அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

ஹார்வர்டு பல்கலைக்கழகம் உலகத்தின் பெருமைமிகு பல்கலைக் கழகங்களில் ஒன்று. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள அப்பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த அறிவாளிகளையும் நோபல் விருதாளர்களையும் உருவாக்கித் தந்த பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக் கழகத்தில் செம்மொழியான தமிழ்மொழிக்கொரு இருக்கை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவது தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமையே. அது தந்த உற்சாகத்தில் அதே வகையான பெருமைகளை உருவாக்கும் முயற்சிகள் இப்போது பல இடங்களில் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைக்கும் முயற்சி 2015 வாக்கில் தொடங்கியது. அமெரிக்காவிற்குச் சென்று அங்கேயே குடியுரிமை பெற்றுத் தங்கிவிட்ட இந்தியத் தமிழர்களின் மொழி ஆர்வம் அதன் பின்னால் இருந்தது. மொழிபெயர்ப்பாளர் வைதேஹி ஹெர்பெட்டுடன் மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் நடத்திய உரையாடலின் தொடர்ச்சியிலேயே அம்முயற்சி கருக்கொண்டது. வைப்பு நிதியாக 6 ஆயிரம் அமெரிக்க டாலரைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கும் நிலையில் தமிழ் இருக்கை அமைக்க முடியும் என்ற நடைமுறையை அறிந்து கொண்டு, தங்கள் பங்காக இரு மருத்துவர்களும் 1000 டாலர்களை நன்கொடையாக வழங்கினர்.

இந்தியத் தமிழர்களின் முயற்சிகளுக்கு இணையாகவே கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் முயற்சி செய்தார். அவரது முன்னெடுப்பிற்குப் பின் கலை இலக்கிய அமைப்புகள், இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் போன்றோரும் அதுகுறித்துப் பேசத்தொடங்கினர். 2017 இல் தமிழக அரசு 10 கோடி ரூபாயை அந்த இருக்கைக்காக ஒதுக்கித் தர முன்வந்தது. அப்பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே ஒரு அமெரிக்கர் தமிழ்ப் பிரிவுக்கான ஆசிரியராக உள்ளார் என்றாலும் பேராசிரியர் பதவி நிலையில் ஒருவர் பொறுப்பேற்கும்போதே தமிழ் இருக்கை அமைப்பு முழுமை அடையும். கற்பித்தலும் ஆய்வுகளும் வேகம் பெறும். அது நிறைவேறும் காலம் அருகில் வந்துவிட்டது.
குறிப்பாக ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பிரித்தானியாவிலும், பிரான்சிலும் ஜெர்மனியிலும் தமிழ் இருக்கைகள் தொடங்கும் முயற்சியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. நார்வே, சுவிட்சர்லாந்து நாட்டிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களும் அங்கொரு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்க நினைக்கலாம். தொடர்ந்து கீழ்த்திசை நாடான ஆஸ்திரேலியத் தமிழர்களும் முயற்சி செய்யக்கூடும். அவையெல்லாம் தேவையான ஒன்று என்று கூடத் தோன்றலாம். தமிழ் மொழிக் கல்வியை அந்தந்த நாடுகளில் வளர்த்தெடுக்கும் பணிகளை இந்த இருக்கைகள் செய்யும் என்ற நம்பிக்கையும் பின்னணியில் இருக்கக் கூடும். புலம்பெயர் தமிழர்களின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ்த் துறைகளாகக் கனடாவின் றொரண்டோ, யார்க் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளைக் குறிப்பிடலாம். இவை கனடாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகளிடம் தாய்மொழிப்பற்றும், பண்பாட்டு இருப்பும் உறுதிபட அவை முயற்சி எடுக்கின்றன. அந்த முயற்சியில் அங்கு தொடங்கப்படும் இருக்கைகள் எவ்வளவு தூரம் பங்களிப்பு செய்யும் என்பது கேள்விக்குறி. ஏனென்றால் இதற்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் இருக்கைகள் அத்தகைய பணிகளைச் செய்யவில்லை.

சொந்த அனுபவமாக ஒன்றைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். 2011 அக்டோபர் தொடங்கி, 2013 இல் முடிவடைந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைப் பேராசிரியராக இருந்தேன். அந்த இருக்கை 1973 இல் இந்திய அரசால் நிறுவப்பெற்ற தமிழ் இருக்கை. 40 வது ஆண்டு விழாவைக் கொண்டாடிவிட்டுத் தமிழகம் திரும்பினேன். அதுவரை அவ்விருக்கை போலந்து நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் பணியை மட்டுமே மேற்கொண்டது. என்னைப்போல இந்தியாவிலிருந்து போன இருக்கைப் பேராசிரியர்கள் பேச்சுத்தமிழைக் கற்பித்துவிட்டுத் திரும்பினார்கள். மிகக் குறைவான மொழிபெயர்ப்புகளும் அகராதி உருவாக்கமும் மட்டுமே நடந்துள்ளன. போலந்து நாட்டு மாணாக்கர்களுக்குத் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம், இந்தி கற்பிப்பதற்காக வார்சா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட இந்தியவியல் துறையைப் போல அந்நாட்டின் க்ராக்கோ பல்கலைக்கழகத்திலும் இந்தியவியல் துறையும் உண்டு. அதற்கும் தமிழ் இருக்கை இருக்கைப் பேராசிரியர் இங்கிருந்து அனுப்பப்படுகிறார். போலந்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கப்பல நாடுகளில் அந்தந்த நாட்டு மாணாக்கர்களுக்கு அந்நிய மொழியாகத் தமிழைக் கற்பிக்கப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் இருந்தன; இருக்கின்றன.

காலனியாதிக்க காலத்திலிருந்தே இத்தகைய துறைகளும் இருக்கைகளும் தொடங்கப்பட்டன. பிரான்ஸ், ஜெர்மனி, செக், இங்கிலாந்து, ரஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறைகள் பல மூடப்பட்டு வருகின்றன. அதே நேரம் புதிய தொழில் மற்றும் வணிக வாய்ப்புகள் கொண்ட சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகள் அந்தந்த அரசுகளின் உதவியாலும் தனியார் நிறுவனங்களின் தேவைக்காகவும் புதிதாகத் தமிழ்த் துறைகள் தொடங்கப்பட்டு அந்தந்த நாட்டு மாணாக்கர்களுக்குத் தமிழ்க்கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் இந்த நாடுகளின் வணிக நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று தமிழ் பேசும் நாடுகளுக்குப் பொறுப்பேற்றுப் போகும்போது தொடர்புகொள்ள அந்த மொழிப் பயிற்சி பயன்படும் என்ற பின்னணிக் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதே பின்னணிக்காரணங்களை உணர்ந்து ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசுகளும் தங்கள் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களைத் தங்கள் நாட்டுக்குடிமக்களாகக் கருதி அங்கு தொடங்கப்படும் தமிழ்த்துறைகளுக்கு நிதியுதவியை வழங்கிட வேண்டும். அவ்வாறில்லாமல் தமிழ்பேசும் மக்கள் அதிகம் வாழும் இந்திய/ தமிழக, இலங்கை அரசுகளின் உதவியோடு தமிழ் இருக்கைகள்/ துறைகள் செயல்படவேண்டும் என எதிர்பார்ப்பதைக் கைவிட வேண்டும். ஏனென்றால் இந்த அரசுகள் சொந்த நாட்டில் செயல்படும் தமிழ்த்துறைகள், தமிழ் ஆய்வு மையங்கள், தமிழ் மாணாக்கர்களின் மொழிக்கல்வி மேம்பாடு போன்றவற்றைக் கைவிட்டுவிட்டு அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகளுக்கு உதவுவதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு திசைதிருப்பும் அரசியலை மேற்கொள்ளவே அது உதவும். தமிழ்நாட்டில் அப்படி நடந்த தைப் பார்த்திருக்கிறேன். இங்குள்ள பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளும் தமிழாய்வு நிறுவனங்களும் இலக்குகளின்றியே இயங்குகின்றன. அதற்கான வழிகாட்டி முறைகள் கூட இங்கு உருவாக்கப்படவில்லை.

அயல்தேசங்களில் இருக்கும் தமிழ்ப்படிப்பை உள்ளடக்கிய இந்தியவியல் துறைகள் பெரும்பாலும் தென்னாசியவில் படிப்பு (SOUTH ASIAN STUDIES)அல்லது தென்கிழக்காசியவியல் படிப்பு (SOUTH EAST ASIAN STUDIES)என்ற பிரிவின் கீழ் செயல்படுகின்றன. அங்குக் கற்பிக்கப்படும் படிப்பு வெறும் மொழிக்கல்வி மட்டும் அல்ல என்பதை முதலில் சொல்ல வேண்டும். இந்தியவியல் துறையில் சேரும் ஒரு மாணவிக்கு அல்லது மாணவனுக்கு இந்தியப் பொதுமனத்தைப் புரிந்து கொள்ள உதவும் அரசியல், சமுதாய, பண்பாட்டு வரலாறுகள் அடங்கிய இந்திய வரலாற்றைக் கற்றுத் தருகிறார்கள். அதே போல் இந்திய மதங்களைப் பற்றியும் இந்திய தத்துவ மரபு பற்றியும் தாள்கள் உள்ளன. இவற்றுக்கப்பால் தான் மொழிக்கல்வியும் இலக்கியக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.அதனூடாக நிகழ்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்ள வேண்டும் என மிகுந்த ஆர்வத்தைக் காட்டும் மாணாக்கர்கள் முழுமையாகக் கற்றுத் தேர்கிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அப்படியான நோக்கம் அந்தப் பாடத்திட்டங்களிலும், கற்பிக்கும் முறையிலும் இருக்கின்றன. ஆனால் அப்படிக் கற்றுத்தேரும் மாணாக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு. தொடராய்வு செய்யத் தேவையான உயராய்வு நிறுவனங்கள் உலக அளவில் இல்லை. கேரளம் மற்றும் புதுவையில் செயல்பட்ட திராவிட மொழிகளுக்கான பண்பாட்டு நிறுவனங்களும் முன்புபோல முனைப்பாகச் செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவற்றில் மேலாய்வு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் பட்டவகுப்புகளைத் தொடங்கிக் கீழிறக்கம் செய்யும் பணிகளே நடக்கின்றன. நெடிய போர்க் காலத்தைச் சந்தித்த இலங்கையின் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கின்றன.

இந்தப்பின்னணியில் புலம்பெயர் தேசங்களின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளைத் தொடங்குவதற்குப் பதிலாகத் தமிழை ஒரு மொழிப்பாடமாக் கற்பிக்கும் கல்வி நிலையங்களின் தேவையை உணரவேண்டும். அந்தந்த நாட்டுக் கல்வித்திட்டத்திற்குள் – பாடத்திட்டத்திற்குள் தமிழும் ஒரு பாடமாக – விருப்பப் பாடமாகப் படிக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதனைக் கற்றுக்கொண்டு மேல்படிப்பு படிக்க நினைப்பவர்கள் தமிழ்மொழிப் பகுதிகளான தமிழ்நாடு அல்லது இலங்கையின் தமிழ்ப்பகுதி பல்கலைக் கழகங்களுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படிவருபவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கிடலாம். எல்லாவற்றையும் தாண்டித் தமிழியலின் உயராய்வுகள் நடக்க வேண்டிய நிறுவனங்களை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தொடங்கிப் பன்னாட்டு ஆய்வு உறவுகளை உண்டாக்கவேண்டும். மலேசியாவிலும் புலம்பெயர் நாடுகள் ஒன்றிலும் தொடங்கிட முயற்சி செய்யலாம். இவற்றில் சேர்வதற்குக் கடும் போட்டி நிலவும் வகையில் உதவித் தொகைகளை வழங்க வேண்டும். அதற்கான நிதியாதாரங்களை அரசுகள் உருவாக்கித் தரவேண்டும். தனியார் மயம் தலைதூக்கியுள்ள இக்கால கட்டத்தில் தனியார் நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பைச் செய்யலாம். அவற்றில் பணியாற்றத் தேவையான ஆசிரியர்களை உருவாக்கவேண்டும். அத்தோடு உலகெங்கும் உள்ள இந்தியவியல் துறைகளிலிருந்து அதிகச் சம்பளம் கொடுத்துக் கடன் வாங்கியாக வேண்டும். நிரந்தரமாகவும் குறுகிய காலத்திற்கும் ஆசிரியர்களைக் கடன் பெற்றே அந்த மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளும் பிறநாட்டு மாணவர்களுக்கு நாம் உதவிசெய்வதுபோலவே, நமது தமிழ்மாணவர்கள் பிறநாட்டு மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர்களாக்கவும் உதவி செய்யவேண்டும். அந்நிலையில்தான் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழுக்கு வரும். தமிழர் அறிவும் புலமையும் இலக்கியப்பாரம்பரியமும் பிறமொழிகளுக்குள் செல்லும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்