கவிதைகள் : வாசித்தவிதங்கள்

தேவதச்சனின் சலனச் சித்திரங்கள்

தமிழில் எழுதும் கவிகள் ஒவ்வொருவரின் கவிதையியலை - வெளிப்பாட்டு முறையை அறிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால், அவர்களின் புதிய கவிதைகள் வரும்போது வாசிக்காமல் தவிர்க்கமுடியாது. எப்போதும் கவிதைக்குள் தன்னை - தன்னிலையைச் சொல்லுமிடத்தில் வைத்துக் கொண்டு முன்னே இருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்பொருளாக்குவது தேவதச்சனின் கவிதைப்பாங்கு. அக்காட்சிப்பொருட்களுக்குள் உயிருள்ளனவும் உண்டு; உயிரற்றனவும் இடம்பெறுவதுண்டு. மனிதர்களும் இடம்பெறுவார்கள்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் இடம்பெறுவதுண்டு.

முதன்மையாக அவர் தனது சொற்களால் செய்து காட்டுவது காட்சியின் வரைபடம். வரையப்படும் அக்காட்சிக்குள் நிலையாக நின்றுகொண்டிருக்கும் இருப்பைவிடவும், அசைவுகளோடு கூடிய - நகர்வுத்தன்மை பொருட்களை நிரப்பிக் காட்டுவார். அவ்வாறு நிரப்பப்பட்ட காட்சியை விரிப்பதின் நோக்கம், அதன் மீதான கவிதைசொல்லியின் பார்வைக்கோணத்தை - மனச்சாய்வைச் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொள்வதாக இருக்கும். ஒதுங்கிக் கொண்டபின் எழும் உணர்வலைகள் கவியிடமிருந்தும், கவியால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லியிடமிருந்தும் விலகிக் கவிதையை வாசிப்பவர்களின் உரிமையாகி விடும். அவர்கள் அதுபோன்ற காட்சிச் சித்திரத்தில் - சலனக்காட்சிகளில் தங்களின் இடம் என்னவாக இருந்தது என்பதை நினைத்துக்கொள்வார்கள். அப்படி நினைக்கத்தூண்டுவதே தேவதச்சனின் கவிதையியல் பாங்காக இருந்துவருகிறது.
***
இம்மாத உயிர்மையில் (ஏப்ரல்,2023)அச்சிடப்பெற்றுள்ள மூன்று கவிதைகளும் விரிக்கும் சலனக்காட்சிகள் பலரும் எதிர்கொண்ட காட்சிகளாக இருக்க வாய்ப்புகள் உண்டு. அதற்குள் அவர் உருவாக்கி இருத்தி வைத்திருக்கும் ‘ஒருதடவை’ ‘ ஒருவிநாடி’ ‘ ஒரு தலைகீழ் மலர்’ என்ற சொற்களின் வழி எப்போதும் வெளிப்படும் அவரது கவிதைத்தன்மையை - சலனச்சித்திரிப்புகள் வழியாக உணர்த்தும் நிலைபாட்டை - தன்னிலையின் விலகலை வாசிப்பவர்களுக்குக் கடத்திக்காட்டுகிறார். அவர் கடத்தும் காட்சிகளை நீங்களும் சந்தித்திருந்தால் இந்தக் கவிதைகள் உங்களுக்கும் விருப்பமான கவிதைகளாக மாறிவிடும் வாய்ப்புகளுண்டு. வாசித்துப்பாருங்கள்.
1.ஒரு தடவை
---------------------
ஒரு தடவைக்குமேல்
ஒரு இலை
மரத்திலிருந்து
உதிர்வதில்லை
ஒரு தடவைக்குமேல்
அதைக்குனிந்து
எடுக்க முடிவதில்லை
இந்த
ஒரு தடவைப்பிரபஞ்சத்தின்
விளிம்பில் அமர்ந்திருக்கிறேன்
ஒரு தடவையாவது அவளின்
கண்கள் என்மேல்
படவேண்டுமென்று
ஒரு தடவைகூட
அரசர்களின் கண்கள் என்மேல் பட்டுவிடக்கூடாதென்று
2.லிப்ட்
-----------
லிப்டில்
அருகில் நின்றவளை
ஒரு விநாடி பார்த்தேன்
சாலையில்
மரண ஊர்தியில்
செல்பவரை ஒரு விநாடி பார்த்தேன்
இரும்படிக்கும் லேத் பட்டறையில் ஓங்கிய கையை ஒரே
ஒருவிநாடி பார்த்தேன்
ஒருவிநாடி என்னும் எரி
நட்சத்திரங்கள் வெடிக்கும் இருளில்
நின்று கொண்டிருக்கிறேன்
வருத்தமாக இருக்கிறது
3.தலைகீழ் மலர்
--------------------
பூங்காவிலிருந்து,
நீலநிற ஆடை போர்த்திய
கைக்குழந்தையோடு
வெளியே வருகிறாள்
இளந்தாய்.
விரியத்திறந்து கிடக்கும்
இரும்புக் கேட்டைக் கடக்கையில்
தாழக்குனிந்து
குழந்தையின் கன்னத்தில் ப்ச்
என்று முத்தமிடுகிறாள்
சாலையில் நின்றுகொண்டிருந்த என்னுள்
ஒரு தலைகீழ் மலர் அசைந்து
உதிர்ந்தது
பூமிக்கு வந்த மலர்கள்
இப்படி வந்தவைதான் போலும்.

****************************************************
கூட்டம்- ஒற்றை .

 இவ்விரண்டில் எது முந்தியது என்று கேட்டால் ஒற்றையென்னும் தனிமையே முந்தியது எனச் சொல்பவரும் உண்டு. கூட்டமாக இருந்தவர்களே தனியர்களாக மாறினார்கள் என்பவர்களும் உண்டு. ஒன்றுக்குப் பின் உருவானதே இரண்டு, மூன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்னும் எண்ணுப்பெயர்கள்.

கூட்டத்தின் பகுதியாக இருக்கும்போதே தனியராக நினைத்துக்கொள்ளவும் விரும்புகிறது மனம். தனிமனிதருக்குள் சமூக மனிதரும், சமூக மனிதராக இயங்குபவருக்குள் தனிமனிதரும் இருக்கிறார்கள். இது அறிந்த உண்மை. அவரவரளவில் அறிந்த உண்மை. கவிதை எழுதும் கவிகளும் இந்த உண்மையை அறிந்தவர்களே. அறிந்த உண்மையைச் சொல்லுவது கவிதையாகுமா? ஆகலாம்; ஆகாமலும் போகலாம். கவிதையாக்க நினைக்கும் கவி, அதனை நேரடியாகச் சொல்லாமல் இன்னும் சில சங்கதிகளைச் சேர்த்துச் சொல்லும்போது கவிதையாக்கம் நடக்கிறது. இனி அந்தக் கவிதை:

கூட்டமாய் இருந்தவர்கள் பிரிந்தார்கள்.

ஒரு கோடியில் இருக்கும் ஒருவன் உணவை உண்டான் இன்னொருவன்

இன்னொரு கோடியில் இருக்கும் ஒருவனின் இடத்தைப் பிடித்தான் இன்னொருவன்

சின்னக்கூட்டங்கள் உண்டாகின

‘ஒற்றையாக – ஒற்றையாக’ என்றொருவன் குரல் கொடுத்தான்

“ இங்கே சேருங்கள்- இப்படிச் சேருங்கள்” என்றும் ஒருவன் குரல் கொடுத்தான்

குழப்பமின்றிச் செயல்பட்டார்கள்.

கூட்டமாய் இருந்தவர்கள் பிரிந்தார்கள் கூட்டமாக ஒற்றையாக

புதுப்புதுக் குரல்கள் கிளம்ப ஆரம்பித்தன

ஒற்றையாக இருக்கத் துவங்கியவர் கூட்டமாக இருந்தார்கள் –

கூட்டமாக இருக்கத்துவங்கியவர் ஒற்றையாக இருந்தார்கள்

எஸ்.வைத்தியநாதன், விருட்சம் கவிதைகள், ப.45

இந்தக் கவிதைக்கு கவி வைத்தியநாதன் வைத்த தலைப்பு: கூட்டமாக – ஒற்றையாக.

கூட்டம் –ஒருவன் என்ற எதிர்வுகளை முன்னிறுத்தும் இக்கவிதைக்குள் மூன்று பகுதிகள் உள்ளன. கவி பார்த்தது; கவி கேட்டது; பார்த்ததும் கேட்டதுமான இருப்பின் மேல் கவியின் எண்ணம் அல்லது கருத்து. அம்மூன்று பகுதிகளை வரிசைப்படுத்திவிடலாம். பார்த்தது ஒரு கூட்டம். கேட்டது ஒற்றை- ஒற்றையாக; இங்கே சேருங்கள் – இப்படிச் சேருங்கள்.

கவி பார்த்த கூட்டத்தில் பத்துப்பேர்.. இல்லை ஐம்பது பேர்.. நூறு, ஆயிரம், லட்சம்.. இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். குறைவாகவும் இருக்கலாம். ஆனால் பார்த்தது கூட்டம். கும்பல்.. கும்பலுக்கென்று ஒரு மனோபாவம் உண்டு.

நீங்களும் நானும்கூடக் கும்பல்களை – கூட்டங்களைத் தினந்தோறும் பார்க்கிறோம்; சந்திக்கிறோம். பேருந்தைப் பிடிக்க அலைமோதுபவர்களாக .. ஆலைச்சங்கொலி கேட்டு உள்ளே நுழைபவர்களாக ; வெளியேறுபவர்களாக .திரையரங்கில் மௌனம் காப்பவர்களாக ; விசிலடித்துக் களியாட்டம் செய்பவர்களாக… திருவிழாவில், ஊர்வலத்தில், பேரணியில் ஜபக்கூட்டங்களில், காவியுடையுடன், மஞ்சளாடைகளுடன், கருஞ்சட்டையுடன், செஞ்சட்டையுடன், வெள்ளை அங்கிகளுடன்…

மாணாக்கர்களாக.. யுவதிகளாக.. தாய்க்குலமாக , உடன் பிறப்புகளாக, ரத்தத்தின் ரத்தங்களாக .. ரசிகர் மன்றச் செயல்வீரர்களாக.. தலைவிகளின்/ தலைவர்களின் வருகைக்குத் தவம் இருப்பவர்களாக, பேருரைக்கு ஆரவாரம் செய்பவர்களாக, பிள்ளையார் சிலைகளுக்குப் பாலூட்டுபவர்களாக, அல்லாஹூ அக்பருக்குத் தலை கவிழ்பவர்களாக, கட் அவுட்டுகளுக்குக் கற்பூர ஆரத்தி எடுப்பவர்களாக.. ஓட்டுப்பெட்டியில் வாக்களிக்கின்றவர்களாக..

கும்பல்களுக்குத் தான் எத்தனை எத்தனை அடையாளங்கள். ஓரடத்தில் ஓரடையாளம்; இன்னொரு இடத்தில் இன்னொரு அடையாளம்; மற்றொரு இடத்தில் வேறொரு அடையாளம். மாறக்கூடிய –மாற்றிக்கொள்ளக்கூடிய அடையாளங்கள். கூட்டம் தன்னிச்சையாக – ஒற்றை ஒற்றையாகக் கூடுவதும் உண்டு. இங்கே சேருங்கள்; இப்படிச் சேருங்கள் என்று அழைக்கப்பட்டுக் கூட்டப்படுவதும் உண்டு.

உணவு, உறையுள் இரண்டும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் தேவையான அடிப்படைகள். தனிமனிதர்கள் தங்களுக்கான உணவைத் தேடுவதாகச் சொல்லி அடுத்தவர்களின் உணவை எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்தவர்களின் உணவை எடுத்துத் தனது கூட்டத்திற்கு வழங்குவதன் மூலம் தலைவர்களாகிறார்கள். இன்னொருவனின் இடத்தைப் பிடுங்கி, தங்கள் வீடுகளாக, ஊர்களாக, நாடுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். கூட்டம் சேர்க்கவும், சேர்த்த கூட்டத்தைப் பிரித்துப் போடவும்தான் எத்தனை முயற்சிகள். எத்தனையெத்தனைப் புதுப்புதுக் கோஷங்கள்; கூச்சல்கள்; கொள்கைகள். தேசியத்தின் பெயரால், மாநிலத்தின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், வர்க்கம், சாதி, பாலெனப் பலப்பலவாய்க் கோஷங்கள். ஆனால் நடப்பது என்ன..? சேர்வதும் பிரிவதுமாய்.. கூட்டமாய்.. தனியராய்.. ஒற்றையாய்.. கூட்டமாய்..

தான் பார்த்த கூட்டத்தைப் பற்றிப் பேசிய கவி, தான் கேட்ட கோஷங்களை, உள்ளே நுழைத்ததின் மூலம் கவிதையின் தளத்தை விரிவுபடுத்துகிறார். ஊர், நாடு,தேசம் என எல்லை கடந்து நடக்கும் சமூக நிகழ்வைப் பேசும் கவிதை அதற்குள் செயல்படும் அதிகாரப்போட்டியை உள்ளுறையாக்கித் தரும்படி அமைத்துக்கொள்கிறது. அதனை நேர்கூற்றுச் சொல் மூலம் –

ஒற்றையாக இருக்கத்துவங்கியவர்கள் கூட்டமாக இருந்தார்கள்

கூட்டமாக இருக்கத்துவங்கியவர்கள் ஒற்றையாக இருந்தார்கள்


மனிதனின் அகத்திற்குள்ளான வினாக்களாகச் சுருக்கிக் கொள்கிறது. புறச்சூழலை முன்வைத்து அகத்தை விசாரிக்கும்போது கவிதை உள்ளே உள்ளே பயணிக்கும் தொனியை உருவாக்கிக் கொள்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்