நிகழ்த்துதலின் வண்ணங்கள் - மௌனகுருவும் சேரனும்

கலப்புகளிலிருந்து உருவாகும் புதுமை
நாடகப்பேராசான் தான் செதுக்கிச் செய்த சில காட்சி அசைவுத்துணுக்குகளைத் தனது பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைத்தார். அவற்றைத்திரும்பத்தி
ரும்பப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நீங்களும் பார்க்கலாம்.

வேறுவேறு இயல்புகளைக் கொண்ட நிகழ்த்துகலைகளைக் கலந்து புத்தாக்கம் செய்வது அவரது பாணி. இசையிலும் அசைவிலும் ஒப்பனையிலும் வேறுபட்ட பாணிகளைக் கலவையாக்கிப் புதியன செய்தல் காலத்தின் தேவைகூட. அதிலும் குறிப்பாகப் இன,மொழி, சமய, பண்பாட்டுக்கூறுகளில் வேறுபாடுகள் நிலவும் ஒரு தேசத்தின் புத்தாக்கக் கலை ஒன்றிற்கு மற்றொன்று கொடுத்தும் கொண்டும் உருவாகித்தான் ஆகவேண்டும்.

நாட்டார்கலைகள் செவ்வியல் கலைகளாக மாறவேண்டுமா என்று கேட்டால் அது தனி விவாதம். என்னைக்கேட்டால் வேண்டாம் என்பேன். ஆனால் இரண்டின் இணைவும் காலத்தின் தேவை. பேராசிரியர் மௌனகுருவின் வேலைகள் அப்படித்தான் இருக்கின்றன.

மரபான நாட்டார் அரங்கியல் கலைகள் - அவை ஆட்டங்களாயினும் நிகழ்கலைகளாயினும் இரண்டு கூறுகளையும் மேடையில் காட்சிப்படுத்துவதை முதன்மையாகச் செய்கின்றன. பின்னரங்கிலோ வலப்புறத்திலோ இசைக்குழுக்கள் அமர்ந்திருக்க, ஆட்டக்காரர்கள் அதே மேடையில் இசைக்குழுவிற்கு முன்பு அல்லது இடதுபுறத்தில் நிகழ்த்துகிறார்கள். அதேபோல் நடிகளின் அசைவுகள் சமதளப்பரப்பில் கிடைநிலை அசைவுகளாகவே இருக்கின்றன. உடல்கள் வட்டக்கிறுக்கிகளாகச் சுற்றி நிற்கின்றன; அசைகின்றன; நேர்கோட்டுநிலையிலும் குறுக்குக் கோட்டு அசைவுகளாகவும் அசைகின்றன. ஓரிடத்தில் நின்று உடலின் ஒரு பாகத்தின் பாவனைகளை முழுமையாகக் காட்டும் குவிமையத்தை அவை தேர்வதில்லை. மொத்த உடலும் அசைகின்ற நிலையில் தான் அவை வெளிப்பாடுகளைச் செய்கின்றன. இப்போதுப்போக்கிற்கேற்பவே இசைக்கருவிகளும் தொடர்ச்சியாக இசைக்கின்றன. இசைப்பதில் வன்மை மென்மை உண்டு. அதிகமும் மௌனமாக்குதல் குறைவு.

இதற்கு மாறானதாகச் செவ்வியல் கலைகள் மௌனப்படுத்துதல், நிலைப்படுத்துதல், ஒற்றை உறுப்பின் தனித்திறனைக் குவிமையமாக்குதல் என்பனவற்றைக்கொண்டிருக்கின்றன. இதற்கேற்ப இசைக்கருவிகள் சேர்ந்திசைப்பதில் அதிகக் கவனம் செலுத்தாமல் தனித்தனிக்கருவிகளாக இசைத்து, நிகழ்த்தும் உடலோடு இணைந்துகொள்கின்றன. பரதத்தில் இக்கூறுகளைப் பார்க்கலாம். எவையெல்லாம் செவ்வியல் கலைகளாக மாறுகின்றனவோ அவை இத்தன்மைக்குள் நகர்கின்றன. கதகளியில், மோகினியாட்டத்தில் யட்சகானத்தில் இத்தகைய நகர்வுகள் நடந்துள்ளன. தெருக்கூத்திலும் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.






கவிதையும் நிகழ்த்துதலும்
============================

இரண்டாவது சூரிய உதயம்
----------------------------------------------
அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே -

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
--------------------------------------------------
சேரனின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட பின்னணியில் பெரும் அதிர்வுகளை எழுப்பிய கவிதை. இக்கவிதை காட்சிரூப அசைவுகளாக மாற்றப்பட்டிருக்கிறது. நான்கு நடிகளின் உடல்மொழியோடு, ஒலியின் மொழி, வெளிச்சத்தின் மொழி ஆகியவற்றைக் கலவையாக்கி மேடை நிகழ்வு உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகளின் மூவரின் உடையமைப்பிலும் ஒத்த தன்மையும், அதிலிருந்து வேறுபட்ட உடையமைப்போடு அசையத் தொடங்கும் உடல்கள், காட்சிப்படுத்தப்படும் நிகழ்வாகவும், நிகழ்வைப் பார்க்கும் பங்கேற்பாளர்களாகவும் மாறிமாறி நகர்கிறார்கள், மேடையில் குறிப்பான வெளிச்சம் (Focus lights ), பரவல் வெளிச்சம் (Flood lights ) என்ற என்ற இரட்டை நிலையைக் கவனமாகப் பயன்படுத்தி அந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒலி, ஒலியின்மை, ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலி, ஆகியவற்றிற்கேற்ப அசையும் உடல்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் அர்த்தங்களும் வெவ்வேறு என்பதும் உணரப்படவேண்டும். சில நேரங்களில் பின்னணியில் ஒலிக்கும் மந்திரத்தன்மை கொண்ட - சடங்கோசைகளுக்கு எதிர்நிலை அர்த்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கவனமாகச் செய்துள்ள இக்காட்சி ரூபம் நடந்த வன்முறையின் குரூரத்தை நளினமானதாக ஆக்கியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் கையறுநிலையின் - இயலாமையின் குரூரம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டுள்ளது. பங்கேற்ற நடிகளும் தயாரித்த சௌக் நிறுவனமும் பாராட்டுக்குரியவர்கள்.

Image may contain: 4 people, people sitting
Cheran Rudhramoorthy updated his cover photo.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்