ஒரு வாழ்க்கை: இரண்டு புனைவுகள்

தமிழக முதல்வர்களில் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கைக்கும் அவரது பாதையைத் தொடர்ந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுகைகள் உண்டு. இருவரின் வாழ்நாட்கள் மட்டுமல்லாமல், மரணங்களுமே சந்தேகங்களும் மூடுண்ட ரகசியங்களும் நிறைந்தவை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டன; சொல்லப்படுகின்றன. திரைப்படங்களாக எடுக்கப்படுகின்றன.


ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ஒரு மாதத்திற்கு தலைவி என்ற பெயரில் இணையதளப்பரப்பில் (அமேசான் பிரைம்) வெளியிடப்பெற்றுப் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் முன்பு 2019 இல் இன்னொரு இணையதளப்பரப்பில் (எம்எக்ஸ் பிளேயர்) குயின் என்ற பெயரில் ஒரு தொடராக அவரது கதை வந்த து. 11 பகுதிகளைக் கொண்ட அத்தொடர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பார்க்கக்கிடைத்துத் தலைவியைவிடப் பலமடங்குப் பார்வையாளர்களை ஈர்த்தது.


வாக்கு அரசியலில் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படும் ஒன்று. சிறுவயது முதலே அரசியல் இயக்கத்தோடு இணைந்த சொந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த தலைவர்களைத் தமிழக முதல்வர்களாகத் தெரிவு செய்த தமிழ்நாட்டு வாக்காளர்கள், அவ்வாறில்லாத அரசியல்வாதிகளான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் தெரிவு செய்தது அண்மைக்கால வரலாறு. திரு.சுப்பராயலு ரெட்டியார் தொடங்கி திரு.கி.பக்தவச்சலம் வரையிலான தமிழக முதல்வர்கள் முழுநேர அரசியல்வாதிகளே. அவரைத் தொடர்ந்து முதல்வரான திரு சி.என்.அண்ணாதுரையும், கலைஞர் மு.கருணாநிதியும் முழுநேர அரசியல்வாதிகளே என்றாலும் அவர்களின் வாழ்க்கைப் பாதையில் நாடகம், திரைப்படம் போன்ற கலைப்பகுதிகளுக்கும் முக்கியமான இடமுண்டு. மக்களிடம் தங்கள் கருத்துகள் சென்றடைவதற்குப் பயன்படும் என்பதால் அவற்றைக் கருவியாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இவர்களிருவரையும் தாண்டி முதல்வரான திரு. எம்ஜிஆரும் ஜெ.ஜெயலலிதாவும் அரசியல் வாழ்க்கைக்கு முன்னதாகத் திரையுலக வாழ்க்கையைப் பெரும்பகுதியாகக் கொண்டவர்கள். அவர்களிருவரின் வாழ்க்கைப் பயணத்தை நடிப்புக்கலைஞர்கள், அரசியல்வாதிகள் என்றே வரிசைப்படுத்த முடியும்.

தலைவர்கள் உருவாக்கம்

மனிதர்களின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்பதாகச் சொல்லப்பட்டாலும் இவற்றை அடையும் வழிகளில் தடைகள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அடைவதற்கான முயற்சிக்கு உடல் நலம், கல்வி, போக்குவரத்து, சட்டப்பாதுகாப்பு போன்றன உதவும் என்பதாக மக்களாட்சியை மையமிட்ட நாகரிக சமூகம் முன்மொழிந்து திரள் மக்களை விழிப்படையச் செய்திருக்கிறது.

திரள் மக்களின் தேவைகள் உணரப்பட்ட நிலையில் கோரிக்கைகள் எழுகின்றன. ஆனால் அவற்றைச் செயல்படுத்தும் அமைப்புகள் எவையென அறியாத நிலையில் வழிநடத்தப் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். திரள் மக்களின் தேவைகளை அவர்களின் சார்பாளராக நின்று அரச அமைப்புகளைக் கொண்டு நிறைவேற்ற முடியும் நம்பிக்கையை ஊட்டுபவர்கள் அரசியல்வாதிகள் ஆகிறார்கள். தங்களின் வழிகாட்டியாக நம்பும் அரசியல்வாதிகளின் அகவாழ்க்கையும் புறவாழ்க்கையும் தங்களுக்குத் தெரியவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் தொண்டர்களாக – திரள் மக்களாக மாறுகிறார்கள்.

திரள் மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட நிலையிலேயே அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என வர்ணிக்கிறார்கள். இந்திய/ தமிழக வரலாற்றில் திறந்த வாழ்க்கையை – வெளிப்படையான தன்மையைக் கொண்ட பல தலைவர்களின் வாழ்க்கை வாசித்திருக்கிறோம்; நாடகங்களாக மேடையிலும், சினிமாவாகத் திரையிலும் கண்டு அறிந்திருக்கிறோம். தலைவர்களின் நாட்குறிப்புகளும், பயணக்குறிப்புகளும் நேர்காணல்களும் மக்களோடு உரையாடிய தினசரி எழுத்துகளும் அவர்களின் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக ஆக்கியிருக்கின்றன. அப்படியானவர்களின் நினைவுகளும் சாதனைகளும் காலம் காலமாக மக்களிடம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு மாறாகத் தனது வாழ்க்கையில் ரகசியங்களும் புதிர்களும் சாகசங்களும் இருந்தன என்பதாகவும் மக்களிடம் தங்களை முன்வைப்பார்கள். அப்படியானவர்களின் முழுவாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையாக இல்லாமல், நெருக்கடிகளால் அரசியலுக்கு வந்ததாக இருக்கும்.

அரசியலுக்கு வருவதற்கு முந்திய வாழ்க்கையை மக்களுக்குச் சொல்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் இருக்கும். தங்களின் இப்போதைய அரசியல் வாழ்க்கையை நீடிப்பதற்கேற்பப் பழைய வாழ்க்கையின் பகுதிகளை முன்வைப்பார்கள். அப்படி முன்வைக்கும்போது நடந்தவைகளுக்குள் புனைவுகளின் இடம் அதிகரித்து விடும். சொல்லப்படும் வாழ்க்கை நிகழ்வுகளின் நம்பகத்தன்மையை எதிர்நிலையில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பும் நிலையில் புனைவுகள் கூடும். புனைவுகள் கூடும்போது நேர்மறை விளைவுகள் ஏற்படுவதற்கிணையாக எதிர்மறை விளைவுகளுக்கும் வாய்ப்புகள் உண்டு.

தலைவியின் இயங்குதளம்

எம்.ஜி.ராமச்சந்திரன்xமு.கருணாநிதி என்பதான எதிர்வை உண்டாக்கி இயக்குநர் மணிரத்னம் இருவர் என்றொரு புனைவுச் சினிமாவைக் கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளியிட்டார். அது ஜெயலலிதா முழுமையான அரசியல்வாதியாக நேரம். இப்போது அவரே மையப்பாத்திரமாகிவிட்ட நிலையில் தலைவியும் குயினும் வந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை, “எம்ஜிஆர் -ஜெ.ஜெயலலிதா -ஆர் எம் வீரப்பன்” என்ற முக்கோண முரண்பாட்டின் நகர்வுகளால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக முன்வைத்துள்ளார் தலைவி படத்தை இயக்கிய ஏ. எல். விஜய். இப்படத்திற்கான கதையை எழுதியவர்கள் விஜயேந்திர பிரசாத்தும் மதன் கார்க்கியும்

தலைவி என்பதைத் தமிழின் வரலாற்றுப் பின்னணியில் பார்க்காமல் தனியொரு புனைவுப்படமாகப் பார்த்திருக்கிறார் இயக்குநர். ஜெயலலிதாவைவிடவும், எம். ஜி. ராமச்சந்திரன் என்ற ஆளுமையின் பிம்பமே குற்றம் குறையில்லாத ஆளுமையாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது படத்தில். அதற்கு அப்பாத்திரத்தை ஏற்று நடித்த அரவிந்த்சாமியின் ஈடுபாடும் எம்ஜிஆரின் உடல் மொழியையும் மனவெளிப்பாடுகளையும் கச்சிதமாகத் திரையில் கொண்டுவந்ததும் காரணமாக இருக்கலாம். தலைவியாக நடித்த கொங்கனா ரனாவத் என்ற மராட்டிய நடிகையின் ஈடுபாடு அவ்வப்போது ஜெ.ஜெயலலிதாவின் இயல்போடும் நடவடிக்கைகளோடும் பொருந்தி நின்ற போதிலும் பல நேரங்களில் விலகியே இருக்கிறது. மும்முனையில் மூன்றாவது முனையாக உருவாக்கப்பட்ட ஆர் எம் வீரப்பன் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சமுத்திரக்கனியின் பாத்திரப்பொருத்தமும் ஏற்புடையதாக இருக்கின்றன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கருணாநிதியின் பாத்திரத்தை ஏற்ற நாசர் அவரது குரலை மட்டுமே கொண்டுவந்தால் போதும் என்று நம்பியிருக்கிறார். அவரைத்தாண்டி எம். ஆர். ராதாவாக வரும் ராதாரவி பொருந்தி நிற்கிறார். எம்.ஜி.ஆர் என்று ஒலிக்கும் பெயரை எம்.ஜே.ஆராக்கி விடுவதின் மூலமும் வலம்புரிஜானை, ஜான் என அரைப்பெயராக்குவது போலப் பல பெயர்களைப் பாதியாக்கி ஒலிக்கச் செய்வதின் மூலமும் கடந்த கால்நூற்றாண்டுத் தமிழ் அரசியலைக் கட்டுக்குள் வைத்தவரின் உண்மைக் கதையை அரைகுறைப் புனைவாக்கிப் பிம்பக் கட்டுமானம் செய்ய முயன்றுள்ளார் இயக்குநர். போதாமையோடு கூடிய புனைவு காணாமல் போய் ஊடகங்களில் மிதந்த வாழ்க்கை வரலாறே சினிமாவாக ஆகியிருக்கிறது.

1989 இல் தமிழக சட்டசபையில் இழைக்கப்பட்ட அநீதி ஒரு பெண் அரசியல்வாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி. அதற்குத் திரௌபதியின் சபத நிறைவேற்றம்போல, முதல்வராக மட்டுமே சட்டசபைக்குத் திரும்புவேன் என வெளியேறித் திரும்பி வந்த நிகழ்வுக்குள் அவரது கதையைச் சொல்கிறது படம். ஜெ.ஜெயல லிதாவின் அரசியல் எழுச்சிக்குப் பின்னால், தமிழர்களின் பொதுப்புத்தி உருவாக்கமும் மைய நீரோட்டத்தைக் கட்டுக்குள் வைக்க நினைத்த அறிவுவர்க்கத்தின் சாய்வுகளும் சாதிகளின் திரட்சியும் அடையாள அரசியலின் எழுச்சிகளும் இருந்தன. அவற்றையெல்லாம் பேசுவதைக் கைவிட்டுவிட்டு வெற்றிப்படச் சூத்திரமாக முக்கோணக்கதையொன்றை உருவாக்கி வெற்றிப்படச் சூத்திரத்திற்குள் அடக்கியுள்ளார் இயக்குநர். அதிகார ஆண்களின் உலகத்தில் தனது திடமான முடிவுகளாலும் புத்திசாலித்தனத்தாலும் சொந்த வாழ்க்கை சார்ந்த இழப்பாலும் தியாகத்தாலும் மேலெழும்பி வந்த தலைவி என்ற பிம்பத்தோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
பக்குவமற்ற வயதில் நுழைந்த திரைப்பட உலகமும், அரசியல் நகர்வுகளும் சொந்த வாழ்க்கை சார்ந்தும் சிறு வட்டத்தில் உருவான ஆண்களின் மீதான வன்மமும் வெறுப்பும் ஆண்களற்ற உலகம் ஒன்றை அவருக்கு உருவாக்கித் தந்ததைப் படம் வலுவாக முன்வைக்கவில்லை. தமிழ்ச் சினிமாவின் பார்வையாளத்திரளால் ரசிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடலுக்குள் புகுந்த ரகசியங்கள் நிறைந்த மனம், ஆண்களின் மீது செலுத்திய அதிகாரம், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் எப்படிப் பாதித்தது; அந்தப் பாதிப்பு நேர்மறையானவையா? சீரழிவுப் பாதையா? என்பதைப் புனைவாகப் பேசும் வாய்ப்பை அந்த இயக்குநர் உருவாக்கிக் கொள்ளவில்லை. தலைவியென்னும் பெருமதிப்புப் பிம்பத்தை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்திருக்கிறது.

திரைமொழியின் கவனங்கள்

தலைவி தவறவிட்ட குறைபாடுகள் இல்லாத திரைத்தொடராக கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வந்த குயின் இருந்தது. அவரது விலகலுக்குப் பின்னர் பிரசாத் முருகேசன் அந்தப் பொறுப்பை ஏற்று முடித்திருந்தார். நடிகையாக இருந்து அரசியல் தலைவரான ஒருவரின் உண்மைக்கதையை நேர்காணல் வடிவத்தில் சொல்லும் குயின் கதையை எழுதியவர் ரேஷ்மா காட்லா. நடிப்பில் நீண்ட அனுபவம் கொண்ட ரம்யாகிருஷ்ணனின் ஏற்ற இறக்கங்கள் கொண்ட குரல் மொழியின் வழியாக நேர்காணல் வடிவத்தில் காட்சிகள் விரிக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைக் கற்பதில் ஆர்வம் கொண்ட பள்ளிக்காலம், வெற்றிகரமான நடிகை, தனக்கான குடும்ப வாழ்க்கையைத் தேடிய பெண், அரசியல் நுழைவுக்காலம் எனப் பகுத்துக்கொண்டு ஒவ்வொரு பருவத்திலும் அதற்கென நடிப்புக்கலைஞர்களைத் தெரிவுசெய்த இயக்குநர்கள், வாழ்க்கை வரலாற்றின் உண்மைத் தன்மையைக் கொண்டுவர முயன்றிருந்தனர். வரலாற்றுக் கால கட்டத்துக் காட்சிகளை உருவாக்கத் துணைசெய்யும் கலை இயக்கமும் அதற்குப் பெருந்துணையாக அமைந்திருந்தது. அதற்குத் துணைசெய்திருந்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை தனி மனுசி ஒருத்தியின் ஆகப்பெரும் அவல நாடகம் என்பதான கதைப்பின்னலில் அவரது அந்தரங்க வெளியிலும் பொதுவெளியிலும் சந்தித்த ஆண்களின் இடம் எதிர்நிலைப்படுத்தப்பட்டிருந்தது. இவ்விரு படங்களின் வருகையைக் கவனமாகப் பரிசீலிக்கும்போது ஒரு வாழ்க்கையைக் கலைப் பார்வையின் வழியாக எவ்வாறெல்லாம் கட்டமைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

==================================================== 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்