெறும் வகையில் இருப்பவர் என்பதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் குற்றச்செயலில் ஈடுபடுகின்றவர்களின் பின்னணிக் கதைகளில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் மாவட்டங்களும் சொல்லப்படுகின்றன. பொதுவாக நேர்மையான காவல் துறை அதிகாரிகள் தட்டையான பாத்திரங்களாகவே உருவாக்கப்படுவார்கள். அபூர்வாவும் அப்படியொரு பாத்திரத்தில் வருகிறார். ஆனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே இருக்கும் விலகலின் பின்னணியைச் சின்னச்சின்னக் காட்சிகளில் காட்டிக் கடைசியில் அதற்கான வெளிப்பாட்டைத் துறைசார்ந்த நடவடிக்கையில் காட்டும் பரிவோடு இணைத்திருப்பதும், ஆணையர் பாத்திரத்தின் மனமாற்றங்களும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன.

ஆணையராக நடித்துள்ளவரும் அவரது கணவராக வரும் கௌதம் வாசுதேவனின் அலுவலகக் காட்சிகளைவிட வீட்டில் இருக்கும் காட்சிகளின் உருவாக்கம் மாறுபட்டவை. மனைவியோடு அந்நியோன்யம் காட்டும் உறவுநிலையைக் கொண்டுவந்துள்ளனர். குற்றவாளிகளைப் பெரும்பாலும் அடிதடி, வெட்டுக்குத்து எனத் தனியாகவே காட்டும் சினிமாக்களுக்கு மாறாக அவர்களின் குடும்பம், பிள்ளைப்பாசம், காதல் போன்ற பின்னணிகளோடு கொடுத்திருப்பதும் வேறுபாடு. குறிப்பாகப் படாளம் சேகர் என்ற பாத்திர உருவாக்கமும் அவரது காதல் மனைவியோடு இருக்கும் உறவும் அந்தப் பாத்திரத்தை வழக்கமான குற்றக்கும்பல் தலைவன் என்ற நிலையிலிருந்து விலக்கிவைக்கிறது. அதற்கு மணிகண்டனின் சிறப்பான உடல் மொழியும் குரலிணைவுகளும் காரணங்களாக இருக்கின்றன.

குற்றச் செயல் – நடக்கப்போகும் முன் அறிதல், தடுக்கும் விதமான தேடுதல் என்ற அளவில் தொடர் முடிந்துள்ளது. அடுத்து வரும் பகுதியில் பிடிபட்டார்களா? தப்பித்தார்களா? சேதாரங்கள் என்ன? வெற்றி யாருக்கு என்பதாக அமையும். பொதுவாக க்குற்றம் கடியும் சினிமாக்களில் காவல் துறையே வெல்லும் என்பதாகக் காட்டுவது மரபு. மத்தகத்தின் இயக்குநர் பிரசாத் முருகேசன் எப்படி முடிப்பார் என்பதற்குக் காத்திருக்கவேண்டும்.

*******
மத்தகம் தொடரின் பகுதிகளைத் தமிழில்   நான் பார்த்தேன். இதுபோலத்    தொடர்களைப் பார்க்கவிரும்பினால் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் கொட்டிக்கிடக்கின்றன, இவ்வகைத் தொடரில் இருக்கும் பல வகையான முடிச்சுகளும் திறப்புகளும் நடிகர்களின் சிறப்பான அசைவுகளும், காட்சிகளில் இடம்பெறும் வெளிகளும் புதியனவாக இருப்பதால் பலரும் தொடர்ந்து பார்க்கின்றன. மேற்கத்திய தொலைக்காட்சிகள் நேரடியாகத் தயாரிக்கும் தொடர்களும்சரி, அமெசான் பிரைம், நெட்பிளக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற காட்சி ஊடகக் குழுமங்களின் தயாரிப்பாக வரும் தொடர்களும் சரி பல்வேறு வகைக் குற்றப்புலனாய்வுக் கதைகளையும் ஆவிகள், பில்லி சூனியம் போன்ற திகிலூட்டும் நிகழ்வுகள் சார்ந்த கதைக்களன்களையே தேர்வு செய்கின்றன.
 
மேற்குலக வணிக சினிமாவின் கச்சாப்பொருட்களான இவ்வகை உரிப்பொருள்கள் பொழுதுபோக்கை விரும்பும் சினிமாவின் தேவைக்கானவை. அவற்றின் சாயலில் தமிழ்/இந்தியப் பார்வையாளர்களுக்கும் இப்போது கிடைக்கத் தொடங்கியுள்ளன. இவ்வகைத் தொடர்கள் பார்வையாளர்களுக்குத் தரும் காட்சி இன்பம் வித்தியாசங்களால் ஆனது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அவர்களைச் சுற்றி இருக்கும் உலகம் குற்றச்செயல்கள் நிரம்பிய உலகம் என்ற எண்ணத்தைத் தொடர்ச்சியாக உண்டாக்கும் போது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்பதை மறுக்கமுடியாது. குடும்பத்தகராறுகள், சாதித்தகராறுகள் காரணமாக இடம்பெயர்ந்து வந்தவர்களின் தொகையாக இப்படம் காட்டியுள்ளது. இவ்வகைக் குற்றப் பின்னணிக் கதாபாத்திரங்களின் உடல்மொழி, உடைகள், உணவுப் பழக்கவழக்கம் போன்றனவற்றில் ஏற்கெனவே தமிழ்ச் சினிமா உருவாக்கிவைத்துள்ள சமூக அடுக்குகள் மீதான பார்வையை இவை மறு உருவாக்கம் செய்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

தொடரில் அதர்வா, மணிகண்டன், இளவரசு, கௌதம் வாசுதேவமேனன், விஜய் டிவி திவ்யதர்சினி போன்ற தெரிந்த முகங்கள் இருக்கிறார்கள். அவர்களோடு சினிமாவில் சின்னச்சின்னப் பாத்திரங்களில் வந்தவர்களுக்கும் கவனிக்கத்தக்க வகையில் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான கதாபாத்திரங்களைக் கொண்ட இவ்வகைத் தொடர்கள் வரும்போது அதிகமான நடிப்புக்கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இத்தொடரில் புதிதாக வாய்ப்புப்பெற்றுள்ள பல புதுமுகங்களைப் பார்க்கமுடிகிறது. இவ்வகைத் தயாரிப்புகளில் பங்கேற்க நடிப்புப் பள்ளிகளில் பயிற்சி பெற்றுவரும் நடிப்புக்கலைஞர்கள் பொருத்தமாக இருப்பார்கள். அதேபோல் பின்னணியில் வேலை செய்யும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் படப்பிடிப்புக்குழுவினருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கித் தரும். சில நூறு கோடிகள் முதலீட்டில் தயாரிக்கப்படும் தமிழ்ச் சினிமாவினால் உருவாகி வளரும் உச்சநட்சத்திரப்போட்டி, நாயகப்பிம்ப உருவாக்கம், அரசியல் ஆசை, ரசிகர் மன்ற நடவடிக்கைகள் போன்றனவற்றில் உடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகளை இவ்வகைத் தொடர்கள் கொண்டிருக்கின்றன என்பதையும் நேர்மறைச் சுட்டாகச் சொல்லத் தோன்றுகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்