அருண் மாதேஸ்வரனின் இரண்டு சினிமாக்கள்


ஒரு இயக்குநர் முந்தைய படங்களைப் போலவே தான் அடுத்தடுத்துப் படங்கள் செய்வார் என்று நினைக்கவேண்டியதில்லை. சினிமாவில் இயங்கும் ஒருவர் வெவ்வேறு வகைப்பாட்டில் வெளிப்படுவார் என்பதைச் சில படங்கள் வந்தபின் கணித்துச் சொல்லலாம். இப்போது இளையராஜாவின் வாழ்க்கைப் படத்தை இயக்கவுள்ள அருண் மாதேஸ்வரனின் மூன்று படங்களில் முதல் படமான ராக்கியைப் பார்த்ததில்லை. ஆனால் சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டையும் பார்த்துள்ளேன். அவ்விரண்டு படங்களின் நடப்பியல் தன்மை, குரூரத்தின் வெளிப்பாடு. வன்முறையைக் கொண்டுள்ள சமூகத்தின் மீது திரும்பத்தாக்கும் தனிநபர் வன்முறையைப் பேசிய படங்கள். ஆனால் இவ்விரண்டு படங்களுமே இயக்குநரின் கலை நோக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தாத படங்களே. ஒருவேளை வாழ்க்கைப் படம் என்ற வகைப்பாட்டில் அவர் தனது வெளிப்பாட்டைச் சரியாகத் தரக்கூடும். அந்தப்படம் வரும்போது விவாதிக்கலாம். இப்போது முந்தைய படங்களைப் பார்த்து எழுதிய குறிப்புகளை வாசித்துப் பாருங்கள்
கேப்டன் மில்லர்: காலனிய வரலாற்றைத் துணைக்கழைத்தல்

இந்தியத்தன்மை உருவாக்க நினைக்கும் சினிமாக்காரர்கள் குறிப்பான வெளிகளைத் தவிர்த்து, இந்தியப் பரப்பில் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடிய கதைகளைத் தேடுகின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தியத்தன்மை, காலனியக்காலத்து நடைமுறைகளுக்கு எதிராக நிறுத்தும் பார்வைக்கோணம் அவர்களிடம் வெளிப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி, மேற்குலகச் சிந்தனை போன்றவற்றிற்கு எதிராக இந்தியத்தனம், இந்தியச் சிந்தனை என்பதை முன்வைக்கும்போது பின் காலனியக் கோபம் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் பின் காலனியக் கோபம், இந்தியச் சாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் தவிர்க்க நினைப்பது சமகாலச்சிந்தனை ஆகாது. அண்மையில் வந்த கேப்டன் மில்லர் இந்தக் கோணத்தில் பார்க்கவேண்டிய படங்கள்.
 
தூரக்காட்சிகளில் தெரிந்த மலைப்பிரதேசம், தூரம் குறைந்த காட்சிகளில் தெரிந்த பழைய கல்கோவில், அண்மைக்காட்சிகளில் வந்த பாத்திரங்களின் ஆடைகள், அணிகலன்கள் ஆகியவற்றோடு வெள்ளையர்கள், ராஜாக்கள், சமஸ்தானம் முதலான சொற்களும் கலந்து ஒரு வரலாற்றுப் புனைவுப் படமொன்றைக் காணும் வாய்ப்பை வழங்கப்போவதான தோற்றத்தை அளித்தது. ஓங்கி ஒலித்த துள்ளல் இசையோடு அடுக்கப்பட்ட காட்சித் துணுக்குகள் எண்ணிக்கையும் அண்மைக் காட்சிகளும் அழகியல் சார்ந்த திளைப்பையும் தரும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கியது ஆரம்பத்தில். இதெல்லாவற்றையும் விடத் தனது கூட்டாளியைக் காட்டிக் கொடுத்த கன்னையாவாக நடிக்கும் இளங்கோ குமரவேல் கதையைச் சொல்லப் போகிறான் என்று காட்சி தொடங்கியதும் ஆர்வம் இன்னும் அதிகமாகியது. ஏனென்றால், மேடையிலேயே துயரம் தோய்ந்த கதைசொல்லலில் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடியது அவனது பாவனைகள் என்பதை அறிந்திருக்கிறேன். இப்படி உண்டாக்கப்பட்ட ஆர்வமெல்லாம் முதல் சருக்கம் முடிந்தபோது வடிந்து நீர்த்துப்போய்விட்டது படத்தின் முதல் அரைமணி நேரத்தில்.

இன்றளவும் தொடரும் சாதியப்பிளவுகள், தீண்டாமை, கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காத ஆதிக்கசாதி மனநிலை, இந்தியர்களின் வளத்தையும் கோயில் சொத்துகளையும் சூறையாட நினைக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி எனச் சரியான முரண்களைக் கண்டறிந்து முன்வைத்த முதல் சருக்கத்தின் திரைக்கதை முடிச்சுகள் அடுத்தடுத்த சருக்கங்களில் திசை தெரியாமல் குழப்பமாகியிருக்கிறது. ஈசன், மில்லராக மாற்றப்பட்டது போதாது, கேப்டன் மில்லராக ஆகவேண்டும் என்ற உந்துதலில் செய்யும் சாகசங்களின் தொகுப்பாக அடுத்தடுத்த சருக்கங்கள் நகர்கின்றன. அந்த நகர்தலில் அவனது அடையாளம் எதிலும் ஒட்டாமல் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

சாதிய விடுதலையை அல்லது தீண்டாமையால் கோயிலுக்குள் நுழைய முடியாத கிராமத்தினரின் விடுதலையை அல்லது நாட்டு வளங்களைச் சுரண்டிச் செல்லும் வெள்ளையரை எதிர்க்கும் விடுதலையை என ஏதாவதொன்றோடு ஈசனாகிய மில்லரைப் பொருத்தியிருக்கலாம் இயக்குநர். அதனைச் செய்யாமல் இதிலும் அதிலுமாக அலையவிட்டுக் கொலைகளைச் செய்ய வைத்திருக்கிறார். இரண்டரை மணி நேரப்படத்தில் கடைசி ஒரு மணி நேரத்தில் கேப்டன் மில்லரின் அண்ணன் ஒருவர் தலைமறைவு வாழ்க்கையில் இருப்பதாகக் காட்டி ஈழவிடுதலைப் போரை நினைவூட்டவும் முயன்றுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்தப் பகுதி எனக்காட்டாத-குறிப்பிட்ட பாளையக்காரர் அல்லது ஜமீன்தார் எனச் சொல்லாத படம்," ஆங்கிலேயர்கள் காலம்" என்பதை மட்டும் சொல்லி வரலாற்றுப் புனைவாக முன்வைக்கிறது. கேப்டன் மில்லர் கொள்ளையடித்த பொருளுடன் ராமேஸ்வரம் வழியாக 'சிலோன்' செல்லத் திட்டமிட்டான் எனவும் காட்டுகிறது.

எடுக்கப்பட்ட காட்சிகளை அடுக்கியதிலும் பின்னணி இசை சேர்த்ததில் எந்தவிதத் தொடர்ச்சியும் இல்லை. ஆயுதங்களோடு அலையும் கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி அடையாளங்கள் உருவாக்கப்படவில்லை. கொள்ளையர்கள், போராளிகள் என எல்லாருமே இயக்கவாதிகள் எனச் சுட்டப்படுகின்றனர். வெவ்வேறு குழுவினர் எந்த அடிப்படையில் ஒன்று சேர்கின்றனர்; விலகி இருக்கின்றனர் என்ற விவரங்களுக்குள் நுழையவே இல்லை. ஆனால் துரத்தித்துரத்திச் சுடுகிறார்கள்; சுட்டு முடித்தபின் வெட்டுக்கத்திகளைத் தூக்குகிறார்கள். எந்தெந்த ஆயுதங்கள் காலத்தில் முந்தியதாக இருக்கும் என்பதைக் கூடப் புரிந்தவர்களாக இல்லை படக்குழுவினர். முதன்மைப் பாத்திரமான மில்லர் உள்பட எந்தப் பாத்திரத்திற்கும் முழுமையான வடிவம் தரவில்லை. வேல்மதி பாத்திரத்தில் தோன்றும் பிரியங்கா மோகனும் தட்டையாகவே வந்து போகின்றார்.
 
வரலாற்றுப்புனைவாக ஒரு படம் எடுக்க நினைத்தால், இந்த வெளியில் நடந்த கதை எனக் காட்சிகள் இடம்பெறவேண்டும். இந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கக்கூடிய நிகழ்வுகள் எனக்காட்டுவதில் நம்பகத்தன்மை உருவாகும். இதையெல்லாம் செய்யாமல், வணிக ரீதியாக ஒரு சினிமா வெற்றிபெற நாயகப்பாத்திரம் ஏற்கும் நடிகனின் - தனுஷ் - சாகசங்களுக்கான காட்சிகளை அமைத்தால் போதும் என நினைத்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இதுபோன்ற படங்களைப் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது. வரலாற்றுப்புனைவாக ஒரு சினிமா எடுக்க முதலில் வரலாறு தெரியவேண்டும். 
2024 பிப்ரவரி, 10

சாணிக்காயிதம் : பழிவாங்குதலின் குரூரம்

பழிவாங்கும் உணர்ச்சி ஒவ்வொரு தனிமனிதர்களுக்குள்ளும் உறைந்து கிடக்கிறது. தனக்கு ஏற்படுத்தப்பெற்ற அவமானம், பொருள் இழப்பு, உடல் கேடு, மனநலப்பாதிப்பு போன்றன உறைந்து கிடக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை மேலெழுப்பிக் கொண்டுவந்து அவற்றுக்காரணமானவர்கள் மீது திரும்பிவிடும் வேலையைச் செய்துவிடும் என்பது உளவியல். மேலெழும்போது அவ்வுணர்ச்சிகள், தனக்குத் தரப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் எனத் திட்டமிடும். அத்திட்டமிடும்போது சுற்றியிருக்கும் சூழலையும் சமூக நிறுவனங்களையும் பற்றிக் கவலைகொள்ளாது முன்னேறிக்கொண்டே இருக்கும்.
தனிநபர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் அவர்களின் இருப்பு பாதுகாப்பைத் தரக்கூடியன என நம்புகிறார்கள். பாலடையாளம், சாதி, வர்க்கம், அதிகாரத்துவ அமைப்புகளோடு கொண்டுள்ள நெருக்கம் ஆகியனவற்றை அவர்களின் நிரந்தரமான இருப்பாக நினைத்துக்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அக்குற்றச்செயல்பாடுகளிலிருந்து பல நேரங்களில் தப்பித்துக்கொள்ளவும் செய்வார்கள்.

தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புள்ள ஆதிக்க மனிதர்களோடு மோதி வெல்ல முடியாத மனிதர்கள் பாதிப்பைப் பொறுத்துக்கொண்டு - தங்களின் இயலாமையால் ஒதுங்கிப்போகிறார்கள்; தொடர்ச்சியாகக் காணாமலும் போவார்கள். ஆனால் எல்லோரும் ஒதுங்கிப் போவதில்லை; காணாமல் ஆக்கிக் கொள்வதில்லை; எந்த ரூபத்திலாவது திரும்பவருவார்கள்; பழிக்கணக்கைத் தீர்த்துக் கொள்வார்கள் என்பதே பழிவாங்கலின் இயங்கியல்.
அதிகாரத்தால் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்; குறைந்த பட்சம் அவர்களின் மனச்சாட்சியே அத்தண்டனையை வழங்கும் என்பது சமயவாழ்க்கை சார்ந்த நம்பிக்கை. குற்றம் இழைத்தவர்களை அடையாளப்படுத்திக் கூண்டில் ஏற்றிவிட்டால் அரசும் சட்டங்களும் உரிய தண்டனையை வழங்கும் என்பது அரசின் மீதும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் செயல்பாடுகள். இந்தப் பிறவியில் கடவுள் தண்டிக்கப் போவதில்லை; இந்த அரசும் அதன் அதிகார அமைப்புகளும் நமக்கு உதவுவதாக இல்லை; குற்றவாளிகளுக்கே சாதகமாக உள்ளன என நினைக்கும் தனிமனிதர்கள் உடனடித் தண்டனைகளைத் தாங்களே வழங்கிடத் தீர்மானித்து, அதே குற்றச் செயல்களில் இறங்குவிடுகின்றனர். இது தனிமனித நீதியாகச் சினிமாக்களில் முன்வைக்கப்படுகின்றன. அம்பியாக இருப்பவன், அந்நியனாக மாறிப் பழிவாங்குவது ஒரு வெளிப்பாடு என்றால், பொன்னியின் வன்ம வெளிப்பாடு அதன் இன்னொரு வகைதான்.

பழிவாங்கல் கதைகள் கலை, இலக்கியங்களின் கச்சாப்பொருள் தான். ஆனால் பழிவாங்கல் உணர்ச்சி மட்டுப்படுத்த வேண்டிய ஒன்று என்ற போதனையின் அடிப்படையில் எதிர்மறைக்கச்சாப் பொருள். அந்த எதிர்மறைக் கச்சாப்பொருளைக் கூடத் தேர்ந்த கலைஞர்கள் தேவையான விசாரணைகளோடும், மன உறுத்தல்களோடும் சூழலின் பாதிப்பைப் பார்வையாளர்களுக்குத் தரும் முடிவுகளோடும் தந்து தனது கலைத்திறனை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

வன்முறை நிகழ்த்தப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வன்முறையை அழகியல் எனக் கொண்டாடும்போது வன்முறைதான் ஒரே தீர்வு என்ற நிலைக்கு நகர்வதும், நகர்த்துவதும் கலையின் வேலையாக இருக்கமுடியாது. அத்துடன் அதிகார பலம் கொண்ட மனிதர்களைத் தனிமனிதர்கள் வெல்வதாகக் காட்டும் வன்முறை அழகியல் கற்பனாவாதக் காட்சிகளாக மாறிக் காட்சியின்பத்தோடு முடிந்துபோகும். நடைமுறையில் அப்பாவித் தனிமனிதர்களும் அதிகாரமற்ற மனிதக்கூட்டங்களும் வன்முறையால் அழித்தொழிக்கப்படுவதே நடப்பாக இருக்கிறது. சாதிய இந்தியாவில் அதற்கான உதாரணங்களைத் தேடவேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் கேள்விப்படும் செய்திகளாகவும் காணும் காட்சிகளாகவும் இருக்கின்றன.

பழிவாங்கலின் எந்தப் பரிமாணத்தை - எப்படிப்பட்ட சொல்முறையால் முன்வைப்பது என்பதின் மூலம் கலையாகவும், வணிகச்சரக்காகவும் ஆகின்றன ஆக்குகின்றன சினிமாக்கள். பழிவாங்கலின் மூவகைப் பரிமாணங்களே தமிழில் பெரும்பாலான சினிமாக்களாக எடுக்கப்பட்டுள்ளன. தனி நபர்களின் பழிவாங்கல் கதையைத் தேர்வு செய்து நடிப்பதின் வழியாகவே நாயகபிம்பத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வணிக சினிமாவின் விதியாகச் செயல்படுகிறது. ஆண்கள் பழிவாங்கல் கதைகளையே நாயக நட்சத்திரங்களின் சினிமாவாகக் காட்டிவந்த தமிழ்ச் சினிமாவில் பெண்ணின் பழிவாங்கல் கதையைக் காட்டுவதின் மூலம் பெண்மைய சினிமாவாக ’சாணிக்காயிதம்’ படத்தைத் தந்து விட நினைத்துள்ளார் அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

பாதிப்பு உண்டாக்கும் கும்பலின் குரூரமான காட்சிகளையும், பழிவாங்குதலின் குரூரமான நடவடிக்கைகளையும் மட்டும் தீர்மானித்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநரின் நோக்கம் ’அதற்கு விளைவு இவை’ என்ற ஒற்றைப் பரிமாண நோக்கமாக இருக்கிறது. பழிவாங்குதலின் திட்டம் தொடங்கப்படும் உருவாக்கப்படும் குற்றவாளிகளின் பட்டியலும் இருப்படங்களும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் காட்சிகள் வெவ்வேறு இடப்பின்னணிகளை உருவாக்குவதாக இருக்கின்றன. அதே நேரம் அப்பட்டியல் தண்டிக்கப்படுவது உறுதி என்ற நினைப்பைப் பார்வையாளர்களுக்குத் தந்துவிடுவதின் மூலம் பழிவாங்கும் சினிமாவில் இருக்கும் ரகசியத்தைக் குறைக்கவே பயன்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிமுகமான நாயக நடிகையை -கீர்த்தி சுரேஷை மாறுபட்ட கோணத்தில் நடிக்க வைப்பதின் மூலம் தனது படத்தைப் பார்க்க வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார் இயக்குநர். அவரது அண்ணனாக வரும் செல்வராகவனும் முழுமையான பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மற்ற பாத்திரங்களில் வருபவர்களில் பெரும்பாலோர் புதியவர்கள். முதன்மைக் கதாபாத்திரங்களான இவ்விருவர் மட்டுமல்லாமல் எல்லா பாத்திர வார்ப்புகளும் ஒற்றைப் பரிமாணத்திலேயே வெளிப்பட்டுள்ளன. அதனால் புதியவர்கள் போதும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர்.

தனித்தனிக் காட்சிகள், வண்ணவேறுபாட்டுக் கலவை, அண்மைக் கோணம், தூரக்காட்சி, இசையின் ஒழுங்கு என ரசிக்கத்தக்க கூறுகள் படத்தில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு, நல்ல சினிமாவாக ஆக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே பதில். நல்திறக்கட்டமைப்பு கொண்ட நாடகத்தைப் போலக் காட்சிகளை வரிசைப் படுத்தி, அவற்றிற்கு உள்தலைப்புகளையும் தந்து எடுக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் உணர்வுகளின் கலவையாக இல்லாமல் ஒற்றை உணர்ச்சியின் மேல் அடுக்கப்பட்டுள்ள வன்முறைக்காட்சிகளின் தொகுப்பாக இருக்கிறது. இப்படி அடுக்குவது சினிமாவாக ஆகாது என்பதைத் தமிழ் சினிமாவுக்குள் நுழைபவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை.
மே.8/ 2022


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்