பரப்பிக் கிடக்கும் நூலகங்கள்


என்னைப்போலவே ஊர் சுற்றுவதில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் ‘ ஒரு ஊருக்குப் போய்த் தங்கவேண்டுமென்றால், முதலில் சென்று சில மணி நேரங்களை அருங்காட்சியகங்களில் செலவழிக்க வேண்டும்’ என்பார். ஆனால் நான் புதிய இடம் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேல் தங்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் திரை அரங்குகள் எங்கே இருக்கிறது? எனக் கேட்டுக்கொள்வதைப் போலவே, பத்திரிகைகள் விற்கும் கடை எங்கே இருக்கிறது? என்று தெரிந்துகொள்வேன். அதேபோல் பொது நூலகம் எங்குள்ளது என்றும் கேட்டுக்கொள்வது வழக்கம்.
எனது பல பயணங்கள் கல்விப்புலம் சார்ந்தன என்பதால் அந்தந்த வளாகங்களில் நூலகங்கள் இருக்கும். இப்போது நான் செல்லும் பயணங்கள் கல்விப்புலம் சாராத பயணங்கள் என்பதால் அதைக்கேட்டுக்கொள்ள நினைப்பேன். ஆனால் அதைக் கேட்டுக்கொள்வதற்கு முன்பே எனது பேரன்கள் அவர்களின் நூலகங்கள் பற்றிச் சொல்லிவிடுகிறார்கள். சிறுவயது முதலே அவர்களோடு நூலகங்கள் பற்றி உரையாடியதின் விளைவு அது. அமெரிக்காவிலும் கனடாவிலும் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில் சிறியதும் பெரியதுமான நூலகங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பயணத்தின் மூன்றாவது நாளில் போனது டல்லாஸ் நகரத்து வட்டார நூலகம்.

வட்டார நூலகம்

நம்மூரில் இருப்பதுபோலவே நகரத்திற்கான மைய நூலகத்தைத் தவிர ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு நூலகம் செயல்படுகின்றது ஆனால் அமெரிக்க நகரங்களின் எல்லாவகை நூலகங்களும் முழுவதும் கணினிமயத்தில் இயங்குகின்றன. என்னென்ன புத்தகம் வேண்டும் எனத் தேடுவதற்குக் கணினியைப் பயன்படுத்தலாம். ஒவ்வொருக்கும் ஐந்து நூல்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் அட்டைகள் தரப்பட்டுள்ளன. இந்தவாரம் ஐந்து புத்தகங்களை எடுத்துப் படித்துவிட்டு அடுத்தவாரம் இவையெல்லாம் தேவையெனத் தகவல் தெரிவித்துவிட்டால் அவர்களே எடுத்து ஓரிடத்தில் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
வாசித்து முடித்த புத்தகங்களைத் திருப்பித்தர நூலகத்திற்குள் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நூலகத்தின் சுவரிலேயே ஏற்றுக் கொள்ளும் திறப்பு இருக்கிறது. அந்த இடத்தில் ஒவ்வொரு புத்தகத்தையும் வைத்துவிட்டால் உள்ளே எடுத்துக்கொள்ளும். எடுத்துக்கொண்டு வரவுவைத்துவிடும். உடனே உள்ளே போய் நமக்குத் தேவையான நூல்கள் காத்திருக்கும். எடுத்துக்கொண்டு வந்துவிடலாம். வாசிப்பு அரங்கம் எனத் தனியாக இருக்கிறது. புத்தக அடுக்குகள் ஓரங்களிலும் இருக்கைகள் இருக்கின்றன. நூலகத்திற்குப் பக்கத்தில் வீடுகள் இல்லாமல் குளம், தோட்டப்பகுதி, சிறுவர் பூங்கா சூழ இருக்கின்றன நூலகங்கள்.

இப்போது பள்ளிகளுக்கு விடுமுறைக்காலம். வெவ்வேறு வயதினருக்கான விளையாட்டு, வாசிப்பு, கலைப்பயிற்சி எனப் பயிலரங்குகளை நூலகங்கள் பொறுப்பேற்று நடத்துகின்றன. அதற்குப் பதிவுசெய்து வைத்தால் முன்னுரிமை வழங்கப்படும். எல்லாவற்றுக்கும் பதிவும் விருப்பமும் தெரிவிக்க வேண்டும்.

பேரனின் ஐந்து நூலக அட்டையில் எனக்கான ஒரு நூலை எடுத்துக்கொண்டு வந்தபோது நமது நூலகங்களுக்குள் மூச்சுவிட முடியாமல் தவிக்கும் வாசகர்களும் குழந்தைகளும் நிழலாடவே செய்கின்றனர்.

நூலகத்தை இயக்கமாக்குதல்

சென்னைப் பெருநகர நூலக ஆணைக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கவி. மனுஷ்யபுத்திரன் வாசிப்பை நோக்கிக் கல்லூரி மாணவர்களைத் திருப்பும் பணியொன்றை இயக்கமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது முகநூல் குறிப்புகள் சொல்கின்றன. அந்த இயக்கம் வழக்கமான வாசிப்பு இயக்கமாக இல்லாமல் ஆழமான இலக்கியவாசிப்பை நோக்கித் திசைமாற்றம் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கல்விப்புலப் படிப்பில் வெறுத்து ஒதுக்கப்படும் நவீன இலக்கியங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைப்பதும் தெரிகிறது. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடையாத ஒரு பேராசிரியனாக அவருக்கு வாழ்த்துச் சொல்லத்தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை. வாழ்த்தும் பாராட்டும்..

சென்னை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை விடவும் சிறப்பானதொரு நூலகத்தை மதுரையில் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. அதன் பின்னணியில் கலைஞர் நினைவு நூற்றாண்டு இருந்துள்ளது. அந்நூலகத்தைப் பலரும் கண்டு படம்பிடித்துப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனக்கும் அந்த நூலகத்தைப் பார்க்கும் ஆர்வமும் ஆசையும் இருக்கிறது. விரைவில் நடக்கும். அந்த ஆசையோடு இங்கே கனடாவிலும் அமெரிக்காவிலும் சிலவகை நூலகங்களுக்குச் சென்று வருகிறேன். அதனைப் பயன்படுத்தும் விதங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வருகிறேன். அப்படிப் பார்த்த ஒன்றாக இந்த நடமாடும் நூலகம் உள்ளது.

நடமாடும் நூலகம்

ஒட்டாவா நகரில் நானிருந்த கனாட்டா என்னும் புறநகர்ப்பகுதியில் இருக்கும் பொதுச்சேவை மையப்பகுதியில் வாரந்தோறும் முற்பகல் 11 மணி முதல் 12.30 வரை வந்து நிற்கிறது அந்த நடமாடும் நூலகம். ஒரு சிறுநூலகத்தில் இருக்கும் பொதுவான வகைப்பாடுகளில் நூல்கள் இருக்கின்றன. பொதுவான வாசிப்புக்கான கதைப்புத்தகங்கள், இதழ்கள், குறுவட்டுகள் அதில் இருக்கின்றன. அதிகமும் இருப்பன சிறார்களையும் முதியவர்களையும் கருத்தில் கொண்ட பனுவல்கள். அவர்களே நூலகங்களுக்குச் செல்வதில் சிரமங்களை அனுபவிப்பார்கள் என்ற நிலை இருப்பதால் அவர்களை நோக்கி இந்நடமாடும் நூலகம் வருகின்றது.

அது ஒரு நீளமான பேருந்துதான். அதன் இரண்டு பக்கங்களிலும் நூல்களின் அடுக்குகள் உள்ளன. நடமாடும் நூலகமாக நிற்கும் வாகனத்திற்குள் நூல்களை வழங்கும் நூலகப்பணியாளர் இருக்கிறார். அதில் இல்லாத நூல்கள் வேண்டுமென்றால் அதன் இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்து வைத்தால் அதனோடு தொடர்புடைய நூலகத்திலிருந்து நூல்களைக் கொண்டு வந்து தருவதும் உண்டு.

வட்டார சேவை மையம்

டல்லாஸ் நகரத்தில் நூலகத்தைத் தனியான ஒன்றாகப் பார்க்காமல் வெவ்வேறு அமைப்புகளோடும் நிகழ்வுகளோடும் இணைத்து அவற்றின் பகுதியாக மாற்றும் நோக்கத்தைக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது .ஒட்டாவா நகரத்தின் ஒவ்வொரு வார்டுக்கும் இப்படியொரு சேவை மையம் இருக்கிறது. அங்கெல்லாம் பெரும் நூலகங்கள் இருக்கின்றன .இது எட்டாவது வார்டுக்கான நூலகம் இருக்கும் கட்டடம். மூன்று தளங்களில் நூலகம். தரைத்தளம் குழந்தைகள் பகுதி. இன்னொரு பக்கம் கலைக் கூடம் இருக்கிறது. பொதுமக்கள் சேவையை வழங்கும் பல்வேறு அமைப்புகளின் அலுவலகங்கள் அங்கே இருக்கின்றன.

நான் நூலகத்திற்கே சென்றேன். ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கும் இந்நூலகங்கள் அந்தந்தப் பகுதி மக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. அதே நேரம் நகரின் எல்லா நூலகங்களோடும் இணைக்கப்பட்ட வசதி கொண்டவை. ஒருவர் தனது பகுதியில் இருக்கும் நூலகத்தில் மட்டுமே உறுப்பினராகி, அங்கு மட்டுமே நூல்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. அதேபோல் இத்தனை நூல்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. எடுக்கவேண்டும்; அதற்கான கால எல்லைக்குள் அளிக்கவேண்டும். அளிக்கவில்லையென்றால் தண்டத்தொகை கணக்கிடப்படும். திருப்பித் தந்துவிட்டால் அதுவும்கூட குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திரும்ப வந்துவிடும்.

நூல்கள் எடுப்பது, திருப்பித்தருவது என எல்லாமே தானியங்கி முறையில் தான். நூலகப்பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு. அவர்கள் எப்போது நூல்களை அடுக்கிவைப்பார்கள் என்பதுகூடத் தெரியாமல் அடுக்கி வைக்கிறார்கள். தேவையான நூல்கள் பட்டியலை அனுப்பி வைத்தால் எடுத்துத் தனியாக வைத்திருக்கிறார்கள். நூல்கள் மட்டுமல்ல; திரைப்பட வட்டுகளும் அடுக்கப்பட்டுள்ளன. வாசிப்பிடங்கள், எழுதும் இடங்களென அங்கேயே இருந்துவிடலாம்

கிராமிய நூலகங்கள், வட்டார நூலகங்கள், நகர்மைய நூலகங்கள், மாவட்ட மைய நூலகம், பெருநகர் நூலகம் என அனைத்தும் இணையம் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றின் இன்னொரு நூலகத்தின் புத்தகத்தைப் பெறமுடியும். நூல்களைப் பெறுவதற்காக மட்டுமே நூலகங்கள் திறந்திருக்கும் நேரத்தில் செல்லவேண்டும். திரும்பத்தருவதற்கு எந்த நேரத்திலும் செல்லலாம். அங்கிருக்கும் தானியங்கித் திறப்பின் வழியாக உள்ளே வைத்துவிட்டு வந்துவிடலாம்.

நகரத்தின் அருங்காட்சியகங்கள், கண்காட்சிக்கூடங்கள், கலைக்கூடங்கள் போன்றவற்றைப் பார்க்க விரும்புபவர்களுக்கான இலவச வாய்ப்புகளை நூலகங்களோடு இணைத்து வைத்துள்ளனர். ஒரு அருங்காட்சியகத்தைப் பார்க்கும் அந்த வாய்ப்பை நூலகத்திலிருந்து பெற்றுப் பயன்படுத்தலாம். ஒட்டாவாவின் கலைக்கூடம் ஒன்றைப் பார்ப்பதற்கு நகரத்தின் நூலகங்களுக்குத் தரப்பட்ட இலவச வாய்ப்புகள் எல்லாம் தீர்ந்த நிலையில் 20 மைல் தள்ளியிருக்கும் ஒரு கிராமிய நூலகத்திற்குச் சென்று அங்கு பேரனுக்கொரு நூலையும் அந்த இலவச வாய்ப்பையும் பெற்றுக்கொண்டு திரும்பினோம். இப்படி நூலகத்திற்கு வரவைக்கவும் வாசிக்கத்தூண்டவும் செய்கிறபோது சமூகம் அறிவுச்சமூகமாக மாறும். தமிழ்ச் சமூகம் அறிவுச் சமூகமாக மாறவேண்டும் என்பதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாக இருக்கவேண்டும். அதன் வழியாகப் பகையுணர்வை வளர்க்கும் அரசியலை வென்றெடுக்க முடியும்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்